இருள் படிந்திருந்த அந்த அறைக்குள், சூரிய ஒளி மட்டுமே சற்று வெளிச்சத்தை கொண்டு வர முயற்சித்தது. அங்கே அமைதியின் உருவமாய் அமர்ந்திருந்தாள் ஷாலினி.
இப்போதுத்தான் திருமணம் முடிந்துள்ளது என்பதை சொல்லும்படி, அவளுடைய கழுத்தில் மஞ்சள் கயிறு தொங்கிக் கொண்டிருந்தது. ஆனால் அவள் முகத்தில் மணப்பெண்ணுக்கான நாணமோ, மகிழ்ச்சியோ சிறிதும் இல்லை.
அதற்கு எதிர்மறையாக, அவளுடைய விழிகளில் நீர் கோர்த்திருந்தது. நேற்று வரை அவள் கட்டியிருந்த கனவு கோட்டை, அத்தனையும் இன்று சுக்கு நூறாக உடைந்து சிதறியிருந்தது.
இதற்கு யார் காரணம்? நிச்சயம் அவளைத் தவிர வேறு யாரையும் இதற்கு குறை சொல்ல முடியாது. ஏனெனில் இது அவள் எடுத்த முடிவுத்தான். ஆனாலும் ஏனோ அதை அவளால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
அன்னேரம் அவளுடைய தோளில் ஒரு கரம் பதிய, சட்டென்று திரும்பினாள். அவளுடைய அக்கா சினேகத்தான் நின்றிருந்தாள்.
அவளைப் பார்த்ததும் இன்னும் சோர்ந்துத்தான் போனாள். அதைப் பார்த்து தங்கைக்காக, சினேகவின் உள்ளமும் சேர்ந்து துடித்தது.
"ச். நீ மனச தளர விடாத ஷாலு," என்று சினேகா ஆறுதல் சொல்ல முயற்சித்தாள்.
"எப்படிக்கா? எப்படி தைரியமா இருக்க முடியும்? என் வாழ்க்கைய நானே கெடுத்துட்டு உட்கார்ந்திருக்கேன்" என்று அவள் உடைந்து அழத் தொடங்கினாள். அவளுடைய குரலில் இருந்த வலி சினேகாவையும் பாதித்தது. ஆனால் இப்போது அவளும் அவளை திட்டினாளோ? இல்லை, உடைந்து பேசினாளோ? இன்னுமே ஷாலினி கவலைப்படுவாளே, அதனால் தன்னுடைய கோவத்தையும், ஆதங்கத்தையும் உள்ளிழுத்துக் கொண்டாள்.
"நடந்தத இனி மாத்த முடியாது. ஆனா எனக்கு உன் மேல முழு நம்பிக்க இருக்கு. எல்லாம் ஒரு நாள் கண்டிப்பா மாறும். நீ மாத்திப்ப ஷாலினி” என்று அவள் சொல்ல ஷாலினி தன் அக்காவை வேகமாய் கட்டிக் கொண்டாள். அவளுமே தங்கையை ஆதரவாய் அணைத்துக் கொண்டாள்.
சில வாரங்களுக்கு முன்பு வரை ஷாலினியின் வாழ்க்கை தெளிந்த நீரோடைப் போல் நன்றாகவே சென்றது. பெரிதாய் கலகலப்பு பேர்வழி எல்லாம் கிடையாதுத்தான். ஆனாலும் அவளுக்கென்று ஒரு உலகம், அவளுக்கென்று நட்பு வட்டம் என்று கவலையின்றி இருந்தாள்.
அவளிடம் ஒரு குணம் இருந்தது. அது என்னவென்றால், அடுத்தவருக்கு சொந்தமானதை தெரியாமல் கூட தொட்டு பார்க்க மட்டாள். அவளுக்கு என்று வருவது அவளுக்கானதாய் மட்டுமே இருக்க வேண்டும் என்ற எண்ணம். வீட்டில் கூட, அவள் அக்கா உபயோகித்ததை கூட உபயோகிக்க மாட்டாள். அப்படிப்பட்டவளை, இந்த விதி விசித்திரமான சூழ்நிலையில் சிக்க வைத்திருந்தது.
ஷாலினியின் ஆருயிர் தோழித்தான் மித்ரா. சில காரணங்களால், மித்ரா சில வருடங்களாய் ஷாலினியை விட்டு விலகியிருக்க, திடீரென ஒரு நாள் அவளை பார்க்க வேண்டும் என்று அழைத்தாள்.
அங்கு சென்ற போதுத்தான் இன்னும் மித்ரா சில தினங்கள் மட்டுமே உயிருடன் இருப்பாள் என்ற விஷயமே தெரியவந்தது. அதைக் கேட்டு ஷாலினி, அதிர்ந்தாள் துடித்தாள். ஏனெனில் பள்ளி காலத்தில் இருந்தே இருவரும் ஒன்றாகத்தான் சுற்றி திரிந்து வளர்ந்தனர். அவள் திருமணத்துக்கு பின் தான், மித்ரா ஷாலினியை விட்டு முற்றும் முழுதாய் ஒதுங்கி விட்டாள்.
ஆனாலும் ஷாலினிக்கு மித்ரா என்றால் உயிர் தான். அதனால் அவளுடனே கடைசி சில நாட்கள் இருக்க முடிவெடுத்தாள். அதுத்தான் அவள் வாழ்நாளில் அவள் செய்த பெரிய தவறோ என்று இப்போது வருந்தாமல் இருக்க முடியவில்லை.
ஏனெனில் மித்ராவுடைய கடைசி தருணத்தில், ஷாலினியின் கரத்தை இறுக்கமாய் பற்றினாள்.
“உனக்கொன்னும் ஆகாது மித்து. இப்போ ஆம்புலன்ஸ் வந்துடும்” என்று தோழியை தேற்ற முயற்சித்தாள். ஆனால் மித்ராவோ, "ஷாலினி... எனக்கு ஒரு சத்தியம் பண்ணி கொடு," என்று கேட்கும் போதே அவளுக்கு மூச்சு வாங்கியது. அவளுடைய கண்களில் அத்தனை கெஞ்சல் இருந்தது.
அதைப் பார்த்தவளோ "என்ன வேணும்னாலும் கேளு மித்ரா. உன் சந்தோஷம்தான் எனக்கு முக்கியம்," ஷாலினி கண்ணீரைத் துடைத்தபடி தடுமாற்றமான குரலில் கூறினாள்.
"ராகுல்…” என்று அவள் சொல்ல, “அவர் டாக்டர கூப்டத்தான் போயிருக்காரு, நில்லு நான் அவர கூப்பிடுறேன்” என்று ஷாலினி வேகமாய் எழுந்தாள்.
“ஆ..ங் இல்ல. நான் உன்ட்டத்தான் பேசனும்” என்று மித்ரா சொல்ல, ஷாலினியோ. “என்ன சொல்லு மித்து” என்றாள்.
“என் ராகுல். வெளிய பாக்கத்தான் ரொம்ப ஸ்ட்ராங்காத்தான் தெரிவாரு. ஆனா. அவரு ரொம்ப ரொம்ப எமோஷனல். ரொம்ப நல்லவரும் கூட. ஏற்கனவே அவருக்கு நான் நிறையா கஷ்டத்த கொடுத்துட்டேன். இதுக்கு மேலையாச்சு அவர் சந்தோஷமா இருக்கனும்” என்றாள் மித்ரா.
