தென்றல் – 149

நிலாவின் பின்னே செல்வி செல்லப் போக, துளசித்தான், “அவள கொஞ்சம் நேரம் தனியா விடுங்க, அவளே செரியாகிடுவா” என்றாள்.

“இதுக்குத்தேன் அவள அழைக்காதீங்கன்னு சொன்னேன்” என்று செல்வி முருகேசனிடம் பாய, அவரோ, “ஏண்டி, அவளுக்காண்டி, உங்க சித்தி குடும்பத்த வுட்டுட முடியுமா? என்றார்.

இப்படி ஆளாளுக்கு பேசிக் கொண்டிருக்க, தாமரைத்தான், “அதேன் அவளே போயிட்டாத்தேன்ன. விசேச வீட்டுல, இப்படி நாலு பேரு நால சொல்லத்தேன் செய்வாக. நீ போய் மத்த காரியத்த பாரு” என்று அனுப்பினார்.

கதிருக்கோ நிலாவிடம் செல்லவே அத்தனை நடுக்கம். அப்படியே அங்கேயே ஒரு கல்லில் அமர்ந்து விட்டான். மற்றவர்களும், விசேசத்துக்கான ஏற்பாட்டை கவனிக்க சென்றனர்.

அங்கே அன்னேரம் கதிரின் முன்னே வந்து நின்றாள் மலர். தன் முன்னே நிழலாடவும் நிமிர்ந்து பார்த்தவன் எரிச்சலாய் அங்கிருந்து நகர முயன்றான்.

அதற்குள்ளாக, “என்னமோ, உங்க அக்கா மவள ஒரு வார்த்த நான் தப்பா சொல்லிட்டேன்னு, என்ன அடிச்சீங்க. இப்போ இத்தன பேர் முன்னாடி ஒருத்தி, மொத்தமா அவள அழ வச்சிட்டு போயிருக்கா. ஆனா உங்களால எதுவும் செய்ய முடியலல்ல?” என்றாள்.

அவள் குரலில் தெரிந்த கேலியில், “ஹேய்” என்று அவன் ஏதோ பேச முயற்சிக்க, “நில்லுங்க. நான் இன்னும் பேசி முடிக்கல. நான் உங்க மேல ஆசைப்பட்டேன் தான். ஆனா அதுக்காக என்னிக்கும் நீங்க நல்லா வாழ கூடாதுன்னு நான் நினைச்சது கிடையாது” என்றாள்.

அவளின் அந்த வார்த்தையில், அவன் அவளை அமைதியாய் பார்க்க, “நீங்க என்ன கட்டிக்கிட்டாலும், இல்லன்னாலும், என்னிக்குமே நீங்க எனக்கு என் மாமன் மகன்த்தேன். அவ எனக்கு என் தங்கச்சித்தேன். அன்னிக்கு அவ கிட்ட நான் நடந்துக்கிட்டது வேனும்னா தப்பா இருக்கலாம். ஆனா நான் சொன்னதுத்தேன் நிசம்” என்றாள்.

அதில் இவனோ, “இங்கப்பாரு. ஒரு பொண்னுக்கு படிப்பும், வேலையும்த்தேன், கடைசி வர கூட வரும்” என்று கதிர் சொல்ல, “அப்போ அது மட்டுமே அவளுக்கு போதும்னா, எதுக்கு அவள கல்யாணம் பண்ணீங்க? அவள கொண்டு போய் ஒரு ஹாஸ்டல்ல சேர்த்து விட்டிருந்தாலே, அவ அத பண்ணியிருக்கப் போறாளே” என்றாள் மலர்.

