தென்றல் – 152

கதிரும், நிலாவும் அந்த நள்ளிரவு நேரத்தில் கிளம்பி நிற்க, தாமரையோ வழக்கம் போல், “ராவு பகல் பாக்காம, இப்புடி ஓடனும்னு என்னடி இருக்கு? செத்தப் பொறுத்த விடியக்காலையில கிளம்பி போகக் கூடாதா?” என்றார்.

அதில் நிலாவோ கதிரைப் பார்க்க, அதற்குள் செல்வித்தான், “ச் விடுக்கா, அதுக வேல அப்புடி. அதேன் போவனும்னு சொல்றாகத்தேன்ன, பொறப்படுறப்ப, எதுக்கு இப்படி கத்திட்டு இருக்கிறவ” என்று அவரை அடக்கிவிட்டு அவர்களிடமும், “இனியாச்சும் சண்ட சச்சரவு இல்லாம, உங்க வாழ்க்கைய வாழப் பாருங்க” என்று கூறினார்.

“செரி சித்தி” என்ற நிலா அவரைக் கட்டிக் கொள்ள, தாமரையோ கதிரிடம், “ஏய்யா, அவ சின்னப் புள்ள, ஏதாச்சும் முரண்டு கிரண்டுப் பிடிச்சான்னா, அவ போக்குக்கே விடாம, கொஞ்சம் இழுத்துப் புடிச்சு வச்சுக்கோய்யா. என் கண்ணும் காலும் நல்லா இருக்குறப்பையே, உம் புள்ளைய தூக்கி கொஞ்சனும்” என்று ரகசியமாய் அவரிடம் கூறினார்.

ஆனால் அது அருகில் நின்றிருந்த நிலாவின் காதில் தெளிவாகவே விழ, “மாமா. இன்னும் உங்க அக்காக்கு ஆறு சின்னப் புள்ளன்னே தெரியல” என்று சீண்டலாய் அவனிடம் கூறினாள்.

அதில் அவனோ அவளை முறைக்க, அவளோ சிரிப்பை உள்ளடக்கி, காரில் ஏறினாள். அவனும் மற்றவர்களிடம் சொல்லிவிட்டு, காரில் வந்து ஏறினான்.

ட்ரைவரோ, “ரொம்ப முக்கியமான விஷயம்னு சொன்னதாலத்தான் சார். திரும்ப திரும்ப கூப்டேன்” என்று மன்னிப்பைக் கேட்க, “உங்க கடமையத்தான நீங்க செஞ்சீங்க. அது சரித்தான். இப்போ நான் சொன்ன ரூட்டுல போங்க. எப்படியும் மூணு மணி நேரத்துல அங்கப் போயிடலாம்” என்றான்.

“சரிங்க சார்” என்று ட்ரைவர் காரை ஸ்டார்ட் செய்ய, நிலாவுக்கோ கதிரைப் பார்க்க பார்க்க சிரிப்பாய் வந்தது. அவள் சிரிப்பை அடக்குவதைப் பார்த்த கதிரோ அவள் பக்கம் திரும்பி, “அதேன் சிரிக்கனும்னு தோணுதுத்தேன்ன, பரவாயில்ல சிரி” என்று கடுப்பாய் கூறினான்.

முன்னே ட்ரைவர் இருக்கவும், அவளோ வெகு பவ்வியமாய், “நான் ஏன் மாமா சிரிக்கப் போறேன்?” என்று அப்பாவியாய் கேட்டாள்.

அதில் அவளை முறைத்தவனோ, “உன்ன சொல்றதுக்கு என்ன இருக்கு? எல்லாம் என் நேரம்” என்றான். “ஆனாலும் ஒரு பத்து நிமிஷம் கழிச்சு அந்த போன்னு வந்திருக்கலாம்ல மாமா” என்று வேண்டுமென்றே சீண்டினாள்.