“அதெல்லாம் உனக்கு ஒன்னும் இல்ல. எல்லாம் சரியாகிடும் நீ உன் ஹஸ்பண்ட் கூட சந்தோஷமா வாழ்வ” என்று ஷாலினி சொல்லி முடிக்கும் முன்னே, அவள் கரத்தைப் பிடித்து, “ப்ளீஸ் ஷாலினி, நீ ராகுல்ல கல்யாணம் பண்ணிக்கோ” என்று அவள் தலையில் இடியை இறக்கியிருந்தாள்.
அதைக் கேட்ட ஷாலினிக்கோ அத்தனை அதிர்ச்சி! “என்ன சொல்ற மித்து? நான் எப்படி? அவர் உன் ஹஸ்பண்ட்” என்று தடுமாறினாள்.
“ப்ளிஸ் ஷாலினி, என்னோட கடைசி ஆசையா உன்கிட்ட கேட்கிறேன். உன்னால மட்டும் தான் ராகுல்ல பத்திரமாவும், சந்தோஷமாவும் பாத்துக்க முடியும். ப்ளீஸ். எனக்கு சத்தியம் பண்ணிக் கொடு. நீ அவர கல்யாணம் பண்ணிக்கனும்” என்று மித்ரா சொல்லும் போதுத்தான் ராகுலும் அங்கு ஓடி வந்தான்.
அவனுக்குமே மனைவியின் பேச்சு அதிர்ச்சித்தான். ஆனால் ஷாலினிக்கோ அவள் சொல்லியதை யோசிக்க கூட முடியவில்லை.
“ப்ளீஸ் ஷாலினி. எனக்கு சத்தியம் பண்ணிக் கொடு” என்று மித்ரா வற்புறுத்த, ராகுலோ, “மித்ரா” என்று அவளை தடுக்க முயற்சித்தான்.
ஆனால் அவளோ, ஷாலினியிடம், “எனக்காக இத பண்ண மாட்டீயா ஷாலு” என்று கேட்க, அவளுக்கு அந்த நொடி வேறு வழி தெரியாது அந்த சத்தியத்தை செய்து விட, இப்போது மித்ராவோ, ராகுலிடம், “ஷாலுவ பாத்துக்கோங்..” என்று சொல்லி முடிக்கும் முன்னே உயிரை விட்டிருந்தாள்.
தன் உயிர்த்தோழியின் கடைசி ஆசையை நிறைவேற்ற ஷாலினி வேறு வழியின்றி ஒப்புக்கொண்டாள். ஆனால் அந்த முடிவு அவளுடைய இயல்புக்கு முற்றிலும் எதிரானது. ராகுல், மித்ராவின் மரணத்தில் இருந்து இன்னும் மீள முடியாமல் ஒருவிதமான இறுக்கமான மனநிலையில் இருந்தான். அவனுக்குமே இந்த திருமணத்தில் விருப்பம் இல்லைத்தான்.
ஆனால் மித்ராவுடைய கடைசி விருப்பம் என்று ஷாலினித்தான் அவனிடம் வந்து நின்றாள். அதை அவனே எதிர்பார்த்திருக்கவில்லை. “இல்ல அது ஜஸ்ட்” என்று அவன் சொல்லி முடிக்கும் முன்னே, “என் பிரண்ட்க்கு நான் பண்ணிக் கொடுத்த சத்தியத்த என்னால மீற முடியாது. கல்யாணத்துக்கு ஏற்பாடு பண்ணுங்க” என்று சொல்லிவிட்டாள் தான்.
ஆனால் அவனை மணப்பது ஷாலினிக்கு பெரிய மன உளைச்சலை ஏற்படுத்தியிருந்தது. தனக்கே தனக்கென அத்தனையும் இருக்க வேண்டும் என்று நினைப்பவள், மித்ராவின் நினைவுகளோடு இருக்கும் ஒருவனை எப்படி தன்னுடைய வாழ்க்கையில் ஏற்றுக் கொள்ள முடியும்? என்ற பயம் அவளை ஒவ்வொரு நொடியும் வாட்டத்தான் செய்தது.
ஆனாலும் இதோ இன்று திருமணமும் முடிந்து, சட்டப்படி ராகுலின் மனைவியாகியிருந்தாள் ஷாலினி. ஆனால் ராகுலோ, மித்ராவின் மரணத்தில் இருந்தே இன்னும் வெளிவந்திருக்கவில்லை.
இந்த திருமணத்தை கூட மித்ராவின் கடைசி ஆசை என்று மட்டும் தான் பார்த்தான். உண்மையில் அது மட்டும் தான் காரணமா? என்ற அவனுடைய மனதின் கேள்விக்கு அவனிடம் பதில் இல்லை.
ஆனால் ஏற்கனவே அவன் ஒரு தனிமை விரும்பி. இப்போது சொல்லவே வேண்டாம். அவனுடைய முகத்தில் எப்போதும் ஒருவிதமான இறுக்கமும், சோகமும் அப்பிக் கிடந்தது. அவனுடைய நண்பர்களால் கூட அவனை நெருங்க முடியவில்லை.
தன்னை நம்பி, தன் மனைவியின் விருப்பத்துக்காக தன் வாழ்க்கையையே பணையம் வைத்த ஷாலினிக்காக, தன் சோகத்தில் இருந்து வெளிவர முயற்சித்தான். ஆனால் அவனுடைய அந்த பிடிவாத குணம். உடனடியாக மாறவும் அனுமதிக்கவில்லை.
அவன் அப்படி என்றால், இங்கே ஷாலினியோ, ஷாலினியோ அவன் மீது ஒருவிதமான கோபத்தையும், வெறுப்பையும் வளர்த்து வைத்திருந்தாள். ஏனோ ராகுலும் மற்ற ஆண்கள் போல் மனைவி இறந்ததும், அடுத்த நிமிடமே அவனை மாற்றிக் கொண்டது போல் நினைத்தாள். ஆனால் அவள் தான் அவனிடம் சென்று தன்னை திருமணம் செய்துக் கொள்ள வேண்டும் என்று சொல்லியதை அந்த நொடி மறந்து விட்டாள்.
அதை விட அவளுடைய இயல்பு, அவளை அவனிடம் நெருங்க அனுமதிக்கவில்லை. அது மிகப்பெரிய தடையாகவும் இருந்தது. ஒரே வீட்டில் இருந்தாலும், இருவருக்கும் இடையே ஒரு பெரிய இடைவெளி இருந்தது. தேவைக்காக கூட இருவரும் பெரிதாய் பேசிக் கொள்ளவில்லை.
ராகுல் ஏதாவது பேச முயன்றால் கூட, ஷாலினி அவனை அத்தனை வெறுப்பாய் பார்த்தாள். அந்தப் பார்வை ராகுலின் பிடிவாதமான இதயத்தையும் சில நேரங்களில் அசைத்துத்தான் பார்த்தது. அதனாலையே அவனும் அவளை விட்டு விலகியே இருந்தான்.
