வரம் – 17

பூஜா அவளுடைய உலகில் இருக்க, அர்ஜூனோ அவளை சிறு எரிச்சலோடுத்தான் பார்த்தான். அன்னேரம் பார்த்து நான்கு பேர் வேண்டுமென்றே அவளின் மீது மோத, அதைப் பார்த்தவனுக்கு சுள்ளென்று கோவம் தலைக்கேறியது.

இப்போது அதில் இருந்த ஒருவனோ, இன்னொருவனிடம், “பிகரு செம்மையா இருக்குப் பாரேன்” என்று தாடியை தேய்த்தப்படி கூறினான். “ஆமா மச்சான். தனியா வந்திருக்கு போலையே. அப்போ நம்மளும் கொஞ்சம் கம்பெனி கொடுப்போமா?” என்று மற்றொருவன் சொல்ல, அதற்குள், “இதுவரைக்கும் நீங்கத்தான இடிச்சீங்க. இப்போ நான் போறேன்” என்றப்படி ஒருவன் மீண்டும் பூஜாவை நோக்கி அடி எடுத்து வைத்தான்.

அவர்கள் என்ன பேசுகிறார்கள்? என்று இவனுக்கு கேட்கவில்லை என்றாலும் கூட, அவர்கள் பூஜாவைப் பற்றித்தான் தவறாய் பேசிக் கொண்டிருக்கிறார்கள் என்பதை அவர்கள் முக ஜாடையே சொல்லியது.

அதில் கரத்தை இறுக்கி மூடியப்படி, பல்லைக் கடித்தான். இப்போது அந்த ஒருவன் பூஜாவை நெருங்கியிருக்க, இப்போது அர்ஜூன் கோவமாய் அவர்களை அடிக்கப் போக, அதற்குள், பூஜா சட்டென்று இரண்டடி பின்னே நகர்ந்திருந்தாள்.

அதில் மோத வந்தவன், நிலைத் தடுமாறி, தரையில் விழுந்துவிட, இப்போது அவளோ, “ஐயோ என்னாச்சு ப்ரோ? கீழ விழுந்துட்டீங்களா?” என்று அவனுக்கு கையை நீட்டினாள்.

அவளின் நக்கலில், இப்போது அவனோ வேகமாய் எழுந்து, ஏதோ சொல்லப் போக, அதற்குள் அவனின் பின்னே நின்றிருந்தவனின் பக்கம் திரும்பி, “அழகா இருக்கிற பொண்ணுன்னா சைட்டடிக்கலாம் தான் தப்பு இல்ல. பட் பர்மிஷன் இல்லாம டச் பண்றது தப்புன்னு, உங்க பிரண்ட் கிட்ட சொல்ல மாட்டீங்களா அங்கிள்?” என்று படு நக்கலாய் கேட்டாள் பூஜா.

அவளின் வார்த்தையில், “என்ன அங்கிளா?” என்று இன்னொருவன் சட்டென்று சிரித்து விட, இப்போது அவனோ, பூஜாவை கோவமாய் முறைத்தான்.

அதற்குள்ளாக, “என்னாச்சு? இப்போ எதுக்கு சிரிக்கிறீங்க? பொண்ணுங்க மாமான்னு கூப்டா, உங்கள மாதிரி பசங்களுக்கு பிடிக்கும்னு சொன்னாங்களே. அப்போ உங்களுக்கு பிடிக்காதா அங்கிள்?” என்று மீண்டும் அசராது சீண்டினாள் பூஜா.

“ஹேய் என்ன கிண்டல் பண்றீயா?” என்று அடுத்து ஒருவன் அவளை நெருங்க, “வாவ். சூப்பர். உங்கள பாக்க அப்படியே, அந்த தெலுங்கு பட வில்லன் லுக் பக்காவா மேட்ச் ஆகுது. நீங்க எதுவும், படத்துல நடிக்கிற ஐடியால இருக்கீங்களா? நான் வேணும்னா உங்கள ஒரு போட்டோ எடுத்துக்கட்டுமா?” என்றவள் தன்னுடைய மொபைலை எடுத்து அவர்களை புகைப்படம் எடுக்க சென்றாள்.

