தேன் – 64

வேந்தன் கவியின் மடியில் படுத்திருக்க, அவளின் விரல்களோ அவன் தலை முடியைக் கோதிக் கொடுத்தது, இப்போது அவளுடைய கரத்தைப் பிடித்தவனோ, “கவி ஒகேத்தான நீ?” என்றான்.

ஏனெனில் அவனுக்குமே அவளிடம் நீண்ட நாட்களாய் பேசாதது போல் இருக்க கேட்டான்.

“விழிய பத்தி சொல்லுவோம்மா?” என்று அவள் யோசிக்க, அவனோ, “இன்னும் ஒரு வாரத்துல, சென்னை போற மாதிரி இருக்கும்னு நினைக்கிறேன்” என்றான்.

அதில் இப்போது கவியோ, “இப்பத்தான போயிட்டு வந்தீங்க? அதுக்குள்ள என்ன?” என்றவள் இப்போது விழியைப் பற்றி மறந்து விட்டு, வேந்தனைப் பார்த்தாள்.

“தலைவரு வர சொல்லியிருக்காரு” என்று அவன் சொல்ல, “ச் உங்க தலைவருக்கு வேற வேலையே இல்லையா?” என்று சிறு எரிச்சலுடன் கேட்டாள்.

ஏனோ அவளுக்கு அவரைப் பிடிக்கவே இல்லை. அவளும் பத்திரிக்கைத் துறையில் தான் இருக்கிறாள். அவரைப் பற்றி அவளும் பல விஷயங்களை, கேள்விப்பட்டுக் கொண்டிருக்கிறாள்.

அப்படி இருக்க, வேந்தன் அவருடன் பழகுவது அவளுக்கு சுத்தமாய் பிடிக்கவில்லை. ஆனாலும் அவனே அந்த கட்சியில் தான் இருக்கிறான். அப்படி இருக்க, அதை அவளால் சொல்ல முடியாதே.

இப்போது அவள் மடியில் நன்றாக படுத்துக் கொண்டு, அவளை அன்னார்ந்துப் பார்த்தவன், “பாரேன் என் பொண்டாட்டி வர வர ரொம்ப பொசஸிவ் ஆயிட்டாங்க” என்றான்.

“ச் அதெல்லாம் ஒன்னும் இல்ல. அங்க அவருக்கு வேற யாருமே இல்லையா? இங்க இருந்து நீங்கத்தான் போகனுமா?” என்று கேட்டாள்.

“என்னாலத்தான் அந்த வேலைய முடிக்க முடியும்னு அவர் நினைக்கிறாரு. அதுவும் போக, நாளைக்கே உன் ஹஸ்பண்ட் மினிஸ்டர் ஆனா, உனக்கு சந்தோஷம்த்தான” என்றான் வேந்தன்.

“ஆமா அப்படியே அவரு கொடுத்திடப் போறாரு” என்று தனக்குள் முனுமுனுத்தாள். அதில் சிரித்தவனோ, “அவரு கொடுக்கிறாரு இல்ல. ஆனா, என் வேலைய நான் சரியா பாக்கனும் இல்லையா?” என்று கேட்டான்.

“இந்த தொகுதிக்குத்தான நீங்க எம் எல் ஏ. இங்கையே அத்தன பிரச்சன இருக்கு. அப்படி இருக்கிறப்ப, அதெல்லாம் விட்டுட்டு, நீங்க எதுக்கு அங்க போகனும்?” என்று கேட்டாள்.

“அவருக்கு என் மேலத்தான் நம்பிக்க இருக்கு” என்று அவன் சொல்ல, இப்போது அவளோ அவனை முறைத்தாள்.

“ஹேய் எனக்கே இன்னிக்கு ஒரு நாள் தான் கொஞ்சம் டைம் கிடைச்சிருக்கு. ஏதாச்சும் நம்மள பத்தி பேசலாம்த்தான. இப்போ எதுக்கு யாரோ ஒருத்தர பத்தி பேசிட்டு இருக்கனும்” என்றவன் இப்போது அவள் விரலைப் பிடித்து விளையாடினான்.

அதில், அவளோ, “இப்போ நம்மள பத்தி என்ன பேசனும்? அமைதியா தூங்குங்க” என்றப்படி தன் கரத்தை உறுவ முயற்சித்தாள்.

அதற்குள் அவனோ, வேகமாய் அவள் கரத்தைப் பற்றி, “ஹேய் என்ன நீ இப்படி சொல்லிட்ட? இன்னும் நம்மள பத்தி நம்ம எதுவும் பேசவே இல்ல தெரியுமா? அதுலையும் நம்மள பத்தி பேசுறதுக்கு எவ்ளோ விஷயம் இருக்கு” என்றான்.

