வரம் – 5

சரியாக அன்னேரம் அவள் திரும்பி படுக்க, அதில் பட்டென்று இவன் முகத்தை திருப்பிக் கொண்டான். சில நொடிகள் கழித்து மீண்டும் திரும்பியவன், அவளைப் பார்த்தான்.

ஏதோ சிறுமி போல் தான் உறங்கிக் கொண்டிருந்தாள். “ம்ஹூம் இவ இப்படி படுத்திருந்தா எனக்கு தூக்கம் வராது” என்று யோசித்தவன், படுக்கையில் இருந்த இன்னொரு பெட்சீட்டை எடுத்து அவளுக்கு மெல்ல போர்த்தி விட்டான்.

போர்த்தி விடும் சாக்கில் அவன் விரல்கள் பட்டும் படாமல், அவள் மேனியையும் உரசிப் பார்க்கவே செய்தது. “ச் புரோபசர் பண்ற காரியாமாடா இது” என்று அவன் மனம் கேள்வி கேட்க, பட்டென்று எழுந்து கட்டிலில் சென்று படுத்துக் கொண்டான்.

அதன் பின் அவன் எழும் போது, அறையில் அவள் இருப்பதற்கான தடையமே இல்லை. கீழே ஏதோ சத்தம் கேட்டது. “ச் அதான் கல்யாணமே முடிஞ்சிருச்சித்தான. இன்னும் எதுக்கு இந்த கூட்டம் இங்கேயே இருக்கு” என்பது போல் தான் அவன் கண்ணைக் கசக்கியப்படி எழுந்தான்.

மல்லிகைப் பூவின் நறுமணம் அந்த அறை எங்கும் வீசியது. இரவில் கூட அவன் உணரவில்லைப் போலும். ஆனால் அந்த நொடி அவனுக்குள் புது வித உணர்வு பரவியது.

அதை வளரவிடக் கூடாது என்ற நினைவோடு, அவன் குளிக்க செல்ல, அங்கேயும் அவளுடைய பிரத்யேக சோப்பு வாசனைத்தான் வீசியது. சற்று முன் தான் அவள் குளித்து விட்டு சென்றிருப்பாளோ? என்னவோ?

முதன் முறையாய் பெண்கள் உபயோகிக்கும் சோப்பின் வாசத்தை அவன் மனைவியின் தயவால் உணர்கிறான். அது ஏனோ அவனை மேலும் இம்சிக்க சவரை ஆன் செய்து குளித்து முடித்து வெளியில் வந்தான்.

அங்கே அவனுக்கான காபியும், அன்றைய தினத்துக்கான நாளிதழும் இருந்தது. கூடவே அவள் வந்து விட்டு சென்றதுக்கு அடையாளமாய், அவன் படுக்கை நீட்டாக சரி செய்யப்பட்டிருந்தது.

அதை எல்லாம் பார்த்தவனுக்கோ இப்போது மனைவியின் இரவு கோலம் நினைவுக்கு வந்தது.

அதில் தலையை குலுக்கி, அங்கிருந்த தேநீரை எடுத்துக் குடித்து அவள் நினைவை மறக்க முயற்சித்தான். ஆனால் அந்த டம்ளரில் கூட அவளுடைய சோப்பு வாசம் சற்று வந்து அவனை இம்சிக்கவே செய்தது.

அதோடு கட்டிலில் பார்க்க, அவன் அவளுக்காக உடையை எடுத்து வைத்திருந்தான். அவள் எடுத்து வைத்த உடையைப் பார்த்தான். நன்றாகத்தான் இருந்தது. ஒரு நொடி அவனையும் அறியாமல் அவனுடைய விரல் அந்த சட்டையை வருடியது. ஒரு வேளை அவளுடைய சேலைக்கு பொருத்தமான கலரில் அவனுக்கும் சட்டை எடுத்து வைத்திருப்பாளோ? என்னவோ?