அதில் அவனோ அமைதியாய் நிற்க, “இங்கப்பாருங்க மச்சான். நீங்க அவள கலெக்டர் ஆக்கனும்னு நினைச்சது தப்பு கிடையாது. ஆனா, அதுக்காக, அவள நீங்க மனைவியா பாக்காம, அவ மனசுல என்ன இருக்குன்னு தெரிஞ்சிக்காம, நீங்க நினைச்சதுத்தேன் செரின்னு, நீங்க பண்ண எதுவும் நிச்சயமா செரி கிடையாது. புருஷன் பொண்டாட்டின்னா, சந்தோஷத்துல மட்டுமே பங்குப் போட்டுக்கிடுறவங்க கிடையாது. துக்கத்துலையும் ஒருத்தர்கொருத்தர் அனுசரணையா இருக்கனும். அதத்தேன் நிலா, உங்களுக்கு பண்ணனும்னு நினைச்சா, ஆனா நீங்க, அத கொஞ்சம் கூட புரிஞ்சிக்காம, அவள படிக்க அனுப்புனீங்க. அத கூட வுட்டுடலாம். ஆனா நீங்க அவெள்ள மொத்தமா ஒதுக்கி வெச்சிருக்கவே கூடாது. மனசுலையும், நினப்புலையும் முழுசா உங்கள வெச்சிட்டு, அந்தப் புள்ள தனியாளா, அங்க கெடந்து எம்புட்டு வெசனப்பட்டிருக்கும். உங்களுக்கும் கஷ்டம்த்தேன். ஆனா, பொண்ணுங்க கஷ்டமும், ஆம்பளைங்க கஷ்டமும் ஒன்னு கெடையாது மச்சான். முதல்ல அத புரிஞ்சிக்கோங்க. இந்த சமுதாயத்துல, ஆம்பள மேலையே தப்பு இருந்தாலும், குத்தத்த புல்லா பொம்பள மேலத்தேன் சொல்லும். அது பொண்ணுங்களோட சாபம். அவள கலெக்டராக்கிப் பார்த்தீங்க. ஆனா அவ மனசுல இருந்த காதல்ல நீங்க பாக்கவே இல்ல. இப்பக் கூட அவ கண்ணுல அத்தன காயத்த தாண்டியும் உங்க மேல அந்த காதல் அப்படியேத்தேன் இருக்கு. இதெல்லாம் உங்களுக்கே தெரியும்த்தேன். ஆனாலும், இப்படி நீங்க ஒதுங்கியே நின்னுட்டிருந்தா, இன்னுமே அந்தப் புள்ளத்தேன் காயப்பட்டு கெடக்கனும். அவ மனசுல இருக்க அழுத்தம் போகனும்னா, நீங்க அவ கூட இருக்கனும். அவட்ட முதல்ல பேசுங்க மச்சான். நான் வரேன்” என்று சொல்லியவள், அங்கிருந்து நகர்ந்தாள்.

“மலர்” என்று அவன் அழைக்க, அதில் மெதுவாய் சிரித்தவளோ, “உங்க நன்றி எல்லாம் வேண்டாம். அடுத்த வருஷம் உங்கள நான் பார்க்குறப்ப, என் புள்ளைக்கு, ஒரு தங்கச்சி பாப்பாவோட வாங்க” என்று சொல்லிவிட்டு சென்றிருந்தாள்.

அதில் மெலிதாய் இதழ் பிரித்து சிரித்தவனுக்கோ, இப்போது நிலாவின் முகம் நினைவுக்கு வந்தது. அடுத்த நொடி தன்னை நேற்றி அவளைத் தேடி காருக்கு சென்றான்.

ஆனால் அதற்கு முன்பாகவே அவனின் அக்கா மகன் கதிரவன், அவளை சமாதானப்படுத்தி இழுத்து சென்றிருந்தான். அவளும் கதிரவனுடனே ஒட்டிக் கொண்டாள்.

இப்போது ஏனோ கதிரவனின் மீது கோவம் வரவில்லை. மாறாக, அவள் மனதை மாற்றியதற்கு அவனின் மீது பாசம் தான் பொங்கியது. கதிரவனை தூக்கி வைத்திருக்கும் தன் மனைவியைப் பார்த்தவனின் தோளில் முருகேசன் கையை வைத்தார்.

“என்ன மன்னிச்சிடு மாப்புள்ள” என்று அவர் சொல்ல, “ச் அட என்ன மாமா நீ? வா. வந்து வேலைய பார்க்கலாம்” என்ற கதிருமே வேலையை பார்க்க ஆரம்பித்தான்.

தாய்மாமனின் மடியில் அமர கதிரவனை அழைக்க, அவனோ நிலாவின் கையில் இருந்து இறங்க மாட்டேன் என்று அடம்பிடித்தான்.

