தேன் – 21

கவி சென்றதும் விழிக்கோ அன்று காய்ச்சல். “கவி கவி” என்று முனுமுனுத்துக் கொண்டே இருக்க, வேந்தன் மீண்டும் கவியை தேடி ஓடி வந்தான். அவள் சிறு பிள்ளைத்தானே அவள் எங்கு செல்லப் போகிறாள். அருகில் தெருவோரம் இருந்த ஒரு மரத்தடியில் தான் இருந்தாள்.

அவனுக்கு பெரிதாய் என்ன செய்ய என்று தெரியவில்லை. எப்படியும் வீட்டில் அனுமதிக்க மாட்டார்கள் என்று தெரியும். அதற்கு மேல் அடம்பிடித்தால், கவியை போலீஸிடம் ஒப்படைத்து விடுவதாய் தந்தை சொல்லியிருக்க அவனுக்கோ பயம். எப்போதோ அவர்கள் ஸ்கூலில் இருந்து ஆசிரமம் ஒன்றுக்கு அழைத்து சென்றனர்.

அந்த நினைவு வர மீண்டும் கவியிடம் வந்து நின்றான். அவளோ “ம்ஹூம் நீங்க போங்க. உங்கள திட்டுவாங்க” என்றாள்.

“அதெல்லாம் மாட்டாங்க” என்றவன் அவளை கொண்டு சென்று அந்த ஆசிரமத்தில் சேர்த்தான். அங்கிருந்த வாடர்னோ முதலில் வேந்தனைப் பார்த்து புரியாது, பின் கவியைப் பற்றிய விவரத்தை அவன் சொல்லவும் அவரும் சேர்த்துக் கொண்டார்.

தன் கழுத்தில் இருந்த செயினை கழட்டி, “இத வச்சுக்கோங்க. அவளுக்கு பசிக்கும். சாப்பாடு டைமுக்கு கொடுங்க” என்றான்.

அதைப் பார்த்து சிரித்த அந்த வாடர்னோ, “இங்க அவள நாங்க எல்லாரும் பத்திரமா பார்த்துப்போம். இதெல்லாம் வேண்டாம்” என்றார்.

ஆனாலும் அவனுக்கு அந்த செயினை கொண்டு செல்ல மனம் இல்லை அதனால், அந்த செயினை கவியின் கழுத்தில் போட்டு விட்டான். அவளோ அந்த செயினைப் புரியாது பார்த்தாள். அதில் எஸ் என்ற லெட்டர் இருந்தது.

அவன் அன்னை, அவனுக்கு சிறு வயதில் அந்த செயினை போட்டு விடும் போது, “இது நீ எப்பவுமே கழட்ட கூடாது. இது உன் கழுத்துல இருந்தா, அம்மாவும், அப்பாவும் கூட இருக்கிற மாதிரி” என்று சொல்லியிருந்தார்.

அதனால் தான் இப்போது சற்றும் யோசிக்காமல், அந்த செயினை கவிக்கு போட்டு விட்டிருந்தான். அதை எல்லாம் அவளிடம் அவன் சொல்லவில்லை.

“இல்ல வேணாம்” என்று அவள் கழட்டப் போக, “ம்ஹூம் இத நீ கழட்ட கூடாது. விழியும், நானும் உன் கூடவே இருப்போம்” என்று சொல்லியவன், மனமே இன்றி அவளை அந்த ஆசிரமத்தில் விட்டு விட்டு, வீட்டுக்கு வந்தான். அவன் என்ன நினைத்து சொன்னானோ, இப்போதும் அவளுடன் அவர்கள் இருவர் தான் இருந்தனர்.

பழைய நினைவில் இருந்தவனின் சட்டை இழுப்பட, சட்டென்று நினைவு கலைந்து குனிந்துப் பார்த்தான். கவித்தான் அவனின் சட்டையை பிடித்துக் கொண்டு திரும்பிப் படுத்தாள்.