அங்கே இருந்தால் தான் பிரச்சனை என்று, அவன் மாற்றல் வாங்கிக் கொண்டு வெளியூர் சென்று விட்டான். இப்படியே மாதங்கள் சென்றது. ஷாலினியோ வீட்டிலேயே முடங்கிவிட்டாள். அன்னேரம் தான் அவளுக்கு சென்னையில் உள்ள வங்கி ஒன்றில் தலைமை அதிகாரிக்கான வேலை கிடைத்தது. அவள் அதற்காகத்தான் பல வருடங்களாக முயற்சித்திருந்தாள்.
இப்போது அது கிடைக்கவும், அவளுக்கு பெரிதாய் மகிழ்ச்சி எல்லாம் இல்லைத்தான். ஆனால் இந்த இறுக்கமான நிலையில் இருந்து வெளி வர அந்த வேலையை பற்றிக் கொண்டாள்.
இந்த புதிய பொறுப்பு அவளுக்கு ஒருவிதமான தைரியத்தையும், தன்னம்பிக்கையையும் கொடுத்தது. ஒருவேளை இந்த புதிய வாழ்க்கை அவளுடைய பழைய கவலைகளில் இருந்து அவளை விடுவிக்கலாம் என்று அவள் நம்பினாள்.
ஆனால் அந்த விதியோ அவளை மேலும் ஒரு எதிர்பாராத திருப்பத்தில் கொண்டு வந்து நிறுத்தியது.
அந்த வங்கியில் தான் ராகுலும் பணிபுரிந்து கொண்டிருந்தான். அவள் வேலையில் சேர்ந்த முதல் நாளே அவனுடைய சந்திப்பை அவள் எதிர்பார்க்கவில்லை. அது அவள் முகத்திலேயே தெரிந்தது. அந்த வங்கியின் மேலாளர் ராகுல் தான். மித்ராவின் கணவன்.
ஆம் இப்போதும் அவளைப் பொறுத்தவரை, அது மித்ராவின் கணவன் மட்டுமே. அவளால் அவனை தன்னவனாக பார்க்க முடியவில்லை. ராகுலுக்குமே அது அதிர்ச்சித்தான். ஆனாலும் கூட அவளைப் போல அவனுக்கு அவள் மீது எந்த கோவமும் இல்லையே. அதனால் சிறு புன்னகையுடன் அவளைப் பார்த்தான்.
"ஹாய் மேடம். என் பேரு ராகுல். நான் இங்க மேனஜரா இருக்கேன்." என்று சிறு பணிவுடன் தான் கையை நீட்டினான். அவனுக்கு மேல் இருக்கும் அதிகாரிடம் எப்படி பேசுவானோ? அப்படித்தான் அவன் இருந்தான்.
ஆனால் ஷாலினியோ அவனை ஏற இறங்க பார்க்கிறாள். "மிஸ்டர் ராகுல். உங்க இண்ட்ரோக்கு தேங்க்ஸ். பட். இதுக்கப்புறம் நான் கூப்பிடாம, என் கேபினுக்கு வரக் கூடாது. நான் சொல்ற வேலைய மட்டும் நீங்க உங்க இடத்துல இருந்து செஞ்சா போதும்” என்று சொல்லும் போதே அவள் குரலில் அத்தனை அதிகாரம் தெரிந்தது.
இப்போதுத்தான் அவள் பார்வையை அவன் நேருக்கு நேர் சந்தித்தான். அவள் பார்வையில் இருந்த வெறுப்பை கவனித்தவனுக்கு, ”இவ ஏன் நம்மள இப்படி பார்க்குறா?” என்று தனக்குள்ளே யோசித்தான்.
அடுக்கடுத்த நாட்களிலுமே ஷாலினி வேண்டுமென்றே ராகுலுக்கு அதிக வேலை கொடுத்தாள். அவன் என்ன செய்தாலும், அவனைத் திட்டி தீர்த்தாள். சின்ன சின்ன தவறுகளுக்கும் அவனை மற்றவர் முன் நிறுத்தி அவமானப்படுத்தினாள்.
“என்ன ஷாலினி பண்ணிட்டு இருக்க?” என்று அவள் மனம் கேட்டாலும் கூட ஏனோ, அவள் மீதிருக்கும் கோவத்தையும் அவனிடம் தான் கொட்டி தீர்த்தாள்.
அப்படித்தான் அன்றும் "மிஸ்டர் ராகுல், இந்த ரிப்போர்ட்ல நிறைய தப்பு இருக்கு. நீங்க என்னத்தான் வேலை செய்றீங்கன்னு எனக்கு புரியல. உங்களுக்கு உண்மையாவே வேல பாக்க தெரியுமா? தெரியாதா?” என்று கத்தினாள்.
அவனுக்கோ, அதில் என்ன தவறு இருக்கிறது என்றே தெரியவில்லை. ஆனாலும் முகத்தை இறுக்கமாய் வைத்துக் கொண்டு அப்படியேத்தான் நின்றிருந்தான்.
ஏனோ அவனுடைய அமைதி, அவளை சற்று சாந்தப்படுத்த, “திரும்பவும் இதை சரிபண்ணி நாளைக்கு காலையில என் டேபிளுக்கு கொண்டு வாங்க.." என்று சொல்லிவிட்டு அவள் அடுத்த வேலையைப் பார்க்க ஆரம்பித்தாள்.
அவனுக்கோ அத்தனை அவமானமாய் இருந்தது. அதே நேரம் ஷாலினியுடைய இந்த கோவத்துக்கான காரணம் அவனுக்கு புரியவே இல்லை.
“நான் என்ன தப்பு பண்ணேன் இவளுக்கு?' என்று தனக்குத் தானே கேட்டான். “கண்டிப்பா நம்ம அவகிட்ட பேசியே ஆகனும்” என்று யோசித்தான். ஆனால் அதற்கு அவள் வாய்ப்பு கொடுக்க வேண்டுமே.
அப்படித்தான் அன்று ஒருநாள் ராகுல் ஷாலினியின் அறைக்கு வந்து நின்றான். அவன் முகத்தில் ஒருவிதமான தயக்கம் தெரிந்தது.
“நான் உங்க கிட்ட ஒரு நிமிஷம் பேசனும்” என்று மெதுவாய் கேட்டாலும் அதில் சிறு அழுத்தம் கூட இருந்தது.
அதில் அவனை நிமிர்ந்துப் பார்த்தவள், "என்ன விஷயம் மிஸ்டர் ராகுல்? எனக்கு நிறைய வேலை இருக்கு. உங்களுக்காக எல்லாம் என் நேரத்தை வீணடிக்க முடியாது. எதுவா இருந்தாலும் சீக்கிரம் சொல்லிட்டு கிளம்புங்க" என்றாள்.
"நீங்க ஏன் என்கிட்ட இப்படி நடந்துக்குறீங்கன்னு எனக்கு புரியல. நான் ஏதாவது தப்பு பண்ணியிருந்தா சொல்லுங்க. நான் சரி பண்ணிக்கிறேன்." என்று அவன் தயக்கம் தொலைத்து அவளிடம் கேட்டான்.