ஆனால் அவனோ, அந்த உடையை அணியாமல், வேறு ஒரு உடையை அணிந்துக் கொண்டு கீழே வந்தான். உண்மையில். அவள் கையால், ஆசையாய் அதை எடுத்துக் கொடுத்திருந்தால், அதை அணிந்திருப்பானோ? என்னவோ? ஆனாலும் அவனின் ஈகோவோ, “அவ எடுத்து வச்சா அத நான் போட்டுக்கனுமா?” என்று வீம்பாய் சொல்லிக் கொண்டது.

(இப்பவே சொல்றேன் கண்ணா. இந்த வீம்பெல்லாம் நமக்கு வேண்டாம். பொறவு நீத்தேன் கஷ்டப்படனும். சரி நம்ம பேச்ச எந்த ஹீரோ கேட்டிருக்கான்?)

கீழே வந்தவனின் பார்வையோ அன்னிட்சையாய் அவன் மனைவியை ஒரு நொடி சுற்றி தேடியது. அவள் கண்ணில் விழவில்லை. “எங்கப் போனா? ஒரு வேள நேத்து நம்ம பேசுனது எல்லாத்தையும் வீட்டுல சொல்லிருப்பாளோ?” என்று யோசித்தப்படி மீண்டும் அவளைத் தான் சுற்றி தேடிப் பார்த்தான். 

ஆனால் அதற்குள் “வாப்பா அர்ஜூன். எல்லாரும் உனக்காகத்தான் காத்துக்கிட்டு இருக்காங்க. இன்னிக்கு பொண்ணு வீட்டுக்கு மறு வீட்டுக்கு போகனும்" என்றார் தேவிகா.

மனைவி கண்ணில் படவில்லை எரிச்சலும் அந்த நொடி சேர்ந்திருக்க, “என்னால எங்கேயும் போக முடியாது. நான் இப்போ உடனே ஊருக்கு கிளம்பியாகனும்" என்றான் அர்ஜூன். அதில் அங்கிருந்த அத்தனைப் பேரும் அவனைப் அதிர்ச்சியாய் பார்த்தனர். சரியாக அன்னேரம் அங்கு வந்த பூஜாவோ முகத்தில் சிறு அதிர்வு கூட காட்டாது அப்படியே நின்றிருந்தாள்.

(அட யாரும்மா நீ? பூவ விட இம்புட்டு ஷாப்டா இருக்க. ஆனாலும் என் ஹீரோயின் எல்லாம் அப்படி கிடையாதே. )

“தம்பி இப்படி சொன்னா எப்படி? எங்க குடும்ப வழக்கப்படி, பொண்ணு கையால, குல தெய்வ கோவில்ல பொங்கல் வச்சதுக்கப்புறம் தான் ஊரைத் தாண்டி பொண்ண அனுப்புவோம்" என்று ஒரு பெரியவர் கூறினார்.

அதைக் கேட்டு அவனுக்கு எரிச்சல் அதில் அவரின் பக்கம் திரும்பியவன், “உங்க பொண்ண கூப்டு போனாத்தான இந்த வழக்கம் எல்லாம். நான் மட்டும் போறதுக்கு எந்த பிரச்சனையும் இல்லத்தான?” என்று அசராமல் கேட்டான் அர்ஜூன்.

அதில், “அர்ஜூன் என்ன பேசுற நீ? கல்யாண முடிஞ்ச கையோட பொண்ணை இங்க விட்டுட்டு போறேன்னு சொன்னா என்ன அர்த்தம்?” என்று கேட்டார் தேவிகா.

“அங்க எனக்கு முக்கியமான வேலை இருக்குன்னு அர்த்தம். அதுவும் போக, அங்க தங்குறதுக்கு நான் எந்த ஏற்பாடும் பண்ணல. அப்படி இருக்கிறப்ப, நான் எப்படி இவளை கூப்டு போக முடியும்?” என்று கேட்டான் அர்ஜூன்.

