விழியுடைய மொபைலுக்கு வேந்தன் கால் செய்ய, விழியோ கவியிடம் பேசிக் கொண்டிருக்க, சுஜி வேகமாய் அட்டண்ட் செய்து பேச ஆரம்பித்தாள். அதில் கடுப்பான கவியோ, வேகமாய் அவள் கையில் இருந்த மொபைலை எடுத்து தன் காதில் வைக்க, அங்கே கவி என்று அறியாத வேந்தனோ, “ச் அவ கிட்ட போன்ன கொடு” என்றான்.
“ஏன்? இப்போ என்கிட்ட பேசுனா என்ன பிரச்சன?” என்று கவி கேட்க, அதில் அந்தப் பக்கம் இருந்தவன் ஏதோ கரண்ட் கம்பியில் கால் வைத்தது போல் பதறி, “கவி நீயா?” என்றான்.
“அவகிட்டத்தான் பேசுவீங்களோ?” என்று கவி விடாது கேட்க, “ஹேய், நான் அந்த சுஜின்னு நினைச்சித்தான்” என்று சொல்லி முடிக்கும் முன்னே, “அவ பேரு சுஜாதா. முழு பேர் சொல்லி கூப்பிட மாட்டீங்களா?” என்றாள்.
அதில் இவனுக்கோ மண்டைக் காய, சுஜியோ வேகமாய், “ஹேய் அந்தப் பேர சொல்லாதன்னு உனக்கு எத்தன தடவ சொல்லியிருக்கேன். என் மாமா என்ன எப்படி வேணும்னாலும் கூப்பிடுவாரு. உனக்கென்ன வந்திச்சு? போன்ன கொடு. நான் மாமாட்ட பேசனும்” என்றாள்.
அவள் பேசியதைக் கேட்ட கவிக்கோ எரிச்சல் என்றால், வேந்தனுக்கோ, அத்தனை கடுப்பானது.
இரண்டு பேருமே ஒரே நேரத்தில், விழியைத்தான் திட்டிக் கொண்டனர். ஆனால் விழியோ, அதற்கும், அவளுக்கும் சம்பந்தமே இல்லாத அளவுக்கு சிப்ஸை எடுத்து சாப்பிட ஆரம்பித்தாள்.
“நீ எதுக்கு அவர்ட்ட பேசனும்? ஒழுங்கா, உன் ரூமுக்கு போ. தேவையில்லாம என்கிட்ட வாங்கி கட்டிக்காத” என்று கவி சுஜியிடம் சொல்ல, “மாமா என்கிட்ட பேசத்தான் கால் பண்ணாரு. நீ போன்ன கொடு” என்றாள் சுஜி.
“ச் அவரு ஒன்னும் உன் நம்பருக்கு கால் பண்ணல” என்று கவி சொல்ல, “ச் அதத்தான் நானும் சொல்றேன். இது ஒன்னும் உன் மொபைல் இல்ல” என்றாள் சுஜி.
இப்போது கவியுடைய கோவம் வேந்தனின் பக்கம் திரும்ப, “எதுக்கு நீங்க என் நம்பருக்கு கால் பண்ணல” என்று கோவமாய் கேட்டாள்.
அதில் அவனுக்கோ என்ன சொல்ல என்றே தெரியவில்லை. அவனே மனக் குழப்பத்தில் கால் செய்திருக்க, இப்போது இவர்கள் இருவரோ, இன்னுமே அவனுடைய பிபியை எகிற வைத்தனர்.
அவன் அமைதியாய் இருக்கவும், “சரி நான் உங்க அத்த மக கிட்டையே கொடுக்கிறேன்” என்று சொல்லியப்படி கவி சுஜியிடம் மொபைலை கொடுத்தாள். உடனே சுஜி வேகமாய் வாங்கி, “மாமா. எப்போ வறீங்க?” என்று கேட்க, அந்தப் பக்கம் சத்தம் வரவில்லை.
“என்ன மாமா பேசவே மாட்றாரு?” என்று கேட்பதற்கும், கவியுடைய மொபைலுக்கு வேந்தன் கால் செய்வதற்கும் சரியாக இருக்க, இப்போது அதை தூக்கி காட்டிய கவியோ, “இப்போ என் மொபைலுக்குத்தான் கால் வந்திருக்கு. சோ நான் தான் பேசுவேன். நீ அந்த மொபைல்ல இருந்து உன் மாமாட்ட பேசு” என்று நக்கலாய் சொல்லியப்படி அட்டண்ட் செய்து காதில் வைத்தாள்.
