தேன் – 71

கவி சற்று நேரம் அலுவலகத்தில் பொறுத்துப் பார்த்தாள். ஆனால் மழையோ நிற்பது போல் தெரியவில்லை. அதனால். ட்ரைவரை அழைத்து காரை எடுக்க சொல்லியவள், “விழி ஆபிஸ்க்கு போங்க” என்றாள்.

“சரிங்கம்மா” என்றவரும் காரை ஓட்ட, அடித்து பெய்துக் கொண்டிருந்த மழையால். ஆங்காங்கே கூட்ட நெரிசல். அத்தனைப் பேருமே வீட்டுக்கு செல்ல முயற்சிப்பது புரிந்தது.

இதில் இடையில் வேறு ஏதோ போஸ்ட் மரம் விழுந்து விட்டதாக சொல்லி, ரூட்டை மாற்றிவிட்டனர்.

அதிலேயே தாமதமாகிக் கொண்டிருக்க, கவியோ விழியுடைய மொபைலுக்கு விடாது கால் செய்தாள். ஆனால் விழியுடைய மொபைலோ, அந்த மர பலகையில் அடித்து அடித்து ஓய்ந்துக் கொண்டிருந்தது.

“ச் இப்படி எல்லாம் எடுக்காம இருக்க மாட்டாளே” என்றவளுக்கு, இப்போது பயம் கூடிக்கொண்டே போனது. “இல்ல இல்ல. விழிக்கு எதுவும் இல்ல” என்று தனக்குத் தானே சொல்லியவள், தனக்கு தெரிந்த அத்தனை தெய்வங்களையும் வேண்டினாள்.

சுடரிடம் என்னவோ தைரியமாக பேசிவிட்டாள். இப்போது நொடிகள் கூட கூட அவளுக்குள் இருந்த தைரியம் எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாய் வடிந்துக் கொண்டிருந்தது.

கிட்ட தட்ட, கவி விழியுடைய அலுவலகம் வரும் போது அத்தனைப் பேரும் அலுவலகத்தில் இருந்து கிளம்பியிருந்தனர். மணியுமே எட்டைத் தாண்டியிருக்க, இப்போது கவியோ மழையைப் பொருட்படுத்தாது இறங்கி உள்ளே சென்றாள்.

அங்கிருந்த வாட்ச்மேன்னோ, “எல்லாரும் அப்பவே கிளம்பிட்டாங்க மேடம்” என்றார். “என்ன?” என்றவளுக்கு ஏனோ மனம் கேட்கவில்லை. “ஏங்க எதுக்கு ஆபிஸுக்குள்ள யாரும் இருக்காங்களான்னு ஒன்ஸ் பாருங்களேன்” என்றாள்.

“சரிம்மா. நில்லுங்க” என்றவரும் உள்ளே செல்ல, அங்கே இன்னும் சிலர் மட்டுமே நின்றிருந்தனர். அவர்களிடம் விழி குறித்து கேட்டதுக்கு, “அவங்க எங்களுக்கு முன்னாடியே கிளம்பிட்டாங்க” என்ற பதில் தான் வந்தது.

“நல்லா தெரியுமா?” என்று கவி கேட்க, “இல்ல மேடம். நாங்க அவங்க டிபார்ட்மெண்ட் கிடையாது. அதுவும் போக, அவங்களுக்கு ஆபிஸ் ஒர்க்க விட பீல்ட் ஒர்க் தான் அதிகமா இருக்கும். சோ” என்று ஒருவன் சொல்ல, “ஒகே தேங்க்ஸ்” என்றவள் மீண்டும் காருக்கு வந்தாள்.

இவள் பதட்டத்தைப் பார்த்த வாட்ச்மேன்னோ, “மழை பெய்யுறதால, எங்கையாச்சும் வெயிட் பண்ணிட்டு இருக்காங்களோ என்னவோ?” என்றார்.

அதுவும் சரி என்று தோன்ற, மீண்டும் விழிக்கு கால் செய்தாள். அப்போதும் ரிங் சென்றதே தவிர யாரும் எடுக்கவில்லை.

உடனே இவளும் அருகில் விழி பொதுவாய் செல்லும் ரெஸ்டாரண்ட், பார்க் என அத்தனைக்கும் சென்று பார்த்து விட்டாள். மழையும் நிற்காமல் பெய்துக் கொண்டிருக்க, கிட்ட தட்ட மணி பத்தை தாண்டியிருந்தது.