“அப்படியா? அப்படி என்ன விஷயம் இருக்கு?” என்று அவள் கேட்க, “நம்ம பொண்ணுக்கு நான்த்தான பேர் வைப்பேன்?” என்று கேட்டான்.

“என்ன?” என்று அவள் ஒரு நொடி புரியாது குழம்பி அவள் கேட்க, “இல்ல! என் பொண்ணுக்கு நான் தான் பேர் வைப்பேன்” என்றான்.

அதில் அவளுக்கோ என்ன சொல்ல என்று தெரியவில்லை. இன்னும் அவனுடனான வாழ்க்கையையே அவள் எதிர்பார்த்திருக்கவில்லை. அப்படி இருக்க, குழந்தை எல்லாம் சொல்லவும் வேண்டுமா என்ன? அவள் அமைதிக் காத்தாள்.

அதற்குள் அவனோ அவள் உள்ளங்கையோடு தன் கரம் கோர்த்து, “கவி! எனக்கு உன்ன மாதிரியே ஒரு பாப்பாவ பெத்து குடேன். நான் என் பாப்பாவ மட்டும் பாத்துக்கிறேன். அதுக்கப்புறம் நீ எவ்வளவு டைம் வேணும்னாலும் எடுத்துக்கோ” என்றான்.

அவனின் பேச்சில், இப்போது அவளோ அவனை முறைக்க, அவனோ, “பிராமிஸாத்தான் கவி. அதுக்கப்புறம் உன்ன நான் டிஸ்டர்ப் பண்ணவே மாட்டேன்” என்றான்.

“உங்க பிராமிஸ தண்ணியிலத்தான் எழுதி வைக்கனும்” என்றாள். “ஏன்? ஏன்? ஏன்?” என்று அவன் வேகமாய் கேட்க, “ஆமா, அன்னிக்கு பூ வாடாம பாத்துக்கிறேன்னு சொன்னீங்கத்தான. அத பண்ணீங்களா?” என்று கேட்டாள்.

“ஆ..ங் அது வந்து” என்று அவன் இழுக்க, “என்ன? நீங்கத்தான சொன்னீங்க. என்னமோ உங்கள ஹக் பண்ணி படுத்துக்கிட்டா, அந்த பூவ வாட விடாம பார்த்துக்கிறேன்னு” என்றாள்.

“உன்ன வாட விடாம பார்த்துக்கிட்டேன் தான” என்று அப்பாவியாய் அவன் சொல்ல, “வேண்டாம் சுடர்” என்று முறைத்தாள்.

“பின்ன இல்லையா? வேனும்னா இப்ப என்ன ஹக் பண்ணிக்கோயேன். நான் எப்படி வாடாம பாத்துக்கிறேன்னு உனக்கே தெரியும்” என்றப்படி எழுந்து அவளை அணைத்துக் கொள்ள முயற்சித்தான்.

“இந்த வேலை எல்லாம் வேண்டாம். அமைதியா தூங்குறதா இருந்தா தூங்குங்க. இல்லையா நான் எந்திரிச்சுப் போறேன்” என்றப்படி அவள் எழ முயற்சித்தாள்.

“ஹேய்! ஹேய்! இப்போ என்ன? அந்த பூ வாடாம வச்சிருந்தா, நீ என்ன ஹக் பண்ணிப்பீயா?” என்று கேட்டான்.

அதில், இப்போது அவளோ, “என்ன பார்த்தா உங்களுக்கு லூசு மாதிரி தெரியுதா? மூனு மாசத்துக்கு முன்னாடி ஏமாந்த மாதிரி மறுபடியும் ஏமாறுவேன்னு நினைக்கிறீங்களா?” என்று கேட்டாள்.

“நான் போயி உன்ன ஏமாத்துவேன்னா?” என்று அவன் கேட்க, “கண்டிப்பா, இந்த மாதிரி விஷயத்துல எல்லாம் நீங்க நல்லாவே ஏமாத்துவீங்க. சோ இந்த டைம் நான் ஏமாற மாட்டேன்” என்றாள்.

“ஹேய் உண்மையாவே அந்த பூவ நான் வாடாமத்தான் வெச்சிருக்கேன்” என்றான். அவன் அத்தனை தூரம் சொல்லவும், இப்போது அவளோ, அவனை பார்த்தாள்.