அந்தப் பக்கம் வேந்தனோ, எதுவும் பேசாமல் அமைதியாகவே இருக்க, அந்த அமைதி, கவியை என்னமோ செய்ய, அதுவரை இருந்த விளையாட்டுத்தனத்தை விட்டு விட்டு மொபைலுடன் வீட்டுக்கு வெளியில் சென்றாள்.
அதைப் பார்த்த சுஜியோ விழியிடம் வந்து, “பாரு விழி. அவ மட்டும் மாமாகிட்ட பேசுறா” என்று சொல்ல, “ம் உன் நம்பருக்கு அண்ணா கால் பண்ணா, நீயும் பேசு. இப்போ வா. நம்ம ரெண்டு பேரும் கேம் விளையாடலாம்” என்று சுஜியின் கவனத்தை திருப்பி டிவியில் மூழ்க வைத்தாள்.
இங்கே தன்னந்தனியாய் அந்த கடற்கரை காற்றை சுவாசித்தப்படி நின்றிருந்த வேந்தனின் இதயமோ அதற்கு போட்டியாய் பலமாய் துடித்தது.
மனம் என்ன முயன்றும் அமைதியடையவே இல்லை. ஏதோ திடீரென தனித்து விடப்பட்டது போல் தோன்றியது. இந்தப் பக்கம் கவியின் செவியில், வெறும் காற்று சத்தம் மட்டுமே கேட்டது.
“இன்னும் வீட்டுக்கு வராம என்னப் பண்ணிட்டிருக்கீங்க?” என்று கவி கேட்க, “நான் வந்தாத்தான் உனக்கு நிம்மதி இருக்காதே” என்றான் வேந்தன்.
அதில் சுள்ளென்று மனம் வலிக்க, “அப்போ நான் போயிட்டா வருவீங்கத்தான?” என்றாள்.
“ச் நீ அங்கேயே இருக்கனும்ன்றதுத்தான் என்னோட விருப்பம்” என்றான் வேந்தன்.
“அது இந்த ஜென்மத்துல நடக்காது” என்று அவள் பட்டென்று சொல்ல, மீண்டும் சில நொடிகள் மெளனம் அங்கே ஆக்கிரமித்தது.
இருவருமே பேசிக் கொள்ளவில்லை. ஆனால் அவர்கள் இருவருக்குள்ளும் ஆயிரம் யோசனைகள், குழப்பங்கள் ஓடிக் கொண்டிருந்தது.
சில நொடிகளுக்குப் பின் வேந்தன் அந்த அமைதியை கலைத்து, “இன்னிக்கு நான் வீட்டுக்கு வர மாட்டேன். நீங்க எல்லாரும் சாப்டு தூங்குங்க” என்றான்.
“இன்னும் அரை மணி நேரத்துல நீங்க இங்க வரலன்னா, நான் இங்க இருந்து கிளம்பிடுவேன்” என்றாள் கவி.
அதில் கடுப்பானவனோ, “ச் நான் தான் சொல்றேன் தான. எனக்கு இன்னிக்கு கொஞ்சம் வேல இருக்கு” என்றான். “கடற்கரையில, இந்த நேரத்துல உங்களுக்கு என்ன வேல?” என்று கேட்டாள்.
“ம் கடல் தண்ணிய நல்ல தண்ணியா எப்படி மாத்துறதுன்னு டிஸ்கஸ் பண்ணிட்டு இருக்கேன்” என்று கடுப்பாய் வேந்தன் சொல்ல, “அப்போ அத நாளைக்கு காலையில போயி டிஸ்கஸ் பண்ணுங்க. இப்போ வீட்டுக்கு வாங்க” என்றாள்.
“ச் சொன்னா புரிஞ்சிக்கோ கவி. எனக்கு” என்றவன் ஏதோ சொல்லி முடிக்கும் முன்னே, “எனக்கு நீங்க வரலன்னா தூக்கம் வராது” என்றாள்.
அதில் மீண்டும் ஒரு வித இறுக்கம். அமைதி. அவள் தான் அவனை விலகிப் போக சொல்கிறாள். ஆனால் அவளேத்தான் அவனை பிடித்து வைத்துக் கொள்ளவும் முயல்கிறாள். அது அவனுக்கு இன்னும் கடுப்பைத்தான் கொடுத்தது.
ஒரு கட்டத்தில், அவனால் அதை கேட்காமல் இருக்கவே முடியவில்லை. “உனக்கு ஏன் என்னைப் பிடிக்கவே இல்ல?” என்றான்.
