வரம் – 13

ஸ்டாப் ரூமில் அமர்ந்திருந்த அர்ஜூனுக்கோ, இப்போதும் கூட அத்தனைக் கோவம் தான். வகுப்பறையில் நடந்தது மீண்டும் அவனுக்குள் ஓடியது. அவன் தன் கர்ஷீப்பை அவளிடம் நீட்டி முகத்தை துடைக்க சொல்ல, அவளோ, அவனையே அதை செய்ய கூறினாள்.

அதில் எரிச்சலானவனோ, “என்ன?” என்று கோவமாய் கேட்க, தன் இரு கையையும் தூக்கி அவனிடம் காட்டி, “கை புல்லா சாக்பீஸா இருக்கு சார். இப்படியே உங்க கர்ஷீப்ப தொட்டா, உங்க கர்ஷீப்பும் அழுக்காகிடும்” என்று சிறுமியாய் உதட்டை சுழித்துச் சொல்ல, இப்போது அவனோ அவளை முறைத்தான்.

அதோடு விடாது “துடைச்சி விடுங்க சார். நான் தப்பாலாம் எடுத்துக்க மாட்டேன்” என்று அவள் பெருந்தன்மையாய் சொல்ல, அவனோ, கையில் இருந்த கர்ஷீப்பை அவளிடம் திணித்து விட்டு, “ஸ்டே யுவர் லிமிட்” என்றப்படி தள்ளி சென்றான்.

இப்போது இங்கே அவன் தர்மபத்னியின் மனமோ, “லிமிட்ல இருன்னு சொன்னவரு. எவ்ளோ லிமிட்ல இருக்கனும்னு சொல்லாம போயிட்டாரே. பேசாம இப்பவே போயி கேட்போமா? இல்ல இல்ல பாவம் சாரு இப்ப கொஞ்சம் சூடா இருக்காரு. அப்புறமா கேட்டுப்போம்” என்று தனக்குள் பேச்சு வார்த்தை நடத்தியது.

பின் அந்த கர்ஷீப்பை வைத்து தன் முகத்தை துடைத்துக் கொண்டவள், மற்றவர்களுடன் சேர்ந்து அந்த குப்பையை எல்லாம் எடுக்க ஆரம்பித்தாள்.

ஓரளவுக்கு சுத்தமாகவும், “ரெண்டு ரெண்டு பேரா போயி ஹேண்ட் வாஷ் பண்ணிட்டு வந்து உட்காருங்க” என்றான் அர்ஜூன்.

இங்கே பூஜாவின் வாயோ, “ஏன்? மொத்தமா போனா, ரெஸ்ட் ரூம் வெடிச்சிடுமா என்ன?” என்று கிண்டலாய் பிரியாவின் காதில் கிசுகிசுத்தாள்.

“ஹே வாய மூடு டி. ஏற்கனவே நீ பண்ணி வச்சதுக்குத்தான், இப்போ இப்படி பொறுக்கிட்டு இருக்கோம். இதுல இந்த சார்கிட்டையும் வம்பு வளர்க்காத. அமைதியா இரு” என்றாள் பிரியா.

அதற்குள் விஷ்வாவோ, “கிளாஸ் ரூம்மே வெடிக்கிறப்ப, பாத்ரூம் வெடிக்காம இருக்குமா? அதான் சாரு பயந்திருப்பாரு” என்று பூஜாவுடன் சேர்ந்து கிண்டலடித்தான்.

“அப்போ, முத நாளே, நம்ம ஜமாய்ச்சிட்டோம்னு சொல்லு” என்று விஷ்வாவுக்கு ஹைபை கொடுத்தாள் பூஜா. அதைப் பார்த்த பிரியாத்தான் தலையில் அடித்துக் கொண்டாள்.

இப்போது மற்றவர்கள் எல்லாம் அவன் சொல்லியது போல், இரண்டு இரண்டு பேராய் சென்று வர, இவர்கள் மட்டும் மூவராய் சென்றனர். அதைப் பார்த்த பிரதன்யாவோ, “பார்த்தீயா? அவளுக்கு இருக்கிற திமிர?” என்றாள்.

