வரம் – 10

அர்ஜூனை தேடி, பூஜா ஸ்டாப் ரூமிற்கு வந்தாள். ஆனால் அவன் அங்கு இல்லை. அதில் அவளோ சுற்றிப் பார்க்க, “என்ன இங்கையும் காணும்” என்றப்படி அவள் திரும்ப, அங்கே நின்றிருந்தவனின் மீதே மோதினாள்.

“ஐயோ சாரி” என்றப்படி நிமிர, அங்கே நின்றிருந்தவனைப் பார்த்து ஒரு நொடி திடுக்கிட்டாள்.

ஆனால் அடுத்த நொடியே, “நான்” என்று ஏதோ பேச வந்தாள். ஆனால் அதற்குள் அவனோ, “இங்க என்னப் பண்ணிட்டிருக்க?” என்று அத்தனைக் கோவமாய் கேட்டான்.

“அது நான்” என்று அவள் மீண்டும் ஆரம்பிக்க, அதற்குள் அவனே, “படிச்ச பொண்ணுத்தான நீ? உனக்கே அறிவு வேண்டாமா? என்னப் பண்ணிட்டு இருக்கன்னும் ஏதாச்சும் புரியுதா?” என்று காரணமே சொல்லாது அவளைத் திட்ட ஆரம்பித்திருந்தான்.

அதில் இவளோ அவனை வினோதமாய் பார்த்தாள். “ச் உன்கிட்டத்தான பேசிட்டு இருக்கேன். ஏதாச்சும் பதில் சொல்றீயா?” என்று அதற்கும் சேர்த்து திட்டினான்.

“எதே? இவரு பேச விட்டு, நான் பேசலையா?” என்று தனக்குள்ளே அவள் கவுண்டர் கொடுக்க, இவனோ, கோவமாய், “என் நிம்மதிய கெடுக்கனும்னே, குடும்பமா சேர்ந்து பிளான் பண்ணிட்டு இருக்கீங்களா?” என்று எரிச்சலாய் கேட்டான்.

அதில் இவளோ, அமைதியாய் தான் நின்றாள். ஏனெனில் அவளுக்கு ஒன்று நன்றாக தெரிந்தது. அது என்னவென்றால், இவன் எப்போதுமே, எதிரில் இருப்பவர்களை பேச விட மாட்டான் என்று.

(பாருடா. அந்தப் புள்ள பார்த்த பத்து செகண்ட்ல உன்னப் பத்தி அத்தனையும் கரைச்சு குடிச்சி வச்சிருக்கு. ஆனா உனக்குத்தான் அவள பத்தி இன்னும் எதுவுமே தெரியல. இப்போ நீ இப்படி கத்துறதுக்கெல்லாம் பியூச்சர்ல ரொம்ப வருத்தப்படுவ. நானும் நிறையா டைம் சொல்லிட்டேன். பட் நீ கேட்கிற மாதிரி தெரியல.)

“சரி விடு. ஏதோ அவங்க சொல்லிட்டாங்கன்னு வந்துட்ட. இப்போ நான் சொல்றேன். இங்க இருந்து போ” என்றான் அர்ஜூன். அவளோ அதில் அசையாது அவனையே பார்த்தாள். அவள் பார்வையில் இருந்த ஏதோ ஒன்று அவனை தடுமாற வைத்தது.

“ச் அதான் நான் சொல்லிருக்கேன் தான. ஆறு மாசம் கழிச்சு உன்ன நான் கூட்டிட்டு வரேன்” என்று அவளை அப்போதைக்கு அங்கிருந்து அனுப்ப முயற்சித்தான்.

இப்போது அவளோ அவசரமாய் தன் தோளில் இருந்த பேக்கை கழட்டி அவனிடம் நீட்டினாள்.

அவளின் செயலில், அவனோ ஒரு நொடி குழம்பி, அடுத்த நொடியே, “ச் என்ன இதுல வீட்டுல இருந்து எனக்கு எதுவும் கொடுத்து விட்டாங்களா? அதெல்லாம் ஒன்னும் தேவையில்ல” என்றான்.

இப்போது அவனை மேலிருந்து கீழாய் பார்த்தவளோ, அவன் சரி பட்டு வர மாட்டான் என்பது புரிந்து, அவளே அந்த பேக்கைத் திறந்து அதில் இருந்த ஒரு லெட்டர் கவரை அவனிடம் நீட்டினாள்.

