வரம் – 19

அத்தனைப் பேரும் வகுப்பிற்குள் இருக்க, அந்த ஆள் இல்லாத ஆடிட்டோரியத்தில், அர்ஜூனும், பூஜாவும் நின்றிருந்தனர்.

“ச் உன் மனசுல என்னத்தான் நினைச்சிட்டு இருக்க?” என்று கோவமாய் அவன் ஆரம்பிக்க, “இப்போ எதுக்கு சார் என்ன திட்டுறீங்க? நான் என்னப் பண்ணேன்?” என்று அப்பாவியாய் உதட்டை சுழித்தாள்.

“ஆ.ங் என்கிட்டலாம் நல்ல விவரமா பேசு, அந்த புரோபசர் உன்ன அந்த திட்டு திட்ற அளவுக்கு நீ என்னப் பண்ண” என்று கேட்டான்.

அதில் இவளோ, “ஐய்யய்யோ! நான் என்ன சொன்னேன்னு சொன்னா இவரும் சேர்ந்து திட்டுவாரே” என்று தனக்குள்ளே இவள் யோசித்தாள்.

அதற்குள் அவனோ, “என்ன? அந்த புரோபசர், உன்ன எதுவும் கார்னர் பண்றாரா?” என்று கேட்டான். இதெல்லாம் சத்தியமாய் அவன் இயல்பே கிடையாது. அவன் வகுப்பைத் தாண்டி, மற்ற விஷயங்களில் தலையிடவே மாட்டான். ஆனால் இப்போது அத்தனையும் மொத்தமாய் மாறியிருக்க, ஏனோ அவன் மனைவியின் மீது தவறே இருக்காது, என்று அப்போதும் நம்பித் தொலைத்தான்.

“ஏன் சார்? அன்னிக்கு மால்ல சண்ட போட்ட மாதிரி, இங்கேயும் அவர்கிட்ட சண்ட போடப் போறீங்களா?” என்று கேட்டாள் பூஜா.

அவளின் கேள்வியில் அவளை இன்னுமே முறைத்தவன், “உனக்கு என்னப் பார்த்தா எப்படி தெரியுது? உனக்காக போற, வர்ற இடத்துல எல்லாம் சண்ட போட்டுட்டு இருக்கனுமா? அதுவும் போக, இங்க நீ என்னோட ஸ்டூடண்ட் மட்டும் தான்” என்று அழுத்தம் திருத்தமாய் கூறினான்.

“அதான! என்னடா இன்னும் இந்த டயலாக்க சொல்லலையேன்னு பார்த்தேன்” என்று தனக்குள் சொல்லியவள், வெளியில் பாவமாய் முகத்தை வைத்துக் கொண்டு நின்றாள்.

அதில் இன்னும் எரிச்சலானவனோ, “ச் முதல்ல இப்படி எல்லாத்துக்கும் அமைதியா நிக்குறத நிறுத்து. என்ன நடந்திச்சுன்னு சொன்னாத்தான தெரியும். ஒரு வேள அந்த புரோபசர் உன்கிட்ட” என்று சொல்லி முடிக்கும் முன்னே, “ஐயோ அதெல்லாம் இல்ல சார். அவர் ரொம்ப நல்லவரு” என்றாள்.

இப்போது அவளை முறைத்தவனோ, “அப்போ அந்த நல்ல சாரே உன்ன திட்டுற அளவுக்கு நீ என்னப் பண்ண?” என்று கேட்டான்.

அதில் அவள் மீண்டும் அமைதியாகிவிட, “ச் பூஜா. எனக்கு வேற வேல இல்லன்னு நினைச்சிட்டு இருக்கீயா?” என்று பொறுமையிழந்து கத்தினான்.

அன்னேரம் சில மாணவர்கள், ஆசிரியர்கள் எல்லாம் அங்கு வர, சற்று தூர இருந்து பார்த்தவர்களுக்கோ, அர்ஜூனும் அவளை திட்டுவது போல் தான் தெரிந்தது.

