தேன் – 43

வேந்தனோ கடுப்பாய் அங்கிருந்து நகர, அவன் கையை மேலும் இழுத்துப் பிடித்து நிறுத்த, “ச் இன்னும் உனக்கு என்ன?” என்றான்.

“அந்த சுஜி எல்லாம் நீங்க பாக்க கூடாது” என்று சொல்ல, வேந்தனுக்கோ, முறைப்பதா? இல்லை திட்டுவதா? என்றே தெரியவில்லை.
“உனக்கு என்னப் பார்த்தா எப்படி தெரியுது?” என்று கேட்க, அவனை மேலிருந்து கீழாக பார்த்தவள், “உங்களுக்கு என்ன? எப்பவும் போல செம்ம கெத்தாத்தான் இருக்கீங்க. அதுலையும் இந்த வெள்ளை சட்டைக்கு பதிலா, கலர் சட்ட அதுவும் ரெட் இல்லன்னா? ப்ளூ போட்டா இன்னுமே செம்ம சூப்பரா இருக்கும்” என்றாள் கவி.

அதில் அவன் ஒரு நொடி அவளையே கூர்ந்துப் பார்த்தான். அவள் கண்ணில் அப்பட்டமான ரசிப்புத்தன்மை மின்னியது. ஆனாலும் நேற்றிரவு நடந்தது எல்லாம் நினைவுக்கு வர, எதுவும் சொல்லாது அங்கிருந்து நகர்ந்தான்.

அதில் அவளோ மீண்டும் அவனின் கையைப் பிடிக்க, சட்டென்று திரும்பி கோவமாய் ஏதோ சொல்ல வந்தவன், பின் அவளைப் பார்த்ததும், “இன்னும் என்னடி உனக்கு வேணும்?” என்றான்.

“நான் உங்களுக்கு வேண்டாம்” என்று அவள் சொல்ல, இப்போது அவனுக்கோ மண்டைக் காய்ந்தது. காலையிலேயே இதெல்லாம் அவனுக்கு தேவையா? என்றுத்தான் இருந்தது. அங்கே தொகுதியில் வேறு ஏதோ பிரச்சனை என்றுத்தான் கிளம்பிக் கொண்டிருந்தான். அதற்குள், வீட்டில் இத்தனைப் பிரச்சனை. அதிலும் தன் முன்னே நிற்பவளை எல்லாம் என்ன செய்தால் தகும்? என்றுத்தான் பார்த்தான்.

“ச் சரி எனக்கு வேண்டாம். போதும்மா?” என்று பல்லைக் கடிக்க, “நான் உங்களுக்கு ஏத்த மாதிரி, அழகான, அன்பான பொண்ணா பார்ப்பேன். அவ கண்டிப்பா, என்னிக்குமே உங்கள விட்டுக் கொடுக்க மாட்டா. உங்கள நல்லப்படியா பாத்துப்பா. குறிப்பா உங்க வீட்டுக்கு நல்ல மருமகளா இருப்பா. உங்க அம்மாக்கு பிடிச்ச மாதிரி அப்புறம்” என்றவள் சொல்லிக் கொண்டே போக, “ரொம்பலாம் தேடி அலையாத. ரூமுக்குள்ள போ, அதுல லெப்சைட் பீரோ முன்னாடி போயி நில்லு. அங்கத்தான் இருப்பா. அவளுக்கு சம்மதம்னா சொல்லு. உடனே கல்யாணத்த பண்ணிக்கிறேன்” என்று சொல்லிவிட்டு ஜீப்பில் ஏறி சென்றிருந்தான் சுடர் வேந்தன்.

“பீரோ முன்னாடி யாரு இருக்கா? ஒரு வேள அந்த சுஜிய சொல்றாரா?” என்று யோசித்தப்படி நேரே சென்று அவள் அந்த பீரோவை திறந்துப் பார்த்தாள்.

அதைப் பார்த்த விழியோ, “அங்க யார தேடுற நீ?” என்று கேட்டப்படி கட்டிலில் வந்து அமர்ந்தாள்.

“ஆ.ங் அது” என்றவள், உள்ளே ஏதாவது போட்டோ இருக்கிறதா? என்று கூட பார்க்க, இப்போது விழியோ, அவள் அருகே வந்து, “என் அண்ணாக்கு பிடிச்ச பொண்ணு பீரோக்குள்ளலாம் இல்ல கவி” என்றாள்.

“அப்புறம்?” என்று கவி கேட்க, “ம்” என்று அவளை முறைத்தவளோ, அந்த பீரோவை மூடி, அதில் இருந்த கண்ணாடியின் முன் சென்று கவியை நிறுத்தினாள்.

