வரம் – 22

கல்லூரியில் இருந்து வீட்டுக்கு வந்த அர்ஜூனுக்கோ அத்தனைக் கோவம். கையில் இருந்த பேக்கை ஹால் சோபாவில் தூக்கி எறிந்து விட்டு, அவசரமாய் அணிந்திருந்த சட்டைப் பட்டனை பிய்த்து எடுக்காத குறையாய், கழட்டினான்.

கண்ணாடியில் தெரிந்த தன் பிம்பம் கூட அவனைப் பார்த்து கேலி செய்வது போல் தோன்றியது. “சிட் சிட் அவ இங்க வந்தப்பையே, அவள இங்க இருந்து அனுப்பி வெச்சிருக்கனும். போனா போது, படிப்பு விஷயம்னு நான் யோசிச்சேன்த்தான. அதான் அவ இஷ்டத்துக்கு எல்லாம் பண்ணிட்டிருக்கா” என்றவனின் வார்த்தையில், பூஜா மீது அத்தனை கோவம் தெரிந்தது.

“என்னத்தான் சொன்னாலும், நீ பண்ணது தப்பு அர்ஜூன்? இப்படியா ஒரு பொண்ண கை நீட்டி அடிப்ப?” என்று அவனுடைய மனசாட்சி கேள்வி கேட்டது.

“அவ பண்ண காரியத்துக்கு ஒரு அடியோட விட்டதே பெருசு. ச்சே இவளால இன்னிக்கு, காலேஜ்ல என் மானமே போயிருக்கும்” என்று கிட்ட தட்ட கத்தினான்.

ஏனெனில், பிரதன்யா கூட்டம் ஒரு பக்கம் பூஜாவை போட்டுக் கொடுத்திருக்க, அதில் கடுப்பாய் திரும்பியவன், மீண்டும் மாதவனின் மீதே மோதினான். அதில் அர்ஜூன் சட்டையில் இருந்த ரோஜா கீழே விழுந்து விட, “பாத்து வர மாட்டீயா நீ” என்று மாதவ்வை திட்டிவிட்டு, அவன் குனிந்து அதை எடுத்தான்.

அப்போது பார்த்து அங்கு வந்த முரளியோ, அவன் சட்டையில் ஒட்டியிருந்த லிப் மார்க்கைப் பார்த்து, “என்ன சார்? வீட்டுல ஒரே ரொமான்ஸ் தான் போலையே” என்றான்.

அவனுடைய பேச்சில், அர்ஜூன் “வாட்?” என்று கேட்க, “இல்ல சார்! பாடம் எல்லாம் மத்தவங்களுக்குத்தான் போலையே. சிங்கிளா இருந்தாலே வசதித்தான்” என்ற முரளிக்கோ, ஏற்கனவே அர்ஜூனைப் பிடிக்காது.

அதனால் இதை வைத்து அவன் பேச, அதற்குள் மாதவ்த்தான், “சார் உங்கள அப்பவே, அந்த பசுபதி சார் கூப்டாரு. போறீங்களா?” என்றான்.

“ச் அந்தாளுக்கு வேற ஆள் இல்ல” என்று சொல்லிய முரளியோ அர்ஜூனை நக்கலாய் பார்த்துவிட்டு செல்ல, இப்போது அர்ஜூனோ, “அவன் என்ன உளறிட்டு போறான்” என்று கத்தினான்.

“ச் நீ ஏண்டா? இப்படி ஒரு ஷர்ட போட்டுட்டு வந்த?” என்று மாதவ் கேட்க, “ஏன் இந்த ஷர்ட்க்கு என்ன?” என்று குனிந்துப் பார்த்தவன், அப்போதே, அவன் சட்டையில் ஒட்டியிருந்த லிப்ஸ்டிக் கரையையே பார்த்தான்.

அதில் அவனுக்கு அத்தனை அதிர்ச்சி. சின்ன சின்ன விஷயங்களில் கூட சரியாக நடக்க வேண்டும் என்று நினைப்பவன். அப்படி இருக்க, அவனே இப்படி ஒரு கோலத்தில், காலையில் இருந்து சுற்றியிருக்கிறான் என்று நினைக்கும் போதே அவனுடைய கோவம் கரையைக் கடந்திருந்தது.