அதில் அவனோ, “என்ன போட்டோ எடுத்து போலீஸ்ல கொடுக்கலாம்னு பாக்குறீயா?” என்று அவள் மொபைலை பிடுங்கப் போக, அதற்குள் சட்டென்று கரத்தை விலக்கிக் கொண்டவள், “அட என்னப்பா? நானே உங்க கூட பிரண்டாகலாம்னு ட்ரைப் பண்ணிட்டு இருக்கேன். நீங்க என்னென்னா, வந்ததுல இருந்து என்ன முறைச்சிட்டே இருக்கீங்க” என்று அவள் சீண்டலாய் கூறினாள்.

அவள் சீண்டலில், அங்கிருந்தவன், “ஹேய் என்ன? ஏதோ கொஞ்சமா இடிச்சதுக்கு, ரொம்பத்தான் பண்ணிட்டு இருக்க” என்று எகிறிக்கொண்டு வர, “ஐயோ. அப்போ உண்மையாவே வேணும்னுத்தான் அடிச்சீங்களா? பட், இப்படி பண்றது தப்பாச்சே” என்றாள்.

“ஹேய் என்ன தப்பு? உன்ன மாதிரி பொண்ணு எல்லாம், எங்கள மாதிரி பசங்க இடிக்கிறதுக்குத்தான, இப்புடி வந்து ஆடிட்டு இருக்கீங்க” என்று அவன் வார்த்தையை விட, அதற்குள் பட்டென்று அர்ஜூனுடைய கரம் அந்த ஒருவனின் கன்னத்தில் இடியென இறங்கியது.

வாங்கிய அடியில் அவன் தரையில் சென்று விழ, இப்போது அர்ஜூனோ கோவமாய் பூஜாவைப் பார்த்து முறைத்தான். பின்னே என்ன? அவர்கள் வம்பு செய்துக் கொண்டிருக்கிறார்கள் என்று தெரிந்தும் இவள் அவர்களிடம் சரிக்கு சமமாய் நின்று சிரித்து பேசிக் கொண்டிருப்பது அவனுக்கு அத்தனை எரிச்சலைக் கொடுத்தது.

“ஐயோ பாவம் அர்ஜூன் சார். அடுத்த படத்துல வில்லனா வர வேண்டிய மூஞ்சி. இப்போ பாருங்க. வாங்குன அடியில ஒரு பக்கம் வீங்கிப் போயிடுச்சு” என்று அடிவாங்கியவனுக்காக அவள் பரிதாபப்பட, “முதல்ல வா” என்று அவள் கையை அழுத்திப் பிடித்தான்.

அதற்குள்ளாக, “ஹேய் எங்க பிரண்டையே அடிச்சிட்டு நீ போயிடுவீயா?” என்று ஒருவன் அர்ஜுன் தோளில் கையை வைக்க, இப்போது அவனுடைய தாடை எல்லாம் இறுகியது.

“இடிச்ச அந்தப் பொண்ணே எஞ்சாய் பண்ணிட்டு கம்முன்னுத்தான இருக்கா” என்று சொல்லி முடிக்கும் முன்னே, பேசியவனின் வாயில் இருந்து இரத்தம் பொளபொளவென்று கொட்டியது.

அதில் பூஜாவோ, “ச் இதுக்குத்தான் அப்பவே பேசாதீங்கன்னு சொன்னேன்” என்று அவர்களைப் பார்த்து பரிதாப்பட்டு கூறினாள்.