அவளின் சீண்டலில், இங்கே இவனுக்குள் ஒரு ஆழ் பெரு மூச்சு எழ, கூடவே வெறுப்பேத்துபவளின் அல்லி இதழ்களை மொத்தமாய் தனதாக்கிக் கொள்ள, அவன் தேகம் உறுமியது. இருக்கும் இடமும், நேரமும் அவன் செய்கையைத் தடுக்க, அவன் உடல் சூடானது.

அவனைப் பார்க்கவும் பாவமாகத்தான் இருந்தது. ஆனாலும், ஏனோ நிலாவுக்கு சிரிப்புத்தான் வந்தது.

ஒரு கட்டத்தில் அவனோ, “ச் போதும்டி. சும்மா சிரிச்சு சிரிச்சு உசுப்பேத்திக்கிட்டு” என்றான்.

“நான் என்ன மாமா பண்ணுவேன். உங்களுக்காண்டித்தேன்ன கலெக்டரானேன். நீங்க சொன்னதத்தேன்ன மாமா நான் பண்ணேன்” என்று மீண்டும் அவனை வாரினாள்.

அவளின் வார்த்தையில், அவனோ, “ஆமா. நான்த்தேன் எல்லாத்துக்கும் காரணம் போதும்மா?” என்றான்.

“ச் கோவப்படாதீங்க மாமா. நீங்கத்தேன்ன சொல்லிருக்கீங்க. கடமைக்கு முன்னாடி எதுவுமே பெருசு கிடையாதுன்னு” என்று அவன் எப்போதோ சொல்லியதை எல்லாம் சொல்லி முடிந்த மட்டும் அவனை வெறுப்பேத்தினாள்.

அவனோ, ஒரு கட்டத்தில் வெளிப்பக்கம் திரும்பிக் கொள்ள, நிலாவின் மனமோ, “ச் என்ன நிலா? ஆனாலும் உன் மாமன்ன இம்புட்டு சீண்டாத” என்று சொல்ல, இப்போது அமைதியாய் அவன் பக்கத்தில் நெருங்கி அமர்ந்தாள்.

அதில் சட்டென்று திரும்பியவனின் கையை இறுக்கிப் பற்றி அவன் தோளில் சாய்ந்து, “எனக்கு தூக்கம் வருது மாமா” என்றாள்.

அப்போதே கைக் கடிகாரத்தைப் பார்த்தான். கிட்ட தட்ட பதினொரு மணியை நெருங்கியிருந்தது. எப்படியும், அங்கு செல்ல, ரெண்டு அல்லது மூணு மணி ஆகும். அதனால், அவனும். “மடியில படுத்துக்கிடுறீயா?” என்றான்.

“ம்” என்று சிறுமியாய் தலையாட்டியவளை தன் மடியில் சாய்த்துக் கொள்ள, அவளோ அவன் மடியில் படுத்துக் கொண்டு, தூங்காது அவனையேத்தான் பார்த்திருந்தாள். அவளின் நெருக்கமே, அவனை அத்தனை இம்சிக்க, இப்படி அவள் தூங்காமல், அவனையே பார்த்திருப்பது அவனை மொத்தமாய் படுத்தி எடுத்தியது.

“ச் தூங்கு நிலா” என்று அவன் சொல்ல, அவளோ அவன் கையை இறுகப் பற்றி, தன் கன்னத்தில் பதித்தவள், “குட் நைட் மாமா” என்றப்படி விழி மூடினாள். அவள் கன்னத்தின் மென்மை, இங்கே இவன் உள்ளங்கையை மட்டும் அல்லாது, அவனின் உடலையுமே சூடாக்கவே முயற்சித்தது.

