தென்றல் – 150

நிலாவை சற்றும் அங்கே கதிர் எதிர்பார்க்கவே இல்லை. அவள் முகம் தாங்கி ஒரு வித வேகத்தில் ஆவேசமாய் முத்தமிட்டுக் கொண்டிருந்தவனை தடுக்காது, அத்தனை முத்தத்தையும் அமைதியாய் வாங்கிக் கொண்டாள்.

சில நொடிகள் கழித்து, “எப்படி நீங்க அப்படி சொல்லலாம்? என்னால உங்கள வெறுக்க முடியுமா?” என்றாள். அவளின் வார்த்தையில், அவள் கண்ணெல்லாம் கலங்க முயற்சிக்க, அப்போதே அவன் சொன்ன அந்த ஒற்றை வார்த்தைக்காக, இப்படி இத்தனை தூரம் திரும்பி வந்துள்ளாள் என்பதே அவனுக்கு புரிந்தது.

அந்த நொடி, அந்த நிலாவின் காதலின் முன்னே, இந்த கதிர் தோற்றுத்தான் போனான்.

அவளின் முன்னே அப்படியே சரிந்து, மண்டியிட்டான் அவன். அதில் அவளோ பதறிப் போய், “மாமா என்னப் பண்றீங்க?” என்றவள் அவனுக்கு நிகராக மண்டியிட்டு, அவனை எழுப்ப முயற்சித்தாள்.

“என்ன மன்னிச்சிடு நிலா” என்று அவன் சொல்ல, அவனின் அந்த செயலில், கோவமாய், அவனை முறைத்தவள், வேகமாய் அவனை இறுக்கி கட்டிக் கொண்டாள்.

“இதுக்கு மேல ஏதாச்சும் பேசுனீங்கன்னா, அம்புட்டுத்தேன். உங்கள மன்னிப்பு கேட்க வைக்கனும்னு நான் என் கனவுல கூட நினைச்சது கெடையாது” என்றாள்.

அதில் தன் அக்கா மவளை இறுக்கமாய் கட்டிக் கொண்டியவன், “தப்பு ஆறு பண்ணாலும்” என்று அவன் ஆரம்பிக்கும் முன்னே, “நீங்க எப்பவும் எந்த தப்பும் பண்ணல. நீங்க என்னப் பண்ணாலும் சரித்தேன்” என்றாள்.

தன்னவளின் அன்பில் நெகிழ்ந்தவன், அவளை மெல்ல தன்னில் இருந்து விலக்கி, அவள் கன்னம் தாங்கி, முகம் பார்த்து “நெசமா மாமா மேல கோவமில்லையா?” என்றான்.

அதில், “இந்த கதிர் மாமா மேல, நிலாக்கு எப்பவும் கோவப்பட தெரியாது. ஆனா நிறையா வருத்தமிருக்கு. அது, இந்த மாமா, அவீங்க அக்கா மவ மேல வச்ச பாசத்துல, இத்துனூண்டாச்சும் பொண்டாட்டி மேல வச்சிருக்கலாம்” என்றாள்.

அவளின் வருத்தம் புரிந்தவன், அவள் கன்னத்தில் அழுத்தமாய் இதழ் பதித்து, “இந்த மாமனுக்காண்டி, நிலா புருஷன்ன மன்னிக்கலாம்த்தேன்ன. எனக்காண்டி, அவெனுக்கு ஒத்த சான்ஸ் கொடு. கண்டிப்பா, அவென், அவென் பொண்டாட்டி மேல எம்புட்டு காதல் வெச்சிருக்கான்னு காட்டுவான்” என்றான்.

அதில் கண்ணீரும் சிரிப்புமாய், அவன் கழுத்தை கட்டிக் கொண்டு அவன் கன்னத்தில் அழுத்தி முத்தமிட்டாள். அதில் கதிரின் கண்ணிலும் கூட கண்ணீர் வடிந்தது. அதை வேகமாய் தன் பிஞ்சு விரலால் துடைத்தவள், “ச் என் மாமா எப்பவுமே அழக் கூடாது. இந்த மாமாக்காண்டி, அவருக்கு நான் வாய்ப்பு கொடுக்குறேன்” என்றாள்.

