தேன் – 65

அந்த ராத்திரி நேரத்தில் கவியை தோட்டத்துக்கு அழைத்து வந்தவனோ, அவள் கண்ணை மூடியிருந்தான். அதில் அவளோ, “என்னப் பண்றீங்க?” என்று கேட்க, அவனோ, “இந்த சுடர் என்னிக்குமே கொடுத்த வாக்க மீற மாட்டான். வேணும்னா நீயே பாரு” என்றப்படி மெதுவாய் அவன் கரத்தை விலக்கினான்.

அதில் அவளும் சற்று கண்ணைக் கசக்கியப்படி நிமிர்ந்துப் பார்க்க, இரவு தென்றலின் உதவியால், தன்னுடைய தளிர் கிளைகளை அசைத்து, அங்குமிங்குமாய், இன்னும் முழுதாய் விரியாத தன் மொட்டுகளால் வாசத்தை பரப்பிக் கொண்டிருந்தது அந்த மல்லிப்பூ.

ஒரு நொடி அவளுக்கு புரியவே இல்லை. அங்கிருந்த மல்லிப் பூச்செடி கூட்டத்தை பார்த்தவள், “என்னது?” என்றாள். “நான் தான் சொன்னேன் தான. வாடாம பாத்துக்கிறேன்னு. பாரு எவ்வளவு அழகா இருக்குன்னு” என்றான் வேந்தன்.

அப்போதே அவன் சொல்ல வருவது புரிய, மீண்டும் வேகமாய் அந்த செடிகளைப் பார்த்தாள்.

அவனோ இப்போது அங்கிருந்த செடிகளை நோக்கி சென்று, அதன் முன் குனிந்து “இதெல்லாமே உன்னோட தலையில வச்சிருந்த பூவோட விதைங்கத்தான். இன்னும் மூனு மாசத்துல மறுபடியும், உன்கிட்டையே திரும்ப வந்துடும். தினமும் நான் அத வாடாம பாத்துப்பேன்” என்றான்.

அவனின் வார்த்தையிலும், அவள் கண் முன்னே இருந்த அந்த இளந்தளிர் செடிகளும், அவளை மூச்சடைக்க வைத்தது. அவன் அன்று ஏதோ விளையாடினான் என்று அவள் நினைத்திருக்க, அவனோ, அவள் தலையில் இருந்த பூக்களை கூட வாட விட மாட்டேன் என்று ஒரு தோட்டத்தை உருவாக்கி வைத்திருந்தான்.

அவனுடைய அந்த அளவில்லாத நேசத்தின் முன்னால், கவியால் என்ன சொல்லிவிட முடியும்? இல்ல அதற்கு என்ன பதில் தந்திட முடியும்?

இப்போது மெல்ல புதிதாய் பூக்க காத்திருந்த அந்த மல்லி மொட்டை வருடினான். ஆனால் இங்கே கவியின் மனதில் இருந்த காதல் மொட்டவிழ்ந்தது.

அவள் கண்கள் கலங்க முயற்சிக்க, அவனோ இப்போது நிமிர்ந்து, “ஹேய் இன்னும் உனக்கு நம்பிக்க இல்லையா? இதெல்லாமே அந்த பூ த்தான். வேணும்னா நான்” என்றப்படி எழுந்தான்.

அவன் சொல்லி முடிக்கும் முன்னே அவனை ஓடி வந்து கட்டிக் கொண்டாள் கவி. சட்டென்று அவள் அணைத்திருக்க, ஒரு நொடி தடுமாறி, அடுத்த நொடி, அவனும் அவளை இறுக்கமாய் அணைத்துக் கொண்டான்.

சில நிமிடங்களில், அவனுடைய சட்டை நனைந்து, அவனுடைய நெஞ்சில் ஈரம் பதிய, அப்போதே அவள் அழுதுக் கொண்டிருப்பதே அவனுக்கு புரிந்தது.

அதில் வேகமாய் அவளை விலக்கி, “ஹேய் என்னாச்சு? இப்போ எதுக்கு நீ அழுகுற” என்றப்படி அவள் கண்ணீரை துடைக்க கரத்தை கொண்டு சென்றான்.

அவன் கரத்தை பிடித்து அதை செய்ய விடாது தடுத்தவள், “ப்ளீஸ் சுடர். நான் கொஞ்சம் அழுகனும். முதலும், கடைசியுமா. இன்னியோட நான் அழுது முடிச்சிடனும்னு நினைக்கிறேன்” என்றவள் மீண்டும் அவனை கட்டிக் கொண்டு, கண்ணீர் வடித்தாள்.