“வேணும்னே பன்றா” என்று அவன் மனம் முனுமுனுத்தாலும், அவளின் அந்த நெருக்கமும் அப்போது அவனுக்கு தேவையாகத்தான் இருந்தது. மற்ற நேரமாக இருந்திருந்தால், அங்கே நடக்கும் பிரச்சனைக்கு, நிச்சயமாக பதட்டமாகியிருப்பாள். இல்லை என்றால், அதைப் பற்றியே யோசித்துக் கொண்டிருப்பாள். ஆனால் இப்போது அவளுடன் கதிர் இருக்கவே, அவளுக்கு சிறிய பதட்டம் கூட இருக்கவில்லை. அவள் என்ன செய்ய வேண்டும் என்பது அவளுக்கு தெரியும். மீதியை கதிர் பார்த்துக் கொள்வான். அந்த நம்பிக்கையில் சில நொடிகளில் கண் அசந்து விட்டாள்.

ஆனால் இங்கே கதிர் தான், அங்கு நடப்பவைகளுக்கு யார் காரணமாக இருக்கும்? என்று தன் போலீஸ் மூளையை போட்டு அலசி எடுத்துக் கொண்டிருந்தான். இதற்கிடையில் நிலாவுக்கு ஷீபாவிடம் இருந்து வரிசையாய் குறுஞ்செய்தி வந்திருன்க்க, அவனோ, அவளை எழுப்பாது, “ஆன் தி வே” என்று பதில் அனுப்பியிருந்தான்.

கிட்ட தட்ட அதிகாலை இரண்டரை மணி போல், கார் சேலத்திற்குள் நுழைந்தது. அங்கிருந்து இன்னும் ஒரு ஐம்பது நிமிட பயணம் தான். ஆனால் என்ன? முழுவதும் கரிசல்காட்டுப்பகுதி. தண்ணீர் கிடைக்குமா? என்பதே சந்தேகம் தான். அதனால், கதிர் ட்ரைவரிடம், “அண்ணா, ஏதாச்சும் ஒரு டிபன் கடையா பார்த்து காரை நிறுத்துங்க” என்றான்.

அவன் சொல்லியப்படியே ஒரு கடையின் முன் ட்ரைவர் காரை நிறுத்த, “போயி டீ காபி ஏதாச்சும் குடிங்கண்ணா. நாங்க வறோம்” என்றப்படி அவரை அனுப்பியவன், இப்போது தன் மடியில் நிம்மதியாய் தூங்கிக் கொண்டிருந்த நிலாவைப் பார்த்தான்.

சேலையை மாற்றிவிட்டு ஒரு சுடிதார் ஒன்றை அணிந்திருந்தாள். நெற்றியில் வைத்த குங்குமம் இன்னும் கூட அப்படியே இருந்தது. அது அவன் சட்டையிலுமே ஆங்காங்கே ஒட்டியிருக்க, அப்போதுத்தான், தாமரை, செல்வியின் குரு குரு பார்வைக்கான அர்த்தமே அவனுக்கு புரிந்தது.

“ஐயோ. அதேன் அக்கா அப்புடி பாத்தீச்சா. இவ பாத்திருப்பா. வேணும்னுத்தேன் சொல்லாம வுட்டுருப்பா” என்று தன் அக்கா மகளின் சேட்டையை அறிந்தப்படி நினைத்தவன், இப்போது மெதுவாய் அவள் கன்னம் தொட்டு, எழுப்பினான்.

“மாமா கொஞ்ச நேரம்” என்றவள், முற்றிலும் அக்கா மகளாகியிருக்க, “கலெக்டர் மேடம்” என்று அழுத்தி எழுப்பினான்.

அப்போதே இவ்வுலகம் வந்தவள், திடுக்கிட்டு, “அச்சோ ரொம்ப நேரம் தூங்கிட்டோம்மா. வந்தாச்சா?” என்று அத்தனை பதட்டமாய் அவனிடம் கேட்க, அவனோ இப்போது வாய் விட்டு சிரித்தான்.