அதில் அவளோ "நீங்க என்ன தப்பு பண்ணீங்கன்னு உங்களுக்கு உண்மையாவே தெரியலையா மிஸ்டர் ராகுல்?" என்ற அவள் குரலில் இருந்த வெறுப்பு ராகுலை இன்னுமே காயப்படுத்தியது.
“உண்மையாவே தெரியல. நான்” என்று அவன் சொல்லி முடிக்கும் முன்னே, “உங்கள பத்தி நான் தெரிஞ்சிக்க வேண்டிய அவசியம் இல்ல. சோ ஹெட்டவுட்” என்றாள்.
இப்போது அவனுக்கு அவள் மேல் மெல்லிய கோவம் கூட முளைத்தது. “இவளுக்கு என்ன தெரியும் என்ன பத்தி?' என்று தனக்குள்ளே சொல்லியவன் அங்கிருந்து சென்றிருந்தான்.
அவன் கேபினைத் தாண்டும் நொடி, அவள் நிமிர்ந்து அவனைப் பார்த்தாள். அவன் அவளைப் பாதித்தானா? தெரியவில்லை. ஆனால் அதன் பின்னும் ஷாலினி அவனுக்கு கஷ்டமான வேலையைத்தான் கொடுத்தாள்.
இருந்தும் இப்போதெல்லாம் அவனே அறியாமல் அவனை கவனிக்க ஆரம்பித்திருந்தாள். அவனுக்கு அவள் மீது அத்தனை கோவம் இருந்தும் கூட, அவன் அதை அவளிடம் காமிக்கவில்லை.
அது அவளுக்குள் புது வித கலவையான உணர்வை உருவாக்க முயற்சித்தது. ஆனாலும் அவள் அவனை வாட்டுவதை எல்லாம் நிறுத்தவில்லை. அவனுடைய தகுதிக்கு குறைவான வேலையை கூட கொடுத்தாள்.
அவனோ மறுப்பு சொல்லாது அதை செய்து முடித்தான். “பாக்குறேன் மிஸ்டர் ராகுல்? எத்தன நாளைக்கு இப்படி நல்லவனா நடிக்கிறீங்கன்னு” என்று அலட்சியப்படுத்திக் கொண்டாள்.
ஒரு நாள் ஷாலினி அதிக வேலைப்பளுவால் களைத்துப்போய் தன்னுடைய அறையில் அமர்ந்திருந்தாள். அவள் பார்க்க வேண்டிய வேலைகள் எல்லாம் மலை போல் குவிந்து கிடந்தது.
தலை வலிப்பது போல் இருக்க, அப்படியே தலையை பிடித்தப்படி அமர்ந்து விட்டாள். அப்போது அங்கு வந்த ராகுல் அவளுக்கு ஒரு கப் சூடான டீயை அவள் டேபிளில் கொண்டு வந்து வைத்தான்.
அதில் இவளோ சிறு கோவத்துடன், “உங்க கிட்ட கேட்டேன்னா?” என்று கேட்க, “இன்னிக்கு ப்யூன் லீவ். எப்படியும் அந்த வேலையையும் என்கிட்டத்தான் கொடுப்பீங்க. அதான் நானே வாங்கிட்டு வந்துட்டேன். வேணும்னா குடிங்க. இல்லன்னா டஸ்பீன்ல போட்டுடுங்க” என்று சொல்லிவிட்டு அங்கிருந்து சென்றிருந்தான்.
ஏனோ அந்த சின்ன செயல்! அவள் மனதை என்னமோ செய்தது. அதில் வெளியில் செல்பவனைப் பார்த்தப்படியே அந்த டீயை எடுத்துக் குடித்தாள். அதற்காக எல்லாம் அவள் ராகுலை ஏற்றுக் கொண்டதாய் அர்த்தம் ஆகாதே.
இப்படி ஒரு பக்கம் செல்ல, மறு பக்கமோ வங்கியில் யாரும் எதிர்பாராத விதமாக பெரிய அளவில் பண மோசடிநடந்திருப்பதை ஷாலினி கண்டுபிடித்தாள். பல கோடி ரூபாய் கையாடல் செய்யப்பட்டிருந்தது. இந்த மோசடி மிகவும் திட்டமிட்டு, பல மாதங்களாக நடந்து வந்திருப்பது தெரியவந்தது.
இந்த கையாடலுக்கு பின்னால் பெரிய தொழிலதிபர் மகன் கிஷோரும், சில அரசியல்வாதிகளும் இருப்பது தெரிய வந்தது. உண்மையை தக்க ஆதாரத்தோடு வெளிக்கொண்டு வர ஷாலினி தன்னுடைய முழு கவனத்தையும் விசாரணையில் செலுத்தினாள். அதனால் ராகுலை வாட்டுவதை சற்று குறைத்திருந்தாள்.
அவள் இரவு பகலாக தூங்காமல் அதில் மூழ்கியிருந்தாள். ஒவ்வொரு அக்கெளண்டையும் அவள் விடாதுப் பார்த்தாள். ராகுலிடமே பல விவரங்களை கேட்டு அறிந்துக் கொண்டாள். இப்போதுத்தான் ஷாலினியுடைய மறுமுகத்தை அவன் பாக்கிறான்.
ராகுல் அவளுடைய அர்ப்பணிப்பையும், நேர்மையையும் சிறு ஆச்சர்யத்துடன் பார்த்தான். அவளுடைய அந்த தைரியம் அவனுக்குள் ஒருவிதமான மரியாதையை ஏற்படுத்தியது. அவன் சில நேரங்களில் அவளுக்கு தேவையான உதவிகளை அமைதியாக செய்தான். ஏனெனில் அவன் ஏதாவது பேசினாலே, அவள் திட்டினாள். அதனாலையே அவன் அவளிடம் பெரிதாய் பேசுவதில்லை.
ஆனாலும் அது என்னவோ வேலையில் இருக்கும் டென்சனை அவன் மீது கொட்டிவிட்டாள் அவள் இலகு ஆகிவிடுவாள். இப்படியே நாட்கள் சென்றது.
விசாரணையின் முடிவில், பிரபல தொழிலதிபர் கிஷோர் இந்த மோசடியில் முக்கிய பங்கு வகிப்பது உறுதியானது. கிஷோரும், அவனுடைய அப்பாவும் மிகவும் செல்வாக்கு வாய்ந்தவர்கள். அவருடைய அரசியல் தொடர்புகள் மிகவும் பலமாக இருந்தது.
ஷாலினியின் இந்த துணிச்சலான நடவடிக்கை அவருக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியது. அவர் ஷாலினியை தொலைபேசியில் மிரட்டினார். அவள் குடும்பத்தை அழித்து விடுவதாக எல்லாம் சொல்லிப் பார்த்து விட்டார்.
ஆனால் அவள் அசர வேண்டுமே, அவள் எதற்குமே அசராது, “உன்னால முடிஞ்சத பண்ணிக்கோ” என்று நேரடியாகவே சொல்லிவிட்டு அந்த வேலையில் இன்னுமே மூழ்கித்தான் போனாள்.
ஏனெனில் அவள் எப்போதுமே செய்யும் வேலைக்கு நேர்மையாக இருக்க வேண்டும் என்று நினைப்பாள். அதனாலையே உண்மையை வெளிக்கொண்டு வருவதில் அவள் உறுதியாக இருந்தாள்.