அதை யார் செய்தது? என்ற யோசனைக்கே இடமின்றி பூஜா அவனின் முன்னே வந்து நின்றிருக்க, தன்னுடைய அத்தனை கோவத்தையும் அவள் கன்னத்தில் இறங்கியிருந்தான்.

அவன் அடித்த அடியில் அவள் தடுமாறி கீழே விழப் போக, அதை சற்றும் பொருட்படுத்தாது, “ச்சீ. நீ எல்லாம் ஒரு பொண்ணா. இவ்ளோ கேவலமா நடந்துக்கிடுற” என்று திட்டிவிட்டு பைக்கை எடுத்துக் கொண்டு வீட்டுக்கு வந்திருந்தான் அர்ஜூன்.

இப்போது நடந்தது அத்தனையையும் நினைத்துப் பார்த்தவனுக்கு, இன்னும் இன்னும் பூஜாவின் மீது அத்தனைக் கோவம் வந்தது.

கடுப்பு தீர குளிக்க சென்றான். ஏனோ அந்த குளிர்ந்த நீர் கூட அவனுடைய கோவத்தை குறைக்கவில்லை. ஆனாலும் சில பல நிமிடங்களுக்குப் பின் சற்று அமைதியடைந்தவன், உடை மாற்றி வெளியில் வந்தான்.

ஏனோ சாப்பிட கூட மனமின்றி, அப்படியே அவனுடைய லேப்டாப்பை எடுத்துக் கொண்டு அமர்ந்து விட்டான். நேரம் போனதே தெரியாது. அவன் அவனுடைய மொபைல் ஆப் தயாரிப்பதில் மூழ்கிவிட, அவனுடைய மொபைல் சத்தம் போட்டு எழுப்பியது.

அதில், அவன் மொபைலை எடுத்துப் பார்க்க, அவனுடைய அம்மாவிடம் இருந்துத்தான் அழைபு வந்தது. “ச் இவங்க வேற. எல்லாத்துக்கும் காரணமே இவங்கத்தான். இவங்களாலத்தான் அவ தேவையில்லாம என் வாழ்க்கைக்குள்ள வந்து விளையாடிட்டு இருக்கா” என்று தன் அன்னையையும் திட்டினான்.

பின் கட் செய்ய நினைத்தவன், “இன்னிக்கு இவங்க கிட்ட சொல்லி, நாளைக்கே அவள கூட்டிட்டு போக சொல்லனும்” என்று முடிவெடுத்தப்படி அட்டண்ட் செய்து காதில் வைத்தான்.

இந்தப் பக்கம் இவன் கோவமாய், “இங்கப்பாரும்மா” என்று ஆரம்பிக்கும் முன்னே, “பூஜாக்கு என்னாச்சுன்னு தெரியல அர்ஜூன்” என்றார்.

அதில் சொல்ல வந்த வார்த்தையை அப்படியே விழுங்கியவனின் இதயம் ஒரு நொடி தடுமாற, ஆனால் அடுத்த நொடியே அதை இழுத்துப் பிடித்து, “ச் அவளுக்கு என்னாகப் போது” என்று எரிந்து விழுந்தான்.

“ச் பொறுப்பில்லாம பேசாதடா. அவளோட மொபைலுக்கு கால் பண்ணிட்டே இருக்கேன். லைன்னே கிடைக்கல” என்றார்.

“இதுல என்ன இருக்கு?” என்று அவன் அசட்டையாய் கேட்க, “உன்ன மாதிரி எல்லாம் அவ கிடையாது. டெய்லியும் காலேஜ் முடிஞ்சதும், ஹாஸ்டல் போயிட்டு கால் பண்ணிடுவா. இன்னிக்கு இவ்ளோ நேரம் ஆச்சு கூப்டவே இல்ல” என்றார்.

அதில் அர்ஜூனுக்கு ஒரு நொடி திடுக்கிட்டாலும், அதை காட்டாது, “ச் போன்ல சார்ஜ் இல்லாம இருந்திருக்கும்” என்றான்.