அதில் நிலாத்தான் அவனை சமாதானப்படுத்தி கதிரின் மடியில் அமர வைத்து விட்டு நகர, கதிர் அவள் கையையும், கதிரவன் அவள் சேலை முந்தானையையும் ஒரே நேரத்தில் பிடித்தனர்.

அதில் அவளோ கதிரை கண்டுக் கொள்ளாது, கதிரவனிடம், “அக்கா எங்கேயும் போல, இங்கத்தேன் இருக்கேன்” என்று சொல்ல, அதன் பின் தான் கதிர் நிலாவின் கையை விடுவித்தான்.

ஒரு வழியாக கதிரின் மடியில் வைத்து, மொட்டையடித்து காது குத்தி முடித்தனர். இதற்கிடையில், கதிரவனை விட, நிலாத்தான் கலங்கித் துடித்தாள். சட்டென்று நிலாவுக்கு மொட்டை போட்டு காது குத்திய நிகழ்வு முதன் முதலாய் கதிருக்கு வந்தது.

அப்போது அவனுக்கு ஒரு பத்து வயது இருக்கும். அவள் மூன்று வயது சிறுமி. அவள் மடியில் சமத்தான் அவள் அமர்ந்திருக்க, காது குத்தும் போது பயத்தில் அவன் சட்டையை அவள் இறுக்கிப் பிடிக்க, இவனின் கண்ணில் காரணமேயின்றி கண்கள் கலங்கியது.

அவன் அந்த நினைவில் இருக்க, “ஏத்தா நிலா, ரெண்டு பேரையும், அழைச்சிட்டு வாடா” என்று சொல்ல, “வாங்க” என்றாள்.

அவளுக்கோ ஒரு வித இறுக்கம். முடிந்த மட்டும், விசேசம் நல்லப்படியாக முடியட்டும் என்று தன் வலியை மறைத்திருந்தாள். அதனாலையே அவளால் கதிரை நேருக்கு நேர் சந்திக்க முடியவில்லை.

அதன் பின் சாமியை கும்பிட்டு விட்டு, பொங்கல் வைத்து, பந்தி பரிமாற கதிர் தான் அத்தனையையும் முன்னே நின்று பார்த்தான், நிலாவுக்கோ உடனே கிளம்ப வேண்டும். அதனால் அமைதியாய் காரில் சென்று அமர்ந்து விட்டாள்.

நிலாவும், தாமரையும் அவளை சாப்பிட அழைத்தும், “இல்ல சித்தி நான் உடனே போவனும். இப்போ கிளம்புனாத்தேன் சரியா இருக்கும். கிளம்புறேன்” என்றாள்.

ஏனோ சொந்தக்காரர்கள் முன்னே அவளால் இயல்பாக இருக்க முடியவில்லை. அனைவரும் ஏதோ பரிதாபமாய் பார்ப்பது போல் தோன்றியது. அதுவும் போக, என்னைக் காட்டி கதிரையும் யாராவது, ஏதாவது சொல்வார்கள் என்று தோன்ற, அவள் அங்கிருந்து செல்வதில் தான் முனைப்பாய் இருந்தாள்.

“இப்போ எதுக்கு கால்ல சுடுதண்ணிய ஊத்திட்டு நிக்கிறவ? ஒத்த நாள் கூட உனக்கு லீவு கொடுக்க மாட்டாங்களா?” என்றார் தாமரை.

அதற்குள் முருகேசன் தான், “ச் நீங்க சொன்னீங்கன்னு அவத்தேன் சபையில வந்து நின்னாத்தான்னே. பொறவும் ஏன், அவள போட்டு படுத்தி எடுக்குறீங்க. கலெக்டர்னா சும்மாவா? அவளுக்கும் அங்க வேல இருக்கும்த்தேன்ன. நீ கிளம்புடா. எப்போ உனக்கு லீவு கெடைக்குதோ அப்போ வந்து ரெண்டு நாள் இருந்துட்டு போம்மா” என்றார்.

“செரி சித்தப்பா” என்றவள் ட்ரைவரிடம் தன்னுடைய காரை எடுத்து வர சொல்லியிருக்க, அவரும் வந்திருந்தார்.