அவன் சிரிக்கவும், இவளோ மெதுவாய் எட்டி சுற்றுப்புறம் பார்க்க, பொழுது விடியாததால் இருளாகத்தான் இருந்தது. மொபைலை எடுத்து மணியையும், இருக்கும் லொகேசனையும் செக் செய்தாள்.

அவனோ, “மேடம், வாங்க வந்து கொஞ்சம் முகம் கழுவிட்டு டீ காபி குடிங்க. இத விட்டுட்டா, அந்த மினிஸ்டரும், அவனோட ஆளுங்களும் நமக்கு குடிக்க தண்ணி கொடுக்கிறது கூட சந்தேகம்த்தேன்” என்றான்.

அவனின் மேடம் என்ற அழைப்பில் அவனை முறைத்தாலும், அவன் சொல்லியதும் உண்மை என்று புரிய கார் கதவைத் திறந்து இறங்கினாள். இன்னுமே தூக்கம் சற்று மிச்சம் இருக்க, கதிர் கடைக்குள் சென்று வாட்டர் பாட்டில் ஒன்றை வாங்கி வந்து அவளிடம் நீட்டினான்.

அதை வாங்கி முகம் கழுவியவள், கர்ஷீப்பில் சற்று தண்ணீரை ஊற்ரி, அவன் சட்டையில் ஒட்டியிருந்த குங்கும கறையை துடைத்தாள்.

அவளின் செயலில், “ஏன் இப்போத்தேன் மேடம் கண்னுக்கு இது தெரியுதா?” என்றான்.

அவளோ இப்போது அவன் சட்டையைப் பிடித்திழுத்து அவன் சட்டையில் முகத்தைத் துடைத்தாள்.

அவளின் செயலில், இவன் தான் அதிர்ந்து, “ச் நிலா” என்றான். “இப்புடி துடைச்சாத்தேன் மாமா, தூக்கம் போகும்” என்று உதட்டை சுழித்தாள்.

அதில் அவளை அணைத்துக் கொள்ள சொல்லி மனம் துடிக்க, “மேடம், அங்க என்ன பிரச்சன போயிட்டிருக்குன்னு நினப்புல இருக்கா? இல்லையா?” என்று சீண்டினான்.

“அதெல்லாம் இருக்கு. ஆனா, அங்க எனக்கு இல்ல, உங்களுக்குத்தேன் வேல ஜாஸ்தி” என்று சிறு அர்த்தம் பொதிந்த பார்வையைப் பார்த்தாள். விளையாட்டாய் இருப்பது போல் தெரிந்தாலும், அவள் கண்ணில் தெரிந்த அந்த அழுத்தம், அவள் எத்தனை தெளிவாய் சிந்தித்துள்ளாள் என்பதை சொல்லியது.

அதில் அவனுமே, “ஒரு ரெண்டு, மூனு பேரு மேல சந்தேகம்த்தேன்” என்றான். அவனின் வார்த்தையில் நெற்றியை நீவியவளோ, “ஆறு மேலையும் சட்டுன்னு கைய வெச்சிட வேண்டாம். முதல்ல, நாளைக்கு சி எம் வந்துட்டு போவட்டும், அதுக்கு பொறவு அடுத்து என்னப் பண்ணுறதுன்னு பாப்போம்” என்றாள் நிலா.

“அடி வெளிய தெரியாது போதும்மா?” என்றவன் நிச்சயம் இப்போது இதற்கு காரணமாய் இருந்தவர்களை சும்மா விடப் போவதில்லை என்பதை அவளுக்கு தெளிவாய் சொல்லியது.

அது அவன் வேலைத்தான். ஆனாலும் நிலாவின் இல்லை இல்லை கலெக்டரின் அனுமதி அவனுக்கு வேண்டுமே. அதனால் தான் கூறினான்.

அவனைப் பார்த்தவளோ, “செரி சார். ஆனா கவனம்” என்று அவள் அழுத்திச் சொல்ல, “அதேன் கலெக்டர் மேடம் என் கூட இருக்காங்களே, பொறவு ஏன் நான் கவலைப்படனும்” என்று கிண்டலாய் கேட்டான்.