ஏனோ அந்த நொடி, மனதிற்குள் ஒரு இதம் பரவியது. அது விழிக்கு, கவி வேண்டும். ஆனால் கவிக்கோ அவளின் சுடர் வேண்டும்.

மெல்ல அவள் கையில் இருந்த சுடர் என்ற டாட்டூவை வருடினான். உண்மையிலேயே இன்று வரையிலும் கவி யாரை நினைத்து அதை போட்டுக் கொண்டாள் என்று விழி, வேந்தன் இருவருக்குமே தெரியாது. ஆனால் அவள் கையில் இருந்த சுடர், அவர்களைப் பொறுத்தவரை அவனாகிப் போனான்.

அந்த சுடர் என்ற எழுத்தை வருடியவன் அதனருகே இருந்த தேன் என்ற பெயரில் மெல்லமாய் இதழ் பதித்தான். அதில் அவளோ சிறுமியாய் சினுங்கியப்படி அவன் கையை கன்னத்துக்கு அடியில் வைத்துக் கொண்டு படுத்தாள்.

அந்த சினுங்கல் கூட வேந்தன் மனதில் அத்தனைப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது. அப்படியே அவளை தன்னுடனே தூக்கிக் கொண்டு போக வேண்டி மனம் பாடாய் பட்டது. ஆனால், அது முடியாதே. அதனால் அமைதியாய் அவளைப் பார்த்தான். அவன் கட்டிய தாலி, அவளை அவனின் உடைமை என்று அடித்து சொல்லியது.

ஏற்கனவே அந்த தாலி என்ற ஒன்றுக்காக, அவள் பட்ட கஷ்டம் அவனுக்கு தெரியுமே. மீண்டும் அவனும் அதையே சொல்லி அவளிடம் உரிமையைக் காட்ட விருப்பமில்லை. அதனால் மெல்ல அவள் கரத்தில் இருந்த தன் சட்டையை உறுவிக் கொண்டு, அங்கிருந்து எழுந்தான்.

என்ன முடிந்தும் அவனால் முடியவே இல்லை. மீண்டும் அவள் முன் குனிந்து அவள் நெற்றியிலும், கன்னத்திலும் அழுத்தி முத்தமிட்டு விட்டு, அவளைப் பார்க்காமலே அங்கிருந்து சென்றிருந்தான்.

அருகில் தங்கை இருக்க, அதற்கு மேல் அவன் உணர்வை காமிக்க மனம் வரவில்லை. இங்கே கவியோ, அவன் கொடுத்த முத்தமோ, இல்லை அவனின் வாசமோ ஏதோ ஒன்று அவளுக்குள் ஒரு வித சுகத்தைக் கொடுக்க உறக்கத்தை தொடர்ந்தாள்.

அதன் பின் அடுத்த ஒரு வாரமும், விழி கவியுடன் தான் இருந்தாள். வேந்தன் வீட்டில் தங்குவதே இல்லை. அவனுடைய வேலையைப் பற்றித்தான் தெரியுமே. அதனால் விழியும் கேட்கவில்லை. ஆனால் கவிக்குத்தான் தெரியுமே தன்னால் தான் அவன் இங்கு தங்குவதில்லை என்று. ஆனாலும் அவளும் எதுவும் கேட்கவில்லை. சொல்லவில்லை.

அன்றும் அப்படித்தான், கவி புத்தக அறையில் அமர்ந்து எதையோ படித்துக் கொண்டிருக்க, அங்கே இருந்த புத்தகங்களை எல்லாம் விழி எடுத்து பார்த்துக் கொண்டிருந்தாள்.

“ஸ்ப்பா, எப்படித்தான் இப்படி விடிய விடிய தூங்காம உட்கார்ந்து படிக்கிறீயோ? எனக்கும், என் அண்ணாக்கும் புத்தகம்னாலே அலர்ஜி தெரியுமா?” என்றப்படி கவியின் அருகில் வந்தமர்ந்தாள்.