ஒருமுறை ராகுலே அவளிடம் வந்து, "ஷாலினி, நீ ரொம்ப தைரியமான பொண்ணுன்னு எனக்கு தெரியும். ஆனா கொஞ்சம் ஜாக்கிரதையா இரு. அவங்க ரொம்ப ஆபத்தானவங்க. உனக்கு ஏதாச்சும்னா அது என்னையும்” என்று சொல்ல வந்தவன் பின் அவள் முறைப்பதை உணர்ந்து அதை சொல்லாது, “ப்ளீஸ் மேடம். அவங்க கொஞ்சம் டேஞ்சரான ஆளுங்க. அதுவும் போக, இத நம்ம நிரூபிச்சாக் கூட, அவங்க வெளிய வந்து மறுபடியும் இதத்தான் பண்ணுவாங்க. இவ்வளவு ஏன், உங்க வேலைக்கே கூட பிரச்சனைய ஏற்படுத்துவாங்க” என்றவன் அவர்களைப் பற்றி ஓரளவுக்கு தெரியும் என்பதால் கூறினான்.
அவன் தன் மீது அக்கறை எடுத்துக் கொள்வது அவளுக்கு பிடிக்கத்தான் செய்தது. ஆனாலும் அதை வெளிக்காட்டாது, "எனக்கு என் கடமைதான் முக்கியம் ராகுல். அவங்கள பார்த்து பயந்து ஒதுங்க நான் ஒன்னும் கோழ இல்ல," என்று அழுத்தம் திருத்தமய் கூறினாள்.
அவளுடைய இந்த நேர்மையும், உறுதியும் அவனுக்கு இன்னுமே அவள் மீது நிறைய மரியாதையை உருவாக்கியது. அதே நேரம் அவளுக்கு எந்த ஆபத்தும் வரக் கூடாது என்பதிலும் கவனமாய் இருந்தான். அதனால் ராகுல் ஷாலினியின் பாதுகாப்பை உறுதிப்படுத்த தன்னுடைய காவல் துறை நண்பர்களிடமும் உதவி கேட்டான்.
ஷாலினிக்கு ஏதோ ஆபத்து வரப் போவது போல் ராகுலின் உள்ளுணர்வு அடித்து சொலியது. அதில் அமைதியாய் மித்ராவின் புகைப்படத்தின் முன் நின்று விட்டான்.
மித்ராவும் ஷாலினியும் உயிர் தோழிகள் என்று அவனுக்கு நன்றாக தெரியும். மித்ராவும் சரி ஷாலினியின் மீது அத்தனை பாசம் வைத்திருந்தாள். ஷாலினியை சொல்லவே வேண்டாம். அவளுக்காகத்தானே அவனையே திருமணம் செய்துக் கொண்டாள்.
ஆனால் அவனுக்கு இப்போதுமே புரியாத ஒன்று. மித்ரா ஏன் ஷாலினியின் குணத்தைப் பற்றி தெரிந்தும், அவளை தன்னை திருமணம் செய்துக் கொள்ள சொன்னாள்? என்று புரியவில்லை.
“ஏன் மித்ரா இப்படி பண்ண? உனக்கு அவள பத்தி தெரியாதா? தெரிஞ்சும் எதுக்காக இப்படி பண்ண?” என்று அந்த புகைப்படத்தைப் பார்த்து கேட்டான்.
ஆனால் அந்த புகைப்படத்தில் இருந்தவளோ, “உன்னை விட உன்னை பற்றி எனக்கு நன்றாக தெரியும்” என்று சொல்லியிருப்பளோ? என்னவோ?
அதை எல்லாம் தாண்டி இப்போது ஷாலினியை பாதுகாப்பதே அவனுக்கு முக்கியமானதாய் தெரிய, ஷாலினிக்கே தெரியாது அவளை பின் தொடர ஆரம்பித்தான்.
வங்கிக்கு வரும்போதும், போகும்போதும் அவன் அவளுக்கு பாதுகாப்பாக இருந்தான். அதை ஷாலினி பெரிதாய் கவனிக்கவில்லை.
அப்படியான ஒரு நாளில், ஒரு நாலு பேர் அவளை பின் தொடர, அதில் இருந்த ஒருவன், அவளை நோக்கி ஆசிட் பாட்டிலை வீச வந்தான். அதைப் பார்த்து ஷாலினி அதிர்ந்து அப்படியே நிற்க, அதற்குள் அங்கு வந்த ராகுல் அவளைப் பிடித்து இழுத்திருந்தான். நொடியில் நடந்து விட்ட நிகழ்வில், ஷாலினிக்கு உடல் நடுங்கியது. அவளோ அவனை இறுக்கமாய் அணைத்திருந்தாள்.
அவன் அவளை விட்டு விட்டு அவர்களை துரத்தி பிடிக்க செல்லப் போக, அவள் அவனை விடவில்லை. அவனை அத்தனை இறுக்கமாய் பிடித்திருந்தாள். இங்கே ராகுலுக்குமே அவளுடைய நிலை புரிய மெல்ல அணைத்தான்.
அன்று இரவு ராகுல் ஷாலினியை தன்னுடைய வீட்டுக்கே அழைத்துச் சென்றான். ஏனோ அவளை தனியே விட அவனுக்கு விருப்பம் இல்லை.
“ச் இப்போ எதுக்கு என்ன இங்க கூட்டிட்டு வந்தீங்க. நான் என் ரூமுக்கே போறேன்” என்றாள்.
“என்னால இதுக்கப்புறம் உன்ன தனியா விட முடியாது ஷாலினி” என்று அழுத்தம் திருத்தமாய் சொல்ல, “அத சொல்றதுக்கு நீங்க யாரு” என்றாள்.
“உன் கழுத்துல தொங்கிக்கிட்டிருக்க அந்த தாலிய கேளு. அது நான் யாருன்னு சொல்லும். இங்கப்பாரு. உன்ன ஒன்னும் என் கூட வாழ்றதுக்காக கூட்டிட்டு வரல. இந்த பிரச்சன முடியிற வரைக்கும் நீ இங்கத்தான் இருந்தாகனும். எனக்கு எல்லாத்தையும் விட உன் பாதுகாப்புதான் முக்கியம்” என்று அழுத்தி சொல்லிவிட்டு அங்கிருந்து சென்றிருந்தான் ராகுல்.
அவனுடைய அக்கறையை உணர்ந்தாலும், அவளுடைய பிடிவாத குணம், அதை ஏற்கவிடவில்லை. “இவர் சொன்னா நான் கேட்கனுமா? பெருசா என்னமோ என் கழுத்துல மட்டுமே தாலி கட்டுன மாதிரி பேசுறாரு” என்று உள்ளுக்குள் பொறுமினாள்.
அங்கே அந்த கிஷோரோ ஷாலினியை கொலை செய்ய கூலிப்படை ஒன்றை ஏவியிருந்தான்.
அப்படியான ஒரு நாளில், ராகுல் அத்தனை சொல்லியும் அதைக் கேட்காது, அவள் அங்கிருந்து அவள் தங்கியிருந்த வீட்டுக்கு கிளம்பினாள்.