“அர்ஜூன் சார் எப்பத்தான், கோவத்த கம்மி பண்ணிக்கப் போறாரோ? பாவம் அந்த ஸ்டூடண்ட்” என்று அவர்களுக்குள் நினைத்தப்படி, தங்கள் ஸ்டூடண்டிடம் ஏதோ பேச ஆரம்பித்தனர்.

ஆனால் அவர்கள் அறிந்திருக்கவில்லை. அவள் பாவம் கிடையாது, அவளின் முன்னே நின்றிருப்பவன் தான் அப்பாவி என்று.

“நான் உங்களுக்கு எதுவும் ஹெல்ப் பண்ணனுமா சார்?” என்று அவள் அடுத்த டாப்பிக்கு தாவ, இப்போது அவளை முறைத்தவனோ, “ச் என்கிட்ட சொல்லலன்னாலும், ஏதாச்சும் இஸ்யூ இருக்கு அப்படின்னா, கம்பிளைண்ட் பாக்ஸ் இருக்கு. அதுல எழுதி போடலாம்” என்றவன் அறிந்திருக்கவில்லை. அவளிடம் அப்படி ஒன்று உள்ளது என்று சொல்லியதற்காக வாழ்நாளில் பல முறை அவன் அதிர்ந்து நிற்கப் போகிறான் என்று.

இங்கே அவளின் மனமோ, “ஓஹோ! இங்க அப்படி ஒன்னு வேற இருக்கா? ச்சே ச்சே இத எப்படி இத்தன நாள் கவனிக்காம விட்டேன். யோவ் சொட்ட, என்னையவா திட்டுனா? நில்லு கண்ணா, நாளைக்கே இந்த பூஜா யாருன்னு நான் காமிக்கிறேன்” என்று தனக்குள் தீவிர சிந்தனையில் மூழ்கியிருந்தாள்.

அதற்குள் அவனோ, “ச் பூஜா” என்று அவன் மீண்டும் அழைக்க, “ஆ..ங் சார். சரி சார்” என்று எல்லாப் பக்கமும் தலையாட்டினாள்.

“ச் உன்ன நம்பி எப்படி தனியா விட்டாங்க” என்று அவன் முனுமுனுக்க, “எல்லாம் உங்கள நம்பித்தான் சார்” என்று பட்டென்று பதிலளித்தாள் அவள்.

“என்ன?” என்று அவன் முறைக்க, “ஆ..ங் இல்ல சார், உங்கள மாதிரி நல்லா வாத்தியார் எல்லாம் காலேஜ்ல இருப்பாங்கன்ற நம்பிக்கையில” என்றாள்.

அதில் இன்னும் இன்னும் அவளை முறைத்தவனோ, “ச் கிளாஸுக்கு போ” என்றப்படி அங்கிருந்து செல்ல முயன்றான்.

“ஐயோ சார்!” என்று அவள் வேகமாய் அவனின் முன்னே சென்று நிற்க, “என்ன?” என்று எரிச்சலாய் கேட்டான்.

“இப்போ நீங்க எதுக்கு கூப்டீங்கன்னு, அந்த சார் கேட்டா, நான் என்ன சொல்லட்டும்?” என்று அப்பாவியாய் கேட்டாள். அவளின் பேச்சில் பல்லைக் கடித்தவனோ, கையில் இருந்த குறிப்பு பேப்பர் ஒன்றை அவளிடம் கொடுத்து, “இதுல உங்க கிளாஸ் ஸ்டூடண்ட்ஸ் யாராச்சும் பார்டிசிபேட் பண்றாங்களா? என்னென்னு கேட்டு பில் பண்ணி கொடு” என்றப்படி அங்கிருந்து சென்றான் அர்ஜூன்.

“அர்ஜூன் சார்” என்று அவள் சத்தமாய் கத்த, அதில் அவன் மட்டும் அல்லாது, அங்கே அருகில் இருந்த மற்ற ஆசிரியர்களும் திரும்பி பார்க்க, அவளோ, “தேங்க்ஸ் சார்” என்று அழுத்தி சொல்லிவிட்டு ஓடியிருந்தாள்.