“உன்ன” என்றப்படி அர்ஜூனை மற்றொருவன் அடிக்க வர, அவன் கையையும் மடக்கிப் பிடித்து திருகியவன், தன் கோவம் தீரும் மட்டும் அவனை தாறுமாறாய் அடித்தான். அதற்குள் அந்த செண்டரின் மேனஜர் அங்கு வந்து, “சார். சார்.. விட்டுடுங்க. நாங்க பாத்துக்கிறோம்” என்று கெஞ்ச, அவர்களை ஒரு பார்வை பார்த்தவன், “எல்லா இடத்துலையும் கேமராவ பிக்ஸ் பண்ணி வச்சிருந்தா மட்டும் பத்தாது. இப்படி ஒரு விசயம் நடந்தா, வந்து தடுக்கனும். சும்மா வேடிக்க பாத்துட்டு இருக்க கூடாது. இதுக்கப்புறம் இவனுங்க என் கண்ணுல பட்டா, அதுத்தான் இவனுங்களுக்கு கடைசி நாளா இருக்கும்” என்று சொல்லியப்படியே, அங்கே அடி வாங்காது நின்றிருந்தவனின் மூக்கில் ஓங்கி ஒரு குத்து குத்தினான்.

“வாவ் செம்ம பஞ்ச்” என்று பூஜா சொல்ல, இப்போது அவளை முறைத்தவனோ, அவள் கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு அங்கிருந்து வெளியில் வந்தான்.

அவளோ, “அட என்ன அர்ஜூன் சார்? வாங்குன டிக்கெட்க்கு, இன்னும் பாதி கூட காலி பண்ணல. இப்போ பாருங்க. அமெளண்ட் வேஸ்டா போச்சு” என்று உதட்டை சுழித்தாள்.

அதில் கையில் இருந்த கவரையும், தன்னுடைய கிரிடிட் கார்டையும் பார்த்தவனின் மனமோ, “முழுசா அரை நாள்ல அர லட்சத்த காலி பண்ணிட்டு, இப்போ ஒரு ஆயிரம் ரூபா வேஸ்டா போச்சின்னு கவல வேற” என்று அவளை உள்ளுக்குள் திட்டினான்.

ஆனாலும், இப்போது கோவமாய், “உனக்கு அறிவு இருக்கா? இல்லையா? அவனுங்கள பாத்தாலே பொறுக்கி மாதிரி தெரியுது. அவனுங்க கூட உனக்கெனன் பேச்சு வேண்டிகெடக்கு” என்று திட்டினான்.

“நீங்கத்தான சார். எல்லார் கூடவும் பிரண்ட்லியா இருக்கனும்னு சொன்னீங்க” என்று அவள் அசராது கேட்க, இப்போது அர்ஜூனோ அவளை அத்தனை முறைத்துப் பார்த்தான்.

ஆனால் பூஜாவின் மனமோ, “ஏன்? அவனுங்க முத தடவ வந்து மோதுனப்பையே சாரு பாத்துட்டுத்தான இருந்தீங்க. அப்பவே வந்து, என் பொண்டாட்டிக்கிட்ட ஏன் பிரச்சன பண்றீங்கன்னு சண்ட போட்டிருக்க வேண்டியதுத்தான” என்று தனக்குள் கவுண்டர் கொடுத்தது.

ஆனாலும் அதை முகத்தில் காட்டிக் கொள்ளாது, “சார் எனக்கு ஒரு டவுட். அடிப்பட்டவங்களுக்கு எதுவும் ஆகியிருக்காதே. பாவம்” என்று அவனுடைய பொறுமையை இன்னுமே சீண்டினாள்.

“என்ன பாவம்? எனக்கு வந்த கோவத்துக்கு, அந்த மேனஜர் மட்டும் வராம இருந்திருந்தா, அத்தனை பேருக்கும் சமாதி கட்டியிருப்பேன்” என்றவனுடைய குரலில் அத்தனை ஆத்திரம்.

