கவி வேந்தனிடம் விழியையும், தங்கள் உடன் அழைத்து வர வேண்டும் என்று உறுதியாய் சொல்லிவிட்டு முன்னே செல்ல, அவனும் தன் தங்கையை வற்புறுத்தி அழைத்து வந்தான். மூன்று பேருமாய், தங்களுடைய காரில், அருகில் இருந்த சிவன் கோவிலுக்கு வந்திருந்தனர்.
கவிக்கோ, வேந்தனுக்கு எதுவும் ஆகிவிடக் கூடாது என்பது மட்டுமே முக்கிய பிராத்தனையாய் இருந்தது.
“ரெண்டு பேரும் இறங்குங்க. நான் போயி காரை பார்க் பண்ணிட்டு வரேன்” என்றான். அதில் விழி காரை விட்டு முதலில் இறங்க, கவியோ வேந்தனை விட்டு நகர மாட்டேன் என்பது போல் அவனையே பார்த்திருந்தாள்.
அதில் அவனோ, “என்ன?” என்று கேட்க, “என் கூடவே வாங்க” என்றாள். ட்ரைவரையும் அழைத்து வந்திருக்கவில்லை. தனிப்பட்ட காரணத்துக்காக வந்திருப்பதால், அவனுடைய ஆட்களையும் உடன் அழைக்கவில்லை. இப்படி அவர்கள் வீட்டு காரை வாசலில் நிறுத்தி விட்டு சென்றால், அதுவே நாளை செய்தியாகும்.
“பார்க் பண்ணிட்டு வந்திடுவேன்” என்று அவள் கையை சிறு அழுத்தம் கொடுத்து பிடித்து கூறினான். ஏனோ அவனுடைய தொடுகையில், அவள் மனதில் இருந்த சஞ்சலம் சிறிதாய் விலக, “ம்” என்றப்படி காரை விட்டு இறங்கினாள்.
மற்ற நேரமாக இருந்தால், இதைப் பார்த்து விழி கேலி செய்திருப்பாள். ஆனால் தோழியின் முகத்தில் தெரிந்த பதட்டமும், கவலையும் அதை செய்ய விடவில்லை.
“இவளுக்கு என்னாச்சு? படம் பார்க்கிறப்ப கூட நல்லாத்தான இருந்தா?” என்று விழியும் யோசிக்க, கவியோ வேந்தனுடைய கார் செல்லும் பாதையையே பார்த்தப்படி நின்றிருந்தாள்.
அதில் தன் சிந்தனையை கலைத்து, “இப்போ எதுக்கு, என்னையும் சேர்த்து கோவிலுக்கு இழுத்துட்டு வந்திருக்க. நான் பாட்டுக்கு வீட்டுல உட்கார்ந்து, அந்த சீரிஸ கம்ப்ளீட் பண்ணியிருப்பேன்” என்றாள் விழி.
அவள் பேச்சில், விழியை முறைத்தவளோ, “ச் கோவிலுக்கு வந்துட்டு இப்படி பேசக் கூடாது விழி” என்று சிறு கண்டிப்புடன் கூறினாள்.
“அதுக்குத்தான் வரலன்னு சொன்னேன்” என்றவள் அதையே சொல்ல, “விழி” என்று அவள் மீண்டும் தன் தோழியை முறைக்க, “ஸ்ப்பா. அரசியல்வாதி பொண்டாட்டின்னு, இப்படி முறைச்சித்தான் நிரூபிக்கனும்ன்னு அவசியம் இல்ல” என்று கேலியாய் கூறினாள்.
ஏனோ அதில் கவியுடைய முகம் மீண்டும் கவலையானது. அதைக் கவனித்தவளோ, “சரி சரி அண்ணன் வர்ற வரைக்குமே இப்படித்தான் நிக்கனுமா? இல்ல கோவிலுக்குள்ள போலாம்மா?” என்று கேட்டாள்.
“ஆ.ங் இல்ல. மொத்தமாவே உள்ளப் போலாம்” என்று கவி வேகமாய் சொல்ல, “அப்போ அண்ணா கூட கோவிலுக்கு போகனும்னுத்தான், நான் கூப்டப்ப கூட வரல” என்று சீண்டலாய் கேட்டாள்.
“ஆ.ங் அப்படில்லாம் இல்ல. கோவிலுக்கு போனும்னு தோணுச்சு அவ்வளவுத்தான். மொத்தமா போலாம்னுத்தான் சொன்னேன்” என்று சமாளிக்க முயன்றாள்.