அதற்கு மேல் சுடரிடம் விஷயத்தை சொல்லாமல் இருக்க முடியாதே என்று அவனுக்கு கால் செய்தாள். அங்கே அவனோ பிளைட்க்கு கிளம்பி கொண்டிருந்ததால், அவன் மொபைலை தெரியாது பேக்கில் போட்டு விட்டான். அதனால் அது அடித்தது அவனுக்கு கேட்கவில்லை.

உடனே வேகமாய் அருளுக்கு கால் செய்தாள். அவனோ, யாரிடமோ விடாது பேசிக் கொண்டிருக்க, இவளுக்கு லைன் கிடைக்கவில்லை.

இவள் பதட்டத்தைப் பார்த்த ட்ரைவரோ, “கவலப்படாதீங்கம்மா. நம்ம விழி பாப்பாக்கு எதுவும் ஆகியிருக்காது. ஏதாச்சும் வேலையா எங்கையாச்சும் போயிருப்பாங்க” என்றார்.

ஏனெனில் முன்பு எப்படியோ? இப்போது விழி அடிக்கடி தாமதமாய் வீட்டுக்கு வருவதை அவரே பார்த்திருப்பதால் அப்படி கூறினார்.

ஆனாலும் மனம் கேட்கவில்லை. மீண்டும் அலுவலகத்துக்கு வந்தாள். வந்தவள், “இங்க இருக்கிற சிசிடிவி கேமராவ பாக்க முடியுமா?” என்று கேட்டாள்.

“முடியாது” என்று சொல்லத்தான் நினைத்தார். ஆனாலும், அவளுடைய பதட்டமும், கலக்கமும், அதுவும் இந்த நேரத்தில் ஒரு பெண்ணை காணும் என்றால் அதன் வீரியத்தை உணர்ந்தவர், உடனே காட்டினார்.

கிட்ட தட்ட்ட நான்கு மணி போல், விழியுடைய கார் அலுவலகத்தை விட்டு சென்றிருப்பது தெரிந்தது. அதன் பின்னும் பார்த்தாள். அதன் பின் அவள் கார் அலுவலகம் வந்திருக்கவில்லை.

உடனே அந்த காருடைய நம்பரையும், அந்த புட்டேஜ்ஜையும் எடுத்துக் கொண்டாள். முன்பு எப்படியோ? இப்போது அவளே சொந்தமாய் ஒரு பத்திரிக்கை நிறுவனம் வைத்து நடத்துவதால். அவளுக்கு தெரிந்த இன்ஸ்பெக்டருக்கு கால் செய்தாள்.

இதெல்லாமே சுடர் அவளுக்கு கற்றுக் கொடுத்ததுத்தான். அவனின் மூலம் தான், அந்த இன்ஸ்பெக்டரையும் அவளுக்கு தெரியும்.

இரவு நேர ரோந்தில் நின்றிருந்தவரும், அட்டண்ட் செய்து, “சொல்லும்மா” என்றார். “சார் எனக்கு ஒரு ஹெல்ப்” என்றவள் விவரத்தை சொல்ல, “என்ன? இப்பவே அந்த கார பைண்ட் பண்ண சொல்றேன். நீங்க பேனிக் ஆகாதீங்க. ஆமா சுடர் சாருக்கு தெரியாதா?” என்று கேட்டான்.

ஏனெனில் அவனுக்கு தெரிந்தால், இன்னேரம் நேரடியாய் ஐஜியிடமே பேசியிருப்பானே.

“இல்ல அவர் இப்போ இங்க இல்ல. எனக்கும் யார்ட்ட கேட்கிறதுன்னு தெரியல” என்றாள்.

“ஒகே ஒகே டென்சன் ஆகாதீங்க. நான் உடனே செக் பண்ண சொல்றேன்” என்றவனும் விழியுடைய கார் நம்பரை கொடுத்து சாலை கேமராக்களை செக் செய்ய கூறினான்.

இங்கே கவியும் நேரத்தை தாமதிக்காது மாறி, மாறி அருள், விழி, சுடருக்கு கால் செய்துக் கொண்டிருந்தாள்.

ஏர்போர்ட் வந்த வேந்தன், “இன்னும் கவிட்ட இருந்து போன் வரல” என்று நெற்றியை நீவினான். அப்போதே அவனும் தன்னுடைய மொபைலைத் தேட, “சிட் பேக்ல வச்சிட்டேன்னா” என்றவன் அருளிடம் இருந்த பேக்கை வாங்கி மொபைலை எடுத்தான். 