“அதுலையும் அவென் சொதப்பிட்டா?” என்று கதிர் அவள் முகம் பார்த்து கேட்க, “அடுத்தும் கொடுப்பேன்” என்றாள். அவளின், அந்த கள்ளமில்லாத அன்பில் நெகிழ்ந்து அவள் நெற்றியில் அழுத்தி முத்தமிட்டவன், “இந்த வாட்டி, அவென் எந்த தப்பும் பண்ணாம, மாமன் நான் பாத்துப்பேன்” என்றான்.

அதில் இன்னும் வாகாய் அவனை அணைத்துக் கொண்டவள், “ரொம்ப கஷ்டப்பட்டுட்டீங்களா?” என்றாள். “உன் கஷ்டத்த விட என் கஷ்டம் கம்மித்தாண்டி. ஆனா. இனி என்ன நடந்தாலும் என் கூடவே இருந்து தண்டன கொடு. என்ன விட்டுப் போயிடாத. என்னால அத தாங்கிக்கவே முடியாது” என்று அத்தனை உணர்ந்துக் கூறினான்.

சில மணி நேரம் அவளில்லாது அவன் பட்ட கஷ்டம், ஏதோ நரகத்தில் இருப்பது போல் இருந்தது. இப்படித்தானே அவன் அவளை போக சொல்லிய போது அவளுக்கு இருந்திருக்கும். அதை நினைக்கும் போதே தன் மீது அத்தனை ஆதங்கமாய் வந்தது.

அவளோ, அவன் இடப்பக்க நெஞ்சில் கரம் பதித்து, வலப் பக்க மார்பில் கன்னத்தை அழுந்தப் பதித்தாள், அவள் உச்சந்தலையில் அழுத்தி முத்தமிட்டு, இன்னும் இன்னும் என அவளை மொத்தமாய் இறுக்கிக் கொண்டான்.

இருவருக்கும் இடையில் காற்று புக கூட வழியின்றி, திறந்திருந்த ஜன்னல் வழி வந்த அந்த தென்றல் காற்று, அவர்கள் முகத்தில் சிறு கோவத்துடன் வேகமாய் வீசியது. அதில் இன்னும் வாகாய் அவனுக்குள் பொருந்தியவள், “மாமா பசிக்குது” என்றாள்.

அதில் சட்டென்று அவளை விலக்கி, “இன்னும் சாப்பிடலையா நீ?” என்று அவன் கோவமாய் கேட்க, “நீங்களும் சாப்பிடலத்தேன்ன” என்று அவள் திருப்பிக் கேட்டாள். அதில் அவள் இடையோரம் கைக் கோர்த்து அவள் நெற்றி முட்டி, “எப்புடி நிலா? உன் அளவுக்கு என்னால நேசிக்க முடியுமா?” என்றான்.

அவள் காதலிலும், நேசத்திலும் அவனுக்கே அத்தனை நடுக்கம். அதில் அவன் மூக்கோடு மூக்குரசி, “வேண்டாம். என் மாமாவ நான் மட்டும் நேசிச்சாலே போதும்” என்றாள்.

அதில் மெல்லமாய் அவள் கன்னத்தில் முத்தமிட்டவன், “ம்ஹூம், என் பொண்டாட்டி காதல்ல விட என் காதல் பெருசுன்னு நான் நிரூபிச்சிக் காட்டுறேன்” என்றான்.

“ம்ஹூம். இதுல நான்த்தேன் ஜெயிப்பேன்” என்று வேகமாய் நிலா சொல்ல, “போலீஸ்காரன் வீம்பு புடிச்சவண்டி. அத்தன லேசா எடுத்துக்காத” என்றான்.

“கலெக்டருக்கு வீம்பு ஜாஸ்தித்தேன். அத்தன லேசுல விட்டுக் கொடுத்துட மாட்டேன்” என்று உதட்டை சுழித்து ரோஷமாய் கூறினாள்.

