தேன் – 22

சுடரிடம் அழுது புலம்பியவள், நிம்மதியாய் அன்றிரவை தூங்கி விட்டாள். ஆனால் அவளின் நினைவில், சுடர் தான் விழித்தே இருந்தான்.
“இப்போ நீ பண்ணத அன்னிக்கே பண்ணிருக்கனுமோ, இவ இந்தளவுக்கு கஷ்டப்பட்டிருக்க மாட்டாளோ?” என்று எப்போதுமே அவனுக்குள் கேட்கும் கேள்வியை இன்று கண்ணாடியைப் பார்த்து சத்தமாய் கேட்டான்.

“நடந்து முடிஞ்சத பத்தி பேசுறதால யாருக்கும் எந்த யூஸும் கிடையாது வேந்தன். இதுக்கப்புறம் அவள நீ எப்படி அதுல இருந்து வெளிய கொண்டு வரப் போறதுன்றதுத்தான் முக்கியம்” என்று அவனின் மனசாட்சி சொல்ல, அவனும் அது குறித்து யோசிக்க ஆரம்பித்தான்.

எப்படியும் இவன் இறங்கிப் போனால். அவள் மலை ஏறுவாள் என்று தெரியும். அதனால் இம்முறை அவளை விட்டு சற்று விலகி நின்றே தன் காரியத்தை சாதித்துக் கொள்ள முடிவெடுத்திருந்தான் வேந்தன்.

இரவெல்லாம் ஏதேதோ யோசித்து, சிறிது நேரம் உறங்கி விட்டு, அடுத்த நாள் காலை நேரத்துக்கு எழுந்து விழியிடம் பேசிவிட்டு அவன் கட்சி அலுவலகத்துக்கும் சென்று விட்டான். ஆனால், கவியோ இன்னுமே ஆழ்ந்த உறக்கத்தில் தான் இருந்தாள்.

கவி தூங்குவதை விழி பார்த்திருந்தாள். அவள் இப்படி நிம்மதியாய் தூங்குவதைப் பார்க்கவே அவளுக்கு நிம்மதியாய் இருந்தது. கவி சத்தமாய் சிரித்து, இதுவரை விழி பார்த்ததே கிடையாது. அந்தளவுக்கு அழுத்தம். பெயருக்கு புன்னகைப்பாள். அதுவும் விழிக்காக மட்டுமே.

இப்படி அவளையே அவள் பார்த்திருக்க, கவியும் உறக்கத்தில் இருந்து மெதுவாய் கண்ணைத் திறந்தாள். ஒரு நொடி அவளுக்கு எங்கு இருக்கிறோம்? என்றே புரியாது கண்ணைக் கசக்கியப்படி சுற்றிப் பார்த்தாள்.

“குட் மார்னிங் கவி” என்றவள், அவள் கழுத்தைக் கட்டிக் கொள்ள, விழியைப் பார்த்ததும் மீண்டும் ஒரு நொடி புரியாது பார்த்தாள். ஏனெனில் கடைசியாய் அவள் கண்ணில் இருந்த காட்சிகள் வேறாயிற்றே. ஒரு நொடி கனவோ என்று யோசித்தவள், அதன் பின், “ம்ஹூம் அவர் தான் தூக்கிட்டு வந்திருப்பாரு” என்று நிதர்சனம் பதில் சொல்லியது.

மீண்டும் ஒரு வித சங்கடமான மனநிலை அவளுக்கு, “என்ன கவி பண்ணி வச்சிருக்க? இப்படி எல்லாம் நீ நடந்துக்கிட்டா, அதுக்கப்புறம் அவருக்கு எப்படி ஒரு நல்ல வாழ்க்க அமையும்” என்று தன்னைத் தானே நொந்துக் கொண்டவள் நெற்றியை நீவினாள்.

“ஹேய் என்னாச்சு? தல எதுவும் வலிக்கிதா? காபி கொண்டு வர சொல்லவா?” என்றாள் விழி.

“ஆ..ங் அதெல்லாம் இல்ல. டைம் என்னாச்சி? நீ சாப்டீயா?” என்றப்படி மணியைப் பார்த்தாள். அதுவோ காலை எட்டு மணி என்று சொல்ல, “ச் இவ்வளவு நேரம் ஆயிடுச்சா?” என்றவள் அரக்கப் பறக்க எழுந்தாள்.

அதைப் பார்த்த விழியோ, “ஹேய், இப்போ எதுக்கு இவ்ளோ அவசரம். இப்போ என்ன நம்ம ரெண்டு பேரும் கலெக்டர் ஆபிஸுக்கா போகப் போறோம்” என்றாள்.