“நில்லு நில்லு புதுசாத்தான வந்திருக்கா. அவளுக்கு அர்ஜூன் சார பத்தி தெரியல. தெரியிறப்ப, அவளுக்கு இருக்கு” என்று இன்னொருவள் ஒத்து ஊதினாள்.

ஒரு வழியாய் அனைவரும் அவர்கள் இருக்கைக்கு வந்தமரவும், அர்ஜூன் அத்தனைப் பேரையும் பார்த்தான்.

“எப்படியும்? ஒரு அட்வைஸ். ஒரு இண்ட்ரோ அதுத்தான?” என்று பூஜா விஷ்வாவின் காதில் கிசுகிசுக்க, அதற்குள், “சைலண்ட்” என்று மேஜையில் மீண்டும் ஓங்கி அடித்தான் அர்ஜூன்.

அதில் அத்தனைப் பேரும் அவனைப் பார்க்க, அவனோ, இப்போது நேரடியாக வகுப்பு எடுக்க ஆரம்பித்தான். அதில் அத்தனைப் பேரும் மிரட்சியாய் அவனைப் பார்க்க, அவனோ, பாடம் எடுத்ததோடு இல்லாது, இடை இடையில் அவர்களிடம் கேள்வியும் கேட்டான்.

அவனுடைய இந்த செயலில், பூஜாவே, “ஹேய் என்னடி? முத நாளே கிளாஸ்லாம் எடுக்கிறாங்க. இது உண்மையாவே காலேஜ்த்தானா?” என்று வாய் விட்டே புலம்பினாள். அதற்குள்ளாக அர்ஜூன், பூஜாவை எழுப்பி, அவன் நடத்திய பாடத்தில் கேள்வி கேட்க, அவளோ திரு திருவென்று முழித்தாள்.

அதில் அவனுடைய கோவம் கடகடவென்று கூட, “இவ்ளோ நேரம் இதத்தான சொல்லிக் கொடுத்தேன். அத கூட கவனிக்கலையா?” என்று திட்டினான். அதற்கு முன்பு வரை கூட, பலர் பதில் சொல்லாமல் இருந்தார்கள் தான். ஆனால் அவர்களிடம் எல்லாம், “நெக்ஸ்ட் டைம் கரெக்டா ஆன்சர் பண்ணனும்” என்று சொல்லி அமர வைத்திருந்தான்.

ஆனால் பூஜாவை மட்டும் அவன் திட்ட, அவளின் எதிரி லூசு கூட்டத்துக்கு மட்டும் அத்தனை மகிழ்ச்சியாய் இருந்தது.

“இல்ல சார். அது ஒரு டவுட். அதான்” என்று அவள் சொல்ல, “என்ன டவுட்? டவுட் இருந்திச்சின்னா, அத முன்னாடியே கேட்க வேண்டியதுத்தான” என்று அதற்கும் திட்டினான்.

இப்போது அவளோ, “இப்ப கேட்கட்டுமா சார்” என்றாள் பூஜா. “ஐயோ கடவுளே, இப்ப இவ என்ன டவுட் கேட்கப் போறான்னு தெரியலையே. ஏற்கனவே கிளாஸ் டீச்சர்கிட்ட வம்பு இழுத்துட்டா. இப்ப இவரா” என்றுத்தான் பிரியாவும், விஷ்வாவும் அவளைப் பார்த்தனர்.

அவர்கள் மட்டும் அல்லாது மொத்த கிளாஸுமே அவள் என்ன டவுட் கேட்கப் போகிறாள் என்றுத்தான் பார்த்தனர். 

அவளோ, தன் இடத்தில் இருந்து வெளியில் வந்து அவன் மேஜைக்கு முன் சென்று நின்றாள். அதில் இவனோ, அவளை கேள்வியாய் பார்க்க, “சாப்பீஸ் சார்” என்றாள்.

அவனும் அதை எடுத்து நீட்ட, போர்டை நோக்கி சென்றவள், அவன் எழுதியிருந்த குறிப்பிட்ட பார்முலாவில் இருந்த சின்ன கோட்டை அழித்து விட்டு, அதற்கு பதிலாக பெரிய கோட்டை போட்டாள்.