அவள் காரில் ஏறிவிட, தாமரையோ “அவன்ட்ட ஒத்த வார்த்த சொல்லிட்டாச்சும் போடி” என்றார். அதில் அவளோ, சற்று தள்ளி மும்முரமாய் வேலைப் பார்த்துக் கொண்டிருந்த கதிரைப் பார்த்தாள்.

“உங்க தம்பியவாச்சும் கூட ரெண்டு நாள் வச்சி அனுப்பனுமா? இல்ல அப்படியே என் கூடவே அவரையும் அனுப்பி வைக்கப் போறீங்களா?” என்றாள்.

அவளின் கேள்வியில், “ஏண்டி சொல்லிட்டு போன்னுத்தேன்ன சொன்னேன்” என்று அவர் கேட்க, நிலாவோ, “இப்போ நான் போயி சொன்னா, அவரும் என் கூடவே கிளம்பிடுவாரு” என்றாள்.

அதில் தாமரையும் எதுவும் சொல்லாது. “செரிடி. பொறவாச்சும் அவனுக்கு ஒத்த போன்ன போட்டு சொல்லு” என்று சொல்ல, செல்வியோ, “அவனையும் அழைச்சிட்டு போத்தா” என்றார்.

ஏனோ தனி தனியே அனுப்ப அவருக்கு மனம் வரவில்லை. “அட என்ன சித்தி? எனக்கு மட்டும் இல்ல. என் தம்பிக்கும் அவருத்தேன்ன தாய் மாமா. அவரு முறைய செய்ய வேண்டாமா? எனக்கும் ரெண்டு நாள். வூட்டுக்குலாம் போ முடியாது. அவர் இங்கேயே இருக்கட்டும்” என்றப்படி காரில் ஏறி கிளம்பியிருந்தாள்.

அவள் சென்ற சில நிமிடங்களுக்குப் பின் தான் துளசியுடன் கதிரவன் இருப்பதைக் கவனித்தான் கதிர். “என்ன அதிசயமா? அவென் அக்காவ வுட்டுட்டு இருக்கான்” என்று யோசித்தவன் வேகமாய் நிலாவைத் தேடி பார்வையை சுழட்டினான்.

அவள் அங்கு இருந்தால் தானே? அவளோ எப்போதோ கிளம்பியிருக்க, அவர்கள் வந்த காரும் அங்கேயேத்தான் நின்றிருந்தது. அதனால் தான் அவனுக்கு அவள் கிளம்பியிருப்பாள்? என்று தோன்றியிருக்கவே இல்லை.

அவன் சுற்றி முற்றி பார்த்தப்படி இருக்க, “அட என்ன மச்சான்? வெறும் இலைய எம்புட்டு நேரம்த்தேன் பாத்துட்டு இருக்கிறது. செத்த சோத்த போடுறது” என்று கேலியாய் துளசி சொல்ல, அவனும் பந்தி பரிமாற ஆரம்பித்தான்.

பின், நிலா சாப்பிட வில்லையே என்ற எண்ணம் தோன்ற, அவளை தேடி வந்தான். அவள் எங்கேயும் இல்லை என்றதும், “அக்கா, நிலா இன்னும் சாப்பிடலத்தேன்ன. எங்க இருக்கா?” என்றான்.

அதில் அவரோ என்ன சொல்ல என்று புரியாது, “நிலா கிளம்பிட்டாப்பா” என்றார். அப்போதும் கூட அவள் வீட்டுக்கு சென்றிருப்பாள் என்று நினைத்து, “அதுவும் செரித்தேன். இங்கன இருந்தா, ஆறாச்சும் ஏதாச்சும் சொல்லிட்டே இருப்பாக. அங்கன ரானிக்கா இருக்குத்தான. சாப்பாடு ஏற்கனவே வூட்டுக்கு கொடுத்துட்டாச்சித்தேன்ன” என்றான்.

