வரம் – 3

கடந்த காலத்துக்கும், நிகழ்காலத்துக்கும் நடுவில் இருந்த அர்ஜூனுக்கு நொடிகள் நெருங்க நெருங்க சற்று எரிச்சல் கூடியது. அவனுடைய நிதானம் எல்லாம் காற்றில் பறப்பது போல் தோன்றியது. “இல்லடா அர்ஜூன். இது நீ மட்டுமே சம்பந்தப்பட்டது கிடையாது. இதுல உன் கூட இன்னொரு பொண்ணும் சம்பந்தப்பட்டிருக்கா. இந்த கல்யாணம் வேண்டாம். பேசாம இப்பவே முடியாதுன்னு சொல்லிடு” என்று மனசாட்சி எடுத்துரைக்க, இப்போது ஒரு வேகத்தில் அங்கிருந்து எழ முயற்சித்தான்.

ஆனால் அதற்குள் அவன் தோளின் மீது கை வைத்த அவனின் அன்னை சிறு கோவத்துடன், “என்னப் பண்ற அர்ஜூன்” என்றார்.

அதில் அவர் கரத்தை தட்டிவிட்டவன், இப்போது அன்னையை சற்று முறைத்துப் பார்த்தான். அவனுக்கு அத்தனைக் கோவம் வந்தது. அவரைப் பார்க்க பார்க்க மீண்டும் அந்த நாள் ஞாபகம் கண் முன்னாடி வந்து நின்றது. 

முடியவே முடியாது என்று சென்னை சென்றவனை, உடல் நிலை சரியில்லை என்று வரவழைத்திருந்தான் அவனின் அன்னை.

அது அறிந்து அவன் அறையில் கோவமாய் நின்றிருக்க, அவன் அருகில் வந்து, “உனக்கு என் மேல கோவம் இருக்குன்னு எனக்கு புரியுது. ஆனா இதெல்லாம் நான்” என்று சொல்லி முடிக்கும் முன்னே, “இந்த வீட்டுல நீங்களாச்சும் என்ன ஏமாத்தாம இருப்பீங்கன்னு நினைச்சேன். ஆனா நீங்களும், மத்தவங்க மாதிரியே என்ன நம்ப வச்சி ஏமாத்தியிருக்கீங்க” என்றான்.

அதில் ஒரு நொடி அமைதியாய் இருந்த தேவிகாவோ, அடுத்த நொடியே, “இதுவரைக்கும் ஒரு அம்மாவா நான் உனக்கு எதுவுமே பண்ணலன்னு எனக்கு நல்லாவே தெரியும். ஆனா இந்த கல்யாணம். என்னப் பொறுத்தவரைக்கும் எனக்கு கிடைச்சிருக்கிற கடைசி வாய்ப்பு. இது என்னோட சுயநலமா கூட இருக்கலாம். ஆனா இந்த கல்யாணத்த நீ பண்ணிக்கிட்டுத்தான் ஆகனும்” என்றார்.

அதை சொல்லும் போதே தேவிகாவின் குரல் உடைந்து கண்ணீர் அவர் கண்களில் திரையிட்டது. ஏனோ அன்னையின் கண்ணீரைப் பார்க்க முடியாது திரும்பிக் கொண்டான். ஆனால் அதற்காக எல்லாம் அவனால், திருமணம் செய்துக் கொள்ள முடியாது என்று மனம் முரண்டுப்பிடித்தது.

அதனால் அவரைப் பார்க்காமலே, “நீங்க எத்தன தடவ கேட்டாலும் என் பதில் ஒன்னுத்தான். என்னால இந்த கல்யாணத்த பன்ணிக்க முடியாது” என்று கோவமாய் கூறினான்.

“இந்த கல்யாணம் நடந்தாத்தான் என்னால என் குடும்பத்துக்கு முன்னாடி தலை நிமிர்ந்து நிக்க முடியும். இத்தன வருஷம் நான் பட்ட அவமானம் எல்லாம், இந்த ஒரு கல்யாணத்துல சரியா போயிடும். எல்லார் முன்னாடியும் என் வளர்ப்பு சரின்னு நிரூபிக்கிறதுக்கு எனக்கு கிடைச்சிருக்கிற கடைசி வாய்ப்பு. நான் வேணும்னா உன் கால்ல” என்றவர் அவன் காலில் விழப் போக, “ஐயோ அம்மா” என்று கோவமாய் அவரை தடுத்துப் பிடித்து கத்தினான்.