அதில் சட்டென்று நிமிர்ந்தவள், “என்ன?” என்று சிறு அதிர்ச்சியுடன் கேட்டாள். அவள் அதிர்ச்சியைப் பார்த்தவளோ, “ஹேய் நீ எதுக்கு இவ்வளவு ஷாக்காகுற?” என்று குழப்பமாய் கேட்டாள்.

ஏனெனில், விழிக்கு புத்தகம் படிக்க பிடிக்காது என்று அவளுக்கே தெரியும். ஆனால் வேந்தனுக்கு பிடிக்கும் என்று தான் நினைத்தாள். அதனால் தான், இங்கே இந்த அறையே வைத்திருந்தான் என்று இதுவரை நினைத்திருந்தாள்.

இப்போது விழி அப்படி சொல்லவும், “உன் அண்ணா இருக்கிற பதவிக்கு இதெல்லாம் படிக்கனும் தான” என்றாள்.

“எதே? எம் எல் ஏ ன்னா புக் படிக்கனுமா? எந்த உலகத்துல இருக்க நீ? அதெல்லாம் எதுவும் கிடையாது. அதுவும் போக அண்ணாக்கு புக் எல்லாம் படிக்க சுத்தமா பிடிக்காது. அவருக்கு அந்தளவுக்கு பொறுமையும் கிடையாது. இதெல்லாம், உனக்காக அண்ணா வாங்கி வச்சது. நான் தான் உனக்கு பிடிச்ச ஆதர் பேர் எல்லாம் அண்ணாக்கு சொன்னேன்” என்று அவள் வெகு இயல்பாய் சொல்ல, இங்கே இவளுக்குத்தான் பேச்சு வர மறுத்தது.

“எப்போ?” என்று அவள் யோசனையாய் கேட்க, “நம்ம காலேஜ் படிக்கிறப்ப” என்று விழி சாதாரணமாய் தான் கூறினாள். “ஏன்?” என்று அவள் விடாது கேட்க, “ஏன்னா? நீயும், நானும் சேர்ந்துத்தான வேலைக்கு போறதா இருந்தோம். அப்போ நீயும், என் கூட இங்கத்தான வந்து தங்கியிருப்ப. அப்போ, உனக்கு பிடிச்சதும் இந்த வீட்டுல இருக்கனும்த்தான” என்றாள்.

அவளுக்கோ தொண்டைக்குள் ஏதோ ஒன்று சிக்கியது. ஏனோ வாழ்க்கை கல்லூரி நாட்களுடனே நின்றிருக்கலாமோ என்று கூட தோன்றியது.

ஒரு வேளை அன்றே விழியின் பேச்சை கொஞ்சமாவது காது கொடுத்து கேட்டிருக்கலாமோ? என்று வெகு தாமதமாய் அவளுக்கு தோன்றியது. அடுத்தடுத்து நடந்த பல விஷயங்கள், அவர்கள் மூவர் மட்டுமே இருந்த உலகில், சட்டென்று கவி தனியே செல்ல முடிவெடுத்து, அவள் வாழ்க்கையில் நடந்த எதையுமே அவளால் மறக்க முடியவில்லை. இந்த ஜென்மத்துக்கும் அது முடியவே முடியாது.