அவனுக்கோ, அவள் கண்ணீருக்கான காரணம் இன்னும் கூட புரியவில்லை. அவளை அப்படி என்ன காயப்படுத்தியிருக்கும்? ஏன் இத்தனை தவிக்கிறாள்? அவனுக்கு யோசிக்க யோசிக்க, அதற்கு காரணமானவர்களை எல்லாம் கொல்லும் வேகம் தான் அவனிடம்.

ஒரு கட்டத்துக்கு மேல், அவள் கண்ணீரைப் பார்க்க இயலாது, “ச் கவி. இப்போ எதுக்கு நீ இவ்ளோ எமோசனலாகுற” என்றான். இப்போது அவன் சட்டையிலேயே கண்ணீரைத் துடைத்தவள், “நீங்கத்தான் என்ன அழ வைக்குறீங்க” என்று அவனைப் பார்த்தாள்.

“நானா?” என்று அவன் கேட்க, “ஆமா நீங்கத்தான். நீங்க ஏன் எனக்காக இப்படி எல்லாம் பண்றீங்க?” என்று கோவமாய் கேட்டாள்.

“ம் என் பொண்டாட்டிக்காக நான் என்ன வேணும்னாலும் பண்ணுவேன். அதுல உனக்கென்ன பிரச்சன” என்றான். “அப்போ உங்க பொண்டாட்டிக்காகத்தான் செய்வீங்களா சுடர்? இந்த கவிக்காக செய்ய மாட்டீங்களா? ஏன் சுடர் அப்போ இந்த கவி உங்களுக்கு வேண்டாமா?” என்றாள்.

அவளின் வார்த்தையில், “லூசா நீ? கவி இல்லாம என் பொண்டாட்டி எங்க இருந்து வந்தா?” என்று கேட்டான் சுடர் வேந்தன்.

“என்ன பொண்டாட்டி ஆக்குறப்ப, உங்களுக்கு என் பேர் கூட தெரியாதுத்தான சுடர்?” என்று மூக்கை உறிஞ்சியப்படி கேட்டாள்.

இப்போதும் அவளுக்கு, அந்த நிலையிலும் அவன் கேட்ட கேள்வி நன்றாகவே நினைவில் இருக்கிறது. “ஆமா உன் பேரு என்ன?” என்றானே.

அப்போது அவன் இருந்த கோவத்தில் அப்படி கேட்டான். அதற்கு முக்கிய காரணம் கவித்தான்.

அவளுக்கு ஏதாவது உதவி தேவைப்படுகிறதா? என்று போலீஸை கூட அவளுக்கு ஆதரவாய் அனுப்பி வைத்திருக்க, அவளோ, அவள் கழுத்தில் முதலாய் தாலி கட்டிய அந்த ஒருவனுக்காக, சுடர் வேந்தன் என்ற பெயர் கூட தனக்கு தெரியாது என்று கூறியிருந்தாள்.

அந்த கோவத்தில் தான். அவள் கழுத்தில் தாலி கட்டிய அன்று, அவள் பெயரை அவளிடம் கேட்டான். இப்போது வந்து அவள் அது குறித்து கேட்டால், அவனும் என்னத்தான் சொல்வான்?

“ஹே அது நான்” என்றவன் தடுமாற, அவளோ, “நான் ஏன் சுடர் உங்கள விட்டுப் போனேன்? நீங்க என்னை ஏன் போக விட்டீங்க?” என்று கேட்டாள்.

இந்த கேள்வியை பல முறை அவள் கேட்டு விட்டாள். வழக்கமாய் அழுதுக் கொண்டு கேட்பாள். இப்போது அத்தனைக் கோவமாய் அவனைப் பார்த்துக் கேட்டாள்.

பதில் சொல்லத்தான் அவனால் முடியவில்லை. அவள் உடைந்து சிதறுவதை அவனால் தாங்கிக் கொள்ளவும் முடியவில்லை.

அவள் கரத்தை பற்றி, “இதுக்கப்புறம் எப்பவும் உன்ன நான் என்ன விட்டு போ விட மாட்டேன். நீ என் கூடத்தான் இருப்ப” என்றான்.