“இல்ல இல்ல கவி. அவர பத்தி உனக்குத்தான் தெரியும்த்தான. மறுபடியும் உன்ன சீட் பண்ணத்தான் ட்ரைப் பண்ணுவாரு” என்று அவளின் மூளை எச்சரிக்க, அவனோ, “சீரியஸ்லி கவி. வேணும்னா என் கூட வா. நான் காமிக்கிறேன்” என்றான்.

“எங்க?” என்று அவள் கேட்க, “ம் சொல்றேன் பட் ஒரு கண்டிஷன்” என்றான். “அதான! எனக்கு உங்கள பத்தி தெரியும். இப்படித்தான் ஏதாச்சும் சொல்லுவீங்க. அப்புறம் என்ன சீட் பண்ணுவீங்க. இந்த விளையாட்டுக்கே நான் வரல. போங்க” என்றாள்.

“ஹேய் நான் இன்னும் என் கண்டிசன் எனென்னு சொல்லவே இல்லையே. அதுவும் போக, நான் எவ்வளவு பெரிய விஷயம் செய்யப் போறேன். அப்படி இருக்கிறப்ப, அதுக்கு எனக்கு சின்னதா ஒரு காம்பிளிமெண்ட் வேண்டாமா?” என்று கேட்டான்.

“சரி என்ன சொல்லுங்க” என்று அவள் கேட்க, “பெருசாலாம் ஒன்னும் இல்ல! சின்னதா ஒரு கிஸ் கொடுத்தா போதும்” என்றான்.

அவனின் பேச்சில், இப்போது அவனை முறைத்தவளோ, “நீங்க ஆணியே புடுங்க வேண்டாம்” என்றப்படி அங்கிருந்து செல்ல, “ஹேய்” என்று அவள் கையைப் பிடித்து நிறுத்தினான்.

அவனின் செயலில், “ச் விடுங்க சுடர். எனக்கு டயர்டா இருக்கு. நான் போயி தூங்கப் போறேன்” என்றாள்.

“சேர்ந்தே தூங்கலாம். பட் அதுக்கு முன்னாடி என் கூட வா” என்று அவள் கையைப் பிடித்தான். “எங்க?” என்று அவள் கேட்க, “வந்தா தெரியப் போகுது” என்றவன், அங்கே பின் பக்க படி வழியே அவளை, வீட்டின் பின் பக்க தோட்டத்துக்கு அழைத்து வந்தான்.

“இங்க எதுக்கு கூப்டு வந்தீங்க” என்று அவள் கேட்க, “சின்னதா ஒரு ரொமாண்டிக் கேம் விளையாடுவோம்மா?” என்று கேட்டு கண்ணடித்தான்.

அவனின் பேச்சில், “ச் இதுக்குத்தான் நான் எங்கேயும் வரலன்னு சொன்னேன்” என்றவள் அங்கிருந்து செல்ல முயற்சிக்க, அதற்குள் அவளை பின்னிருந்து வந்து இறுக்கமாய் கட்டிக் கொண்டான் வேந்தன்.

அவனின் செயலில், அந்த குளிர்ந்த காற்றிலும் உடல் வெம்மையை உணர்ந்தது. “ச் சுடர்” என்றவளுக்கு வார்த்தை வர மறுக்க, “கவி” என்றவனின் தாடி நிறைந்த கன்னம், அவள் கன்னத்தை உரசி மேலும் சிலிர்க்க வைத்தது.

அவனின் செயலில், “ச் என்னப் பண்றீங்க நீங்க” என்றவள் விலக முயல, “இப்படி எல்லாத்துக்கும் நோ சொன்னா, நான் பாவம் இல்லையா?” என்றான்.

“தெரிஞ்சுத்தான நான் வேனும்னு நின்னீங்க. அப்புறம் என்ன?” என்று கேட்டு அவள் வயிற்றில் இருந்த அவன் கரத்தை விலக்கினாள்.

அதில் இப்போது மீண்டும் அவளைக் கட்டிக் கொண்டவனோ, “இப்பவும் நீ வேணும்னுத்தான் சொல்றேன்” என்றப்படி மீண்டும் அவள் கழுத்து வளைவில் தாடியைப் புதைத்தான்.

“இதுத்தான் நீங்க டைம் கொடுக்கிற லட்சணமா?” என்று அவள் கேட்க, “ஹேய் ஒரு மாசமாச்சு தெரியுமா?” என்றான். “எனக்காக எத்தன வருஷம் வேனும்னாலும் வெயிட் பண்றேன்னு சொல்லிருக்கீங்க” என்று நினைவுப்படுத்தினாள்.