அதில் கவியோ, “எனக்குத்தான் இப்படி வீட்டுக்குள்ளையே முடங்கி இருக்கனும்னு தலையெழுத்து. நீயாச்சும், நாலு இடத்துக்கு போயிட்டு வர வேண்டியதுதான?”  என்றாள்.

ஏனெனில் இந்த இரு வாரமும், விழியும் கவியுடன் தானே இருக்கிறாள். விழிக்கெல்லாம் ஒரு இடத்தில் இருப்பது சுத்தமாய் பிடிக்காது. எப்போது பார்த்தாலும் வெளியில் தான் சுற்றிக் கொண்டிருப்பாள். அதிலும் சென்ற இடத்திற்கு கூட திரும்பி திரும்பி போக மாட்டாள்.

“ச், நான் இங்க வந்ததே உன் கூடவும், அண்ணா கூடவும் இருக்கிறதுக்காகத்தான். வேணும்னா நீயும் என் கூட வா. நம்ம எங்கையாச்சும் போகலாம்” என்றாள் விழி.

“ஆ..ங் இல்ல நான் எங்கேயும் வரல” என்றவளுக்கு வெளியுலகத்தை சந்திக்கவே அத்தனைப் பயமாய் இருந்தது. அவள் என்ன தவறு செய்தாள்? என்று அவளுக்கே தெரியவில்லை. ஆனால் சிறு வயதில் இருந்தே இந்த சமூகம் அவளை வஞ்சித்துக் கொண்டேத்தான் இருக்கிறது.

அதிலும் கணவன் இறந்த மூன்று நாளில் இன்னொரு திருமணம் செய்துக் கொண்டவளை, இன்னும் இந்த ஊர் என்னவெல்லாம் பேசுமோ என்று ஒரு பயம். அதையும் விட, இவளுடன், விழியோ, இல்லை வேந்தனோ சென்றால், அதனால் அவர்கள் இருவருக்கும் அவமானம் என்று நினைத்தாள். அதனால் தான் அவள் அந்த வீட்டைத் தாண்ட நினைக்கவில்லை. செல்வதாக இருந்தால் மொத்தமாய் சென்று விட வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே.

அதை எல்லாம் விழியிடம் கவி சொல்லவில்லைத்தான். ஆனாலும் விழிக்கு அவள் வெளியில் செல்ல தயங்குவது புரிந்தது. அதனால், அதற்கு மேல் அவளை வற்புறுத்தவில்லை. அன்றைய நாளும் வேந்தன் வெகு தாமதமாய் தான் வந்தான். அப்படியே அடுத்த ஒரு வாரமும் சென்றிருந்தது.

வழக்கமாய் வேந்தன் வரும் போது அந்த வீடே அத்தனை அமைதியாய் இருக்கும். ஆனால் அன்று அவன் வரும் போது, கவியும் விழியும் ஹாலில் அமர்ந்து, கேரம் விளையாடிக் கொண்டிருந்தனர்.

அதில் விழியோட சத்தம், வாசலைத் தாண்டி கேட்டது. “நோ நோ கவி. இந்த டைம் நான் தான் வின் பண்ணுவேன்” என்றாள்.

கவியோ, “அதான் எனக்கு தெரியுமே” என்று சாதாரணமாய் சொல்லிவிட்டு, வேண்டுமென்றே அவளுக்காய் விட்டுக் கொடுத்துக் கொண்டிருந்தாள்.

“ஹே நான் தான் ஜெயிப்பேன். அதுக்குன்னு நீ இப்படி விளையாடாமலே இருந்தா என்ன அர்த்தம்? ஒழுங்கா போகஸ் பண்ணி விளையாடு” என்றாள்.

பின்னே கவி தான் காலேஜ் சேம்பியன். ஆனால் அவளோ விழியுடன் ஒரு முறை கூட ஜெயித்தது கிடையாது. அதனாலையே, விழி போட்டியில் கலந்துக் கொள்ளவே மாட்டாள். ஏனெனில் அவள் கலந்துக் கொண்டால், கவி நிச்சயம் அவளுக்காக விட்டுக் கொடுத்து விடுவாள்.

“அதெல்லாம் போகஸ் தான் பண்றேன்” என்று கவி சொல்ல, “க்கும் என்ன போகஸ் பண்ற நீ? ஈஸியா போட வேண்டிய காயின் எல்லாத்தையும் விட்டுட்டு, எந்த காயின்ன டார்கட் பண்ற?” என்று கோவமாய் விழி கேட்டாள்.

“ச் இங்கப்பாரு. எனக்கு தூக்கம் வருது. நான் ஒழுங்காத்தான் விளையாடுறேன்” என்றாள் கவி. அதற்கு மேல் சொன்னால், எழுந்து விடுவாள் என்பதால் விழி வேறு எதுவும் சொல்லவில்லை. ஏனெனில் அவளும் இங்கு வந்த நாளில் இருந்து பார்க்கிறாள். வேந்தன் வரும் போது இவள் முழித்திருப்பதே இல்லை. அதனால் தான் இன்று வேந்தன் வரும் வரை அவளை உறங்க அனுமதிக்கப் போவதில்லை என்று பிடித்து வைத்திருந்தாள்.