அவளின் செயலில், அவன் தனக்குள் பல்லைக் கடிக்க, மற்ற ஆசிரியர்களோ, இப்போது பூஜாவை வினோதமாய் பார்த்தனர். ஏனெனில். அவன் அத்தனை திட்டியிருக்க, இவளோ சிறு புன்னகையுடன் செல்வதைப் பார்த்து, “இப்ப உள்ள பசங்களுக்கு, கொஞ்சம் கூட சீரியஸ்னஸே இருக்கிறது இல்ல” என்று தங்களுக்குள் சொல்லிக் கொண்டனர்.

அது அர்ஜூன் காதிலும் விழ, ஏனோ அவளுடைய சின்ன சின்ன செயல்கள், அவன் மனதில் அவனுக்கே தெரியாது சில பாதிப்பை ஏற்படுத்தியது.

இங்கே அர்ஜூனிடம் விளையாடிவிட்டு ஓடி வந்தவளோ, எதிரில் வந்த இருவரின் மீது கிட்டதட்ட மோத சென்றாள். கடைசி நொடியில் சுதாரித்து, “சாரி. சாரி” என்றப்படி பின்னே செல்ல, அதற்குள்ளாகவே அவர்கள் கையில் இருந்த கூல்ட்ரிங்கஸ், அவர்கள் இருவர் மீதும் கொட்டியிருந்தது.

“ச் பாத்து வர மாட்டீயா நீ” என்று கோவமாய் சொல்ல நினைத்து நிமிர்ந்தவன், பூஜாவைப் பார்த்ததும், அப்படியே சொல்ல வந்த வார்த்தையை அப்படியே விழுங்கினான்.

அதற்குள் அருகில் நின்றிருந்த வெங்கட், “சாரி சொல்லிட்டா, எங்க சட்டைய பாத்தீயா? இப்படியே எப்படி நாங்க கிளாஸுக்கு போறது” என்று சண்டைக்கு சென்றான்.

அதில் பூஜாவோ, “இதுக்காக உங்களுக்கு பதிலா, நானா கிளாஸுக்கு போக முடியும்?” என்றாள்.

“ஹேய் என்ன? நாங்க யார் தெரியுமா? நாங்க நினைச்சா” என்ற வெங்கட் மேலும் பேசி முடிக்கும் முன்னே, “உங்களுக்கு ஒன்னும் இல்லையே” என்று கேட்டான் ஆதித்யா.

அவனுடைய இந்த பேச்சில் வெங்கட் அதிர்ந்து, தன் நண்பனைப் பார்க்க, அவனோ பூஜாவைத்தான் வைத்த கண் வாங்காது பார்த்துக் கொண்டிருந்தான்.

“என்னது இது? மச்சான் பார்வையே சரியில்லையே” என்று தனக்குள் சொல்லியவனுக்கு, அன்று முதல் நாள் பூஜாவைப் பார்த்தது எதுவுமே நினைவில் இல்லை.

“எனக்குலாம் ஒன்னும் இல்ல ப்ரோ. உங்க பிரண்ட்க்குத்தான் பாவம் முடியல போல” என்று பூஜா வெங்கட்டைப் பார்த்தப்படி சொல்ல, “ப்ரோவா?” என்று உள்ளுக்குள் உதறியவன், “ஐயம் ஆதித்யா” என்று தன் கையை நீட்டினான்.

அதில் இவளோ, ஒரு நொடி அவனைப் பார்த்து விட்டு, பின், “சாரி ஆதித்யா. நான் உங்கள மாதிரி முன்ன பின்ன தெரியாதவங்களுக்குலாம், என் பேர சொல்ல மாட்டேன். எனிவேய்ஸ், உங்க ட்ரஸுக்கு, இந்த டிசைன்னே நல்லாத்தான் இருக்கு. சோ பாய்” என்று சொல்லிவிட்டு ஓடியிருந்தாள்.