“அதுக்குன்னு ஒரு முத்தத்துக்கு கூட நோ சொன்னா, நான் பாவம் இல்லையா?” என்றான்.

“சும்மா பொய் சொல்லாதீங்க. இப்படி சொல்லி சொல்லியே தினமும் வாங்கிட்டுத்தான் இருக்கீங்க” என்றவள் சொல்லும் போதே அவள் கன்னம் சிவந்தது.

அதில் இன்னுமே அவளை இறுக்கமாய் அணைத்துக் கொண்டவன், “அப்படிப் பார்த்தாலும், இன்னிக்கு கோட்டா இன்னும் முடியலத்தான” என்றான்.

“ச் சுடர். விளையாடாம வீட்டுக்குள்ள வாங்க. வெளிய ரொம்ப பனி காத்தடிக்குது” என்றாள்.

“பட் எனக்கு அப்படி தெரியலையே. செம்ம ஹாட்டாத்தான் இருக்கு” என்றவனின் கரம் அவள் சேலையைத் தாண்டி, அவள் வெற்று வயிற்றில் பதிந்தது.

“ச்” என்றவள் அவன் கரத்தை கிள்ளி வைக்க, அவனோ, “தொட்டு பாக்க கூட நோ சொல்ற தெரியுமா” என்றவனின் குரலில் மோகம் வழிந்தோடியது.

“ஐயோ சுடர். இப்போ இதுக்குத்தான் இங்க கூட்டிட்டு வந்தீங்களா?” என்று அவள் கேட்க, “எதுக்கு கூட்டிட்டு வந்தா என்ன? கிளைமேட் பாரு. ஜில்லுன்னு, ஹாட்டான மூட் செட் பண்ணிக் கொடுக்குது. அத நம்மளும் கொஞ்சமா யூஸ் பண்ணிக்கனும்த்தான” என்றவனின் இதழ் அவள் கன்னத்தை தாண்டி பயணிக்க முயற்சித்தது.

“நீங்க ஒன்னும் யூஸ் பண்ணிக்க வேண்டாம்” என்றவள், அவனை விலக்கிவிட்டு விலகி நடக்க, இப்போது அவள் சேலை முந்தானையை பிடித்திழுத்தான் வேந்தன்.

அதில் அவள் ஒரு சுற்று சுற்றி, தடுமாறி அவனின் மீதே வந்து விழ, அவளை தாங்கிப் பிடித்தவன், “என்னப் பத்தி தெரிஞ்சும் என்ன விட்டு விலகிப் போறது எவ்வளவு பெரிய தப்பு தெரியுமா?” என்றான்.

அதில் அவன் நெஞ்சில் கை வைத்து தள்ளியப்படி எழுந்து நின்றவள், “இங்கப்பாருங்க” என்று ஏதோ சொல்ல வந்தாள். அதற்குள் ஒரு விரலால் அவள் உதட்டை மூடி, “உனக்கு எதையும் வாயால சொன்னாத்தான பிடிக்கும்” என்றப்படி, அவன் அவளை நெருங்கினான்.

அதில் பட்டென்று அவன் விரலைத் தட்டிவிட்டு, “ச் சுடர். கிட்ட வந்தீங்க அவ்ளோத்தான்” என்றாள். அதில் அவனோ, “என்னப் பண்ணிடுவ” என்றப்படி இப்போது பின்னிருந்து அவள் கண்ணை மூடினான்.

“ஐயோ சுடர் என்னப் பண்றீங்க” என்று அவள் கேட்டு முடிக்கும் முன்னே, அவளை அங்கிருந்த ஒரு இடத்துக்கு கூட்டிச்சென்று, நிறுத்தி, பின் மெதுவாய் “இந்த சுடர் கொடுத்த வாக்க எப்பவுமே காப்பாத்துவான். வேணும்னா நீயே பாரு” என்றப்படி, மெல்ல கரத்தை விலக்கினான்.

(அப்படி அந்த பயபுள்ள என்ன பண்ணி வச்சிருக்கும்னு தெரியலையே. சரி அது என்னென்னு அடுத்த எபிசோட்ல பாக்கலாம். சரி அதுக்கு முன்னாடி இன்னிக்கு எபிசோட்ல உங்களுக்கு பிடிச்ச சீன் எதுன்னு மறக்காம கமெண்ட்ல சொல்லுங்க. அப்படியே எப்பவும் போல லைக் பண்ணிட்டு உங்க பிரண்ட்ஸ் கூட ஷேர் பண்ணுங்க)

தித்திக்குமா?..

Comments   4

*** தேன் – 64 - படைப்பை ரேட் செய்யுங்கள் ***