அதை அவன் ஓபன் செய்யும் போதே சுவிட்ச் ஆப் ஆகியிருக்க, “ச் சார்ஜ் வேற இல்லையா?” என்றவன் அப்போதே அருளைப் பார்த்தான்.

அவனோ யாரிடமோ போன் பேசிக் கொண்டே இருக்க, “யார்ட்ட பேசிட்டே இருக்க நீ” என்று கோவமாய் அவனிடம் இருந்து பிடுங்கினான்.

“ஆ..ங் இல்ல சார். அந்த மேம்பாலம் திறப்பு விழா பத்தித்தான்” என்று அருள் சொல்ல, வேந்தன் அவன் மொபைலில் இருந்து கவிக்கு கால் செய்ய நினைத்தான்.

ஆனால் அதற்குள் அவனுடைய பிளைட்டுக்கான அறிவிப்பு வந்திருக்க, “சரி. ஏதாச்சும்னா கூப்டு. கூடவே இருந்து எல்லாத்தையும் பார்த்துக்கோ” என்று சொல்லியவன் மொபைலையும் அவனிடம் கொடுத்து விட்டு, உள்ளே சென்றான்.

சில நேரத்தில் நாம் என்னத்தான் கவனமாக இருந்தாலும், சில இழப்புகளை நம்மால் தவிர்க்க இயலாது. அப்படித்தான் வேந்தனும், இம்முறை மீண்டும் ஒரு தோல்வியை சந்திக்க தயராகியிருந்தான்.

இங்கே கவிக்கு கால் செய்த இன்ஸ்பெக்டர். குறிப்பிட்ட ஒரு இடத்தை சொல்லி, “லாஸ்டா, அந்த செக் போஸ்ட் வரைக்கும் கார் ட்ராவல் ஆகியிருக்கு. பட் இப்போ நம்மளால அங்க போக முடியாது. சோ நீங்க வீட்டுக்கு போங்க. நான் என்னென்னு பார்த்துட்டு இன்பார்ம் பண்றேன்” என்றான்.

“ஆ..ங் இல்ல இல்ல. நான் அங்க போயி பாக்குறேன்” என்று கவி சொல்ல, கிட்ட தட்ட நள்ளிரவைத் தாண்டியிருந்தது. அங்கே பிளைட்டில் அமர்ந்திருந்த வேந்தனின் மனமோ, ஒரு வித அசெளகரியத்தை உணர்ந்தது.

இதே போல் தான் கவியுடைய விஷயத்தில். அன்றொரு நாள் இப்படி இருந்தது. அப்போது அதை பெரிதாய் எடுத்துக் கொள்ளாமல் விட்டு விட்டான். அவன் எல்லாம் தெரிந்து வருவதற்குள் எல்லாம் முடிந்திருந்தது.

ஆனால் இப்போதோ அவன் உடனே கிளம்பிவிட்டான் தான். ஆனால் சூழ்நிலை அவனை தாமதப்படுத்தியிருந்தது. ஏனெனில் வானிலை மாற்றம் காரணமாக, பிளைட் ஒரு மணி நேரம் தாமதமாகத்தான் கிளம்பியது.

இங்கே கவி செல்லும் வழியில் எல்லாம் மரங்கள் ஆங்காங்கே உடைந்துக் கிடக்க, அதை எல்லாம் தாண்டித்தான் சென்றனர். அங்கு சென்றால், ஏதோ ஒரு ஆக்ஸிடெண்ட் என்ற செய்தி. அதிலும், ஒரு பெண்ணை மருத்துவமனை அழைத்து சென்றிருப்பதாக சொல்ல, கவிக்கோ உயிரே அவள் கையில் இல்லை.

நொடிக்கும் குறைவாய், “குட்டிமாவ பத்திரமா பாத்துக்கோ” என்று சொல்லி சென்ற வேந்தனுடைய வார்த்தைகள் மின்னி மறைந்தது. அதில் அவளுடைய இதயம் துடிப்பை இழக்க, அந்த கார் விழியுடையது இல்லைத்தான்.

ஆனாலும் அந்த நேரத்தில் மருத்துவமனைக்கு, இன்ஸ்பெக்டருடன் சென்றாள் கவி. அங்கு சென்று அது விழி இல்லை என்று தெரிந்தப் பின் தான் அவளுக்கு மூச்சே வந்தது.

