தேன் – 57

சுஜியை அடித்து விட்டு வெளியில் சென்ற வேந்தனின் மனமோ தீயாய் எறிந்தது. எதற்காக இத்தனைக் கோவம்? சுஜி பேசியதற்காக மட்டும் தான் அவன் அடித்தானா? இல்லை அந்த வர்ஷினியின் பெயர் அவனுடைய நிதானத்தை சற்று தடுமாற வைத்ததோ?

அதில் தலையை பிடித்தப்படி அப்படியே நின்று விட்டான். “கவித்தான் உன்னோட ஒயிப். அவ மட்டும் தான்” என்று மீண்டும் மீண்டும் தனக்குத் தானே சொல்லி பதிய வைக்க முயற்சித்தான்.

அன்னேரம் அங்கே அவனைத் தேடி வந்த விழியோ, “அன்ணா” என்று மெதுவாய் அவன் கையைப் பற்ற, சட்டென்று அவள் பக்கம் திரும்பாமலே, “குட்டிமா நீ போ. நான் கொஞ்சம் தனியா இருக்கனும்” என்றான்.

“சுஜிய பத்தி உங்களுக்கு தெரியாதா? அவ” என்று விழி ஏதோ பேசப் போக, “விடிஞ்சதும், முத வேளையா அவள கொண்டு போயி ஹாஸ்டல்ல விடு” என்றான்.

அதில் விழியோ ஒரு நொடி அமைதியாய் நின்றாள். சட்டென்று கவி எப்போதோ சொல்லிய, “இங்கப்பாரு, அந்த அக்காவா உன் அண்ணாக்கு பிடிச்சிருக்கு. அதனால தேவையில்லாம, உன் அண்ணா முன்னாடி, அவங்கள பிடிக்காத மாதிரி காட்டிக்காத. உன் விருப்பத்த உன் அண்ணா பாக்குறாருன்னா, உன் அண்ணா விருப்பத்தையும் கொஞ்சமாச்சும் யோசி” என்ற வார்த்தைகள் இப்போது அவள் மூளைக்குள் ஓடியது.

வர்ஷினியை, வீட்டில் வேந்தனுக்கு பேசி வைத்திருந்தார்கள், என்பது விழிக்குமே தெரியும். ஆனால் வேந்தன் ஒரு நாள் கூட, அப்படி அவளிடம் நடந்துக் கொண்டது கிடையாது. ஆனால் இன்று அவள் பெயரைக் கேட்டதும், அண்ணன் முகத்தில் வந்து சென்ற மாற்றம், அவளை சிந்திக்க வைத்தது.

“இல்ல இல்ல. அண்ணாக்கு அந்த வர்ஷினி மேல எல்லாம் எந்த இண்ட்ரஸ்டும் இருக்காது. இந்த சுஜி பேசுனதுக்குத்தான் அப்சட்டாகியிருப்பாரு” என்று வேகமாய் தனக்குத் தானே சொல்லிக் கொண்டாள்.

அவள் இன்னமும் கிளம்பாமல் இருக்கவும், “உன்ன உள்ள போக சொன்னேன் குட்டிமா” என்றான். “நீங்க சாப்பிட” என்று விழி சொல்லி முடிக்கும் முன்னே, “விழி உள்ள போ” என்றாள் கவி.

கவியின் குரலில் அவன் சட்டென்று திரும்ப, இப்போது விழியோ, “கவி நீ நினைக்கிற மாதிரி” என்று சொல்ல முயன்றாள். ஏனெனில் இப்போதுத்தான் அத்தனை பிரச்சனைக்குப் பின் இருவரும் சேர்ந்திருக்க, மீண்டும் அவர்களுக்குள் ஒரு சிக்கல் வருவதை அவள் விரும்பவில்லை.

ஆனால் அவளை பேச விடாது, “சுஜி அழுதுட்டே இருக்கா. போயி கொஞ்சம் பேசு” என்றாள்.

“ச் அவ அழுதா அழட்டும்” என்று விழி கடுப்பாய் சொல்ல, “அவ இதையே ஷாக்கா வச்சி, நாளைக்கு ஹாஸ்டல் கிளம்ப மாட்டேன்னு சொல்லுவா” என்றாள் கவி.