அவனுக்கு அத்தனை எரிச்சல். அவன் பணத்திற்காகத்தான் இந்த ஊருக்கே திரும்பி வந்தான். ஆனால் அவனின் தாத்தா ஒன்றை சொல்லி அவனை வெறுப்பேத்தியிருக்க, அதன் பின்னும் கூட பணத்துக்கு வேற ஏற்பாட்டை பார்க்க ஆரம்பித்து விட்டான். இப்போது அன்னை வந்து அவனை எமோஷனல் பிளாக் மெயில் செய்ய, அவனுக்கு என்ன சொல்ல என்றே தெரியவில்லை. அத்தனை எரிச்சல்.

“ப்ளீஸ் அர்ஜூன். இதுக்கப்புறம் அம்மா உன்கிட்ட வேற எதுவுமே கேட்க மாட்டேன். இப்போ வேணும்னா உனக்கு இது நான் பண்ற தப்பா தெரியலாம். ஆனா கண்டிப்பா” என்று அவர் பேசி முடிக்கும் முன்னே, “போதும். இப்போ என்ன? நான் நீங்க பாத்து வச்சிருக்கிற பொண்ண கல்யாணம் பண்ணிக்கனும். அவ்வளவுத்தான. சரி பண்ணிக்கிறேன். ஆனா அதுக்கப்புறம் என்ன யாரும், எந்த தொந்தரவும் பண்ணக் கூடாது. குறிப்பா எங்க வாழ்க்கைக்குள்ள நீங்க வரவே கூடாது” என்று கத்தினான்.

அவன் சம்மதம் சொன்ன அடுத்த நொடியே, இங்கே கல்யாண வேலையும் ஆரம்பமாகியிருந்தது. அதன் பின்னும் கூட இந்த திருமணத்தை நிறுத்த அவனும் வேறு சில வழிகளில் முயற்சித்தான். ஆனால் அவனுடைய தாத்தா அத்தனை முயற்சியையும் முறியடித்திருந்தார். ஆனால் அவன் செய்த ஒரே தவறு. திருமணத்தில் விருப்பம் இல்லை என்பதை அவன் அந்த மணப்பெண்ணிடம் பேச முயற்சிக்காது மீதி வழியில் முயற்சித்தான். அதன் விளைவு, அவளுக்கு பாவம் அவனின் என்ணம் தெரிந்திருக்கவில்லை. ஒரு வேளை இவன் இப்படி மற்றவர்களிடம் பேசியதற்கு, அவளிடம் பேசியிருந்தால், இந்த திருமணத்தை அவளே நிறுத்தியிருப்பாளோ? என்னவோ?

“மாப்பிள்ளை தாலி எடுத்துக்கோங்க" என்ற ஐயரின் சத்தத்தில், அர்ஜூன் தன் தாத்தாவையும், தன் அன்னையையும் பார்த்தான். பின் தன் அருகில் அமர்ந்திருந்தவளின் முகத்தைக் கூட பார்க்காமல், அந்த தாலியை எடுத்து மணப்பெண்ணின் கழுத்தில் கட்டி, அவளை தன்னுடைய சரிபாதியாக ஏற்றுக் கொண்டான் அர்ஜூன். சுற்றி இருந்த அத்தனைப் பேரும் மகிழ்ச்சியாய் மண மக்களை வாழ்த்தினர். ஆனால் அர்ஜூனுக்குத்தான், அத்தனை எரிச்சல். அதற்கு மேல் மணமேடையில் அமர கூட பிடிக்கவில்லை. ஏதோ சுற்றி இருந்த அத்தனைப் பேரும் அவனைக் கட்டாயப்படுத்தி, இதை செய்து விட்டது போல் தோன்றியது. அதனாலையே அவன் அதை வெறுத்தான்.