அதில் இப்போது அவன் கரத்தில் இருந்து தன் கரத்தை உறுவிக் கொண்டவள், “அப்போ என்ன போ விட்டுட்டீங்கத்தான சுடர்?” என்று கேட்டாள்.

அவளின் கேள்வியில் இப்போது அவனுக்கே அவனின் மீது அத்தனை கோவம் வந்தது. அவள் கடந்த கால கல்யாண வாழ்க்கை நிச்சயம் சந்தோஷமாக செல்லவில்லை. அதில் அவள் நிறைய கஷ்டப்பட்டுள்ளாள். காயப்பட்டுள்ளாள் என்பது வரை வேந்தனுக்கும் தெரியும் தான்.

அவளை அப்படி ஒரு இக்கட்டில் தள்ளிய தன் மீதே அவனுக்கு அத்தனைக் கோவம் தான்.

“நீ இப்படி உனக்குள்ள இவ்ளோ கஷ்டப்படுவன்னு தெரிஞ்சிருந்தா, சத்தியமா அன்னிக்கு யார பத்தியும், எத பத்தியும் யோசிக்காம, உன்ன கூட்டிட்டு வந்திருப்பேன்” என்றான்.

“நீங்க கூப்டீங்க. ஆனா நான் தான வரல. அப்போ தப்பு என் மேலத்தான சுடர்?” என்று அவன் சட்டையைப் பற்றி கேட்டாள். ஏதோ சிறுமியின் கெஞ்சல் போல் இருந்தது.

“இல்லடா. உன் மேல எந்த தப்பும் இல்ல” என்று அவன் சொல்ல, “ம் ஹூம் நான் தான் தப்பு. நான் உங்கள விட்டு போயிருக்க கூடாது. எனக்காக, பார்த்து பார்த்து செஞ்ச உங்க வார்த்தைய மீறியிருக்க கூடாது” என்றாள் தேன்கவி.

நடந்திருக்க கூடாதுத்தான். அதான் அத்தனையும் நடந்து முடிந்துவிட்டதே. அப்படி இருக்க, இன்னமும் அதைப் பிடித்துக் கொண்டு நின்றால், என்னத்தான் செய்ய முடியும்.

அதில் சற்று தெளிந்த வேந்தன், அவள் கன்னம் பற்றி, “இங்கப்பாருடா. கடந்த காலத்துல நடந்தது முடிஞ்சுப் போன ஒன்னு. அத நினைச்சி, நம்மளோட எதிர்காலத்த வீணாக்க கூடாது. நீ வேணும்னா பாரு. நம்மளோட பியூசர். கண்டிப்பா ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கும்” என்றான்.

அதில் அவள் கண்ணீர் துளி அவன் கரம் தொட, “ச் என்னடா” என்றப்படி மீண்டும் அவள் கண்ணீரைத் துடைத்தான். அவளோ, “என்ன எடுத்துக்கோங்க சுடர்” என்றாள்.

அவளின் வார்த்தையில், ஒரு கணம், தன் காதில் விழுந்த வார்த்தையை நம்பாது அவளை அதிர்ந்துப் பார்த்தான்.

அவளோ இப்போது அவள் கன்னம் மேல் பதிந்திருந்த, அவன் கரத்தின் மீது தன் கரம் வைத்துப் பிடித்தவள், “ப்ளீஸ் சுடர். என்ன உங்களுக்கு மட்டும் சொந்தமானவளா எடுத்துக்கோங்க” என்றாள்.

அதை சொல்லும் போதே அவள் கண்களில் இருந்து கண்ணீர் சிந்த, “ச் கவி. என்னிக்குமே நீ எனக்குத்தான் சொந்தம்” என்றான்.

“ம்ஹூம்! இல்ல” என்றப்படி அவள் இரண்டடி பின்னால் நகர, அவளின் செயலில், “கவி” என்றான் சுடர்.

“இல்ல. நான் உங்களுக்கு மட்டுமே சொந்தமா இருந்திருக்கனும். ஆனா அப்படி இல்லாம போனது என் விதி” என்றவள், இப்போது பின்னால் அடி எடுத்து வைத்துக் கொண்டே இருக்க, “ஹேய் அப்படில்லாம் இல்லடா” என்றப்படி அவன் அவளை நோக்கி அடி எடுத்து வைத்தான்.