“மொத்தமான்னா எப்படி? இங்க இருக்கிற எல்லாரும்மா?” என்று விடாது விழி கேலி செய்ய, “ச் சரி வா நம்ம உள்ள போலாம்” என்றாள் கவி.
“ஆ.ங் அதெல்லாம் ஒன்னும் வேண்டாம். உங்க வீட்டுக்காரர் வந்ததும், அவரோடையே போலாம்” என்று விழி அப்போதும் வம்பிழுத்தாள்.
இப்படி இவர்கள் பேசியப்படியே நிற்க, “அர்ச்சன தட்டு வாங்கிக்கலையா?” என்ற வேந்தனின் குரலில் தான் இருவரும் திரும்பினர். ஏனோ வேந்தனைப் பார்த்தப் பின் தான் கவியின் முகத்தில் நிம்மதி பரவியது.
அதைக் கவனித்தவனோ, “என்ன? இங்கேயே நிக்கலாம்னு எதுவும் பிளான்னா?” என்று பேச்சை மாற்ற, “ம் நீங்க வரலன்னா, உங்க பொண்டாட்டி, அதத்தான் பண்ணியிருப்பாங்க” என்று சீண்டலாய் கூறினாள் விழி.
“ச்” என்று கவி விழியின் கையைப் பிடிக்க, அதில் சிரித்தவள், “சரி அர்ச்சன தட்டு வாங்கிட்டு வரலாம்” என்று இழுத்து சென்றாள்.
கவியும் சென்று அர்ச்சனை தட்டை வாங்கி விட்டு, விழியைப் பார்க்க, “என் மொபைல்ல கூட நான் எடுத்துட்டு வரல. அண்ணாகிட்ட காசு வாங்கி கொடு” என்றாள் விழி.
அதற்கு முன்பே, “ரெண்டு பேரும் உள்ள போங்க. நான் கொடுத்துக்கிறேன்” என்றான். அதில் விழி முன்னே நடக்க, கவியோ அவனுடனே நின்று விட்டாள்.
அதில் மெலிதாய் சிரித்தவனோ, பாக்கெட்டில் இருந்த ஐநூறு ரூபாய் நோட்டை எடுத்து நீட்டினான். அதில் மிச்ச சில்லறையை அவர்கள் எடுக்கப் போக, அதை தடுத்தவன், “மீதத்துக்கு இந்த பூ கொடுங்க” என்று அங்கிருந்த மல்லிகைச் சரத்தை காட்டினான். கவியின் கவனமோ முன்னே சென்றுக் கொண்டிருந்த விழியிடம் இருக்க, அவனோ, “ரெண்டா கட் பண்ணி கொடுத்துடுங்க” என்றான்.
அவரும் அதை நீட்ட, அதை வாங்கிக் கொண்டவன், அதில் இருந்த ஒரு சரத்தை எடுத்து, கவியின் தலையில் வைத்து விட்டான். அவனின் கரம், அவள் சிகையை உரசும் போதே சட்டென்று திரும்பியவள், அவனைப் பார்த்தாள்.
அவனோ அவள் பார்வையை பொருட்படுத்தாது, தலையில் வைத்து விட்டு, இன்னொரு சரத்தை அவள் கையில் கொடுத்தான்.
“குட்டிமாக்கு வச்சி விடு” என்றான். ஏனோ உரிமையாய் அவன்தான் அவளின் கணவன் என்பதை சொல்லியிருக்க, அவள் மனதில் மெல்லிய சலனம். மற்ற நேரம் எப்படியோ, இப்போது அந்த பூவை மறுப்பதைப் பற்றி அவள் யோசிக்க கூட இல்லை.
அவள் அவனையே பார்த்திருக்க, “என்ன? இன்னும் வேற ஏதாச்சும் வேணுமா?” என்றான் வேந்தன்.
“ம்ஹூம்” என்று தலையாட்டிவள், விழியை நோக்கி ஓடி விட, அவளைப் பார்த்து புன்னகைத்தான் வேந்தான்.
“உங்க பொஞ்சாதியா தம்பி” என்று அந்த பூக்கடைக்காரக்கா கேட்க, “ஆமா” என்றான். “உங்களுக்கு ஏத்த ஜோடித்தான் தம்பி. அம்புட்டு அம்சமா அழகா இருக்காங்க” என்றார் அவர்.