வெறுப்புடனும், கடுப்புடனும் அர்ஜூன், பூஜாவின் கழுத்தில் தாலியைக் கட்டியிருந்தான். சுற்றி நின்றிருந்த அத்தனைப் பேரும் அட்சதை தூவி அவர்களை வாழ்த்தினர். அது ஏதோ நெருப்பை அள்ளி அவன் மீது போட்டது போல் இருக்க, கடுப்பாய் அதை தட்டிவிட்டான். அது அவனருகில் அமர்ந்திருந்தவளின் கண்களில் விழவும், “ஸ்" என்று மெல்லமாய் அவள் முணங்கினாள்.

அவளின் சத்தத்தில் தான் அர்ஜூன் அவளின் பக்கம் திரும்பினான். அவன் கட்டிய மஞ்சள் தாலி கழுத்தில் தொங்க, தன் மனைவியாகத்தான் அவளைப் முதலில் பார்த்தான். அவளின் அந்த அழகு முகமும், இப்போது கண்ணை கசக்கும் போது, சிவந்திருந்த விழிகளும், அவளை பேரழகி என்று அடித்து சொல்லியது. சில நொடிகள் அவனையும் மீறி அவளைப் பார்த்தான். பிடிக்காத கட்டாய கல்யாணம் தான். மற்றவர்கள் மேல் இருந்த கோவம், அவளின் மீதும் இருக்கிறதுத்தான். ஆனாலும் அந்த நொடி அவள் அழகில் நிச்சயம் இவனிடம் மெல்லிய தடுமாற்றம். அதில் அவளையேத்தான் சுற்றம் மறந்து பார்த்தான்.

“என்னடா? என்னென்னமோ சொன்ன. இப்போ பார்த்த பர்ஸ்ட் செகண்ட்லையே, இப்படி இருக்க” என்று மனதில் சீண்டலில், சட்டென்று முகத்தை திருப்பிக் கொண்டான் அர்ஜூன். அவன் திரும்பிய பின்னே, பூஜா அவன் பக்கம் திரும்பினாள். அவளுமே அவன் முகத்தை பார்க்க முயற்சித்தாளோ என்னவோ? ஆனால் அதற்குள் ஐயர், “இந்த குங்குமத்த பொண்ணுக்கு வச்சு விடுங்கோ” என்றார். அதில் கோவமாய் மேடையின் கீழ் நின்றிருந்த தன் அன்னையைத்தான் பார்த்தான்.

“வச்சு விடுப்பா” என்று கெஞ்சலாக தேவிகா கண்ணைக் காமிக்க, அதில் வேண்டா வெறுப்பாய், குங்குமத்தை எடுத்தவன், அவள் தோளை சுற்றி கரம் கொண்டு போய், அவள் உச்சி வகுட்டில் வைத்தான். 

அந்த நொடி, அவனின் நெஞ்சிற்குள், பாதியாய் அவள் உடல் புதைந்திருந்தது. அந்த நொடி அந்த தருணம், இருவருக்குள்ளும் நிச்சயம் சிறு அதிர்வைக் கொடுத்தது. இருவருடைய இதயமும் அந்த கணம் ஒரே நேர்கோட்டில் நின்று துடித்தது. அந்த அழகிய தருணத்தை புகைப்படக் கலைஞர்கள் புகைப்படமும் எடுத்துக் கொண்டனர்.

ஏனோ அவளை உடனே விலக்க, அவனுக்கு மனம் வரவில்லையோ என்னவோ, சற்று பொறுமையாகவே குங்குமத்தை வைத்து விட்டு, மெதுவாகவே அவளை சுற்றி இருந்த கரத்தை எடுத்தான். ஆனால் அப்போதும் கூட இருவருடைய நெருக்கமும் குறைந்திருக்கவில்லை. அவன் உள்ளம் அவளருகில் தடுமாறுகிறதோ என்ற உணர்ந்த நேரம் ஐயர், “அக்னிய சுத்தி பொண்ணு மாப்பிள்ளை ரெண்டு பேரும், மூனு தடவை வலம் வரனும்” என்றார்.