அதில் கவியுடைய பிம்பம் அழகாய் தெரிய, ஒரு நொடி அவள் என்ன மாதிரி உணர்ந்தாள், என்றே தெரியவில்லை. அதில் அவள் அதையே பார்த்திருக்க, “என்ன? பொண்ண உனக்கு பிடிச்சிருக்கா? நாளைக்கே பேசி முடிச்சிடுவோம்மா?” என்று நக்கலாய் கேட்டாள்.

அதிலேயே இவ்வுலகம் வந்தவள், “எனக்கு பிடிக்கல” என்று பளீச்சென்று சொல்ல, “பட், எனக்கும், என் அண்ணாவுக்கும் பிடிச்சிருக்கே” என்று விழி சொல்ல, “ச் இப்படி எல்லாம் பேச மாட்டன்னு சொல்லிருக்க. திரும்ப நீ ஆரம்பிச்சன்னா, நான் கிளம்பி போயிட்டே இருப்பேன்” என்றாள்.

“சரி சரி ரொம்ப டென்சன் ஆகாத. ரொம்ப பசிக்குது சாப்பிடுவோம்மா?” என்று விழி கேட்க, “அந்த லூசு எங்க?” என்றாள்.

“பாத்தீயா, என்னத்தான் சொன்னாலும் உனக்கு சுஜி மேல தனி பாசம்த்தான்” என்று கிண்டலாய் சொல்ல, “அடி வாங்கப் போற. அந்த லூசு அங்க இருந்தா, நான் வரல” என்று கோவமாய் கூறினாள்.

“அதெல்லாம் அவ எப்பவோ ரூம்ல போயி படுத்துட்டா. எப்படியும் இனி ஈவ்னிங் தான் எந்திரிப்பா. சோ நீ வா” என்று விழி கவியை இழுத்துக் கொண்டு சென்றாள்.

இங்கே தொகுதி சம்பந்தப்பட்ட பொது குழு மீட்டிங்கை முடித்து விட்டு திரும்பி வந்துக் கொண்டிருந்தான் வேந்தன். மனம் ஒரு நிலையிலேயே இல்லை.

ஒரு நாளில் என்னவெல்லாம் நடந்து விட்டது. இப்போது வரையிலும், அவனுக்கு புரியவே இல்லை. விழிக்காகத்தான் கவியை திருமணம் செய்துக் கொண்டான். ஆனால் தங்கை வந்து அவள் வேண்டாம் என்று சொல்லும் போது, ஏனோ மனம் ஏற்றுக் கொள்ளவே இல்லை.

அத்தனைத் துடித்தான். ஆனால் ஏனோ அதை ஒத்துக் கொள்ள மனம் இல்லை. அவன் யோசனையிலேயே இருக்க, “என்னாச்சு சார்? அதான் மீட்டிங் எல்லாம் நல்லப்படியா முடிஞ்சிதே. எப்படியும், இந்த தடவ நமக்கு மினிஸ்டரோட சப்போர்ட் கூட தேவயில்ல” என்றான் அருள்.

அதில் நினைவுக் கலைந்தவன், “ஜீப்ப நிறுத்து” என்றான். “இங்கேயா சார்?” என்றவன், சுற்றிப் பார்த்தான். ஆள் நடமாட்டம் இல்லாத கடற்கரை சாலை அது. ஏற்கனவே இரவாகியிருக்க, “சார் டைம் ஆகிடுச்சி” என்றான்.

“ச் சொன்னத செய்” என்று எரிச்சலாய் அவன் சொல்ல, அவனும் ஜீப்பை நிறுத்தினான். உடனே வேந்தனோ, “கிளம்பு” என்றான்.

“சார்” என்று அவன் ஏதோ சொல்லப் போக, “நீ மட்டும் இல்ல, பின்னாடி இருக்கிற காட்ஸையும் கூட்டிட்டு கிளம்பு” என்று கூறினான். “ஆனா சார்” என்று அருள் சொல்லி முடிக்கும் முன்னே, அவன் கன்னத்தில் பளாரென்று ஓங்கி அடித்தான்.

அதில் மறு வார்த்தை பேசாது, அவனிடம் ஜீப் சாவியை கொடுத்து விட்டு பின்னே வந்த காரில் ஏறி கிளம்பினான் அருள். “ச் அடி கொடுக்காம இவன்கிட்ட ஒரு வேலையையும் வாங்க முடியாது” என்று எரிச்சலாய் சொல்லியவன் அந்த ஜீப்பில் சாய்ந்து நின்றான்.