அவளின் செயலில் இவன் அவளை குழப்பமாய் பார்க்க, இப்போது அவளோ, மேலும் சில பார்முலாக்களை மாத்தி, கடைசியில் விடையையும் எழுத, அர்ஜூனின் புருவம் மெச்சுதலாய் அவளைப் பார்த்தது.

இப்போது அவனோ, “இத கேட்டப்பவே சொல்ல வேண்டியதுத்தான” என்றான். “இல்ல சார். எனக்கு சரியா சொல்ல தெரியாது. அதான் எழுதி காட்டுனேன். பட் நான் கத்துக்கிட்ட மெதட் சரியா சார்? இல்ல நீங்க சொல்லிக் கொடுத்த மெதட் சரியா?” என்று அவனிடமே திருப்பி கேள்விக் கேட்டாள் பூஜா.

அதில், அவனோ, அவளைப் பார்த்து, “போயி உட்காரு” என்றான். “ஒகே சார்” என்றவள் சமத்தாய் வந்து பிரியாவின் அருகில் அமர, இப்போது அர்ஜூனோ, அவள் கேட்ட கேள்விக்கும், அவள் எப்படி அதை செய்தாள் என்பதையும் சேர்த்து விளக்கினான்.

அதற்குள் வகுப்பு முடிந்ததுக்கான பெல் அடிக்க, புக்கை மூடியவன், “இன்னிக்கு ஒரு நாள் உங்கள ப்ரீயா விட்டிருக்கலாம் தான். பட், பர்ஸ்ட் நாளே, உங்க லிமிட்ட நீங்க தாண்டியிருக்கீங்க. என் கிளாஸ பொறுத்தவரைக்கும் எனக்கு டிஸிபிளின் ரொம்ப முக்கியம். என்கிட்ட வார்னிங் எல்லாம் கிடைக்காது. டைரக்டா பனிஷ்மெண்ட் தான். சோ கேர்புல்” என்று சொல்லிவிட்டே வகுப்பில் இருந்து வெளியில் சென்றான்.

அவன் வெளியில் சென்றதும், இப்போது சில நொடிகள் மொத்த கிளாஸே அமைதியாய் இருந்தது. ஆனால் அந்த அமைதியை அடுத்த நொடியே பூஜா எழுந்து நின்று கலைத்தாள்.

“அட விடுங்க ஹாய்ஸ். ஸ்டூடண்ட்ஸ் வாழ்க்கையில இதெல்லாம் சாதாரணம். பட் எனிவேய்ஸ். என்ன போட்டுக் கொடுக்காம, எனக்காக சப்போர்ட் பண்ணதுக்கு ரொம்ப ரொம்ப நன்றி” என்று பேப்பரை சுருட்டி, மைக்கில் பேசுவது போல் செய்துக் காட்டினாள்.

அதில் சிலர் கடுப்பாக, சிலர் சிரித்து விட, விஷ்வாவும், பிரியாவும் தான் ஒரு நாளிலேயே அவளை சமாளிக்க முடியாது தடுமாறினர். ஒரு வழியாய் காலேஜ் முடிந்து விட, பிரியா, விஷ்வா, மற்றும் பூஜா மூவரும் கிரவுண்ட்க்கு வந்தனர்.

“ஒகே நாளைக்கு பாக்கலாம். நான் ஹாஸ்டல் கிளம்புறேன்” என்றப்படி விஷ்வா கிளம்ப, “அப்புறம் பூஜா, நீ சென்னைத்தானா?” என்று கேட்டாள் பிரியா.

“இல்லையே” என்று அவள் சொல்ல, “அப்போ ஹாஸ்டலா?” என்று கேட்டாள் பிரியா. “ம் ஹாஸ்டல் தான். ஆனா இன் ஹாஸ்டல் இல்ல. அவுட் ஹாஸ்டல்” என்றாள்.

“என்ன சொல்ற?” என்று பிரியா கேட்க, “ச் காலேஜ் ஹாஸ்டல் இல்லப்பா, பக்கத்துல இருக்கிற வுமன்ஸ் ஹாஸ்டல்ல சேர்ந்திருக்கேன்” என்றாள்.