“என்னய்யா இதெல்லாம்? உங்களுக்காகத்தான, நாங்க எதுவுமே கேட்காம எங்க பொண்ண உங்க வீட்டுக்கு கொடுத்தோம். இப்போ மாப்பிள்ளை இப்படி சொன்னா, நாங்க என்னப் பண்றது?” என்று கவலையாக பூஜாவின் அப்பா கேட்டார்.

அதில் அவரோ “வேலு. நான் என் பேரன் கிட்ட பேசுறேன். இனிமேல் பூஜா உங்க வீட்டு பொண்ணு கிடையாது. எங்க வீட்டு பொண்ணு. அவ வாழ்க்கை மேல, உங்களை விட எங்களுக்கு அதிக அக்கறை இருக்கு" என்றார்.

அதில் கடுப்பானவனோ “என்ன பேசப் போறீங்க நீங்க? நான் தான் சொல்றேன்ல. இது தான் என்னோட முடிவு. எனக்கு அங்க முக்கியமான வேல இருக்கு. நான் போயித்தான் ஆகனும்." என்று உறுதியாய் அர்ஜூன் சொல்ல,  அதில் சுற்றி இருந்தவர்கள் மாறி மாறி பேச, அந்த இடமே சற்று கலவரமானது.

தேவிகாவுக்கோ மகனின் மீது மேலும் மேலும் கோவம் கூடியது. “இவன் ஏன் இப்படி இருக்கான்?” என்றவர் மருமகளைத்தான் பார்த்தார். அவளாவது ஏதாவது அவனிடம் பேசுவாள்? அவள் பேசினாலாவது இவன் புரிந்துக் கொள்வானா? என்பது போல் தான் பார்த்தார். அவளோ அத்தனை கலவரத்திலும், யாருக்கு வந்த விருந்தோ? என்பது போல் தான் இருந்தாள்.

அதற்குள் இங்கே அர்ஜூனோ “போதும் நிறுத்துங்க” என்று ஏறக்குறைய கத்தினான். அதில் அத்தனைப் பேரும் அமைதியாகிவிட, “அர்ஜூன்” என்று தாத்தா ஏதோ பேச வாய் திறந்தார்.

ஆனால் அதற்குள்ளாக, “ஒரு நிமிஷம் தாத்தா. நான் பேசிக்கிறேன்” என்றவன் இப்போது பூஜாவின் அருகில் வந்தான். அவளோ அப்போதும் கூட, அவனைக் கவனிக்கவில்லை. 

அதில் இப்போது இவனுக்கோ இன்னும் கோவம் தான் வந்தது. ஆனாலும் அதை இழுத்துப் பிடித்து, “இந்த விசயத்துல, முடிவு எடுக்க வேண்டியது, நானும், என் பொண்டாட்டியும் தான். அவ என் கூட வர்றேன்னு சொன்னா நான் கூப்டு போறேன். சோ மத்தவங்க யாரும் இதுக்குள்ள வர வேண்டாம்" என்றான் அர்ஜூன்.

அதில் அத்தனைப் பேரும் இப்போது பூஜாவைப் பார்த்தனர். ஆனால் அவள் எங்கே அவன் சொல்லியதை எல்லாம் காதில் வாங்கியிருந்தாள்? அவளோ, மும்முரமாக, அங்கிருந்த சிறுமியுடன் ஐஸ்கிரீம்மை காட்டி விளையாடிக் கொண்டிருந்தாள்.

அதைப் பார்த்த அர்ஜுனோ, “ஐயோ கடவுளே. இப்படி ஒரு மட சாம்பிராணிய என் தலையில கட்டி வச்சிருக்கீயே” என்று மனதிற்குள் கடவுளை திட்டினான். ஆனாலும் இப்போது அதை எல்லாம் தனக்குள்ளே அடக்கி, அவள் கரத்தைப் பற்றினான்.