சற்று தூரத்தில் கடல் தெரிய, அதைப் பார்த்தப்படியே நின்றிருந்தான். அவன் மனம் என்ன யோசிக்கிறது? என்று சத்தியமாய் தெரியவில்லை.

கவியை அவனுக்கே தெரியாமல் அவன் காதலிக்க ஆரம்பித்து விட்டானா? அவனுக்கு பதிலே இல்லை. ஆனால் அவள் திருமணம் செய்துக் கொண்டாள் என்பது தெரிந்த அந்த நொடி, அவனுடைய வாழ்க்கையில் அத்தனை வெறுமை குடிபுகுந்திருந்தது. அதன் பின், அவளை மொத்தமாய் மறக்க நினைத்தும், ஏனோ, அவனால் அது முடியவே இல்லை. முடிந்த மட்டும் அவள் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று நினைத்தான். ஆனால் அவள் திருமணம் முடித்தவன், அத்தனை யோக்கியன் இல்லையே. அதனால்த்தான் அவளுக்கு உதவி செய்ய முயற்சித்தான். ஆனால் அவளோ முற்றும் முழுதாய் அவனை விட்டு விலகி மறைந்துக் கொண்டாள். அவனுடைய எந்த உதவியையும் ஏற்க தயாராக இல்லாதவளுக்கு, தான் மட்டும் ஏன் இறங்கி சென்று உதவ வேண்டும் என்று, அவனும் அவள் வாழ்க்கையை விட்டு ஒதுங்கி விட்டான்.

பின் விதியோ? இல்லை சதியோ? மீண்டும் அவளுடைய வாழ்க்கையில் நுழைவதற்கு அவனுக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது. அதை சற்றும் யோசிக்காமல் செய்து விட்டான். இப்போது மீண்டும் அவள் அவனை விட்டு செல்கிறேன் என்று அடம்பிடிக்கிறாள். அவனுடைய ஈகோ, அவளை விட்டு விடு என்று நச்சரிக்கிறது.

ஆனால் அவனின் மனமோ, திரும்ப திரும்ப அவள் முன்புத்தான் போய் நிற்கிறது. அவளுடைய கடந்த கால வாழ்க்கைத்தான் அவளுக்கு பிரச்சனை என்றால், இப்போது அந்த வாழ்க்கையில் இருந்த எவரும், இப்போது உயிருடனே இல்லை. அப்படி இருக்க, இன்னும் அவள் பிடிவாதம் பிடிப்பது எரிச்சலைக் கொடுத்தது.

ஏன் ஒருவனுடன் வாழ்ந்தப் பெண், இன்னொருவனுடன் வாழக் கூடாதா? இல்லை? என்றவனுக்கு ஏனோ அதை நினைக்கும் போதே உடலெல்லாம் எரிந்தது. ஏனோ, அப்படி ஒன்றை நடக்க விடாமல் தடுத்திருக்க வேண்டுமோ? அதனால் தான் அவள் அவனை விட்டு செல்கிறாளோ? என்று ஏதேதோ கேள்விகள் அவன் மூளைக்குள் ஓடியது.

இங்கே கவியோ வாசலைப் பார்ப்பதும், பின் நகத்தை கடித்து துப்புவதுமாய் இருக்க, சுஜியோ சிப்சை சாப்பிட்டப்படி, டிவி பார்த்துக் கொண்டிருந்தாள்.

விழியோ, “ஹேய்! பசிச்சா, நீயும் எதையாச்சும் எடுத்து சாப்பிடு. அத விட்டுட்டு எதுக்கு இப்படி நகத்த கடிச்சு திண்ணுட்டு இருக்க?” என்றாள்.

“உன் அத்த மக இருக்கிற வீட்டுல சாப்பிட மிச்சம் ஏதாச்சும் இருக்குமா என்ன?” என்று சுஜியைப் பார்த்து முறைத்தாள்.

“ஹேய்! அவ பாட்டுக்கு அமைதியா டிவி பார்த்துட்டு இருக்கா. அவள எதுக்கு வம்புக்கு இழுக்கிற?” என்று விழி கேட்க, “இன்னும் இவ எதுக்கு இங்க உட்கார்ந்துட்டு இருக்கா?” என்று எரிச்சலாய் கேட்டாள்.