அதைப் பார்த்தவனோ, “என்னதிது?” என்று கேட்க, அவளோ அதை அவனிடம் மீண்டும் நீட்டினாள். உடனே இவனுமே குழப்பத்துடன் அதை வாங்கிப் பார்த்தான். அதில், யுஜி சர்டிபிகேட் மற்றும், இந்த கல்லூரிக்கான அட்மிஷன் லெட்டரும் இருந்தது.

முதலில் அதை அவளிடம் திருப்பி கொடுக்க நினைத்தவன், அதன் பின்னே அதில் இருந்த மார்க்சீட்டைப் பார்த்தான். பார்த்தவனுக்கு அவன் கண்ணை அவனாலையே நம்ப முடியவில்லை. அவனின் மனைவி. இல்லை இல்லை மாணவி. கல்லூரியிலேயே முதல் மதிப்பெண் வாங்கியிருந்தாள். அதை அவன் கண்கள் விரித்துப் பார்க்க, அவளோ அடுத்ததாக, கவுன்சிலிங் லெட்டர், மற்றும் இந்த காலேஜில் அவள் சேர்வதற்காக, அவள் கல்லூரியில் இருந்து பரிந்துரைந்த கடிதம் என அத்தனையையும் அடுத்தடுத்து நீட்ட, இப்போது அர்ஜூனோ, அவளைப் பார்த்தான்.

“ச் உனக்கு படிக்கிறதுக்கு வேற காலேஜ்ஜே கிடைக்கலையா? இங்கத்தான் படிக்கனும்னு என்ன வந்திச்சு?” என்று கத்தினான். அதில் ஆழ்ந்த மூச்சை இழுத்து விட்டவள், மீண்டும் அவன் கையில் இருந்த பேப்பரை சுட்டிக் காட்டினாள்.

அதில் அவணோ, “நீ என்ன ஊமையா? வாய திறந்து பேச மாட்டீயா?” என்று அவன் அதற்கும் எரிந்து விழ, சட்டென்று அவனை நெருங்கி, அவன் கையில் இருந்த பேப்பரில் இருந்த தேதியை சுட்டிக் காட்டினாள்.

அவளின் நெருக்கம் நொடிக்கும் குறைவாய் அவனை தடுமாற வைக்க, அவள் கரம் பட்டும் படாமல் அவன் நெஞ்சை உரசி சென்றது.

அதில் வேகமாய் விலகி, “அதுல என்ன இருக்கு?” என்றான். “நம்ம கல்யாணத்துக்கு முன்னாடியே எனக்கு இங்க சீட் கிடைச்சிருச்சு” என்று மெதுவாய் கூறினாள். அதன் பின்னே அவன் அதைப் பார்க்க, இப்போது அவனுக்கோ என்ன சொல்ல என்று தெரியவில்லை.

ஒரு புரோபசராய், ஒரு மாணவியின் படிப்பையும் அவனால் கெடுக்க முடியாது. ஆனால் அவள் எப்படி இங்கு படிக்க முடியும்? என்ற கேள்வியும் எழுந்தது.

அதோடு இப்படி சொல்லாமல் கொல்லாமல், வந்து நிற்பவளின் மீதும் இன்னும் கோவம் கூடியது.

“அப்போ இத முன்னாடியே என்கிட்ட சொல்ல வேண்டியதுத்தான. நான் வேற காலேஜ்ல சீட் வாங்கி கொடுத்திருப்பேன்த்தான” என்று கேட்டான் அர்ஜூன்.

அதில் அவனையே மீண்டும் பார்த்தவள், இப்போது, “வீட்டுல சொன்னேன்” என்றாள். “ச் வீட்டுல சொன்னேன்னா. என்கிட்ட சொன்னீயா நீ? ஏன் சும்மா சும்மா கால் பண்ண தெரிஞ்சிச்சில்ல. அப்பவே இத பத்தி சொல்றதுக்கு என்ன?” என்று மனசாட்சியே இல்லாமல் கேட்டான்.

அவனின் கேள்வியில் இப்போது பூஜாவோ, அவனை இன்னுமே வித்தியாசமாய் பார்த்தாள்.

அவள் பார்வையே, அன்று என்னை நீ பேச விட்டாயா? என்று சொல்லாமல் சொல்லியது.

அது இவனுக்குமே புரிய, “ச் கிளம்பி வர்றதுக்கு முன்னாடி என்கிட்ட சொல்லிட்டு வர வேண்டாமா?” என்றான்.

“அத்த உங்களுக்கு ட்ரைப் பண்ணாங்க” என்று சொல்லும் போதே அர்ஜூனுடைய மொபைலுக்கு, அவனின் தாத்தா கால் செய்தார்.