சட்டென்று அவன் அவள் கரத்தைப் பிடிக்கவும், ஒரு வித சிலிர்ப்போடு அவனை நிமிர்ந்துப் பார்த்தாள் பூஜா. அப்போதுத்தான் அவன் அவளின் அருகில் நிற்பதையே உணர்ந்தாள்.

அவனின் அந்த தொடுகையில், அவள் கரைந்தாளோ? என்னவோ இங்கே அவள் கரத்தைப் பிடித்திருந்த அர்ஜூன் தான் தடுமாறினான். கொஞ்சம் விட்டால், அவளை இப்படியே கையோடு தன்னுடன் அழைத்து செல்ல வேண்டும் என்பது போல அவனுடைய மனம் யோசித்தது.

அதில் தன் மனதையே சபித்துக் கொண்டவன், பின் அவளைப் பார்த்து “இங்கப்பாரு. நான் உன்னை இங்கேயே இருன்னு சொல்லவே இல்ல. ஈவன் எனக்கும் தெரியும். கல்யாணம் ஆன உடனே உன்ன தனியா இங்க விட்டுட்டுப் போனா, மத்தவங்க என்ன நினைப்பாங்கன்னு. ஆனா எனக்கு கொஞ்சம் டைம் வேணும். ஏன்னா அங்க முதல்ல ஒரு வீடு பார்க்கனும். அப்புறம் அந்த இடம் எல்லாம் சரியா இருக்கான்னு பாக்கனும். இப்படி அங்க எல்லாம் செட்டில் பண்ணிட்டு தான் உன்னை இங்க இருந்து கூப்டு போக முடியும். இல்ல நீ இப்பவே என் கூட வரனும்னு சொன்னாக் கூட, பரவாயில்ல. கூப்டு போறேன். பட் அங்க எந்த வசதியும் இருக்காது. நான் வேலைக்கு போயிட்டா, நீ எப்படி தனியா இருப்ப? இங்கன்னா, நீ தாத்தா, அம்மா கூட ப்ரீயா இருக்கலாம்" என்றான் அர்ஜூன்.

அதில் ஒரு நொடி அவனையே இமைக்காது பார்த்தவள், பின் அடுத்த நொடி, “நான் இங்கேயே இருக்கேன். அவர் மட்டும் போகட்டும்" என்று அத்தனைப் பேரைப் பார்த்தும் கூறினாள் பூஜா.

“ச் பூஜா" என்று அவளின் அம்மா ஏதோ சொல்ல வர, “அதான் ஆறு மாசம் கழிச்சு கூப்டு போறேன்னு சொல்றார் தான? நான் அப்பவே போறேன்" என்றாள் பூஜா.

அதில் அர்ஜூனுக்கே சற்று ஆச்சர்யம் தான். ஏனெனில், அவள் தன்னுடனே வருவேன் என்று அடம்பிடிப்பாள்? இல்லை என்றால் தன்னை அனுப்ப மாட்டேன் என்று ஏதாவது பிரச்சனை செய்வாள்? இப்படி எல்லாம் யோசித்தான். ஆனால் அவளோ, நீ சென்றால் செல் எனக்கொன்றுமே பிரச்சனை இல்லை என்று சொல்லியது அவனுக்கு சற்று கடுப்பாகத்தான் இருந்தது.

அவன் மனம் என்ன நினைக்கிறது என்றே அவனுக்கு தெரியவில்லை. ஆனால் இப்போதைக்கு அங்கிருந்து சென்றாலே போதும் என்று தோன்ற, தன்னை மீட்டு “கேட்டீங்கத்தான? இதுக்கப்புறம் நான் கிளம்புறதுல யாருக்கும் எந்த பிரச்சனையும் இல்லத்தான?” என்று சுற்றி இருந்தவர்களைப் பார்த்துக் கேட்டான் அர்ஜூன்.