அவள் அப்படி செய்யக் கூடிய ஆள்த்தான் என்பதால், ஒரு நொடி தன் அண்ணனையும், அவளையும் பார்த்தவள், “எல்லாம் கடவுள் விட்ட வழி” என்று தனக்குள் சொல்லிவிட்டு அங்கிருந்து சென்றாள்.

அவள் சென்றதும் இப்போது வேந்தனோ, கவியைப் பார்க்க, கவியோ, எதுவுமே பேசாது, அவனின் அருகில் அமைதியாய் நின்றாள்.

அவள் ஏதாவது கேட்டால் கூட மனம் அமைதியாகிவிடும் என்று தோன்ற, ஆனால் அவள் தான் அதற்கான முயற்சியே இன்றி நின்றாள்.

“கவி” என்று வேந்தன் ஆரம்பிக்கும் முன்னே, “எனக்கு பசிக்குது” என்றாள். அவளின் வார்த்தையில், அவன் ஒரு நொடி குழம்பி, அடுத்த நொடியே, “சிட். சாப்பிடுற நேரத்துல போயி” என்று தன்னைத் தானே திட்டியவன், “வா” என்று அவள் கையைப் பிடிக்க சென்றான்.

அதற்குள் அவன் கரத்தில் சிக்காது தன் கரத்தை உறுவிக் கொண்டவள், “உள்ள வேண்டாம்” என்றாள்.

அதில் இப்போது அவன் அவளை கேள்வியாய் பார்க்க, “வெளிய போயி சாப்டு ரொம்ப நாள் ஆச்சு. போவோம்மா?” என்றாள்.

அவள் தன்னிடம் தனியே ஏதோ பேச நினைக்கிறாள் என்பது அவனுக்கு புரிய அடுத்த நொடி, அங்கிருந்த ட்ரைவரை அழைத்து, சாவியை எடுத்து வர சொல்லியவன், அவளுடன் ஜீப்பில் கிளம்பியிருந்தான்.

ரெஸ்டாரண்ட் செல்லும் வரையிலும் கூட கவி எதுவுமே பேசவில்லை. ஒரு வித அமைதி. அவன் குறிப்பிட்ட ஒரு ரெஸ்டாரண்டில் ஜீப்பை நிறுத்த, “இங்க வேண்டாம்” என்றாள்.

அதில் அவனோ அவளை கேள்வியாய் பார்க்க, “பீச் பக்கத்துல இருக்கிற அந்த கண்ணாடி ஸ்பாட் போலாம்” என்றாள்.

“இத முன்னாடியே சொல்லிருக்கலாம்த்தான” என்று அவன் மெதுவாய் முணங்க, இவளோ, “கிளம்புறப்பையே கேட்டிருக்கனும்” என்றாள்.

அவள் குரலை வைத்து, அவள் மன நிலையை அவனால் கணிக்க முடியவில்லை. அடுத்து அவள் சொல்லிய அந்த ஹோட்டல்லையே ஜீப்பை நிறுத்தினான். அவன் ஜீப்பை பார்த்த உடனே, அந்த கடையில் வேலைப்பார்க்கும் பையன் ஓடி வந்து, “வாங்கண்ணா. எப்படி இருக்கீங்க? உங்கள பாத்து எவ்வளவு நாள் ஆச்சு? என்ன கொண்டு வரட்டும்ண்ணா” என்று கேட்டான்.

அதில் அவனோ, கவியைப் பார்க்க, அவளோ அவனுக்கும், அவளுக்கும் சேர்த்து உணவை கொண்டு வர சொல்ல, ஜீப்பை விட்டு இறங்காது இருவரும் அப்படியே அமர்ந்திருந்தனர்.

கிட்ட தட்ட மணி பத்தைத் தொட்டிருக்க, அந்த பீச் ஹோட்டலில், கூட்டம் அலைமோதியது.

கடல்காற்று வேறு முகத்தில் அத்தனை பலமாய் அடிக்க, ஏனோ மனதிற்குல் மெல்லிய இதம் பரவத்தான் செய்தது. இருவருமாய் எதுவும் சொல்லாமல் சாப்பிட்டு முடிக்க, கவி ஜீப்பை விட்டு இறங்கி கையை கழுவினாள்.