“வேண்டாம். நீங்க கிட்ட வராதீங்க” என்று அவள் சொல்ல, அவனோ இப்போது அவள் கரத்தைப் பிடித்து நிறுத்தியிருந்தான்.

“ச் என்ன தொடாதீங்க” என்று அவள் சொல்ல, அவளை வேகமாய் இறுக்கமாய் அணைத்துக் கொண்டான். “நான் தான் வேண்டாம்னு சொல்றேன் தான. விலகுங்க” என்றவளின் வார்த்தை மட்டுமே அப்படி இருக்க, அவளின் கரம் அவன் கழுத்தை சுற்றி வளைத்துக் கொண்டது.

அவளின் அகராதியில் வேண்டாம் என்றால் வேண்டும் என்ற அர்த்தம் என்பது அவனுக்கு தெரியாதா என்ன?

அவளை தன்னோடு இறுக்கமாய் அணைத்து, அவள் தலையை தன் நெஞ்சோடு சேர்த்து அழுத்திக் கொண்டான். அவனின் இதயம் அத்தனைப் பலமாய் துடிக்க, இப்போது கவியோ, அவன் சட்டையை விலக்கி அவன் நெஞ்சில் அழுத்தி முத்தமிட்டாள்.

அதில் கண்ணை மூடி அதை உள் வாங்கிக் கொண்டவன், பின் மெல்ல அவளைத் தேற்ற முயன்றான். அவளோ, எக்கி அவன் தாடி, கன்னம் என்று தொடர்ச்சியாய் முத்தம் கொடுக்க, அவள் சமநிலையில் இல்லை என்பது புரிந்தது.

ஆனாலும் அவன் அவளை தடுக்கவில்லை. அவள் மனதின் புழுக்கம் அப்படியாவது தீர்ந்து போகட்டும் என்று நினைத்தானோ என்னவோ? அவளின் செய்கைக்கு ஒத்துழைப்பு கொடுத்தப்படி நின்றான். 

ஒரு கட்டத்தில் அவளே நிமிர்ந்துப் பார்த்து, “உங்களுக்கு என்ன தப்பா நெனைக்கவே தோணலையா சுடர்?” என்று கேட்டாள். அவள் கண்ணில் அப்பட்டமான வலி தெரிந்தது.

அவள் கேள்விக்கான அர்த்தம் அவனுக்கு புரியாமல் எல்லாம் இல்லை. ஆனால் அவள் மனதில் அவளை இப்படி தரக்குறைவாய் நினைக்க வைத்த, அந்த விதியின் மீது அத்தனைக் கோவம் வந்தது.

“என் கவிக்கு தப்பு பண்ண தெரியாது” என்றான். அதில் இப்போது அவளுக்கு மீண்டும் கண்ணீர் முட்டிக் கொண்டு வர, அதற்குள் அவள் முகம் நோக்கி குனிந்து, அவள் கண்ணீரைத் துடைத்து அவள் கன்னத்தில் அழுத்தி முத்தமிட்டான்.

அவன் முத்தம் ஏனோ, தன் கறை மொத்தத்தையும் கரைப்பது போல் தோன்ற, விலகியவனை விலக விடாது அவன் சட்டையைப் பிடித்து தன் பக்கம் இழுத்தாள்.

அதில் அவன் ஏதோ சொல்ல இதழ் பிரிக்க, அவன் இதழில் அழுத்தமாய் மூழ்கியவள், இப்போது அவனுக்குள் சொல்லிய செய்தியில், இப்போது வேந்தன் தான் தடுமாறினான்.

அவள் ஒரு முடிவில் இருந்தாள். ஆனால் அவனுக்குத்தான் அதை எப்படி கையாள என்று தெரியவில்லை.

(என்னமோ நல்லது நடந்தா சரி. அடுத்து என்ன? அங்க நம்ம ஆர்யன் என்னப் பண்ண காத்திருக்கான்னு அடுத்தடுத்த எபிசோட்ல பாக்கலாம். சரி அதுக்கு முன்னாடி இன்னிக்கு எபிசோட்ல உங்களுக்கு பிடிச்ச சீன் எதுன்னு மறக்காம கமெண்ட்ல சொல்லுங்க. அப்படியே எப்பவும் போல லைக் பண்ணிட்டு உங்க பிரண்ட்ஸ் கூட ஷேர் பண்ணுங்க)

தித்திக்குமா?..

Comments   1

*** தேன் – 65 - படைப்பை ரேட் செய்யுங்கள் ***