ஏனோ அவளுடைய இந்த குறும்பு பேச்சு கூட அவனுக்கு பிடித்திருக்க, செல்பவளைப் பார்த்தப்படியே தன் சட்டையில் ஒட்டியிருந்த கூல்ட்ரிங்க்ஸ் கரையை மெதுவாய் வருடினான்.

“டேய் என்னாச்சுடா உனக்கு? அந்தப் பொண்ணு அவ்ளோ பேசிட்டு போறா. நீ என்னென்னா, இப்படி நிக்குற” என்று வெங்கட் கோவமாய் கேட்க, “அவத்தான பேசுனா. பேசட்டும்” என்றான் ஆதித்யா.

“என்ன சொல்ற நீ?” என்று அவன் கேட்க, “டேய் பச்சி யாருன்னு மறந்துட்டீயா?” என்றப்படி தாடியை தடவ, “பச்சியா?” என்றப்படி அவனும் எட்டிப் பார்க்க, “அதாண்டா அன்னிக்கு ஆடிட்டோரியத்துல பாத்தோமே” என்று நினைவுப்படுத்த, “அந்தப் பொண்னா இது” என்றவனும் எட்டிப் பார்த்தான்.

ஆனால் அதற்குள்ளாக, பூஜா கண்ணை விட்டு மறந்திருக்க, “அவ என்ன படிக்கிறா? எங்க தங்கியிருக்கா? இப்படி எல்லாமே எனக்கு உடனே தெரிஞ்சாகனும்” என்று ஆதித்யா சொல்ல, வெங்கட்டும் தலையாட்டி வைத்தான்.

இப்படியாக ஒரு பக்கம் செல்ல, அந்த வாரம் முழுவதுமே, பூஜா அர்ஜூன் கொடுத்த வேலையில் மூழ்கிப் போயிருந்தாள்.

அதில் அந்த பிரதன்யா கூட்டத்துக்கு அத்தனை எரிச்சல், “ஹேய்! நம்மளும், அவள அடக்குறதுக்கு என்னென்னமோ பண்ணிட்டோம். இவ என்னென்னா டே பை டே பேம் ஆகிட்டே இருக்கா. இப்போ பாரு. அந்த அர்ஜூன் சார் கூட இவகிட்டத்தான் பொறுப்ப கொடுத்திருக்காரு” என்று பொறுமினாள் ஒருவள்.

“ஹேய் அர்ஜூன் சார பத்தி நமக்கு தெரியாதா? அவரு யாருக்காச்சும் பனிஷ்மெண்ட் கொடுத்தா கூட, இப்படித்தான் அவங்களுக்கு வேல கொடுப்பாரு” என்றாள் இன்னொருவள்.

அதற்குள் பிரதன்யாவோ, “இவள எப்படியாச்சும், நம்ம சீனியர் கேங் கிட்ட கோர்த்து விடனும். அப்பத்தான், இவ அடங்குவா” என்று கையில் இருந்த பேப்பரை கசக்கியப்படி கூறினாள்.

“எப்படி டி?” என்று இன்னொருவள் கேட்க, “ம் அதான் வெல்கம் பார்டி வருதுத்தான? எப்படியும் அது முடிஞ்சதும் சீனியரோட ராக்கிங் ஸ்பெஷல் இருக்குல்ல. அதுல இவள எப்படி கோர்த்து விடுறேன்னு பாரு. அதுக்கப்புறம் இவ வாயே தொறக்க கூடாது” என்று கருவிக் கொண்டாள்.

ஆனால் பூஜாவோ, இது எது பற்றியும் சிறு கவலைக் கூட இன்றி விஷ்வா, பிரியாவுடன் கேண்டினில் அமர்ந்து பஜ்ஜி சாப்பிட்டுக் கொண்டிருந்தாள்.

“ஆமா வெல்கம் பார்டிக்கு நீ ஏன் உன் பேர் எதுலையுமே கொடுக்கல” என்று பிரியா விஷ்வாவிடம் கேட்டாள்.