அதில் சட்டைப் பையில் இருந்த இன்னொரு ஐநூறு ரூபாய் நோட்டை எடுத்தவன், அவர்களிடம் கொடுத்தான்.
“என்ன பூ தம்பி வேணும்?” என்று அவர் கேட்க, “நீங்க வச்சுக்கோங்க” என்றான். “அச்சோ அதெல்லாம் வேணாம் தம்பி” என்று அவர் சொல்ல, “பரவாயில்ல வச்சுக்கோங்க” என்று சிரித்தப்படி சொல்லிவிட்டு கவியை தேடி சென்றான் வேந்தன்.
“ஏன்க்கா, இது பாக்க நம்ம எம் எல் ஏ தம்பி மாதிரி தெரியல” என்று அருகில் இருந்த கடைக்காரர்கள் எல்லாம் பேச, பூக்கடைக்காரரோ, அப்போதே அவனை நன்றாக பார்க்க முயற்சித்தார்.
எப்போதுமே வெள்ளை வேஷ்டி சட்டையில், கருப்பு கண்ணாடியோடே பார்த்துத்தான் அந்த ஏரியா மக்களுக்கு பழக்கம். இப்போது ஜீன்ஸ், டிஷர்டில். ஏதோ, ஐடி கம்பெனியில் வேலை செய்பவன் போல் தான் இருந்தான்.
விழியிடம் வந்து கவி பூவை நீட்ட, அவளோ, “என் அண்ணா எல்லாம் உனக்கு வச்சித்தான விட்டாரு? அப்போ நீயும் எனக்கு வச்சித்தான விடனும்?” என்று சீண்டலாய் சொல்ல, ஏனோ இப்போது கவியின் முகத்தில் மென்னகை படர்ந்தது.
“பாருடா, அண்ணா செஞ்சத சொன்னதுக்கே இவ்வளவு வெட்கமா?” என்று விழி மேலும் சீண்ட, “ச் திரும்பு வச்சி விடுறேன். சும்மா எதையாச்சும் பேசிட்டு” என்றவள், தோழியின் தலையில் வைத்து விட்டாள்.
அதற்குள்ளாக வேந்தனும், அவர்கள் அருகில் வந்து விட, மூவருமாய் கோவிலுக்குள் நுழைந்தனர். அவர்கள் நுழையும் நேரம் கோவில் மணியோசை செவியில் அழுத்தமாய் விழ, அன்னிட்சையாய் கவி வேந்தனைப் பார்த்தாள்.
அதில் மெல்லமாய் அவள் பக்கம் திரும்பி, “என்ன?” என்று அவன் புருவம் உயர்த்த, அவனின் கரத்தை தன் இடக்கரத்தால் பற்றினாள். அதற்குள்ளாக, விழி, கவியின் மறுக்கரத்தைப் பிடித்துக் கொள்ள, வேந்தனோ மெலிதாய் சிரித்தான்.
விழிக்கோ கவியைப் பற்றிய கவலை. கவிக்கோ வேந்தனைப் பற்றிய கவலை. வேந்தனுக்கோ, அவர்கள் இருவரின் சந்தோஷம் பற்றிய நினைவு.
இப்படி மூன்று பேரும், சன்னதி முன்னே சென்று நிற்க, பூசாரி வேந்தனை அடையாளம் கண்டுக் கொள்ள, தீபாரதனை தட்டை காட்டும் போது அவருடைய கரங்கள் நடுங்கியது.
அதில், சிறு முறைப்புடன் அவரைப் பார்த்து, “நான் வந்தது தெரிய கூடாது” என்று பிரசாதத்தை வாங்கியப்படி கூறினான். அதில் அவரும் வேகமாய் தலையாட்டிக் கொள்ள, கவியோ குங்குமத்தை கூட வாங்காது, இன்னமுமே கண் மூடி வேண்டிக் கொண்டுத்தான் நின்றாள்.