சட்டென்று விழியின் அம்மா பேசிய பேச்சு, இப்போதும் அவள் காதில் ஒலித்துக் கொண்டேத்தான் இருந்தது. “என் புள்ளத்தேன் விவரமில்லாம, உன் மேல பாசத்த காட்டுதுன்னா, நீயும் அத சாக்கா வச்சி என் மகன வளைச்சுப் போட பாக்குறீயா? உன் ராசியோ என்னவோ, உங்கம்மா அப்பாவ முழுங்கிட்ட. இப்போ எங்க கிட்ட இருந்து எங்க பிள்ளைங்களையும் பறிக்க பாக்குறீயா? உன்ன அவ இப்புடி புடிச்சிட்டே திரிஞ்சா, என் பொண்ணும், உன்ன மாதிரித்தான் ரோட்டுல நிக்கனும். அம்மாடி இதுவரைக்கும் என் புள்ள உனக்கு செஞ்சதுக்கு, கொஞ்சமாச்சும் நன்றின்னு உன் மனசுல இருந்தா, என் புள்ளைங்க ரெண்டு பேரையும் விட்டுட்டு போயிடும்மா. உன் கால்ல கூட விழுந்து கும்பிடுறேன்” என்று அவர் பேசியது சட்டென்று நினைவுக்கு வர, அவள் கண்ணெல்லாம் கலங்கியது.

இதை எல்லாம் வேந்தனும் அந்த வாசலில் நின்று பார்த்துக் கொண்டேத்தான் இருந்தான். விழியோ கவியை கவனிக்காது அவள் பாட்டுக்கு கடந்த காலத்தைப் பற்றி பேசிக் கொண்டே போக, கவிக்கோ மூச்சு முட்டுவது போல் இருந்தது.

“குட்டிமா” என்ற வேந்தனின் அழைப்பில் விழி வேந்தனைப் பார்க்க, அவனோ கண் காமித்தான். அதன் பின்னே கவியைப் பார்த்தாள் விழி. அவள் கலங்கிய தோற்றம் அவள் மனதையும் கலங்கடிக்க, அவளை நெருங்க சென்றாள்.

அதற்குள் வேந்தனோ, “உன் மொபைல் அடிச்சிட்டே இருக்கு குட்டிமா” என்றான். அதில் விழி கவியிடம் எதையும் பேசாது, அங்கிருந்து சென்றாள். அவள் சென்றதும் கவியின் அருகில் வந்து நின்ற வேந்தன், “தேனு” என்றான்.

அவ்வளவுத்தான் அதுவரை அவள் பிடித்து வைத்திருந்த கண்ணீர் எல்லாம் கடகடவென்று சிந்த ஆரம்பிக்க, “சுடர்” என்றப்படி வேகமாய் அவன் வயிற்றை சுற்றிக் கட்டிக் கொண்டாள்.

மெல்ல அவள் முதுகை வருடி, அவளை சமாதானப்படுத்த முயற்சிக்க, அவளுக்கோ வடிக்க முடியாத துயரம். சட்டென்று அவளை எழுப்பி இறுக்கமாய் அணைத்துக் கொண்டான்.

அவளுமே கோழிக்குஞ்சாய் அவனிடம் பதுங்கிக் கொண்டாள். அவன் அம்மா, அப்பா சென்றப் பின், அவளின் அழுகையை கொட்டி தீர்ப்பவன் அவன் ஒருவனே.

இப்போதும் அப்படித்தான் அவன் சட்டை நனையும் அளவுக்கு அழுது தீர்த்தாள். சில நிமிடம் அழுது கரைந்தவள், இப்போது மெதுவாய், “நான் உங்களுக்கு வேணாம்” என்றாள்.

சிறு குழந்தையின் கெஞ்சல் அது. “செரி வேணாம்” என்றவனுக்கு இப்போது அவளை தேற்ற வேண்டும் அவ்வளவுத்தான்.

அவன் மார்பில் இன்னும் அழுந்த கன்னத்தைப் பதித்து, “நீங்க நல்லா இருக்கனும்” என்றாள்.

“சரி நல்லா இருப்பேன்” என்று அவன் சொல்ல, “நீங்க நல்லப் பொண்ணா பார்த்து கல்யாணம் பண்ணிக்கோங்க” என்றாள்.