வேந்தனோ, ஏனோ புயலுக்கு முன் இருக்கும் அமைதிப் போல் தான் கவியைப் பார்த்திருந்தான். அதில் கையை கூட கழுவாது அவன் அப்படியே அமர்ந்திருக்க, “ஹேண்ட் வாஸ் பண்ணுங்க” என்றாள்.

அதன் பின்னே அவனும் ஜீப்பை விட்டு இறங்க, இப்போது நன்றாகவே அந்த கடற்கரை காற்று இருவரையும் தொட்டு தழுவியது. அதில் இன்னுமே மனம் ஒரு வித அமைதியை உணர, ஒரு நொடி கண்ணை இறுக்க மூடினான்.

மூடிய விழிகளுக்குள் ஒரு பென்ணின் மங்கலான உருவம். அந்த உருவத்துக்கு உயிர் கொடுக்கும் முன்னே, “அண்ணா” என்று அந்த கடைப்பையனின் சத்தம் அவன் செவியில் விழுந்தது.

அதில் சட்டென்று கண்ணைத் திறந்து, பையில் இருந்த பணத்தை எடுத்து நீட்டினான். “ஐயோ அண்ணா. உங்க கிட்ட போய்” என்று அவன் தயங்க, “அடுத்த தடவ இங்க நான் வரனுமா? வேண்டாமா?” என்று கேட்கவும், அவனும் வாங்கிக் கொண்டு அங்கிருந்து சென்றான்.

அவன் சென்றப் பின்னே அருகில் நின்றிருந்த கவியைப் பார்க்க, அவள் அங்கு இல்லை. அதில் ஒரு நொடி திடுக்கிட்டு அடுத்த நொடியே, அவன் சுற்றி தேட, அங்கே அவளோ சற்று தள்ளி தெரிந்த கடற்கரை மணலில் அமைதியாய் அமர்ந்திருந்தாள்.

அவளைப் பார்த்தப் பின் தான் அவனுக்கு மூச்சே வந்தது. அதில் நெஞ்சில் கையை வைத்த சுடரோ, “வேந்தா? எப்படியும் அவ வில்லங்கமா ஏதாச்சும் சொல்லுவா. நீத்தான் பொறுமைய கை விடாம, நிதானமா பேசி, அவள வீட்டுக்கு கூட்டிட்டு போகனும்” என்று தனக்குத் தானே சொல்லியப்படி அவளருகில் சென்றான்.

அவனின் நிழல், அவள் முன்னே விழுந்தும் நிமிராது அவள் கடற்கரை மணலில் எதையோ கிறுக்கி கொண்டிருக்க, இப்போது அவனோ “கவி” என்றழைத்தான்.

அதில் கிறுக்கிய வார்த்தைகளை அவள் வேகமாய் அழிக்கப் போக, அதற்குள் அவள் கையைப் பிடித்து தடுத்தவன், அதைப் பார்த்தான். “சுடர்” என்றுத்தான் கிறுக்கியிருந்தாள்.

ஏனோ அத்தனை கலவரத்துக்கு நடுவிலும், அது அவன் மனதை சற்று குளிர்விக்கத்தான் செய்தது. ஆனால், அதற்கு பக்கத்திலேயே, “வ” என்ற எழுத்தும் இருக்க, இப்போது அவனுடைய நிம்மதி பறிப்போனது. கூடவே கோவமும் வந்து எட்டிப் பார்த்தது.

“என்னப் பண்ற நீ?” என்று உண்மையாகவே அத்தனை கோவமாய் கேட்டான். அவன் கோவத்தில் அவனை நிமிர்ந்துப் பார்த்தவளோ, “எனக்கு பிடிச்ச பேரை எழுதுறேன்” என்றாள்.

அதில் அவனோ, “இது உனக்கு பிடிச்ச பேரா” என்று கோவமாய் அவன் கேட்டு முடிக்கும் முன்னே, “ஆமா சுடர் விழி எனக்கு பிடிச்ச பேர்த்தான” என்று கேட்டா.

“என்ன?” என்றவன் அதன் பின்னே, அந்த “வ” என்ற எழுத்து வர்ஷினி அல்ல, விழி என்பதே புரிந்தது.