“கடவுளே, எனக்குன்னு நீ எதுவும் பண்ண வேண்டாம். ஆனா என்னோட துரதிஷ்டம், என் சுடருக்கும், விழிக்கும் பாதிப்ப கொடுக்க கூடாது. உனக்கு ஏதாச்சும் கோவம் இருந்தா, அத என் மேல காட்டு. அவங்க ரெண்டு பேரும் எப்பவுமே சந்தோசமா நிம்மதியா இருக்கனும். என் சுடருக்கு, எப்பவும் எதுவும் ஆக கூடாது. அவரு நூறு வயசுக்கு நல்லா இருக்கனும். அத மீறி அவருக்கு ஏதாச்சும் ஆச்சின்னா, அதுக்கப்புறம் நான் உயிரோடவே இருக்க மாட்டேன். அவருக்கு, அவர் மனச புரிஞ்சிக்கிடுற மாதிரி ஒரு நல்லப் பொண்ணு கிடைக்கனும். அவருக்கு நான் வேண்டாம். நீத்தான் இத அவருக்கும், அவர் தங்கச்சிக்கும் புரிய வைக்கனும். அவர் குடும்பம், பிள்ளைங்கன்னு சந்தோஷமா இருக்கனும். தூரத்துல இருந்தாச்சும் அத நான் பார்க்கனும். அப்புறம் விழி. அவளுக்கு என்னை ரொம்ப பிடிக்கும். என்னோட நல்லதுக்காக யோசிச்சுத்தான். அவ வாழ்க்கைய பத்தி அவ யோசிக்கவே இல்ல. அவளுக்கும் அவ மனசுக்கு பிடிச்ச மாதிரி, ஒரு நல்ல வாழ்க்க கிடைக்கனும். உனக்கு அவங்களுக்கு கெட்டத கொடுக்கனும்னு தோணுச்சின்னா, அது எதுவா இருந்தாலும், எனக்கே கொடு. ஏன்னா அவங்க பண்ண ஒரே தப்பு, என்னை அவங்க கூட வச்சிக்கிட்டது மட்டும் தான். அவங்க சீக்கிரமே அவங்க குடும்பத்தோட சேர்ந்து சந்தோஷமா வாழனும்” என்று மனமுருகி வேண்டிக் கொண்டாள்.
சட்டென்று அவள் செவியில், “நீ கடவுள் கிட்ட என்ன வேண்டிக்கிட்டாலும், உன் வாழ்க்கையில என்ன நடக்கனும்னு நான் தான் முடிவு பண்ணுவேன். அதனால, வீணா, அந்த கடவுள் நேரத்தையும் வேஸ்டாக்காத” என்ற வேந்தனின் குரல் அத்தனை நெருக்கத்தில் கேட்டது. அதில் பட்டென்று அவள் விழியைத் திறக்க, அவனோ கையில் இருந்த குங்குமத்தை அவள் நெற்றியில் வைத்து விட்டான்.
அதில் ஒரு நொடி அவள் இத்தனை நேரம் வேண்டிய வேண்டுதல் எல்லாம் எங்கோ மறைந்திருக்க, அவனைப் பார்த்தாள். அவனோ, அவள் முன்னே தன் கையை நீட்டி, “எனக்கும் கூட வச்சி விடலாம்” என்றான்.
மறு நொடியே எடுத்து அவன் நெற்றியில் சிறு கீற்றாய் பூசி விட்டாள். “குட்டிமா அப்பவே போயிட்டா. அப்புறம் காணும்னு தேடுவா” என்றான் வேந்தன்.
அப்போதே தன் மறு பக்கம் நின்றிருந்த விழியைத் தேடினாள் கவி. அவனோ, “வா” என்று அழைத்துச் செல்ல, அவனுடன் சேர்ந்தே அந்த பிரகாரத்தை சுற்றினாள்.
அதே நேரம் இங்கே விழியையே இரண்டு கண்கள் ஆர்வமாய் பார்த்துக் கொண்டிருந்தது. அதற்குள் இருந்தது, என்ன மாதிரியான உணர்வு என்பதை அந்த கண்களுக்கு சொந்தக்காரன் மட்டுமே அறிவான்.
(யார் அவன்? கவியின் போராட்டம் தீருமா? வேந்தன் அவளை தன் ஆளுமைக்குள் கொண்டு வருவானா? இப்படி நிறையா கேள்வி இருக்கு. அது எல்லாத்துக்கும் அடுத்தடுத்த எபிசோட்ல பதில்ல கண்டுப்பிடிக்கலாம். அதுக்கு முன்னாடி இன்னிக்கு எபிசோட்ல உங்களுக்கு பிடிச்ச சீன் எதுன்னு மறக்காம கமெண்ட்ல சொல்லுங்க. அப்படியே எப்பவும் போல லைக் பண்ணிட்டு உங்க பிரண்ட்ஸ் கூட ஷேர் பண்ணுங்க)
தித்திக்குமா?..
0 Comments
No comments yet.