அந்த இரவு நேரத்தில், ஷாலினி தன்னுடைய காரில் சென்று கொண்டிருந்த போது, ஒரு கும்பல் அவளை வழிமறித்தது. அவர்கள் அவளுடைய காரின் மீது கல்லை தூக்கி வீசினர். அந்த தாக்குதலை சற்றும் எதிர்பார்க்காதவளோ பயத்தில் உறைந்து போனாள்.
தைரியசாலித்தான். ஆனால் அந்த இரவு நேரத்தில், தனியாளாய், அத்தனைப் பேரை பார்த்து அவள் மிரண்டுத்தான் போயிருந்தாள். ஏனோ அவளுடைய இதயம் அத்தனைப் பலமாய் துடித்தது.
வேகமாய் போலீஸுக்கு கால் செய்ய நினைத்து மொபைலை எடுக்க அதுவோ சுவிட்ச் ஆப் ஆகியிருந்தது. சரியாக அந்த நேரத்தில் ராகுல் அங்கு பைக்கில் மின்னல் வேகத்தில் வந்து சேர்ந்தான்.
அவனைப் பார்த்தப் பின் தான் அவளுக்கு மூச்சே வந்தது. “ராகுல்” என்றப்படி அவள் காரை விட்டு இறங்கப் போக, “காரை விட்டு இறங்காத” என்று அத்தனை அழுத்திக் கூறினான் ராகுல்
அதற்குள் அந்த கும்பல் ஷாலினியுடைய காரை சுற்றி வளைக்கப் போக, ஒற்றை ஆளாய் அவன் அத்தனைப் பேரிடமும் சண்டையிட்டான். இதற்கிடையில் அவனுடைய நண்பனுக்குமே தகவல் கொடுத்து விட்டுத்தான் வந்திருந்தான்.
ஆனால் அவர்கள் வரும் முன் ஒருவன் ஷாலினியுடைய கார் கதவை திறக்க செல்ல, ராகுல் நடுவில் புகுந்தான். அந்த சண்டையில் ராகுலுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அவனுடைய கையில் கத்தி பதிந்து, இரத்தம் வழிந்தோடியது.
அந்த நிலையிலும் அவன் மற்றவர்களை ஷாலினியிடம் நெருங்க விடவில்லை. ஏற்கனவே பயத்தில் உறைந்திருந்தவளுக்கு, இப்போது ராகுலின் கையில் வடிந்திருந்த இரத்தம் அவளை மொத்தமாய் மூர்ச்சையாக்கியது.
அதனால் அவன் பேச்சையும் மீறி காரை விட்டு இறங்கி வர, இன்னும் சிலர் அவளை கொல்ல அருகில் வந்தனர். அதில் அவளை குத்த வந்தவர்களுக்கு முன் ராகுல் சென்றிருக்க, இப்போது மீண்டும் அவனுடைய தோள்பட்டையில், ஒரு வெட்டு காயம் ஏற்பட்டது.
“ஐயோ ராகுல்” என்று அவள் அவன் கையைப் பிடிக்க, அவனோ அந்த நிலையிலும், “நீ இங்க இருந்து போயிடு ஷாலினி. நான் பார்த்துக்கிறேன்” என்றான்.
“இல்ல நான் உங்கள விட்டு போ மாட்டேன்” என்று அவள் சொல்ல, அதற்குள்ளாக போலீஸூம் அங்கு வந்திருந்தனர்.
அந்த சண்டைக்கு பிறகு மருத்துவமனையில் ராகுலுக்கு சிகிச்சை அளித்தார்கள். ஷாலினி அவனருகிலேயே ஒரு நிழல் போல இருந்தாள். அவனுடைய கையை பிடித்துக்கொண்டு அப்படியே அமர்ந்து விட்டாள்.
அவள் அவனை அத்தனை தூரம் அவமானப்படுத்திய பின்னும் கூட, தனக்காக உயிரை விட துணிந்த அவனின் செயல், அவளை அசைத்துத்தான் பார்த்தது. அதிலும், அவன் கண்ணில் தெரிந்த ஏதோ ஒன்று அவளை குழப்பியது. அவளுக்கு எதுவும் ஆக கூடாது என்று அவன் தவித்த தவிப்பு. இதை மித்ராவின் கடைசி நொடியில் கூட அவள் பார்த்திருக்கவில்லை.
அவனுடைய உடை எல்லாம் இரத்தக் காயமாய் இருக்க, அவனுக்கு மாற்றுடை எடுப்பதற்காக வீட்டுக்கு வந்தாள். அப்போது அந்த கபோர்டில் இருந்து ஒரு டைரி விழுந்தது.
அதை அவள் குனிந்து எடுக்க, அதனுள்ளே ஷாலினி சிறு வயதில் எடுத்த புகைப்படங்கள் எல்லாம் இருந்தது. மித்ரா வைத்திருப்பாளோ? என்று நினைத்து அவள் அதை கையில் எடுத்தாள்.
அந்த டைரி அவளை உந்த, அதை மெதுவாய் திறந்தாள். அது மித்ராவுடைய டைரித்தான். முதலில் மூடி வைக்க நினைத்தவள், பின் எதுவோ தோன்ற அதை புரட்டினாள். சில பக்கங்களை புரட்டியதும் அவளுக்கு அதிர்ச்சியான உண்மை தெரியவந்தது.
மித்ரா தன்னுடைய டைரியில் ராகுல் முதலில் ஷாலினியை காதலித்ததாகவும், ஒரு இக்கட்டான சூழ்நிலையில் தன்னுடைய குடும்பத்திற்காக தன்னை திருமணம் செய்து கொண்டதாகவும் எழுதி இருந்தாள்.
மேலும், அதில், “ஷாலு ஐயம் சாரி! இந்த லைப் உனக்கு சொந்தமானது. ஆனா நான் தான், உனக்கும் அவருக்கும் துரோகம் பண்ணிட்டேன். எல்லாம் தெரிஞ்சும் கூட என்னோட காதலுக்காக ராகுல் காதல்ல நான் அழிச்சிட்டேன். அதனாலத்தான், என்னால அவர் கூட வாழ முடியாமலே போயிடுச்சு” என்று எழுதியிருந்தது.
அதைப் படித்ததும் அவளுடைய இதயம் மேலும் வேகமாய் துடித்தது. இப்படி ஒன்றை அவள் எதிர்பார்த்திருக்கவில்லை. ராகுலை முதன் முதலாய் கல்லூரி காம்பிடீசன் ஒன்றில் வைத்து பார்த்த ஞாபகம் அவளுக்கு மின்னலென வந்து சென்றது.
அதன் பின் அவள் நேரே சென்றது என்னவோ ராகுலுடைய அறைக்குத்தான். அவள் அங்கு வந்த நாளில், ஏதோ ஒன்றை அவன் அங்கு மறைத்து வைத்தது நினைவுக்கு வர அதை தேடினாள்.
அதில் ஷாலினியுடைய புகைப்படம் அவள் உபயோகித்த சாக்லெட் பேப்பர்கள், பலூன், சிகுனா தாள்கள் என அத்தனையும் இருந்தது. அதை எல்லாம் பார்த்தவள் நிச்சயம் என்ன மாதிரி உணர்ந்தாள் என்றே தெரியவில்லை.