இதை கேட்டப்படி தான் வேந்தன் உள்ளே வந்தான். “என்ன குட்டிமா? இன்னும் நீங்க தூங்கலையா ?” என்றான்.

அவனின் குரலில் கவியோ பதட்டமாய் எழ முயற்சிக்க, அதற்குள்ளே அவள் கையைப் பிடித்து அமர வைத்தவளோ, “அண்ணா நீயும் வாண்ணா. வந்து கவிக்கு ஹெல்ப் பண்ணு. ஒரு டைம் கூட அவ வின் பண்ணல” என்றாள்.

“ச் என்ன விழி” என்று கவி ஏதோ பேசப் போக, வேந்தனோ கவியை ஒரு நொடிப் பார்த்தான்.

பின், “என் தங்கச்சிய ஜெயிக்க ஒருத்தரால முடியுமா?” என்று கேட்டப்படி விழிக்கும், கவிக்கும் இடையில் இருந்த இருக்கையில் அமர்ந்தான்.

“அதத்தான் நானும் சொல்றேன்” என்ற கவியின் வார்த்தையில் நிச்சயம் ஒரு வலி தெரிந்தது. ஆனாலும் வேந்தன் கண்டுக் கொள்ளவில்லை.

“ச் நீ வேற ஏன்னா? அவ உண்மையாவே சூப்பரா விளையாடுவா. இப்போ என்னென்னு தெரியல சொதப்பிட்டே இருக்கா” என்றாள்.

“அதெல்லாம் ஒன்னும் இல்ல. சரி எனக்கு தூக்கம் வருது. நான் கிளம்புறேன்” என்றவள் அன்றைய நாளுக்கு பின் வேந்தனை சந்திக்க வெகுவாய் தயங்கினாள்.

“ம்ஹூம் ஆரம்பிச்ச கேம்ம முடிக்காம நீ கிளம்ப முடியாது. உட்காரு. அதான் அண்ணாவும் வந்திடுச்சித்தான? நீயும், அண்ணாவும் ஒரு டீம். நான் ஒரு டீம்” என்றாள்.

“என்ன? அதெல்லாம் வேண்டாம்” என்று கவி மறுக்க, “ம்ஹூம் அண்ணா, நீ சொல்லுண்ணா” என்று அண்ணனை இழுத்தாள்.

“அதான் குட்டிமா ஆசைப்படுறாத்தான” என்று வேந்தன் சொல்ல, இப்போது கவியோ அவனை முறைத்தாள்.

அவனோ அதைக் கண்டுக் கொள்ளாது, சிதறிக் கிடந்திருந்த காயின்களை எல்லாம் எடுத்து அடுக்கினான். அதில் அவளின் கரமும், அவனின் கரமும் ஒரு நொடி தெரியாமல் உரசிக் கொள்ள, அவளோ பட்டென்று தன் கரத்தை விலக்கிக் கொண்டாள்.

ஆனாலும் மனதில் ஒரு வித படபடப்பு. வேந்தனோ அவளுக்கு மட்டும் கேட்கும் தோணியில், “சாரி தெரியாம டச் ஆகிடுச்சி” என்று விட்டு, அவன் அடுக்க ஆரம்பித்தான்.

ஏனோ அவனுடைய அந்த மன்னிப்பு அவளை என்னவோ செய்தது. அதில் அமைதியாய் அமர்ந்து விட்டாள். அதன் பின் வேந்தன் ஆரம்பிக்க, அவனோ கவிக்கும் மிச்சம். அவளாவது ஒரு காயின், ரெண்டு காயின் அடிப்பாள். இவன் சுத்தம் அதை தொடக் கூட மாட்டான்.

“போச்சு போ. இப்படி நீங்க ரெண்டு பேரும் விளையாண்டா, எனக்கு விளையாடுற ஆசையே போயிடும். கவி அவன் தான் எனக்காக பாக்றான்னா? உனக்கு என்னாச்சி? உன் ஹஸ்பண்ட இப்படித்தான் தோக்க விடப் போறீயா நீ?” என்றாள்.

ஏனோ அந்த வார்த்தை அவளை பாதித்தது முற்றிலும் உண்மை. அதன் பின் மும்முரமாக விளையாட ஆரம்பித்திருந்தாள். அதில் விழியோ அண்ணனைப் பார்க்க, அவனோ சிரித்தான். அவ்வளவுத்தான். இங்கே அண்ணனும், தங்கையும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ளும் நேரத்தில், கவி சரசரவென்று விளையாட்டையே முடிவுக்கு கொண்டு வந்திருந்தாள். ஒரே ஒரு ரெட் காயின் மட்டுமே மிச்சம் இருந்தது. அதில் விழியும், வேந்தனும் ஒரு வித ஆர்வத்துடன் அவளைப் பார்த்தனர்.