“ஓ. பேசாம எங்க வீட்டுக்கு வந்துடுறீயா? எங்க வீடு பக்கத்துலத்தான்” என்றாள். “ஐயோ வீடா? எனக்கு வீட்டுல இருந்து இருந்து போர் அடிச்சிருச்சி. எனக்கு இப்போதைக்கு வேண்டியது ப்ரீடம் மட்டும் தான். அதுக்கு இப்போ நான் தங்கியிருக்கிற ஹாஸ்டல் தான் கரெக்டா இருக்கும்” என்றாள் பூஜா.

“ஹேய் தனியா சமாளிச்சிடுவீயா?” என்று பிரியா கேட்க, “தனியா இருக்கிறதே ஒரு த்ரீல் தான். வேணும்னா நீயும் உன் வீட்ட காலி பண்ணிட்டு, என் கூட ஹாஸ்டல் வந்துடு. நம்ம ரெண்டு பேரும் சென்னைய நல்லா சுத்தலாம். ஈவன், நைட் சென்னைய எக்ஸ்ப்ளோர் பண்ணலாம்” என்றாள் பூஜா.

“என்னது? எம்மா தாயே ஆள விடு. நீ என்ன மொத்தமா எங்க வீட்டுல இருந்து அனுப்பாம விட மாட்ட. என்னமோ பண்ணு. சரி என் கூட வறீயா? இல்ல மேடம் தனியாத்தான் போறீங்களா?” என்றாள்.

“ஆ.ங் நாளையில இருந்து உன் கூடையே வரேன். இன்னிக்கு எனக்கு தெரிஞ்ச ஒருத்தர பார்க்க வேண்டியிருக்கு. சோ பாத்துட்டு வரேன். நீ கிளம்பு” என்று சொல்லி அவளை அனுப்பினாள்.

பிரியாவுமே அவளுடைய அண்ணனும் இங்குத்தானே வேலைப் பார்க்கிறான் என்று நினைத்து அங்கிருந்து சென்றாள். அவள் சென்றதும், இப்போது அந்த கல்லூரியை நன்கு சுற்றிப் பார்த்தாள். 

எதிலிருந்தோ தப்பித்து ஓடி வந்தது போல் ஒரு பிரம்மை. அதில், காலேக் பேக்கை எடுத்து ஸ்டைலாய் மாட்டியவள், நேரே கேண்டினுக்கு சென்றாள். அங்கு சென்று சூடான காபி ஒன்றை ஆர்டர் செய்து குடித்தாள்.

அதற்குள் அவளுக்கு வீட்டில் இருந்து அழைப்பு வந்தது. அதையே பார்த்தவள் பின் அட்டண்ட் செய்து காதில் வைத்தாள்.

அவளுடைய அம்மாவிடம் இருந்து அழைப்பு வந்திருக்க, அவரோ எடுத்த எடுப்பிலேயே, “மாப்பிள்ள கூட தங்க மாடேன்னு சொன்னீயாம். உன் மனசுல என்னத்தான் நினைச்சிட்டு இருக்க?” என்று திட்ட ஆரம்பித்தவர் தான். அதை எல்லாம் இவள் காதில் வாங்கினால் தானே.

“என்ன திட்டி முடிச்சிட்டா. போன்னா உன் வூட்டுக்காரர் கிட்ட கொடு. எனக்கு உண்ட்ட பேச சுத்தமா விருப்பம் இல்ல” என்றாள் பூஜா.

“பூஜா. நான் உன் அம்மாடி” என்று அவர் நினைவுப்படுத்த. “எப்போ உங்க வீட்டுல இருந்து என்ன அனுப்பி வச்சீங்களோ? அப்பவே உங்களுக்கும், எனக்கும் இருந்த ரிலேசன்சிப் முடிஞ்சுப் போச்சு. சோ இதுக்கு மேலையும், எனக்கு கால் பண்ணி டிஸ்டர்ப் பண்ணா, நான் உங்க மேல போலீஸ்ல கம்பிளைண்ட் கொடுக்க வேண்டி வரும்” என்றாள்.