“பார்ப்போமா?” என்று அவன் மீசையை முறுக்கியப்படி கேட்க, “ம் பார்க்கலாமே” என்றவள் மீசையை வருடினாள். அதில் இருவர் முகத்திலும் அப்படி ஒரு புன்னகை. வாய் விட்டு இருவரும் நீண்ட நாட்களுக்குப் பின் சிரித்தனர்.

அவர்கள் சிரிப்பு சத்தத்தில், அந்த அறையே மீண்டும் புத்துயிர் பெற்றிருந்தது. இருவரும் ஒருவரின் சிரிப்பில் மற்றொருவர் தன்னை மறக்க, “சிரிக்கிறப்ப அழகா இருக்க மாமா” என்று அவன் கன்னம் கிள்ளி கொஞ்சினாள்.

“என் பொண்டாட்டி முறைக்கிறப்ப கூட அழகுத்தேன்” என்று அவள் கன்னத்தில் எச்சில் பதிய முத்தமிட்டான். எத்தனை முத்தங்கள் என்று சொல்லிவிடவே முடியாத அளவுக்கு, அத்தனை முத்தங்கள், மாறி மாறி பரிமாறிக்கொள்ளப்பட்டது.

சட்டென்று நினைவு வந்தவனாய், “பசிக்குது சொன்னாத்தேன்ன. வா சாப்பிடலாம்” என்று அவள் கையைப் பிடித்து வெளியில் அழைத்து வர, அங்கே ஹாலில் சோர்வாய் அமர்ந்திருந்த யாருமே நிலாவை கவனிக்கவில்லை.

“அட என்ன செல்வி? எப்படியாச்சும், ஊர வுட்டு அனுப்புறதுக்கு முன்னாடி ரெண்டையும் சேர்த்திடலாம்னு பாத்தா, என்னென்னமோ ஆகிடுச்சி” என்று சோர்வாய் தாமரை சொல்ல, “ஆமாக்கா, எல்லாம் அந்த பிரியா புள்ளையால வந்திச்சு. அவள கூப்புட வேண்டாம்னு தலபாடா அடிச்சிக்கிட்டேன். இந்த மனுஷன் கேட்டாரா?” என்று தன் கணவரையும் முறைத்தாள்.

அதில் அவனோ, “ஏண்டி, படிச்சப் புள்ள பாத்து பக்குவா நடந்துக்கும்னு பாத்தா, அது பச்ச பாம்ப விட மோசமா இருக்கு. அவ பேசுன பேச்சுக்கு, மத்த நேரமா இருந்திருந்தா, நானே ஒன்னு விட்டிருப்பேன்” என்றார்.

“ஆமா இப்போ சொல்லுங்க. முதல்லையே, அந்த புள்ள விஷயத்துல தலையிட வேணான்னு தல பாட அடிச்சிக்கிட்டேன். நீங்களும், அவெனும்த்தேன், எங்க சித்திட்ட அத இத சொல்லி, அவள அந்த அர்ஜூன் பயளுக்கு கட்டி வெச்சீங்க. இப்போ பாத்தீங்களா? நீங்க பண்ண நல்லது கூட அவெள்ள மாத்தல. இவளெல்லாம், அந்த பாண்டி பையன் மாதிரி ஒருத்தனுக்கு கட்டிக் கொடுத்திருக்கனும்” என்று செல்வி கோவமாய் கூறினார்.

ஏனோ பிரியா, நிலாவை சொல்லிய வார்த்தையை அவரால் அத்தனை எளிதாக கடக்கவே முடியவில்லை. குழந்தை இல்லை என்ற வார்த்தை ஒரு பெண்ணை எத்தனை காயப்படுத்தும் என்று அவருக்கு தெரியாததா? 