யாருக்கும் என்ன சொல்வது என்று தெரியாமல் அமைதியாக இருந்தனர். ஏனெனில் பூஜாவே சம்மதம் தெரிவித்திருக்க, அவர்கள் வீட்டில் உள்ளவர்களுக்கும் என்ன சொல்ல என்று தெரியவில்லை. 

“ம் நான் கிளம்புறேன்" என்று சொல்லியவன் தான் அதன் பின் பூஜாவின் பக்கம் கூட அவன் திரும்ப வில்லை. அறைக்கு சென்று அவனுடைய பேக்கை எடுத்துக் கொண்டு கிளம்பியிருந்தான்.

“உன் பொண்டாட்டிட்ட சொல்லிட்டு போப்பா” என்றார் தேவிகா. “சொல்ல வேண்டியது எல்லாம் சொல்லிட்டேன். அதுக்கு மேல, நான் போன்ல பேசிக்கிறேன்" என்று சொல்லி விட்டு சென்னை பஸ் ஏறியிருந்தான் அர்ஜூன்.

ஏனோ பூஜாவின் முகத்தை அவனால் பார்க்க முடியவில்லை. எதிர்த்து பேசுபவளா? இருந்தாலாவது சரிக்கு சரி நின்றிருப்பான். ஆனால் அவளுடைய அந்த அமைதி, அவனை அவள் பக்கம் வெகுவாய் இழுத்தது. அதே நேரம் அவளின் மீது கோவமும் வந்தது. 

இப்படி கலவையான மனதிற்கு நடுவே அவனின் ஈகோவோ, எப்படியும் ஆறு மாசம் என்ன? ஆறு வருஷம் ஆனாலும் அவன் அவளை அழைத்து செல்லப் போவதில்லை என்று நினைத்தான். அதனால் தான் அவளைப் பார்க்காமலே வந்திருந்தான்.

(ஏன்ப்பா அர்ஜூன் இதெல்லாம் அநியாயம். சரி நீங்க ரெண்டு பேரும் இப்படி இருந்தா, நான் எப்படிடா கதையில லவ் சீன் எல்லாம் கொண்டு வர்றது? சரி அடுத்து என்னத்தான் ஆகப் போகுது? பூஜா என்ன முடிவுலத்தான் இருக்கா? அப்படின்னு எல்லாத்தையும் அடுத்தடுத்த எபிசோட்ல பாக்கலாம். அப்புறம் முன்னாடியே சொன்ன மாதிரி, இந்த கத இங்க மட்டும் தான் வரும். டெய்லியும் ரெண்டு எபிசோட் கரெக்டா சார்ப்பா வந்திடும். மார்னிங் ஒன்னு. நைட் ஒன்னு. டைமிங் நீங்களே கூட சொல்லுங்க. அதையே நம்மளும் பாலோ பண்ணிக்கலாம். அப்புறம் மறக்காம உங்க கமெண்ட சொல்லுங்க. பெஸ்ட் கமெண்ட்ஸ பேனர்ல தினமும் செட் பண்ணுவேன். அப்புறம் சைட்ட உங்க ஹோம் ஸ்கிரீன்ல ஆட் பண்ணிக்கோங்க. அது எப்படின்னு சீக்கிரம் வீடியோல சொல்றேன். அப்புறம் இந்த அர்ஜூன் பூஜா எப்படி இருக்காங்க? சைட் எப்படி இருக்குன்னு எல்லாத்தையும் இங்க ஷேர் பண்ணிக்கலாம். இன்னுமே ரீடர்ஸ்க்கான ஸ்பெஷல் கேம் எல்லாம் வரப் போகுது. அதெல்லாம் தெரிஞ்சிக்க ஷோசியல் மீடியா & டெலிகிராம் சேனல்ல ஜாயின் பண்ணிக்கோங்க.)

தொடரும்…

Comments   11

*** வரம் – 5 - படைப்பை ரேட் செய்யுங்கள் ***