“ஏண்டி, பெத்த அம்மாவையே நீ போலீஸ்ல புடிச்சு கொடுப்பீயா?” என்று கோவமாய் கேட்டார். “உன்ன மட்டும் இல்ல. உன் மொத்த குடும்பத்தையும் புடிச்சி கொடுப்பேன். பாக்குறீயா?” என்று அவள் கேட்க, “இங்கப்பாருடி. உனக்கு இப்ப கல்யாணம் முடிஞ்சிருச்சி. முன்ன மாதிரியே ரவுசு பண்ணிட்டு திரியாத. ஒழுங்கா போயி உன்ற புருஷன் கூட வாழப் பாரு” என்றார் அவர்.

“என்ற புருஷன்னே அத கேட்கல. உனக்கென்ன வந்திச்சு? உன் புருஷன் இருந்தா போன்ன கொடு. இல்லையா நான் கால்ல கட் பண்றேன். நான் இங்க ரொம்ப பிஸி. சோ சும்மா சும்மா கால் பண்ணி டிஸ்டர்ப் பண்ணக் கூடாது” என்றாள் பூஜா.

“என்னடி நேர்ல இல்லன்ற திமிரா? அங்க வந்தேன்னு வை. பேசுற வாய கிழிச்சு தச்சி புடுவேன்” என்றார் அவர்.

“எங்க? உன்னால முடிஞ்சா, உன் வீட்டுக்காரர் தயவு இல்லாம, சென்னை பஸ் ஏறி வா பாப்போம். முதல்ல அந்த கரிச்சாப்பாளையத்த தாண்டி, கோயம்புத்தூர் வந்து காட்டு பாப்போம்” என்று சண்டைக்கு சென்றாள் பூஜா.

“வேண்டாம்டி. கட்டிக் கொடுத்த புள்ளைய திட்டக் கூடாதுன்னு பாக்குறேன்” என்றார். “ஐய்யய்யோ! அப்பப்பா. உன்னால முடிஞ்சா திட்டித்தான் பாரேன். இப்போ நான் மேஜர். அது மட்டும் இல்லாம. திருமதி பூஜா அர்ஜூனும் கூட. சோ, என்ன திட்டுனன்னா, என் வீட்டுக்காரர் உன் வூட்டுக்காரர் சட்டைய புடிச்சிடுவாரு. சோ பி கேர்புள்” என்றாள்.

அந்தப் பக்கம் அவரோ, “அப்போ போயி மாப்பிள்ள கூட இருக்க வேண்டியதுத்தான. எதுக்கு தனியா ஹாஸ்டல்ல இருக்க” என்று திட்டினார்.

“அது என் விருப்பம். இதெல்லாம் நீங்க கேட்க கூடாது. கேட்க முடியாது. எப்போ எனக்கு கல்யாணம் முடிஞ்சிச்சோ, அந்த செகண்டே, அந்த உரிமைய நீங்க இழந்துட்டீங்க மிசஸ். மீசை” என்று கிண்டலாய் சொல்லியப்படி அவள் திரும்ப, அங்கே அவளின் சரிபாதி நின்றிருந்தான்.

(ஐயோ இந்தப் புள்ள, இன்னும் எத்தன சாக்கு அவனுக்கு கொடுக்கப் போகுதுன்னு தெரியலையே. சரி இந்த அர்ஜூன் பையன் வாழ்க்க, இப்படி ஒரு ரெளடிக்கிட்ட மாட்டிக்கிச்சு. எப்படி சமாளிக்கப் போறான்னோ. சரி அது என்னென்னு அடுத்தடுத்த எபிசோட்ல பாக்கலாம். அதுக்கு முன்னாடி இன்னிக்கு எபிசோட்ல உங்களுக்கு பிடிச்ச சீன் எதுன்னு மறக்காம கமெண்ட்ல சொல்லுங்க. பெஸ்ட் கமெண்ட்ஸ பேனர்ல போஸ்ட் பண்ணிருக்கேன். சோ உங்க கமெண்ட்ஸும் அதுல வரலாம். சோ அத செக் பண்ணிக்கோங்க.  அப்புறம் மறக்காம ரேட்டிங் கொடுத்திடுங்க)

தொடரும்…

Comments   15

*** வரம் – 13 - படைப்பை ரேட் செய்யுங்கள் ***