ஆனாலும் மனம் ஆறாது, “எல்லாம் என் ராசித்தேன். அவெளுக்கு எல்லாமே முன்ன நின்னு நான் நடத்துனதாலத்தேன், அவளுக்கும் என் நிலமையோ என்னவோ” என்று சொல்ல, “ச் பைத்தியம்கணக்கா பேசுன தங்கச்சின்னு பாக்க மாட்டேன். எவெளோ என்னவோ சொன்னான்னு, நீ அம்புட்டையும் உன் தலையில போட்டுப்பீயா? ரத்னம் கணக்கா புள்ளைய பெத்து வெச்சிருக்க. அதுவும் போக, நிலா இன்னிக்கு உசுரோட இருக்கான்னா, அதுக்கு காரணம் நீ மட்டும்த்தேன். சும்மா எதையாச்சும் பேசிட்டு திரியாத” என்று தாமரை திட்டி விட்டு நிமிர, ஜோடியாய் கீழிறங்கி வந்த தம்பியையும், மகளையும் இமைக்காது பார்த்தார்.

அவர் திடீரென அமைதியாகவும், செல்வியும் அந்தப் பக்கம் திரும்ப அவரும் இதை எதிர்பார்க்கவில்லை. அவர்கள் வருவதை அறியாதோ முருகேசனோ, “ஆனாலும், உம்ம தம்பிக்கு இதெல்லாம் தேவத்தேன். வர்றப்போ, அவெகிட்ட சொல்லாமையே கிளம்பியிருக்கான். அதென், இப்போ எம்புள்ள” என்ற முருகேசன், “என்ன மாமோய்? நான் இல்லன்னதும், பேச்சு வேற மாதிரி போவுது” என்றிருந்தான் கதிர்.

அதில் அவரோ, “ஆமால்ல. சொல்லத்தேன் செய்வேன். எம்புள்ளைய தனியா” என்று சொல்லியபடி திரும்ப, அங்கே அவனின் கையை இறுக்கமாய் பற்றியப்படி நின்றிருந்த நிலாவைப் பார்த்து அப்படியே நிறுத்தினார்.

அதில் கதிரோ, “நானே தனியா அனுப்புனாலும் என் பொண்டாட்டி, என்னிக்கும் என்ன தனியா நிக்க விட மாட்டா மாமா” என்றவன் நிலாவை காதலாய் பார்த்தான்.

அவளோ, “ச் மாமா” என்றவள் அவனை சிறு வெட்கத்துடன் பார்க்க, அக்காட்சியைப் பார்த்த செல்வியும், தாமரையும், “மீனாட்சித்தாயே. என் வேண்டுதல நிறைவேத்திட்ட” என்று உள்ளுக்குள் அத்தனை சந்தோஷப்பட்டனர்.

யாருமே நிலாவிடம் எப்படி வந்தாய்? என்று கேட்கவே இல்லை. அவர்கள் ஜோடியாய் இருப்பதே போதுமானதாய் இருந்தது.

அதற்குள் கதிர் தான், “அக்கா பயங்கர பசி. சாப்பாடு எடுத்து வைக்கிறீயா?” என்றப்படி நிலாவுடன் டைனிங் டேபிள் சென்றமர்ந்தான்.

எங்கே, ஒரு வாய் சாப்பிடாமலே சென்று விடுவானோ என்று கவலைப்பட்டவருக்கு, இப்போது அத்தனை சந்தோசம். கோவிலில் இருந்து கொண்டு வந்த தூக்குவாளியை திறந்து இருவருக்கும் பரிமாறினார்.

நிலாவும், கதிரும் ஒருவரை ஒருவர் பார்த்தப்படி இருக்க, முருகேசன் தான், அவர்களுக்கு தனிமைக் கொடுக்க என்ணி, “செரி செரி. அக்காவும், தங்கச்சியும் பாசத்த கொட்டுனது போதும். காலையில இருந்து ஒரே அலைச்சல். சீக்கிரம் போயி படுத்தாத்தேன் காலையில எந்திரிக்க முடியும். போயி படுங்க. அதெல்லாம் அவீக போட்டு சாப்பிட்டுப்பாக” என்றப்படி அவர் அறைக்கு சென்றார்.

அதில் தாமரையும், “ஆமா செல்வி, அவ புருஷனுக்கு அவ பரிமாறுவா. நீ போயி உன் புருஷன்ன பாரு. நான் கதிரவன்ன பாக்குறேன்” என்றப்படி அங்கிருந்து சென்றார்.