இப்போது சற்று தெளிந்திருந்தவன், “ச் என்னடா அர்ஜூன்? நீ என்ன அவ்ளோ வீக்கா? இது கல்யாணமே கிடையாது” என்று தனக்குள் கடுப்பாய் சொல்லிவிட்டு, மேடையில் இருந்து எழுந்தான்.

ஆனால் அவனின் வேகத்துக்கு அவளால் சட்டென்று எழ முடியாதுப் போக, அவ்ளோ அன்னிட்சை செயலாய், அவனுடைய சட்டையைப் பிடித்து எழ முயற்சித்தாள். அதில் அவனோ பட்டென்று திரும்பி அவளைப் பார்க்க, அவளோ, வேகமாய் கரத்தை விலக்கிக் கொண்டாள். அதற்குள் என்ன நினைத்தானோ, தன் கரத்தை அவளின் முன் நீட்டினான்.

அவனின் அந்த செயல் தேவகியை ஒரு வகையில் சற்று ஆறுதல்படுத்தியது. ஆனால் அவளோ, அவன் கரத்தை அவள் பிடித்த மறு நொடி, மீண்டும் அவனுக்குள் மின்சார தாக்கம். ஏனோ அவள் தன்னை தடுமாற வைப்பது அவனுக்கு பிடிக்கவில்லை. அதில் அந்த கோவத்தையும் சேர்த்து அவள் கரத்தை அழுத்திப் பிடித்தான்.

அவனின் பிடி நிச்சயம் அவளுடைய பிஞ்சு கரத்திற்கு வலியைக் கொடுத்திருக்க வேண்டும். ஆனால் ஏனோ, அவளுக்குமே இந்த சுற்றி நின்றிருந்த கூட்டம், காலையில் இருந்து இருந்த அலைச்சல். அவள் காதில் விழுந்த பேச்சு அது எல்லாத்துக்கும், அந்த அழுத்தம் கூட ஒரு வித தெம்பைக் கொடுத்தது. அவனுக்குத்தான் நெருப்பின் மீது நிற்பது போல் இருந்தது.

அந்த கடுப்பில் ஏதோ ஓட்டப்பந்தயத்துக்குள் செல்வது போல் அத்தனை வேகமாய் தடந்தான் அவனின் வேகத்துக்கு நடக்க முடியாது, இவள் தான் தடுமாறினாள். ஆனாலும் அவனின் கரத்திற்குள் இவள் கரம் இருக்க, அவள் விழவில்லை. 

அதன் பின் ஐயர் சொன்ன மற்ற சடங்குகளையும் செய்து முடித்தவன், பெரியவர்களிடமும் ஆசிர்வாதம் வாங்கினான்.

ஆனால் அவனுடைய செய்கையில் கடமை மட்டுமே இருந்தது. அதன் பின் பொண்ணு, மாப்பிள்ளையை, பெண் வீட்டுக்கு அழைத்தனர். ஆனால் அர்ஜூன் வர மறுத்தான். ஏனோ, தன் வீட்டினர் மீது காட்ட முடியாத கோவத்தை அவர்கள் மீது காட்டினான். அதில் பூஜாவின் வீட்டில் உள்ளவர்கள் சங்கடமாக சந்திரன் தாத்தாவைப் பார்த்தனர்.

அவருக்குமே வருத்தம் தான். அவரோ அவனின் அருகில் நின்றிருந்த பூஜாவைப் பார்த்தார். அவள் ஏதாவது சொல்வாளா? இல்லை அவள் முகத்தில் எதுவும் வருத்தம் தெரிகிறதா? என்று கவனித்தார். அவளோ, சற்று முன் எப்படி இருந்தாளோ? அப்படியேத்தான் அமைதியின் சொரூபமாய் நின்றிருந்தாள்.

அதில் சற்று நிம்மதி அடைந்தவர், “பூஜாவும் என்னோட பேத்தித்தான. அப்போ முறப்படி சடங்கு என் பேத்திக்கு என் வீட்டுலத்தான நடக்கனும். அப்போ அங்கேயே பால் பழம் கொடுக்கிற சடங்க வச்சிக்கலாம்" என்றார் சந்திரன். 

அதில் பூஜா வீட்டினருக்கு மெல்லிய வருத்தம் என்றாலும், தாத்தாவின் பேச்சை ஏற்றுக் கொண்டனர்.