“அத நீ அவகிட்டத்தான் கேட்கனும்” என்று விழி சொல்ல, “அவகிட்டலாம் மனுஷி பேசுவாளா? இப்போ மட்டும் அவர் வந்த வுடனே மேல போயி விழட்டும். அப்படியே வீட்ட விட்டு வெளிய தள்ளி கதவ பூட்டுறேன். நைட் புல்லா பனியில நின்னாத்தான் கொழுப்பு குறையும்” என்றால் கவி.

அதைக் கேட்டு விழி சிரிக்க, “ச் இப்போ எதுக்கு சிரிக்கிற? நான் பண்ண மாட்டேன்னு நினைக்கிறீயா?” என்று எரிச்சலாய் கவி கேட்க, “ஆ.ங் அப்படி எப்போ நான் சொன்னேன். அதெல்லாம் நீ செய்வேன்னு தெரியும். ஆனா எனக்கு ஒன்னே ஒன்னுத்தான் புரியவே இல்ல” என்றாள்.

“என்ன?” என்று கடுப்பாய் கவி கேட்க, “இல்ல அண்ணனுக்கு வேற பொண்ண பாத்து கல்யாணம் பண்ணி வைக்கனும்னு நினைக்கிற. ஆனா அவரு கூட வேற பொண்ண பார்த்தா கடுப்பாகுறீயே. அதுத்தான் ஏன்?” என்றாள் விழி.

“ச் வேற பொண்ண இல்ல. இந்த லூசா பாத்தா மட்டும்த்தான் கடுப்பாகுது” என்று கவி சொல்ல, “என் அண்ணா வேற எந்த பொண்னு கூடையும் இருந்து நீ பார்த்தது இல்ல. அதான் இப்படி சொல்ற” என்றாள் விழி.

“அதெல்லாம் ஒன்னும் இல்ல. இந்த லூசு மட்டும் தான் எனக்கு பிடிக்கல” என்று கவி அதையே சொல்ல, “என்னமோ சொல்ற? ஆனாலும் எனக்கென்னமோ, நீயும் அண்ணாவும் பெஸ்ட் பேர்ன்னுத்தான் தோனுது. கொஞ்சம் அத பத்தியும் யோசிச்சுப் பாரேன்” என்றாள் விழி.

“ச் தயவு செஞ்சு அத பத்தி மட்டும் பேசாத. என்னிக்குமே நான் அவருக்கோ, உன் குடும்பத்துக்கோ தகுதியே கிடையாது. ஈவன் சுஜியவே வேண்டாம்னு சொல்றேன்னா, அப்போ, என்னைய எல்லாம் அந்த லிஸ்ட்லையே நான் வச்சிக்கல” என்றாள் கவி.

“ச் என்னமோ சொல்லு. எனக்கு தூக்கம் வருது. நான் கிளம்புறேன்” என்று விழி சொல்ல, “போறப்ப அந்த லூசையும் கூட்டிட்டு போ” என்றாள்.

“எதுக்கு? உனக்கு துணைக்கு இருக்கட்டுமே” என்று விழி சொல்ல, “கொன்றுவேன். உன்னை இல்ல. அவளை. ஒழுங்கா கூட்டிட்டுப் போ” என்று கவி சொல்லும் போதே விழியுடைய மொபைலுக்கு வேந்தன் கால் செய்தான்.

அதுவரை டிவியில் மூழ்கியிருந்தவள், விழியின் மொபைலில் தெரிந்த வேந்தன் பெயரைப் பார்த்ததும் வேகமாய் அட்டண்ட் செய்து, “மாமா எப்போ வறீங்க? நான் உங்கள பாக்கனும்” என்றாள் சுஜி. அவ்வளவுத்தான் அதுவரை கூட அமைதியாய் இருந்த கவி, அடுத்த நொடி அவள் கையில் இருந்த மொபைலை வெடுக்கென்று பிடுங்கி, தன் காதில் வைத்தாள்.

(அட என்னம்மா? இப்படி பண்றீயேம்மா. உங்க ரெண்டு பேர் சண்டையில, நடுவுல அவன ஏன்மா ஊறுகாயாக்குற. சரி அடுத்து என்னாகப் போதுன்னு அடுத்தடுத்த எபிசோட்ல பாக்கலாம். அதுக்கு முன்னாடி இன்னிக்கு எபிசோட்ல உங்களுக்கு பிடிச்ச சீன் எதுன்னு மறக்காம கமெண்ட்ல சொல்லுங்க. அப்படியே எப்பவும் போல லைக் பண்ணிட்டு உங்க பிரண்ட்ஸ் கூட ஷேர் பண்ணுங்க)

தித்திக்குமா?..

Comments   1

*** தேன் – 43 - படைப்பை ரேட் செய்யுங்கள் ***