“எனக்கு உங்கள ரொம்ப பிடிக்கும் சார்” என்றாள். அவளின் வார்த்தையில் இங்கே இவனின் முகம் லைட் எறிய, அதற்குள்ளாக அவளோ, “அதனாலத்தான், உங்களுக்கு நான் வேண்டாம்னு சொல்றேன்” என்றாள்.
அதில் அவனோ கோவமாய், “உன் லாஜிக் படி தாலி கட்டிட்டா, அவன் எப்படி இருந்தாலும் ஏத்துப்பத்தான” என்று எரிச்சலாய் கேட்டான். அந்தப் பக்கம் அவளோ, “ஒரு பொண்னுக்கு ஒரு தடவ தான் தாலி ஏறனும். அதுக்கப்புறம் ஏறிச்சின்னா, அதுக்கு அந்த வேல்யூ எல்லாம் கிடையாது. கேட்க கஷ்டமாவே இருந்தாலும், மறுபடியும் சொல்றேன் சார். நான் வேற ஒருத்தன் கூட வாழ்ந்துட்டேன். அப்படி இருக்கிறப்ப, அவன் நல்லவனோ? இல்ல கெட்டவனோ, என் வாழ்க்க அதோட முடிஞ்சிப் போச்சு. அதுக்கப்புறம் நீங்க வாழ்க்க கொடுக்க நினைச்சாலும், அத என்னால ஏத்துக்க முடியாது” என்றாள்.
ஏனோ அதைக் கேட்கும் போதே, இங்கே சுடருடைய கண்களில் அத்தனை கடுமை எட்டிப் பார்த்தது. உண்மையில் அத்தனை வலித்தது.
“அப்போ இதுத்தான் காரணம். அதனாலத்தான் என்ன வேண்டாம்னு சொல்ற” என்று கோவமாய் கேட்டான். “இப்பவும் சொல்றேன் சார். உங்களுக்கு நான் வேண்டாம். ஒரு சுத்தமான பொண்ண பார்த்து கல்யாணம் பண்ணிக்கோங்க. அதுத்தான் உங்க வாழ்க்கைக்கு நல்லது” என்றாள்.
“அப்போ நான் சுத்தமா இருக்குறதுத்தான் உனக்கு பிரச்சன? அப்போ நானும் போயி வேற ஒரு பொண்ணு கூட இருந்துட்டு வந்துட்டா, நீ என்ன ஏத்துப்ப” என்று சொல்லி முடிக்கும் முன்னே, “உங்கள கொன்னுடுவேன்” என்றாள்.
அவள் கண்ணில் அத்தனை கோவம். இங்கே இவனோ விடாது, “ஏன்? உன்னோட லாஜிக்படி பார்த்தா, அதுத்தான அர்த்தம்” என்றான்.
“ச் ஒரு பொண்ணுக்கு அண்ணன் மாதிரி பேசுங்க. அதுவும் போக, நீங்க எவ்வளவு பெரிய பதவியில இருக்கீங்க. நீங்கப் போயி இப்படி எல்லாம் பேசுறது கொஞ்சமும் சரி இல்ல” என்றாள்.
“ஏன் பதவியில இருக்கிற யாருமே அந்த தப்ப பண்ணலன்னு நீ நினைக்கிறீயா?” என்று வேந்தன் அசராது கேட்க, “நீங்க அந்த தப்ப ஒரு நாளும் பண்ணக் கூடாது” என்று கோவமாய் கூறினாள்.
“ஏன் பண்ணக் கூடாது?” என்று அவன் கேட்க, “ஏன்னா நீங்க என் ஹஸ்பண்ட். அப்படி எல்லாம் நீங்க போக கூடாது” என்று அவளையும் அறியாமல் கூறியிருந்தாள் கவி.
அவள் வார்த்தையில், இங்கே வேந்தனின் மனதிலோ மீண்டும் சிறு நம்பிக்கை பூக்க ஆரம்பித்தது.
“பட் இப்பத்தான நீ சொன்ன. பர்ஸ்ட் டைம் தாலி கட்டுனாத்தான் அந்த தாலிக்கு மதிப்புன்னு. இப்போ மட்டும் எந்த உரிமையில என்ன ஹஸ்பண்ட்ன்னு சொல்ற” என்றான்.