அவனின் கேள்வியில், “அவ ஊருக்கு போயிட்டா கதிரு” என்றார். “என்ன?” என்றவனுக்கு புரியவே இல்லை. அவனுக்கும் தெரியும் நாளைக்கு அவள் அங்கு இருக்க வேண்டும் என்று. ஆனால் அதற்கு அவள் இன்றே கிளம்ப வேண்டிய அவசியமே இல்லை. நாளை காலையில் கிளம்பினாலே போதும். அப்படி இருக்க, இப்போது அவள் கிளம்பியிருப்பாள் என்று அவன் நினைக்கவே இல்லை.

அவனைப் பார்க்கவும் வருத்தமாய் தான் இருந்தது. “இல்லைய்யா. நானும் சொன்னேன். அவத்தேன் நீ இங்கன இருக்கட்டும்னு சொல்லிட்டா” என்றார்.

“ச் என்னக்கா நீ? அதுக்குன்னு எண்ட்ட வந்து சொல்ல மாட்டீயா நீ?” என்றவனும் உடனே கிளம்ப செல்ல நினைக்க, அங்கே அவர்கள் வழக்கப்படி, மாலை மாமன் கையால் தான், அனைவருக்கும் பச்சரிசி, திண்பண்டங்கள் எல்லாம் வந்தவர்களுக்கு கொடுக்க வேண்டும். அதனால் தான் நிலா அவனை விட்டு விட்டு சென்றிருந்தாள்.

இப்போது அவனுக்குமே சட்டென்று கிளம்ப முடியவில்லை. ஆனால் வேகமாய் தன் மொபைலில் இருந்து நிலாவுக்கு கால் செய்தான். அவளோ எடுக்கவில்லை. அடுத்தடுத்து அவன் அழைக்க, காரில் சாய்ந்தமர்ந்து எதையோ யோசித்தப்படி இருந்தவளுக்கு மொபைல் அடித்ததே தெரியவில்லை.

“மேடம். உங்க போன் அடிக்கிது” என்று ட்ரைவர் சொல்ல, அப்போதே அதை கவனித்தாள். அதற்குள் மணியைப் பார்த்தாள். மூன்று மணியை தாண்டியிருந்தது. இன்னும் ஒரு மணி நேரத்தில் வீட்டுக்கு சென்று விடுவாள். இப்போது அவனிடம் பேசும் மன நிலை சுத்தமாய் இல்லை. ஆனால் இப்போது அவள் எடுக்காவிட்டாலும், அவன் திரும்ப திரும்ப அழைப்பான்.

அதனால், “அண்ணா நீங்க இன்னும் சாப்பிடலத்தான. அந்த ஹோட்டல்ல நிறுத்துங்க” என்றவள் அவரை சாப்பிட அனுப்பிவிட்டு, இவள் கதிரின் அழைப்பை ஏற்றாள்.

இவள் ஹலோ சொல்லும் முன்னே, “என்னை வெறுத்துட்டீயாடி?” என்றான். அவனின் ஒற்றைக் கேள்வியில் இங்கே இவளுடைய இதயம் துடிப்பை நிறுத்தியிருந்தது.

சில நொடி அப்படியே தேங்கியவள், அடுத்த நொடியே, “என்ன பேசுறீங்க நீங்க?” என்றாள்.

“என்ன விட்டுட்டு போயிட்டல்ல” என்றான். அவன் குரலில் அப்படி ஒரு ஆதங்கம், வலி. அதை இவளால் உணர முடிந்தது. “அந்தளவுக்கு இந்த மாமன் உனக்கு ஆகாதவன்னாகிட்டேன்ல” என்றான்.

அவன் வார்த்தையிலேயே, அவன் கண் கலங்கியிருப்பது அவளுக்கு புரிய, அவனோ, தன் வலியை மறைத்து, “சாரி. நான் ஏதேதோ பேசி உன்ன நான் கஷ்டப்படுத்திட்டே இருக்கேன். நான் இல்லாமலாச்சும் நீ கொஞ்சம் நிம்மதியா இரு. கவனமா போ” என்றவன் அழைப்பை வைத்திருந்தான்.

ஏனோ அவளிடம் பேசவே அவனால் முடியவில்லை. அவள் சென்றதை அவனால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. முருகேசன் சொல்லியும் அவன் சாப்பிடவில்லை. அதன் பின் அனைவரும் சாப்பிட்டு, முடித்து கோவிலில் இருந்து கிளம்ப, மணி ஏழைத் தாண்டியிருந்தது.