மற்றவர்கள் முன் காட்டிக் கொள்ளாவிட்டாலும், அதன் பின் சந்திரன், தேவிகாவை தனியே அழைத்து. “நம்மள மட்டுமே நம்பி வந்திருக்கிற பொண்ணு தாயி. அவ வாழ்க்க அர்ஜூன் கிட்ட தான் இருக்கு. கொஞ்சம் அவனுக்கு புரிய வைமா” என்று சொல்லியிருந்தார். ஏனெனில் அர்ஜூன் பொறுப்பானவன் தான். ஆனால் இந்த திருமண விஷயத்தில் மட்டும் அத்தனை அலட்சியம் செய்தான். 

இப்போதும் கூட, அவனின் சரிபாதி கண் கலங்கியப்படி அவனருகில் அமர்ந்திருக்க, அவனோ அவள் பக்கம் கூட திரும்பாமல் விரைப்பாக இருந்தான்.

“யார் மேலையோ இருக்கிற கோவத்த இப்போ எதுக்கு அந்த பொண்ணு மேல காமிக்கிற" என்று மனசாட்சி கேட்டது. ஆனாலும் அதை ஏற்க மறுத்து, “இதெல்லாம் தெரிஞ்சுத்தான எல்லாரும் அப்படி பண்ணாங்க. அப்போ மத்தவங்க பண்ணதுக்கு நான் எப்படி பொறுப்பேத்துக்க முடியும். கல்யாணத்த முடிச்சு வச்சி என்ன ஜெயிச்சிட்டதா அவங்க நினைக்கிறாங்க இல்லையா? ஆனா இந்த கல்யாணத்தால எதுவுமே மாறாதுன்னு நான் அவங்களுக்கு நிரூபிக்கிறேன்" என்று மனதிற்குள் தீர்க்கமாக சொல்லிவிட்டு இறுக்கமாய் அமர்ந்திருந்தான்.

அத்தனை இறுக்கத்தை காட்டுகிறான் தான். ஆனால் ஏனோ காரில் அத்தனை இடம் இருந்தும், அவளுக்கு இடம் கொடுக்கவே மாட்டேன் என்பது போல் தான் அவளை இடித்துக் கொண்டு அமர்ந்திருந்தான்.

அவனருகில் அமர்ந்திருந்தவளும், அவனுடைய ஆறுதலை சற்றும் எதிர்பார்த்தது போல் தெரியவில்லை. சில நொடிகளில் கண்ணீரை துடைத்துக் கொண்டு சரியாகியிருந்தாள். அவளுடைய அந்த செயலும் அர்ஜூனை கடுப்பேற்றவே செய்தது.

(வாத்தி சாரே நீங்க பண்றதெல்லாம் பார்த்தா, எனக்கென்னமோ நீங்கத்தேன் என் ஹீரோயின் பின்னாடி லோ லோன்னு சுத்தப் போற மாதிரி என் ஏழாம் அறிவு சொல்லுது. சரி அந்தப் புள்ள என்னப் பன்னுதுன்னு பார்ப்போம். அதுக்கு முன்னாடி இன்னிக்கு எபிசோட்ல உங்களுக்கு பிடிச்ச் சீன் எதுன்னு மறக்காம கமெண்ட்ல சொல்லுங்க. அப்புறம் மறக்காம இந்த சைட்ட உங்க ஹோம் ஸ்கீரீன்ல ஆட் பண்ணிக்கோங்க. அப்பத்தான் உங்களுக்கு டெய்லியும் ஈஸியா என்னோட அப்டேட்ட தெரிஞ்சிக்க முடியும். சரி அதுக்கு முன்னாடி எப்பவும் போல உங்களுக்கு பிடிச்ச ரியாக்சன்ன கொடுத்துட்டு, உங்க பிரண்ட்ஸ் கூட ஷேர் பண்ணுங்க. முடிஞ்சா ரேட்டிங்கும் கொடுத்திடுங்க.)

தொடரும்…

Comments   8

*** வரம் – 3 - படைப்பை ரேட் செய்யுங்கள் ***