அதில் அவளோ இப்போது, “பால் குடிக்கிறீங்களா மாமா? நான் வேணும்னா, பால் வாங்கிட்டு வரட்டா?” என்று அத்தனை சீண்டலாய் கேட்க, அவனோ, அவளை முறைத்தான்.

அவன் முறைப்பதைப் பார்த்து சிரித்தவளோ, “உங்களுக்கு பால்ன்னா ரொம்ப பிடிக்கும்த்தேன்ன சார். அதேன் கேட்டேன். வேண்டாம்னா விடுங்க” என்று சொல்லிவிட்டு முன்னே நடக்க, சட்டென்று அவளைப் பிடித்திழுத்து காரில் சாய்த்தவனோ, சுற்றி ஒரு நொடி பார்வையைத் சுழற்றினான்.

“ச்.. மாமா. என்னப் பண்…” என்றவளின் அடுத்த வார்த்தையையும் சேர்த்து, அவன் இதழுக்குள் விழுங்கியிருந்தான். அவனின் அதிரடி இதழ் முத்தத்தில், அவள் அதிர்ந்து விழிக்க, அவனோ இப்போது சற்று நிதானமாகவே அவள் இதழில் மூழ்கி மெதுவாய் விலகி, அவள் கன்னத்தில் அழுத்தி முத்தமிட்டான்.

அப்போதும் அவள் கண்கள் சொருக, ஒரு வித காதல் மயக்கத்தில் அவள் நிற்க, “ரொம்ப சீண்டுன, பொறவு எங்க இருக்கோம்? என்ன ஏதுன்னுலாம் நான் பாக்க மாட்டேன். நான் மாமன்னா நடக்கிறதும், போலீஸா நடக்கிறதும் கலெக்டர் மேடம் கையிலத்தேன், இல்ல இல்ல வாயிலத்தேன் இருக்கு” என்று சீண்டலாய் சொல்லிவிட்டு நகர்ந்தான் கதிர்.

நகர்ந்தவனின் கையைப் பிடித்து, காருக்குள் தள்ளி அவன் மேலே சென்று விழுந்தவள், அவன் கொடுத்த முத்தத்தை மொத்தமாய் அவனுக்கு திருப்பிக் கொடுத்து, “இந்த நிலா எப்பவுமே முதல்ல பொண்டாட்டியாத்தேன் இருப்பா” என்று சொல்லி அவன் கன்னத்தில் அழுத்தி முத்தமிட்டு விலகி எழுந்தாள்.

அவளின் அதிரடி செயலில், இப்போது கதிர்த்தான் மொத்தமாய் மதி மயங்கி அப்படியே சாய்ந்தமர்ந்து விட்டான். இவளோ அவன் முகம் பார்க்க இயலாது சிறு வெட்கத்துடன் கடைக்குள் ஓடியிருந்தாள்.

(ரொம்ப நல்லா இருக்கு கலெக்டர் மேடம். அப்போ ரெண்டு பேரும் வந்த வேலைய பாக்கப் போறது இல்ல. அதான்ன. செரி என்னமோ இதுகூட பாக்க நல்லாத்தேன் இருக்கு. அடுத்து அங்க என்னாகப் போவுதுன்னு அடுத்தடுத்த எபிசோட்ல பாக்கலாம். அதுக்கு முன்னாடி இன்னிக்கு எபிசோட்ல உங்களுக்கு பிடிச்ச சீன் எதுன்னு மறக்காம கமெண்ட்ல சொல்லுங்க. அப்படியே எப்பவும் போல லைக் பண்ணிட்டு  உங்க பிரண்ட்ஸ் கூட ஷேர் பண்ணுங்க)

தென்றல் தீண்டுமா?..

Comments   2

*** தென்றல் – 152 - படைப்பை ரேட் செய்யுங்கள் ***