அப்போதே அவளுக்குமே அவள் பேசியது புரிய. ஆனாலும் சற்றும் அசராமல், “அந்த தாலி என் கழுத்துலத்தான் மதிப்பு இல்லன்னு சொன்னேன். ஆனா, உங்களுக்கு இருக்குத்தான. நான் வேற ஒரு பொண்ணு பார்த்து உங்களுக்கு கல்யாணம் பண்ணி வைக்கிற வரைக்கும், நீங்க அந்த தாலிக்கு துரோகம் பண்ணக் கூடாது” என்றாள்.
“ஏன், தாலி கட்டாம ஒரு பொண்ணு கூட போனா தப்பு. அதுவே, என் பொண்டாட்டியே எனக்கு வேற ஒரு பொண்ண பார்த்து” என்று சொல்லி முடிக்கும் முன்னே, “சுடர்” என்று கோவமாய் அதை தடுத்தாள்.
“என்னடி?” என்று இவனும் கடுப்பாய் கேட்க, “உங்க தங்கச்சிக்காகத்தான என்ன கல்யாணம் பண்ணீங்க?” என்றாள்.
“ச் இப்போ அதுக்கு என்ன?” என்று வேந்தன் கேட்க, “அவளேத்தான் நான் வேண்டாம்னு சொல்லிட்டாத்தான. அப்புறம் எதுக்கு நீங்க இப்படில்லாம் பண்ணிட்டிருக்கீங்க?” என்று கோவமாய் கேட்டாள்.
“ச் அதத்தான் நானும் சொல்றேன். உனக்குத்தான் பொண்டாட்டின்ற உரிமை வேண்டாம்னு சொல்லிட்டத்தான. அப்புறம் நான் வேற பொண்னுங்க கூட போனா உனக்கென்ன? நானும் மனுஷன் தான. எனக்கும் ஆச எல்லாம் இருக்கும்த்தான?” என்று விடாது பேசினான் வேந்தன்.
அதைக் கேட்டவளோ, “உங்களால அதெல்லாம் முடியாது” என்றாள். “ச் என்கிட்ட சேலஞ் பண்றீயா?” என்று இவன் கோவமாய் கேட்க, “இன்னும் பத்து நிமிஷத்துல நீங்க வீட்டுக்கு வரலன்னா. அதுக்கப்புறம், நீங்க என்ன பாக்கவே முடியாது” என்றாள்.
அதில், எரிச்சலானவனோ, “என்ன மிரட்டுறீயா? உனக்கு என்ன விட்டு போகனும். அதான” என்றான். “வீட்டுக்கு வாங்க” என்று இறங்கி வந்தாள் கவி.
“முடியாது” என்று அவன் சொல்ல, “சரி ஏதோ ஒரு பொண்னுக்கிட்டலாம் போக வேண்டாம். வீட்டுக்கு வாங்க. நான்” என்று சொல்லும் போதே அவள் கண்ணெல்லாம் கலங்கியது. அவள் அழுவதை உணர்ந்தவனுக்கு, மனம் என்னமோ செய்ய, “ச் நான் வீட்டுக்கு வரேன். அழாத” என்றான்.
அவளோ எதுவும் சொல்லாது அமைதியாகவே இருக்க, “சாரி” என்றப்படி ஜீப்பில் ஏறி உடனே ஸ்டார்ட் செய்தான். அவளோ அழைப்பை கட் செய்யவும் இல்லை. அவனிடம் பேசவும் இல்லை. அவனுமே அழைப்பை கட் செய்யாமலே அடுத்த பத்தாவது நிமிடம் அவள் முன் சென்று நின்றான்.
அவனைப் பார்த்ததும், அவள் தேம்பி தேம்பி அழ ஆரம்பிக்க, அவன் ஓடி சென்று அவளை இறுக்கமாய் அணைத்துக் கொண்டான்.
(ஸ்ப்பா.. இப்பவே கண்ண கட்டுதே. இவங்க பிரச்சனைக்கு என்னத்தான் தீர்வு? சரி அது என்னென்னு அவங்கத்தான் முடிவு பண்ணனும். செரி அடுத்து என்னாகப் போதுன்னு அடுத்தடுத்த எபிசோட்ல பாக்கலாம். அதுக்கு முன்னாடி இன்னிக்கு எபிசோட்ல உங்களுக்கு பிடிச்ச சீன் எதுன்னு மறக்காம கமெண்ட்ல சொல்லுங்க. அப்படியே எப்பவும் போல லைக் பண்ணிட்டு உங்க பிரண்ட்ஸ் கூட ஷேர் பண்ணுங்க)
தித்திக்குமா?..
Shree Ram
முடியாலா சாமி இந்த கவிக்கு என்னதான் பிரச்சினை 😍😍😍😍😍🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