“ஏண்டா? நீ இப்படி இருக்க. அந்தப் பொண்ணுக்கு அங்க யாரையுமே தெரியாதுடா. தெரியாத இடத்துல தனியா இருக்கா. நானே அவ போன் எடுக்கலையேன்னு வயித்துல நெருப்ப கட்டிட்டு இருக்கேன். நீ என்னென்னா, இவ்ளோ அசால்டா பேசுற. அன்னிக்கு சொன்னதுத்தான். உன் பொண்டாட்டிய பாக்கலன்னா கூட, வயசுப் பொண்னுடா, ஏதாச்சும் ஒன்னுக்கெடக்க ஒன்னு ஆச்சுன்னா, அவங்க அம்மா, அப்பாவுக்கு யாரு பதில் சொல்றது?” என்றார்.

அவருடைய வார்த்தையில், இப்போது அர்ஜூனுக்கோ மெல்லிய பதட்டம் எட்டிப் பார்த்தது.

“ச், நீங்க நினைக்கிற மாதிரி எல்லாம் எதுவும் இருக்காது. இன்னிக்கு காலேஜ்ல பங்சன். அதனால டயர்ட்ல படுத்திருப்பாளா இருக்கும்” என்றான்.

“இல்லடா. எனக்கென்னமோ ஒரு மாதிரி பயமா இருக்கு. பூஜா இத்தன நாள்ல இப்படி எல்லாம் ஒரு நாளும் இருந்தது இல்ல” என்றார்.

இப்போது இவனோ. “ச் அப்படின்னா, அந்த ஹாஸ்டலுக்கு கால் பண்ணி கேட்க வேண்டியதுத்தான” என்று எரிந்து விழுந்தான்.

“அந்த நம்பர் இருந்தா, நான் ஏண்டா உனக்கு கால் பண்ணி பேசப் போறேன். கொஞ்சம் ஒரு எட்டு போயி பாத்துட்டு வாயேன்” என்றார்.

“ஒரு ஹாஸ்டல் நம்பர் கூட வாங்கி வைக்க மாட்டீங்களா? அப்புறம் எந்த தைரியத்துல அவள அங்க அனுப்பி வச்சீங்க. எனக்கென்ன வேல இல்லன்னு நினைச்சீங்களா? எப்போ பார்த்தாலும் அவ பின்னாடியே திரியிறதுக்கு” என்றார்.

அதைக் கேட்ட தேவகிக்கோ அத்தனை ஆதங்கமாய் இருந்தது. ஆயிரம் தான் சொன்னாலும், அவனுடைய மனைவி. அவளைக் காணவில்லை என்று அவர் சொல்லிக் கொண்டிருக்கிறார். அவனோ அந்த நேரத்திலும் அவனுடைய வேலையைப் பற்றி பேச, ஒரு பெண்ணாய் அதற்கு மேல் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.

“உன்ன நம்பி நாங்க யாரும் அனுப்பி வைக்கல. உன்கிட்ட உதவி கேட்டதுக்கு, முன்ன பின்ன தெரியாதவங்க கிட்ட கூட கேட்கலாம். நீ உன் வேலைய கட்டிட்டே அழுப்பா. நான் இப்பவே சென்னை கிளம்பி வந்து பாத்துக்கிறேன்” என்று சொல்லிவிட்டு அழைப்பைத் துண்டித்தார்.

இப்போது இவனுக்கோ இன்னும் இன்னும் கோவம் தான் வந்தது. “ச் வாங்க. வந்து முதல்ல அவள இங்க இருந்து கூட்டிட்டு போங்க. அப்பத்தான் எனக்கு நிம்மதி” என்று சொல்லியவன், மீண்டும் லேப்டாப்பில் பார்வையைப் பதித்தான்.

“இந்த ரோஜாப்பூ உங்க சட்டைக்கு ரொம்ப அழகா இருக்கு சார்” என்று சிரித்த முகமாய் அவனிடம் சொல்லிய பூஜா நினைவுக்கு வர, இப்போது அவனால் சாதாரணமாக இருக்க முடியவில்லை.