கிட்ட தட்ட அதிகாலைப் பொழுதை தொட்டிருக்க, மழையும் மொத்தமாய் விட்டிருந்தது. வேந்தனுடைய பிளைட்டும் தரையிறங்கியது.

இதற்கு மேல் விழியை எங்கு சென்று தேட என்று தெரியவில்லை. அவளுடைய மொபைலுமே சார்ஜ் இல்லாமல் ஆப் ஆகியிருக்க, அப்படியே காரில் சாய்ந்து நின்று விட்டாள்.

“மேடம் அபிசியல்லா ஒரு கம்பிளைண்ட் பைல் பண்ணிட்டா, நம்ம தேடுறதுக்கு இன்னும் வசதியா இருக்கும்” என்றார் இன்ஸ்பெக்டர்.

“ம்” என்று அவள் தலையாட்ட, அதற்குள் வீட்டில் இருந்து ட்ரைவருக்கு அழைப்பு வந்திருந்தது.

“அப்படியா?” என்றவரும் வேகமாய் காரில் இருந்து இறங்கி வந்து, “கவிம்மா. விழி பாப்பா வீட்டுக்கு வந்துட்டாங்களாம்” என்றார்.

“என்ன?” என்று கவி கேட்க, “ஆமம்மா, இப்பத்தான் வீட்டுல இருந்து, கால் வந்திச்சு” என்றார்.

அதில், அவளோ வேகமாய் இன்ஸ்பெக்டரிடம், “நான் வீட்டுக்கு போயி பாக்குறேன் சார். ரொம்ப தேங்க்ஸ்” என்றப்படி காருக்கு சென்றாள்.

“ஒகே மேடம். வீட்டுக்கு போயிட்டு எனக்கு கால் பண்ணுங்க” என்றவருக்கும் சற்று நிம்மதியே. அங்கே வேந்தன் டாக்ஸியில் தான் வீட்டுக்கு கிளம்பினான். மொபைல் ஆப் ஆகியிருக்க, அவனால் யாருக்கும் தொடர்பு செய்ய முடியவில்லை.

“ச் இந்த அருள் வர வர ஒரு வேலையையும் உறுப்படியா பாக்குறது இல்ல” என்று திட்டிக் கொண்டுத்தான் டாக்ஸியில் வந்தமர்ந்தான்.

மழை பெய்து முடித்திருந்தாலும், சாலை மொத்தமும் மரங்களும், மின் கம்பங்களும் விழுந்து கிடக்க, அதை எல்லாம் பார்த்தவனுக்கு இன்னும் இன்னும் கோவம் வந்தது.

“ச் நாளைக்கே, இதோட காண்ட்ரக்டர்ஸ் எல்லாரையும் பார்த்து பேசனும்” என்று தனக்குள் குறித்துக் கொண்டான்.

இங்கே கிட்ட தட்ட. நான்கு மணியளவில் தான் கவி வீடு வந்து சேர்ந்தாள். வந்தவள் வேகமாய், “விழி” என்று அழைத்தப்படி உள்ளே செல்ல, அங்கே விழியோ, கவியின் குரலில் இவ்வுலகம் வந்தவள், “கவி எங்கப் போன நீ?” என்று அவள் கேட்கும் முன் இவள் கேட்டு கவியை இறுக்கமாய் கட்டிக் கொண்டாள். அவளை பார்த்தப் பின் தான் கவிக்கு மூச்சே வந்தது. 

“விழி உனக்கு ஒன்னும் இல்லத்தான” என்று கவி பதட்டமாய் கேட்க, விழியின் இதயமோ ஒரு நொடி நடந்த விஷயத்தை எல்லாம் நினைத்து துடிக்க மறுத்தது.

(என்ன நடந்திருக்கும்? என்ன நடந்திருந்தாலும், இதில் இருந்து விழியை கவி காப்பாளா? இல்லை கவியைப் போலவே விழியும் காயப்பட்டுப் போவாளா? இப்படி எல்லா கேள்விக்குமான பதில அடுத்தடுத்த எபிசோட்ல பாக்கலாம். சரி அதுக்கு முன்னாடி இன்னிக்கு எபிசோட்ல உங்களுக்கு பிடிச்ச சீன் எதுன்னு மறக்காம கமெண்ட்ல சொல்லுங்க. அப்படியே எப்பவும் போல லைக் பண்ணிட்டு உங்க பிரண்ட்ஸ் கூட ஷேர் பண்ணுங்க)

தித்திக்குமா?..

Comments   4

*** தேன் – 71 - படைப்பை ரேட் செய்யுங்கள் ***