செல்வியோ, செல்லும் போது, “ஏத்தா நிலா சாமி பூவு, அங்க ஹால்ல இருக்குற பையிலத்தேன் இருக்கு. எடுத்து வச்சுக்கோ. பால்ல சுண்ட காய்ச்சித்தேன் வச்சிருக்கேன். போறப்ப எடுத்துட்டு போ” என்று ஜாடையாய் சொல்லிவிட்டு சென்றிருந்தார்.

அவரின் வார்த்தையில், அது வரை இருந்த இதம் எல்லாம் சற்று மாறி, கதிரைப் பார்த்தாள் நிலா. அவனுமே அவளையேத்தான் பார்த்திருந்தான். இதுவரை தெரிந்த பசி இப்போது எங்கோ தொலை தூரம் சென்றது போல் ஒரு உணர்வு.

இருவரின் மனதிலும் காதல் என்ற தீ கொளுந்து விட்ட எரிய, இன்னும் தீர்க்கப்படாத பிரச்சனைகள் இருந்தும் கூட, அந்த நொடி இருவருக்குமே, மனம் ஒன்றாகியிருக்க, அவர்கள் சேர என்ன தடை இருக்கப் போகிறது.

அவன் கண்ணில் தெரிந்த அந்த மின்னலில், இப்போது நிலாவின் முகத்தில் வெட்கத்தின் சாயல். அவன் பார்வையை சந்திக்க இயலாது அவள் தலைக் குனிந்தாள். ஆனாலும் அவள் பசியை நினைவுப்படுத்தி கதிர் அவளுக்கு ஒரு வாய் உணவை எடுத்து நீட்டினான்.

அவளோ அதை வாங்கிக் கொள்ளாது அவனுக்கு முதல் வாய் எடுத்து ஊட்டினாள். அதில் சிரித்தப்படி அதை வாங்கிக் கொண்டவன், அவளுக்கும் ஊட்டி விட்டான். தட்டில் இருந்த சாப்பாடு காலியாகிவிட்டது. பசியும் தீர்ந்து விட்டது. ஆனால் புதிதாய் உருவான அந்த காதலுக்கும், காமத்துக்கும் இடையிலான உணர்வு, இருவரையும் படுத்தி எடுத்தது.

“நிலா” என்று மென்மையிலும் மென்மையாய் தாபம் கலந்து அவன் அழைக்க, “ம்ம்…மாமா…!” என்ற அந்த பதில் வார்த்தைக் கூட அவளுக்கு அத்தனை திக்கியது. அவனைப் பார்க்க முடியவில்லை. ஏதோ புதிதாய் ஒரு வெட்கம்.

“பால் எடுத்துட்டு வரேன்” என்று அவன் முகம் பார்க்காது சொல்லிவிட்டு கிச்சனுக்குள் ஓடியிருந்தாள் நிலா. இங்கே இவனோ பையில் இருந்த அந்த மல்லிகை சரத்தை கையில் எடுத்து வாசம் பிடித்தான்.

(க்கும் இப்படி பூவ பார்த்துட்டே இருந்தா எப்படி? எந்த நந்தியும் வர்றதுக்கு முன்னாடி ரூமுக்கு போவாங்களா? செரி எப்படியும் இந்த இடத்துல எபிசோட முடிச்சதுக்கு எல்லாரும் நம்மள திட்டுவாங்கத்தான். ஆனாலும் அடுத்த எபிசோட்லத்தான், அடுத்து என்னென்னு பாக்க முடியும். அதுக்கு முன்னாடி இன்னிக்கு எபிசோட்ல உங்களுக்கு பிடிச்ச சீன் எதுன்னு மறக்காம கமெண்ட்ல சொல்லுங்க. அப்படியே எப்பவும் போல லைக் பண்ணிட்டு உங்க பிரண்ட்ஸ் கூட ஷேர் பண்ணுங்க)

தென்றல் தீண்டுமா?..

Comments   1

*** தென்றல் – 150 - படைப்பை ரேட் செய்யுங்கள் ***