“பரவாயில்லையே, நம்ம ஹஸ்பண்ட்க்கு நம்ம மேல கொஞ்சம் அக்கற இருக்கு போலையே. ஆனாலும், என் அவுட்டிங் பிளான்ன ஸ்பாயில் பண்ணதுக்கு, இன்னும் ஏதாச்சும் ஸ்பெஷலா பண்ணனுமே. என்னப் பண்ணலாம்?” என்று தனக்குள்ளே யோசித்தாள்.

அதற்குள் அவனோ, “வாங்க வேண்டியதெல்லாம் வாங்கிட்டத்தான. வா போலாம்” என்று அவள் கையைப் பிடித்து அவன் இழுக்க, “ஐயோ என்ன சார்? நான் இன்னும் சாப்பிடவே இல்லையே” என்றாள்.

இப்போது அவளை முறைத்தவனோ, “போயி ஹாஸ்டல்ல சாப்பிடு” என்றப்படி அவளை இழுக்க, “ச். போங்க சார். அங்க நல்லாவே இருக்காது. இங்க ஏதாச்சும் புட் கோர்ட் போலாம்” என்றாள்,

அவன் இன்னும் முறைக்க, “ப்ளீஸ் அர்ஜூன் சார். இப்போ நான் என்ன கேட்டுட்டேன். பசிக்குதுன்னுத்தான சொன்னேன். பசியில இருக்கிற பிள்ளைய முறைக்கிறது ரொம்ப தப்பு சார்” என்றாள்.

“சரி வா” என்றவன் வேறு வழியின்றி அங்கிருந்த புட்கோர்ட்க்கு செல்ல, “என்ன வேணுமோ ஆர்டர் பண்ணு” என்றான்.

“சார். இங்க பபே மெதட் தான். உங்களுக்கு என்ன வேணும்னு சொல்லுங்க. நான் போயி எடுத்துட்டு வரேன்” என்றவள் வேகமாய் எழ, அப்போதே அவனும் அதைப் பார்த்தான்.

“இவளுக்கு எப்படி இதெல்லாம் தெரியுது?” என்று யோசித்தாலும் அவன் அது குறித்து வேறு எதுவும் கேட்கவில்லை.

எழ சென்றவளின் கரத்தைப் பிடித்து அமர வைத்தவன், “நீ உட்காரு நான் போயி எடுத்துட்டு வரேன்” என்று அவனே சென்று இருவருக்கும் எடுத்து வந்தான்.

அதை சற்று தள்ளி அமர்ந்து பார்த்தவளோ, “வாத்தி கிளாஸ்லத்தான் ரப்பா இருக்காரு. வெளிய வந்தா, பரவாயில்ல நம்ம என்ன சொன்னாலும் கேட்கிறாரு” என்று தனக்குள் சொல்லிக் கொண்டாள்.

அவனோ அவனுக்கு ஒரு ஜூஸும், இவளுக்கு ஒரு பர்கரும் வாங்கிட்டு வந்திருக்க, “இவ்வளவுத்தானா?” என்றாள். “முதல்ல இத சாப்பிடு. அப்புறம் வேணும்னா எடுத்துக்கலாம். புட்ட வேஸ்ட் பண்றது எனக்கு சுத்தமா பிடிக்காது” என்றான்.

“பட்” என்று அவள் ஏதோ பேசப் போக, “ச் இங்கப்பாரு என்கிட்ட டைம் இல்ல. ஒழுங்கா சாப்டு” என்று எரிந்து விழுந்தான்.

ஏனெனில், அவனுக்கு இதெல்லாம் முற்றும் புதிது. இப்படி எல்லாம் பொது இடத்தில் சண்டைப் போடுவான் என்றெல்லாம் யாராவது அவனிடம் வந்து சொல்லியிருந்தால் நிச்சயம் சிரித்திருப்பான். ஆனால் இப்போது அவன் வாழ்க்கையே தலைகீழாய் சென்றுக் கொண்டிருந்தது. அதற்கெல்லாம் காரணமானவளின் மீது கோவம் எந்தளவுக்கு வந்ததோ? அதே அளவுக்கு அதெல்லாம் அவனுக்கு ஏதோ ஒரு வகையில் பிடிக்கவும் செய்தது.