அதில் இப்போது தன் ஒட்டு மொத்த கோவத்தையும் அவரிடம் கொட்ட நினைத்து வேகமாய் அட்டண்ட் செய்து, “இன்னும் என் வாழ்க்கையில என்னெல்லாம் பண்ணனும்னு இருக்கீங்க”எ என்று கேட்டான்.

அவனின் கேள்வியில் இப்போது பூஜா மீண்டும் அர்ஜூனைப் பார்த்தாள். அதற்கு மேலும் ஏதோ திட்ட சென்றவன், அவள் இருக்கவும், சற்று தள்ளி சென்று பேசினான்.

அந்தப் பக்கம் அவர் என்ன சொன்னாரோ, இங்கே இவனோ, “ச் இதுத்தான் சாக்குன்னு, என்னை எல்லாம் அவள என் கூட கூட்டிட்டு போக சொல்லாதீங்க. அதெல்லாம் நான் பண்ண மாட்டேன்” என்றான்.

உண்மையில். அது அவன் ஆழ்மனதின் ஆசையாய் இருந்ததோ? என்னவோ? ஆனால் அதற்கெல்லாம் ஆப்பு வைப்பது போல், அவனின் தாத்தா, “உன்ன அந்த பொண்ண கல்யாணம் பண்ணிக்க சொன்னதே எவ்வளவு பெரிய தப்புன்னு, இந்த நாலு மாசத்துல எங்களுக்கு புரிஞ்சிருச்சி. இதுக்கப்புறம் நாங்க அந்த பொண்ணு வாழ்க்கையில தலையிட மாட்டோம். ஏதோ நாங்க பண்ண பாவத்துக்கு புண்ணியமா, அவள படிக்க அனுப்பியிருக்கோம். அதுவும் உனக்கு பிடிக்கலன்னா, பேசாம நீ அந்த வேலைய விட்டுட்டு வந்துடுப்பா” என்றார்.

“என்னது? நான் வேலைய விட்டு வரனுமா? இது என் உழைப்புக்கு கிடைச்ச வேல” என்று கோவமாய் அர்ஜூன் சொல்ல, “அப்படித்தான அந்த பொண்ணுக்கும் இருக்கும், அந்த பொண்ணோட மார்க்குக்கு கிடைச்ச சீட் அது. அத உன்னோட வெட்டி கெளரவுத்துக்காக கெடுத்துடாத. அந்தப் பொண்னு, உன்ன டிஸ்டர்ப் பண்ண மாட்டா. அவள நீ கூட்டிட்டு போயி குடும்பமும் நடத்த வேண்டாம். அவள விட்டுடு. அவ அங்க படிக்க வந்திருக்கா அவ்வளவுத்தான்” என்றவர் சொல்ல சொல்ல, இங்கே அர்ஜூனுடைய கோவம் இன்னும் இன்னும் கூடியது.

ஏனெனில், அவன் அங்கு இருந்தவரை, வார்த்தைக்கு வார்த்தை மருமகள் மருமகள் என்று உருகிப் பேசியவர், இப்போது அந்த பொண்ணு என்று வேற்றுமைப் படுத்திப் பேசுவது ஏதோ அர்ஜூனுக்கு பிடிக்கவே இல்லை. அத்தனைக் கோவமாய் வந்தது.

அதே நேரம் அவனுடைய ஈகோவையும் அவனுக்கு விட்டுக் கொடுக்க முடியவில்லை. அடுத்த சில நிமிடம் அவரிடம் பேசியவன், அதன் பின், கடைசியாய், “இங்கப்பாருங்க. இங்க அவளால எனக்கு ஏதாச்சும் பிரச்சன வந்திச்சின்னா, அதுக்கப்புறம் நான் மனுஷனாவே இருக்க மாட்டேன். அத அவகிட்ட சொல்லிடுங்க” என்றான் அர்ஜூன்.

“ஏன் அவ உன் முன்னாடித்தான இருக்கா? நீயே சொல்லிடு” என்று சொல்லிவிட்டு கால்லை கட் செய்தார். இங்கே இவனோ இப்போது மீண்டும் கோவமாய் அவளின் முன்னே வந்தான்.

ஏற்கனவே அவள் கழுத்தில் தாலி இல்லாதது அவனை உறுத்திக் கொண்டிருக்க, இப்போது தாத்தா சொல்லியது வேறு அவனை இம்சித்தது.

அதில் அவளை முறைத்தவன், “இங்கப்பாரு. இங்க படிக்க வந்திருக்க அப்படின்னா? அத மட்டும் பாரு. தேவையில்லாம, என்கிட்ட உரிம எடுத்துக்கிடுற வேல எல்லாம் வேண்டாம்” என்று கோவமாய் கூறினான்.