அடுத்த நொடி அவனைப் பார்க்க அந்த மருத்துவமனைக்கு சென்றிருந்தாள். அங்கே அவனோ அப்போதுத்தான் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்து தனி அறைக்கு மாற்றப்பட்டிருந்தான்.
"ராகுல்..." அவள் மெல்லிய குரலில் அவனை அழைத்தாள். அவளுடைய குரலில் இருந்த ஏதோ ஒன்று அவனை அந்த நிலையிலும் பாதித்தது.
கஷ்டப்பட்டு மெதுவாக தன் கண்களை திறந்தான். அவனுடைய கண்களில் ஒருவிதமான வலியும், களைப்பும் தெரிந்தது. ஆனாலும் அந்த நொடியிலும் ஷாலினிக்கு எதுவும் ஆகவில்லை என்பது அவனுக்கு ஒரு வித நிம்மதியைக் கொடுத்தது. அதை உணர்ந்தவளுக்கோ ஏனோ கண்கள் கலங்கியது.
"நீங்க... நீங்க ஏன் என்கிட்ட இதையெல்லாம் சொல்லல?" என்று கேட்கத்தான் நினைத்தாள். ஆனாலும் அவள் அதை சொல்லவில்லை. ஆனால் அதை செயலில் காட்ட ஆரம்பித்தாள்.
ஆம் அதன் பின் ராகுலுடன் அவள் ஒரே வீட்டில் தான் இருந்தாள். நாட்கள் செல்லச் செல்ல ஷாலினியும் ராகுலும் ஒருவரையொருவர் ஆழமாக புரிந்துகொள்ள ஆரம்பித்திருந்தனர்.
முன்பு எதற்கெடுத்தாலும் அவனை திட்டி தீர்ப்பவள் இப்போது அவனிடம் சிறு புன்னகையுடன் பேசி பழக ஆரம்பித்தாள். அவனுக்கு அவன் கண்ணையே நம்ப முடியவில்லை.
இருவருக்கும் இடையே இருந்த அந்த கண்ணுக்கு தெரியாத சுவர் மெல்ல மெல்ல இடியத் தொடங்கியது. ஆனாலும் அவனுக்குள் இந்த மாற்றத்துக்கான காரணம் என்ன என்ற கேள்வி ஓடிக் கொண்டுத்தான் இருந்தது.
அன்றும் அப்படித்தான் ராகுல் பால்கனியில் நின்றிருந்தான். வெளியில் மழை பெய்துக் கொண்டிருக்க, இவனோ அப்படியான ஒரு மழை நாளில் தான் ஷாலினியை முதன் முதலில் பார்த்தான். ஏனோ அவன் காதலை சொல்லும் முன்னே, அவன் வாழ்க்கையில் என்னென்னவோ நடந்திருக்க, இப்போது மீண்டும் அவன் வாழ்க்கையில் அவனுடைய காதலி.
ஆனாலும் ஷாலினியின் குணம் அவனுக்கு தெரியுமே. எப்படியும் இந்த ஜென்மத்தில் அவனை அவளால் ஏற்றுக் கொள்ளவே முடியாது என்று நினைக்கும் போதே அவன் இதயத்தை யாரோ ஊசியால் துளைப்பது போல் வலித்தது.
சரியாக அன்னேரம், “ராகுல்” என்றப்படி அவனுக்கான காபியையும் சேர்ந்து எடுத்துக் கொண்டு வந்தாள்.
இப்போது அவனோ, “இதெல்லாம் நீ எதுக்கு?” என்று கேட்க நினைத்து பின் அவள் முறைக்கவும், எதுவும் சொல்லாது அமைதியாய் வாங்கிக் கொண்டான்.
அவளுமே அவனுக்கு எதிரே அந்த பால்கனி கம்பியில் சாய்ந்து நின்றப்படி காபியை குடிக்க, அவனோ அவளைப் பார்த்தான். அதே முகம், அதே பாவனை. அவளையே இமைக்காதுப் பார்த்தான்.
ஆனால் அவளோ அவனைக் கண்டுக் கொள்ளாது வெளியில் மழையை வேடிக்கைப் பார்த்தாள். அவனின் பார்வையோ அவள் உச்சி தொட்டு பாதம் வரை ரசனையாய் பரவியது. ஏனோ மனைவி என்ற உரிமையும் அந்த நொடி அவனுக்கு தோன்றியதோ என்னவோ?
“ச் ராகுல் என்னப் பன்ற நீ? அவளே உனக்கு முடியலன்னுத்தான் உன்ன பாத்துக்க வந்திருக்கா. மத்தப்படி அவ மனசுல நீ எப்பவும் இடம் பிடிக்க முடியாது” என்று மனசாட்சி சொல்ல, அவன் சட்டென்று பார்வையை விலக்கினான்.
“இப்ப கூட உங்க மனசுல இருக்கிறத சொல்ல மாட்டீங்க. அப்படித்தான ராகுல்?” என்று இப்போதும் அவனைப் பார்க்காது கேட்டாள் ஷாலினி.
“என்ன?” என்று அவன் தடுமாற, இப்போது அவனைப் பார்த்தவள், “எனக்கு தெரியும்” என்றாள். அதை சொல்லும் போதே அவள் கண்கள் சற்று கலங்கியிருந்தது.
அவள் கண்கள் சொன்ன செய்தி புரிந்தும், புரியாமலும் அவனை கலவரப்படுத்த, இப்போது அவளோ, அவனை மேலும் நெருங்கி வந்து, “இப்போ நீங்க சொன்னா, கண்டிப்பா நோ சொல்ல மாட்டேன். இப்பவும் சொல்லல அப்படின்னா?” என்று இழுத்து நிறுத்தினாள்.
அதில அவனுடைய இதயம் பலமாய் துடிக்க, அவன் கண்கள் அவள் விழியில் எதையோ தேடி அலைய, இப்போது மெல்ல அவன் காதோரம் நெருங்கியவள், “ராகுல்” என்றாள்.
அதில் அவனுக்கோ மூச்சு முட்டுவது போல் இருக்க, அவளோ, இப்போது அவன் கன்னத்தோடு கன்னம் உரசி, “சூடு ஆடுறதுக்குள்ள காபிய குடிங்க” என்று சொல்லிவிட்டு அங்கிருந்து ஓடியிருந்தாள்.
இப்படி அவர்களுடைய வாழ்க்கை சற்று அழகாய் ஆரம்பிக்க, இதற்கிடையில் ஷாலினி வங்கி மோசடி தொடர்பான மேலும் பல முக்கியமான ஆதாரங்களை திரட்டினாள். ஊழலை நிரூபிக்கும் அனைத்து ஆவணங்களையும் சேகரித்து அந்த ஆதாரங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பித்தாள்.
இந்த வழக்கு ஊடகங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. நாடு முழுவதும் இந்த ஊழல் பற்றியும், ஷாலினியின் துணிச்சலைப் பற்றியும் பேசினார்கள். நீண்ட மற்றும் பரபரப்பான விசாரணைகளுக்குப் பிறகு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. தொழிலதிபர் கிஷோர் மற்றும் அந்த ஊழலில் சம்பந்தப்பட்ட அனைத்து அரசியல்வாதிகளும் குற்றவாளிகள் என்று நிரூபிக்கப்பட்டு கைது செய்யப்பட்டனர்.