அதில் தலை முடியை அழுந்தக் கோதி, அப்படியே அவளருகில் பொத்தென்று மணலில் அமர்ந்தான். அவன் அமர்ந்த மறு நொடி, “ஏன்? நான் உங்களுக்கு பிடிச்ச பேர எழுதுறேன்னு நினைச்சிட்டீங்களா?” என்று கேட்டாள்.

அவளுடைய கேள்வியில், இவனோ கோவமாய், “கவி” என்று சொல்லி முடிக்கும் முன்னே, “இதுக்கப்புறம் உங்களுக்கு என் பேர் மட்டும் தான பிடிக்கும்” என்றாள்.

அதில் அவன் அவளை பார்க்க, “என்ன? நான் தான உங்க ஒயிப். சோ என்னோட பேர்த்தான பிடிக்கனும்” என்று கேட்டாள்.

அவளுடைய ஒவ்வொரு வார்த்தைக்கும், கேள்விக்கும் அவனின் உள்ளம் சற்று வேறாய் துடிக்க, அதில் மூச்சை இழுத்துப் பிடித்தவன், “உனக்கு என்கிட்ட என்ன கேட்கனுமோ அத நேரடியா கேளு” என்றான்.

அவனின் வார்த்தையில் இப்போது கவியோ அவனின் பக்கம் நன்றாக திரும்பிப் பார்த்தாள்.

அவனின் முகத்திலோ மெல்லிய பதட்டம், தடுமாற்றம். அதை எல்லாம் தாண்டி, அவள் கேட்பதற்கு பதில் சொல்லும் வேகம் அத்தனையும் இருந்தது.

அதில் அவனையேத்தான் பார்த்தாள். அவனோ அவள் தொண்டைக்குழிக்குள் இருந்து வரப் போகும் வார்த்தைக்காக காத்திருந்தான்.

பொதுவாகவே இந்த உலகத்தில் மிகப்பெரிய கொடுமையான தருணம் என்றால், அது காத்திருப்பதுத்தான். அது ஒருவரின் வருகைக்காக இருக்கலாம். இல்லை ஒரு வார்த்தைக்காக இருக்கலாம். ஏன் அது ஒரு தண்டனையாக கூட இருக்கலாம். ஆனால் அது கிடைக்கும் வரை, மனம் ஒரு நிலையில் இல்லாது ஊசலாடும்.

அப்படி ஒரு நிலையில் தான் அவளுடைய அமைதியின் நொடிகள் கூட, கூட அவனுடைய இதயம் கொஞ்சம் விட்டால் வெளியில் வந்து விடும் என்பது போல் அத்தனைப் பலமாய் துடித்தது.

அவனுக்கு மூச்சு விடக் கூட முடியாத அளவுக்கு, அவனுடைய நிலையில் அது அத்தனை கொடுமையான நொடிகள். அவளோ, அவனுடைய பொறுமையை சோதித்தே தீருவது என்ற கொள்கையோடு இருந்தாலோ, என்னவோ?

அதில் ஒரு கட்டத்தில் முடியவே முடியாது என்பது போல், “கவி அந்த வர்” என்று தன் இதழைப் பிரிக்க, அடுத்த நொடி அவன் இதழோடு சேர்த்து அவன் வார்த்தையையும் விழுங்கியிருந்தாள் தேன்கவி.

(என்னப்பா? பெருசா ஏதாச்சும் சொல்லுவான்னு எக்ஸ்பக்ட் பண்ணேன்னே. இல்லையே இது கவி ஸ்டைல் கிடையாதே. எப்படியும் ஏதாச்சும் ஏழரைய இழுக்கனுமே. சரி அடுத்து என்னத்தான் நடக்கப் போதுன்னு பாக்கலாம். சரி அதுக்கு முன்னாடி இன்னிக்கு எபிசோட்ல உங்களுக்கு பிடிச்ச சீன் எதுன்னு மறக்காம கமெண்ட்ல சொல்லுங்க. அப்படியே எப்பவும் போல லைக் பண்ணிட்டு உங்க பிரண்ட்ஸ் கூட ஷேர் பண்ணுங்க)

தித்திக்குமா?..

Comments   4

*** தேன் – 57 - படைப்பை ரேட் செய்யுங்கள் ***