“செரி பண்ணிக்கிறேன்” என்று அவளை தன்னோடு இறுக்கமாய் அணைத்துக் கொண்டு கூறினான். அவளோ, “அம்மா, அப்பா ஏன் சுடர் என்ன விட்டுப் போனாங்க?” என்று தேம்பி தேம்பி அழுதாள்.

அவள் அழுகை இங்கே இவனை கொன்றுக் கொண்டிருப்பதை அவள் உணரவே இல்லை. ஆனால் முகத்தை இறுக்கமாய் வைத்துக் கொண்டு நின்றிருந்தான். அவளுடைய வழக்கமான அந்த கேள்விக்கு இப்போது, இவனும், “எங்க கூட நீ இருக்கனும்னுத்தான் விட்டுட்டு போனாங்க” என்ற வழக்கமான பதிலைக் கூறினான்.

அதில் இன்னும் அவனுக்குள் புகுந்தவள், “ம்ஹும் நான் வேணாம்” என்றாள். “செரி நீ வேணாம்” என்று சிறுமியை தேற்றுவது போல் தான் அவன் பேசிக் கொண்டிருந்தான்.

“உண்மையா நான் வேணாம்” என்று அவள் சொல்ல, அவள் உச்சந்தலையில் தாடையை அழுத்திப் பதித்து, “செரிடி வேணாம்” என்றான்.

இப்போது மெல்லிய விசும்பல் அவளிடம். “தேனு. நான் இருக்கேன்த்தான. நீ எத பத்தியும் கவலப்படக் கூடாது” என்றான். “ம்ஹூம் நீங்க எனக்கு வேணாம்” என்றாள்.

அதில் அவள் கன்னத்தில் கைப் பதித்து, மெல்ல தன்னைப் பார்க்க வைத்தவன், “செரி உனக்கு வேண்டாம்” என்று சொல்லி அவள் நெற்றியில் அழுத்தி முத்தமிட்டான்.

“இங்க” என்று அவள் தன் கன்னத்தை காமிக்க, அங்கேயும் அழுத்தி முத்தமிட்டான். பின் அவள் கேட்காமலே அவளின் மறு கன்னத்திலும் முத்தமிட்டான்.

“நீங்க வேற கல்யாணம் பண்ணிப்பீங்கத்தான” என்று அவள் கேட்க, “செரி பண்ணிக்கிறேன். ஆனா அதுக்கு முதல்ல விழிக்கு கல்யாணம் ஆகனும். பொறவு பண்ணிக்கிறேன்” என்றப்படி மீண்டும் அவளை அணைத்துக் கொண்டான்.

“விழி ரொம்ப லக்கி தெரியுமா?” என்று கவி சொல்ல, “ம்” என்றவன் அதன் பின் அவள் சொன்ன அனைத்துக்குமே வெறும் “ம்” மட்டும் தான் சொன்னான். அவளோ, “நான் உங்களுக்கு தகுதி இல்ல. நான் வேணாம். நீங்க நல்லா இருக்கனும்” என்று அதையே சொல்லியவள் சில நிமிடங்களில் அவன் அணைப்புக்குள்ளேயே உறங்கிப் போனாள். பின் அவளை மெல்ல தூக்கி சென்று விழியின் அறையில் படுக்க வைத்து விட்டு வெளியில் வந்தான்.

(சுடரு ரொம்ப கஷ்டம். சரி அடுத்து என்னாகப் போதுன்னு அடுத்தடுத்த எபிசோட்ல பார்க்கலாம். அதுக்கு முன்னாடி இன்னிக்கு எபிசோட்ல உங்களுக்கு பிடிச்ச சீன் எதுன்னு மறக்காம கமெண்ட்ல சொல்லுங்க. அப்படியே எப்பவும் போல லைக் பண்ணிட்டு உங்க பிரண்ட்ஸ் கூட ஷேர் பண்ணுங்க)

தித்திக்குமா?..

Comments   1

*** தேன் – 21 - படைப்பை ரேட் செய்யுங்கள் ***