வங்கி மோசடி வெளிச்சத்துக்கு வந்தது. பொதுமக்களின் பல கோடி ரூபாய் பணம் மீட்கப்பட்டது. ஷாலினியின் துணிச்சலான மற்றும் நேர்மையான செயலை ஊர் முழுவதும் பாராட்டப்பட்டது. அதை எல்லாம் பார்த்த ராகுலுக்கு அத்தனை மகிழ்ச்சி.
அன்றிரவு ஷாலினி தன்னுடைய வீட்டு மொட்டை மாடியில் நிலவைப் பார்த்தபடி நின்றிருந்தாள். மெல்லிய காற்று அவளுடைய தலைமுடியை வருடியது. அப்போது பின்னாலிருந்து வந்த ராகுல் அவளை மெதுவாக அணைத்துக் கொண்டான்.
அவளோ, சிறு எதிர்வினையும் காட்டாது, அப்படியேத்தான் இருந்தாள். இப்போதெல்லாம் இப்படி குட்டி குட்டி அணைப்புகள் அவர்களுக்கு பழகியிருந்தது. ஆனாலும் அந்த அணைப்பு எல்லாம் ஷாலினியிடம் இருந்தே வரும்.
முதன் முறையாய் ராகுல் அவளை அணைத்திருக்கிறான். “எனக்கு உன்ன நினைச்சு ரொம்ப பெருமையா இருக்கு. சீரியஸ்லி யூ ராக்ட்” என்றான்.
“ம்” என்றவள் அப்போதும் வேறு எதுவும் சொல்லவில்லை. அதில் அவளை விட்டு விலகி, “என்னாச்சு ஷாலினி?” என்றான்.
அப்போது அவன் பக்கம் திரும்பி அவனைப் பார்த்தவள், கையில் இருந்த ஒரு புகைப்படத்தை எடுத்து அவனிடம் நீட்டினாள். அதைப் பார்த்தவனுக்கு அத்தனை அதிர்ச்சி, “இந்த போட்டோ. இது எப்படி? உன்கிட்ட” என்றவன் பெரிதாய் தடுமாறினான்.
அவளோ இப்போது, “இந்த போட்டோக்கு கீழ என்ன எழுதி வச்சிருக்கீங்க?” என்று கேட்டாள்.
அதைப் பார்த்தவனோ, “ஷாலு. அது நான்” என்று அப்போதும் வார்த்தையை மென்று விழுங்கினான்.
அவளோ அதற்கடுத்து இன்னொரு பேப்பரை எடுத்து காட்டினாள். அதில் ஒரு கவிதை எழுதப்பட்டிருந்தது. கவிதையா? இல்லை அவனின் மனக்குமறலா? ஏதோ ஒன்று…
“மழைத் துளி போல வந்தவள் நீ,
என் வெறுமைக்கு அர்த்தம் தந்தவள் நீ.
நீ என்னை தவிர்க்கையில்
துடித்தேன் நான்
உன் மௌனத்தின் அர்த்தம்
அறியாது தவித்தேன் நான்.
என் காதலை உணர்த்தும் தகுதியை
இழந்தவனாகிப் போனேன் ஏனோ?”
அதை அவனின் முன் படித்துக் காட்டியவள், இப்போது அவனைப் பார்க்க, அவனோ சிறு குற்ற உணர்வோடு, “இல்ல ஷாலினி” என்று அப்போது அவள் பார்வையை அவன் தவிர்த்தான்.
அதில் இப்போது அவளோ… “ஐ லவ் யூ ராகுல்” என்றாள். அவன் காதில் விழுந்ததை நம்ப முடியாது அவன் நிமிர்ந்துப் பார்க்க, “காதலையும் சொல்ல மாட்டீங்க. நான் காதல்ல சொன்னாலும் பதில் சொல்ல மாட்டீங்க. இப்படிப் போனா? அப்புறம் மெளன ராகம் படத்துல வர்ற மாதிரி, கிளைமேக்ஸ் சீன்ன ரயில்வே ஸ்டேஷன்லத்தான் வைக்கனும்” என்று சீண்டலும் காதலுமாய் தன் மனதை அவனிடம் சொல்ல, “ஷாலு” என்றவன் அவளை வேகமாய் கட்டிக் கொண்டான்.
அவனுக்கு அப்போதும் கூட அவனுடைய காதலை சொல்ல, வார்த்தை வரவில்லை. “ஷாலு” என்றப்படி அவள் நெற்றியில் அழுத்தி முத்தமிட்டான். அவளுமே அவன் கன்னத்தில் கரம் பதித்து, “சீரியஸ்லி என் லைப்ல எனக்கு கிடைச்ச பெஸ்ட் கிப்ட் நீங்கத்தான்” என்றாள்.
ஏணோ அந்த ஒரு வார்த்தை அவனை அத்தனை குளிர்விக்க, மீண்டும் அவளை இறுக்கமாய் அணைத்துக் கொண்டான் ராகுல்.
“மித்ராவின் டைரி ஒரு திருப்பம் தந்தது,
உன் கடந்த கால வலியை உணர்த்தியது.
உன் குற்ற உணர்வில் கரைந்தேன் நான்,
உன் கண்ணீரில் என் காதலை கண்டேன் நான்.
என் வாழ்வின் வசந்தம் நீ என்று உணர்ந்தேன்.
உன் கை கோர்த்த நொடி என் ஜென்மம் முழுமை,
நம் காதல் காலத்தை வெல்லும் உண்மை.
என் தீரா நதி நீதான டா(டி)”
இந்த கதை எப்படி இருந்திச்சுன்னு மறக்காம கமெண்ட்ல சொல்லுங்க. இந்த மாதிரி வாரம் ஒரு சிறு கதையும் இங்க வரும். சோ நீங்க கொடுக்கிற கமெண்ட் அண்ட் ரேட்டிங் வச்சித்தான். அடுத்தடுத்து கதைகள் கொடுக்க முடியும். சோ மறக்காம உங்க கருத்து எதுவா இருந்தாலும் சொல்லுங்க. உங்க கமெண்ட்ஸ்காக வெயிட்டிங். அப்புறம் எப்பவும் போல லைக் பண்ணிட்டு உங்க பிரண்ட்ஸ் கூட ஷேர் பண்ணுங்க...
முற்றும் 🫶🏻
Jebaselvi Jeba
good♥
Santhanalakshmi S
super sissy🎉🎉🎉😍😍😍 seriously you rocking sissymaa 😍😍😍semaiya iruku 🥰🥰🥰
Ammu Sathish
சூப்பர் 🥰🥰🥰
Ponmalar M
very nice story sis you always rocking 🥰🥰🥰🥰🥰
Ramya Prabha
different different ah stories aana ellam super. konjam surprise, konjam love konjam sandai variety in one single story super rocking 🥳👌
Hema S
really nice story ❤❤and the way u write the words really had a magic effects ✨🦋
Arockia Ammu
nice story keep rocking 👍
Epshi Epshiba
interesting story sis…..🖤
Nisha Nis
super da
Indhu Mathi
story super 👌❤😍
Nandhini Narasimhan
🤩😻