அவள் நினைத்திருந்தால், அதையும் அடித்திருப்பாள். ஆனால் அவளோ வேண்டுமென்றே அந்த வாய்ப்பை வேந்தனிடம் கொடுத்திருந்தாள். ஏனெனில் அவன் தோற்க கூடாதுத்தான். ஆனால் எதிரில் இருப்பது அவனின் தங்கை. அப்படி இருக்க, தங்கையை தோற்கடிக்க வேண்டுமா? இல்லையா? என்பதை அவன் தான் முடிவு செய்ய வேண்டும் என்பது அவளின் எண்ணம்.

இப்போது வேந்தனோ, கவியையும், விழியையும் பார்த்தான். ஒரு நொடி கவிக்காக ஜெயிக்க தோன்றினாலும், அவளுக்குமே விழி ஜெயிப்பதுத்தான் வேண்டும் என்பதால், அவனும் அடிக்கவில்லை. இம்முறை விழியும் அந்த காயினை அடிக்க வில்லை. மீண்டும் கவியிடமே வந்து நிற்க, அவளோ விழியை முறைத்தாள்.

“என்ன? உனக்கு மட்டும் தான் விரல் ஸ்லிப்பாகுமா? எனக்கும் ஸ்லிப்பாகும்” என்று உதட்டை சுழித்தாள் விழி. இப்படியாக மாறி மாறி அந்த ஒரு காயினை மூவரும் அடிக்கப் போவதில்லை என்பது போல் விளையாட, இப்போது விழிக்கே உறக்கம் வர ஆரம்பித்திருந்தது.

“ஸ்ப்பா. நானே ஜெயிச்சிட்டேன்னே ரெண்டு பேரும் வச்சுக்கோங்க. உங்க கூட விளையாட வந்தேன் பாருங்க என்ன சொல்லனும். நல்ல புருஷன் பொண்டாட்டி” என்று சொல்லியவள், “செரி கவி எனக்கு தூக்கம் வருது. நான் ரூமுக்கு போறேன்” என்று எழுந்தாள் விழி.

“நில்லு நானும் வரேன்” என்று கவியும் எழப் போக, “நீ எங்க வர்ற? அதான் அண்ணா வந்திடுச்சித்தான? நீ போயி அண்ணா கூட தூங்கு” என்றாள்.

அதில் கவியோ வேந்தனைப் பார்க்க, அவனோ, “நீ தனியா எப்படி தூங்குவ குட்டிமா. அவ உன் கூடவே தூங்கட்டும்” என்றான்.

“நான் என்ன சின்ன பப்பாவா? யு கே ல நீங்க ரெண்டு பேரும் தான் வந்து எனக்கு துணைக்கு இருந்தீங்களா?” என்று நக்கலாய் கேட்டவள், கவியிடம், “குட் நைட் கவி” என்று அவளைக் கட்டிப் பிடித்து கன்னத்தில் முத்தமிட்டாள்.

“ச் விழி” என்றவள் கன்னத்தை துடைக்க, “ஸ்ப்பா ரொம்ப கஷ்டம்ண்ணா. முத்தம் கூட நீத்தான் கொடுக்கனுமாம்” என்று சீண்டலாய் சொல்லிவிட்டு அங்கிருந்து கவி அடிக்கும் முன் ஓடியிருந்தாள்.

இப்போது வேந்தனுக்கும் கூட அவள் கன்னத்தில் முத்தமிட ஆசை எழ, அவளைப் பார்த்தான். அதில் அவளோ சட்டென்று விழியை தாழ்த்திக் கொள்ள, சிறு சிரிப்புடன், “எனக்கொரு சான்ஸ் கிடைக்குமா?” என்றான் வேந்தன்.

(நீ எதுக்கு கண்ணா அடி போடுற? செரி அடுத்து என்னாகப் போதுன்னு அடுத்தடுத்த எபிசோட்ல பாக்கலாம். அதுக்கு முன்னாடி இன்னிக்கு எபிசோட்ல உங்களுக்கு பிடிச்ச சீன் எதுன்னு மறக்காம கமெண்ட்ல சொல்லுங்க. அப்படியே எப்பவும் போல லைக் பண்ணிட்டு உங்க பிரண்ட்ஸ் கூட ஷேர் பண்ணுங்க)

தித்திக்குமா?..

Comments   1

*** தேன் – 22 - படைப்பை ரேட் செய்யுங்கள் ***