“எதுக்கு? எதுலையாச்சும் கொடுத்து நம்ம பேஸ் எந்த சாருக்காச்சும் மயிண்ட்ல பிக்ஸ் ஆகிடுச்சின்னா, அப்புறம் தொட்டதுக்கெல்லாம் நம்மள எழுப்பித்தான் கேள்வி கேட்பாங்க. இதெல்லாம் தேவையா?” என்றான் விஷ்வா.

“நீ எல்லாம் ஒரு ஆண் மகனா? இப்படி பயப்படுற” என்று பிரியா கிண்டலாய் கேட்க, “ஹேய் நீ மட்டும் என்னவோ பேர் கொடுத்த மாதிரி பேசுற” என்றான் விஷ்வா.

“ம் நம்ம கேங்ல தைரியசாலியே, பூஜாத்தான் அவளே. நேம் எதுவும் கொடுக்கல. அப்புறம் நான்லாம் ஒரு ஆளா?” என்று பிரியா சொல்ல, அவளோ அவர்கள் பேச்சைக் கவனிக்காது, சற்று தள்ளி மரத்தடியில் நின்றிருந்த அர்ஜுனைத்தான் வைத்தக் கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள்.

“எந்த ஆங்கிள்ல பார்த்தாலும், நம்ம சாரு ஸ்மார்ட் தான் போலையே” என்று தனக்குள் அவள் சொல்லிக் கொள்ள, அதற்குள் விஷ்வாவோ, “ஹேய் பூஜா” என்று உழுப்பினாள்.

அப்போதே இவ்வுலகம் வந்தவள், “என்ன?” என்று கேட்க, “ஆமா நீ ஏன் உன் பேர் கொடுக்கல” என்றான் விஷ்வா.

“நான் கொடுக்கலன்னு யாரு சொன்னா? நம்ம மூனு பேர் பேர சேர்ந்துத்தான எழுதியிருக்கேன். பாக்கலையா?” என்று அசராது சொல்லிவிட்டு அவள் அர்ஜூனை நோக்கி எழுந்து சென்றாள் பூஜா. “எதே?” என்று அவர்கள் அழைத்த எதுவும் அவள் காதில் விழாமல் தான் போனது. இங்கே யாரோ ஒரு புரோபசரிடம் எதையோ பேசிக் கொண்டிருந்தவனின் முதுகுக்குப் பின்னே வந்தவள், “சார்” என்றாள்.

அவளின் குரலில் அவன் திரும்புவதற்கும், “ஐயோ சார்” என்று அவள் அவனை வேகமாய் பதறியடித்து கட்டிப் பிடிப்பதற்கும் சரியாக இருந்தது.

(ரைட்டு! நம்ம புள்ள அவ வேலைய ஆரம்பிச்சிட்டா. இனி அர்ஜூன் சார் பாடு திண்டாட்டம் தான். சரி அடுத்து என்னாகப் போதுன்னு அடுத்தடுத்த எபிசோட்ல பாக்கலாம். அதுக்கு முன்னாடி இன்னிக்கு எபிசோட் எப்படி இருந்திச்சு? உங்களுக்கு எந்த சீன் பிடிச்சிருக்குன்னு மறக்காம கமெண்ட்ல சொல்லுங்க. அப்புறம் கமெண்ட் பண்ண எல்லாருக்குமே ரொம்ப ரொம்ப தேங்க்ஸ். சீக்கிரமே ரிபிளை பண்றேன். அப்புறம் பெஸ்ட் கமெண்ட்ஸ பேனர்ல போஸ்ட் பண்றேன். சோ உங்க கமெண்ட்ஸும் அதுல வரலாம். சோ அதையும் செக் பண்ணிக்கோங்க.  அப்புறம் மறக்காம ரேட்டிங் கொடுத்திடுங்க)

தொடரும்…

Comments   17

*** வரம் – 19 - படைப்பை ரேட் செய்யுங்கள் ***