“ச்.” என்று தலையைப் பிடித்தவன், இப்போது மொபைலை எடுத்து பூஜாவுக்கு கால் செய்தான். அவள் மொபைல் தொடர்பு எல்லைக்கு வெளியில் இருப்பதாக சொல்ல, அடுத்ததாக, அவள் தங்கியிருக்கும் ஹாஸ்டலுக்குத்தான் கால் செய்தான்.

அவள் அங்கு தங்கியிருக்கிறாள் என்று தெரிந்த உடனே, அவன் அந்த ஹாஸ்டலைப் பற்றி முழுதாய் தெரிந்து வைத்திருந்தான். இத்தனைக்கும், அங்கிருக்கும் வாட்ச்மேன் நம்பர் முதற்கொண்டு வாங்கியிருந்தான்.

இதெல்லாம் எதற்கு செய்தான்? அக்கறையே இல்லாத பூஜாவின் பாதுகாப்பில் இவனுக்கென்ன அத்தனை ஆர்வம்?

அங்கே அவர்களோ, பூஜா இன்னும் ஹாஸ்டலுக்கு வரவில்லை என்ற தகவலை மட்டுமே சொல்ல, “என்ன? வரலன்னா என்ன அர்த்தம்?” என்று கோவமாய் இவன் கேட்டான்.

அந்தப் பக்கம் இருந்தவர்களோ? “அவங்க வரலன்னா அதுக்கு நாங்க என்ன சார் பண்ண முடியும்?” என்றனர்.

அதில் எரிச்சலானவனோ, “இப்படி சொன்னா என்ன அர்த்தம்? அங்க தங்கியிருக்கிறவங்க உங்களோட ரெஸ்பான்சிபிலிட்டித்தான. அப்படி இருக்கிறப்ப நீங்க இப்படி பொறுப்பில்லாம பதில் சொல்றீங்க” என்று அவர்களிடம் சண்டைக்கு சென்றான்.

“இது ஒன்னும் காலேஜ் ஹாஸ்டல் கிடையாது சார். இது ஒரு ஒர்க்கிங் வுமன்ஸ் ஹாஸ்டல். இங்க, அவங்களோட திங்க்ஸ்க்கு தான் நாங்க பொறுப்பேத்துக்க முடியுமே தவிர. அவங்களுக்கு கிடையாது. உங்களுக்கு அவ்ளோ அவசியம்னா, நீங்க உங்க வீட்டுல வச்சிக்கோங்க” என்று சொல்லிவிட்டு அழைப்பை துண்டித்திருந்தனர்.

அதில் பல்லைக் கடித்தவனுக்கோ இப்போது மெல்லிய பயம் எட்டிப் பார்த்தது. வேகமாய் மணியைப் பார்த்தான். கிட்ட தட்ட மணி பத்தைத் தொட்டிருக்க, “ச் இவ்ளோ நேரம் ஹாஸ்டலுக்கு போகாம எங்கப் போனா?” என்று தனக்குள்ளே கேட்டான்.

“அவள அடிச்சிட்டு அப்படியே விட்டுட்டு வந்தத்தான. அவ ஏதாச்சும் தப்பான முடிவு எடுத்திருந்தா என்னப் பண்ணுவ?” என்று மனசாட்சி அவனை திகிலூட்ட, “என்ன? இல்ல இல்ல. அப்படில்லாம் அவ எதுவும் யோசிச்சிருக்க மாட்டா. அதுவும் நான்” என்றவனுக்கு, ஒரு வேளை அப்படி ஆகியிருந்தால், என்ற கேள்வி வர, அவனுடைய உடல் ஒரு நொடி நடுங்கியது.

“இல்ல இல்ல அவளுக்கு எதுவும் ஆகியிருக்காது” என்று தனக்குத் தானே சொல்லியவன், அடுத்த நொடி தன்னுடைய பைக் சாவியை எடுத்துக் கொண்டு அவளைத் தேடி கிளம்பினான்.

நேரே அவளுடைய ஹாஸ்டலுக்கு சென்று விசாரிக்க, போனில் என்ன சொன்னார்களோ? அதையேத்தான் நேரிலும் சொன்னார்கள். அதில் கடுப்பானவனோ, அவர்களை நன்றாக திட்டிவிட்டு வெளியில் வந்தான்.