அவளோ, “ம்” என்று தலையாட்ட, ‘ச் சும்மா சும்மா எல்லாத்துக்கும் தலையாட்டுறத முதல்ல நிறுத்து” என்று அதற்கும் கத்தினான்.

அவளோ மீண்டும் அமைதியாகிவிட, “இங்கப்பாரு. இந்த காலேஜ்ஜ பொறுத்த வரைக்கும், நான் புரோபசர். நீ ஸ்டூடண்ட் அவ்வளவுத்தான். சும்மா ஹஸ்பண்ட் அண்ட் ஒயிப்ன்னு யார்ட்டையாச்சும் சொன்னேன்னா, அதுத்தான் இங்க நீ படிக்கிற கடைசி நாளா இருக்கும்” என்றான்.

“நான் சொல்ல மாட்டேன்” என்று இவள் உடனே சொல்ல, ஏனோ அதுவும் அவனுக்கு கோவத்தைத்தான் கொடுத்தது. ஒரு வேளை உரிமையாய் அவனிடம், “அப்படித்தான் சொல்வேன்” என்று சண்டையிட வேண்டும் என்று நினைத்தானோ? என்னவோ?

இப்போது தன் கையில் இருந்த பேக்கையும் லெட்டரையும் அவளிடம் நீட்டியவன், “போ” என்றான்.

அவளும் அதை வாங்கி, பேக்கில் அடுக்கிவிட்டு திரும்ப, “ஹேய் ஒரு நிமிஷம்” என்றான்.

உடனே அவள் திரும்பி அவனைப் பார்க்க, அவளருகில் நெருங்கி, அவள் மூடாமல் விட்டிருந்த பேக்கின் சிப்பை மூடினான்.

அதில் அவனுடைய கரம் அவள் பின்னங்கழுத்தில் மெதுவாய் உரச, அப்போதும் அவனுக்குத்தான் அது இம்சையாய் இருந்தது.

“என்னடா அர்ஜூன் பண்ற?” என்று அவனின் மனம் கேள்விக் கேட்க, அவனுக்கோ என்னப் பதில் சொல்ல என்று தெரியவில்லை. சட்டென்று கரத்தை விலக்கிக் கொண்டான்.

இப்போது அவளோ, “தேங்க்ஸ்” என்று சொல்ல, “நான் சொல்லது எல்லாம் ஞாபகம் இருக்குத்தான?” என்று கேட்டான்.

“என்னால உங்களுக்கு எப்பவும் எந்த தொந்தரவும் இருக்காது” என்று அவன் கண்ணை அழுத்தம் திருத்தமாய் பார்த்து சொல்லிவிட்டு நகர்ந்தவள், பின் ஒரு நொடி நின்று சுற்றிப் பார்த்தாள்.

அதில் அவனோ, “என்ன?” என்று கேட்க, வேகமாய் அவனை நெருங்கி, அவன் மேல் சட்டைப் பட்டனை போட்டு விட்டாள். அவளின் திடீர் நெருக்கத்தில், அவன் தடுமாற, அவளோ, எக்கி அவன் தலை முடியை சரி செய்தவள், “புரோபசர் லுக் இப்பத்தான் சார் கரெக்டா இருக்கு” என்று சிரித்தப்படி சொல்லிவிட்டு அங்கிருந்து ஓடியிருந்தாள் பூஜா. இங்கே இவன் தான் ஏதோ பேயறைந்தது போல் அப்படியே நின்றிருந்தான். 

(ஐயா ராசா. இதுக்கே அசந்துட்டா எப்படி? இன்னும் நீ பார்க்க வேண்டியது நிறையா இருக்கு. சரி நம்ம பூஜா இன்னும் அர்ஜூன்ன எப்படி எல்லாம் ஆட்டி வைக்கப் போறான்னு அடுத்தடுத்த எபிசோட்ல பாக்கலாம். அதுக்கு முன்னாடி இன்னிக்கு எபிசோட்ல உங்களுக்கு பிடிச்ச சீன் எதுன்னு மறக்காம கமெண்ட்ல சொல்லுங்க. பெஸ்ட் கமெண்ட்ஸ பேனர்ல போஸ்ட் பண்ணிருக்கேன். சோ உங்க கமெண்ட்ஸும் அதுல வரலாம். சோ அத செக் பண்ணிக்கோங்க.  அப்புறம் மறக்காம ரேட்டிங் கொடுத்திடுங்க)

தொடரும்…

Comments   16

*** வரம் – 10 - படைப்பை ரேட் செய்யுங்கள் ***