கதிரோ அப்படியே கிளம்பத்தான் நினைத்தான். ஆனால் கோவில் சென்று விட்டு வீட்டுக்குத்தான் செல்ல வேண்டும் என்று சொல்லிவிட வேறு வழியின்றி காரில் வந்தமர்ந்தான்.

இப்போது கதிரவன் அவன் மடியில் படுத்துத்தான் தூங்கிக் கொண்டிருந்தான். கதிரின் மனமோ நிலாவிடமே இருக்க, அவனுக்கோ அவன் மீதே கோவம். வீட்டுக்கு வந்ததும், கதிரவனை முருகேசன் வாங்கிக் கொள்ள, அவன் அவன் பேக்கை எடுக்க வேகமாய் அவனறைக்கு சென்றான். ஏனோ அதற்கு மேல் அவனால் அங்கிருக்க முடியும் என்று தோண்றவில்லை.

மற்றவர்களிடமும் அவன் வரும் போதே அதை சொல்லியிருக்க, அவர்களும் தடுக்கவெல்லாம் இல்லை. வேகமாய் வந்தவன், தன்னுடைய பேக்கில் அவசர அவசரமாய் எல்லாவற்றையும் அடுக்கிக் கொண்டிருக்க, “என்னப் பண்ணிட்டிருக்கீங்க?” என்ற குரல் கேட்க, “அதான் கிளம்புறேன்னு சொன்..” என்று சொல்லும் போதே அந்த குரலில் பட்டென்று திரும்பினான்.

நிலாவோ சோபாவில் அமர்ந்திருக்க, ஒரு நொடி தன் கனவோ, இல்லை கற்பனையோ என்று நினைத்து அவன் கண்ணைக் கசக்கினான்.

அதற்குள்ளாக, அவன் கையில் இருந்த பேக்கை பிடுங்கி தூர வைத்தவள், “எங்க கிளம்புறீங்க?” என்றாள்.

அப்போதே அது கனவல்ல நிஜம் என்பதே புரிய, “நிலா” என்றவன் வேகமாய் அவள் முகத்தை தாங்கி, அவள் நிஜம் தானா என்பதைப் போல் தொட்டுப் பார்த்தான்.

அவனின் செயலில், “என்னாச்சு?” என்றாள். அவள் உண்மையாகவே அவனின் முன் நிற்க, “நிலா” என்றவன் அவளை வேகமாய் இறுக்கமாய் அணைத்துக் கொண்டான்.

அவனின் அணைப்பில், அத்தனை தவிப்பு இருக்க, இவளோ எதுவும் சொல்லாது இவளும் திருப்பி அணைத்துக் கொண்டாள்.

சில நொடிகளுக்குப் பின். மெல்ல அவளை விட்டு விலகியவன், அவள் கன்னம் தாங்கி முகமெங்கும் வேகமாய் முத்தமிட்டான். அவன் கொடுத்த முத்தத்தை எல்லாம் எதிர்ப்பு இல்லாது வாங்கிக் கொண்டவள், “நீங்க ஏன் அப்படி சொன்னீங்க?” என்றாள்.

அதில் அவன் அவளைப் பார்க்க, அவளோ, “உங்கள நான் வெறுப்பேன்னா? என்னால அது முடியுமா?” என்று அவனைப் பார்த்துக் கேட்டாள் நிலா.

(நல்லா கேளும்மா? ஏதாச்சும் உளறிட்டே இருக்கான். செரி அடுத்து என்னாகப் போதுன்னு அடுத்தடுத்த எபிசோட்ல பாக்கலாம். அதுக்கு முன்னாடி இன்னிக்கு எபிசோட்ல உங்களுக்கு பிடிச்ச சீன் எதுன்னு மறக்காம கமெண்ட்ல சொல்லுங்க. அப்படியே எப்பவும் போல லைக் பண்ணிட்டு உங்க பிரண்ட்ஸ் கூட ஷேர் பண்ணுங்க)

தென்றல் தீண்டுமா?..

Comments   4

*** தென்றல் – 149 - படைப்பை ரேட் செய்யுங்கள் ***