அங்கிருந்த வாட்ச்மேனிடம் விசாரிக்க, “இல்ல தம்பி அந்தப் பொண்ணு இன்னிக்கு இங்க வரல” என்று சொல்லிவிட, இப்போது அர்ஜூனுக்கோ அத்தனைப் பதட்டம்.

“எங்கப் போனா? இந்த ஊர்ல அவளுக்கு யார தெரியும்?” என்று யோசித்தவன், காலையில் அவள் சென்றதாய் சொல்லிய பொட்டிக் வரை சென்று விசாரித்து விட்டான். யாருக்கும் எதுவும் தெரியவில்லை. நேரடியாய், பூஜாவுடைய நண்பர்களுக்கு கால் செய்யவும் அத்தனைத் தயக்கம்.

ஆனாலும் நேரம் ஒரு பக்கம் சென்றுக் கொண்டிருக்க, இப்போது அவனோ காலேஜ் க்ரூப்பில் இருந்து பிரியாவுடைய நம்பரை எடுத்தான். “ச் இந்த நேரத்துல ஒரு பொண்ணுக்கு கால் பண்ணா, என்ன நினைப்பாங்க?” என்றவன் அதை செய்யாது அப்படியே நிறுத்தினான்.

பின் விஷ்வாவைப் பற்றி நினைவு வர, அவனோ காலேஜ் ஹாஸ்டலில் அல்லவா இருந்தான். அதனால் அர்ஜூனுக்கோ அவள் எங்கு சென்றிருப்பாள்? என்று சின்ன ஆதாரம் கூட கிடைக்கவில்லை.

மீண்டும் மீண்டும் பூஜாவுடைய சிரித்த முகமும், அவன் அடித்த போது கலங்கி நின்ற தோற்றமுமே நினைவுக்கு வர, “ஐயோ அர்ஜூன்! உன் கோவத்த இப்படித்தான் சின்ன பொண்ணுக்கிட்ட காமிப்பீயா?” என்று தன்னைத் தானே நொந்துக் கொண்டான்.

எங்கு சென்று தேட? எங்கு சென்றாள்? இப்படி எந்த கேள்விக்கும் விடையின்றி, அவன் பைக்கில் அவளை, தேடி அலைந்தான். இதுவரை அவன் சென்றிடாத இடங்களுக்கு கூட சென்றுப் பார்த்தான். ஒரு கட்டத்துக்கு மேல், “பேசாம போலீஸ்ல கம்பிளைண்ட் கொடுத்திடலாம்” என்ற முடிவுக்கே வந்துவிட்டான். அதற்கும் அவனுக்கு யோசனையாய் இருக்க, இப்படி மொத்தமாய் அவனை அலைய விட்டவளோ, அவன் சிந்தித்துக் கூட பார்க்க முடியாத ஒரு இடத்தில் இருந்தாள்.

(அப்படி பூஜா எங்க போயிருப்பா? அதுவும் அர்ஜூனால கண்டுப்பிடிக்க முடியாத ஒரு இடம்? ம் இன்னேரம் உங்களுக்கு தெரிஞ்சிருக்குமே. சரி அது என்னென்னு கமெண்ட்ல சொல்லுங்க. இல்லன்னா அடுத்த எபிசோட்ல பாக்கலாம். அதுக்கு முன்னாடி இன்னிக்கு எபிசோட் எப்படி இருந்திச்சுன்னு மறக்காம உங்க கருத்த சொல்லிடுங்க. அப்புறம் பெஸ்ட் கமெண்ட்ஸ பேனர்ல போஸ்ட் பண்ணிருக்கேன். சோ உங்க கமெண்ட்ஸும் அதுல வரலாம். சோ அதையும் செக் பண்ணிக்கோங்க.  அப்புறம் மறக்காம ரேட்டிங் கொடுத்திடுங்க)

தொடரும்…

Comments   18

*** வரம் – 22 - படைப்பை ரேட் செய்யுங்கள் ***