அதில் அவன் அவளையே பார்த்திருக்க, இப்போது அவளோ, “ஐயோ இது ரொம்ப காரமா இருக்கு” என்று சொல்லியப்படி, அவன் குடித்து வைத்திருந்த ஜூஸை எடுத்து வேகமாய் குடித்தாள்.

அவளின் செயலில், அவனோ, “நில்லு நான் போயி வேற ஜூஸ் வாங்கிட்டு வரேன்” என்று எழப் போக, “இல்ல இல்ல. எனக்கு போதும் நீங்க குடிங்க” என்றவள், இப்போது அந்த ஜூஸை அவனிடமே கொடுத்தாள்.

ஒரு மனம் அதை எச்சில் என்று சொல்ல, இன்னொரு மனமோ, அவள் உன் மனைவி என்று நினைவுப்படுத்தியது. 

“ச் எனக்கு என்னாச்சு? நான் ஏன் இப்படி எல்லாம் யோசிக்கிறேன். இல்ல இல்ல. அது ஒரு கல்யாணமே இல்ல. ஈவன் அவளே நான் கட்டுன தாலிய கழட்டிட்டா. இதுல என்ன இருக்கு” என்று சொல்ல, சரியாக அன்னேரம், “ஸ்ப்பா! இத மறைச்சி வைக்கிறது எவ்வளவு கஷ்டமா இருக்கு” என்று அவன் கட்டிய தாலியை எடுத்து வெளியில் போட்டாள் அவனின் தர்ம பத்னி.

அதைப் பார்த்தவனுக்கோ, அதிர்ச்சி ஒரு பக்கம் மறு பக்கம் மெல்லிய மகிழ்ச்சி உண்டானதோ? என்னவோ? ஆனால் அவனோ அவள் தாலியைத்தான் பார்த்தான்.

பின் அவளிடம், “இத நீ இன்னும் போட்டிருக்கீயா?” என்று கேட்க, அவனின் கேள்வியில் இப்போது அவளோ அவனை, “ஹலோ சார்! இது தாலின்னு தெரியாத அளவுக்கு என்ன சின்னப் பிள்ளன்னு நினைச்சிட்டீங்களா? நமக்கு கல்யாணம் ஆனதுக்கு சாட்சி சார் இது” என்று கேட்டாள் பூஜா.

(சபாஷ்! சரியான கேள்வி? நல்லா கேளுமா. இத்தன நாளா அவன் தான்மா அவனுக்கு கல்யாணம் ஆகிடுச்சின்றதையே மறந்துட்டு சுத்துனான். இப்போ என்னமோ அம்புட்டு பழியையும் உன் மேல தூக்கிப் போட பாக்குறான். ஏன்பா அர்ஜூன் உன் பொண்டாட்டிக்கு பதில் சொல்லு. சரி அடுத்து என்னாகப் போதுன்னு அடுத்தடுத்த எபிசோட்ல பாக்கலாம். அப்புறம் கத எப்படி போயிட்டு இருக்கு? இன்னிக்கு எபிசோட்ல உங்களுக்கு ரொம்ப பிடிச்ச சீன் எதுன்னு, கமெண்ட்ல சொல்லுங்க. அப்புறம் கமெண்ட் பண்ண எல்லாருக்குமே ரொம்ப ரொம்ப தேங்க்ஸ். சீக்கிரமே ரிபிளை பண்றேன். அப்புறம் பெஸ்ட் கமெண்ட்ஸ பேனர்ல போஸ்ட் பண்றேன். சோ உங்க கமெண்ட்ஸும் அதுல வரலாம். சோ அதையும் செக் பண்ணிக்கோங்க.  அப்புறம் மறக்காம ரேட்டிங் கொடுத்திடுங்க)

தொடரும்…

Comments   20

*** வரம் – 17 - படைப்பை ரேட் செய்யுங்கள் ***