வீட்டில் ஆரம்பித்த பஞ்சாயத்து. குல தெய்வ கோவில் செல்லும் வழியிலும் தொடர்ந்தது. நிலாவின் மடியில் அமர்ந்திருந்த கதிரவன், செல்லும் வழிகளை காட்டி, காட்டி ஏதோ சொல்ல, சிரிக்க, சினுங்க என்று இருக்க, இங்கே பின் சீட்டில் அமர்ந்திருந்த கதிருக்கு காதில் இருந்து புகை வராத குறைத்தான். அவன் நிலாவுடன் அமர வேண்டி, பின் சீட்டிற்கு வந்திருக்க கதிரவனோ, முருகேசனை பின்னே போக சொல்லிவிட்டு நிலாவுடன் முன்னே அமர்ந்து விட்டான்.
தாமரையும், செல்வியும் தங்களுடன் அழைத்தும், அவனோ நிலாவை விட்டு வர மறுக்க, அவளுமே, “நான் பாத்துக்கிடேன் சித்தி” என்றிருந்தாள். கதிரைப் பாக்கத்தான் பாவமாக இருந்தது. ஆனால் முருகேசனோ நல்லா அனுபவிக்கட்டும் என்பது போல், கிண்டலாய் பேசிக் கொண்டிருந்தார்.
உறவுக்காரர்கள் அனைவரும் பின்னே இவர்கள் ஏற்பாடு செய்திருந்த பஸ்ஸில் வருகிறார்கள். இவர்கள் அவர்களுக்கு முன்பே செல்ல வேண்டும் என்பதால், காரில் கிளம்பியிருக்க, குல தெய்வ கோவில் வழிகளைப் பார்த்த நிலாவுக்கோ, கதிருடன் பைக்கில், அவ்வழியாய் வந்த நினைவுகள் தான் எட்டிப் பார்த்தது. அந்த நினைவில் அன்னிட்சையாய் அவள் கண்ணாடி வழியாய் கதிரைப் பார்க்க, அவனோ பொசுபெசுவென்று அமர்ந்திருந்தான்.
அவன் முகத்தைப் பார்த்து புருவத்தை சுழித்தவள், “இப்போ இவீக ஏன் இப்புடி இருக்காக?” என்றவளுக்கு சில நொடிகளுக்குப் பின்னே அவன் கதிரவனை முறைத்துக் கொண்டிருப்பதே புரிந்தது. அதைப் பார்த்தவளுக்கு மீண்டும் சிரிப்புத்தான் வந்தது.
“ச் என்ன சின்னப் புள்ள, சின்ன புள்ளன்ட்டு, இப்போ இவீங்கத்தேன் சின்னப்புள்ள தனமா நடந்துக்கிடுறாக” என்று சொல்லியவளுக்கு அவன் மீது கொஞ்சம் இளக்கமும் வரத்தான் செய்தது.
“பக்கத்துல வந்து உட்காருன்னா, உட்காரப் போறேன். அத பண்ணாம, பச்சப் பிள்ள கிட்ட போட்டி போட்டுக்கிட்டு” என்று முனுமுனுத்தாலும், அவனின் குழந்தை மனத்தை அவள் மனம் ரசிக்கத்தான் செய்தது.
ஒரு வழியாக அனைவரும் குல தெய்வ கோவில் வந்திறங்க, அதன் பின்னும் கூட கதிரவன், நிலாவை விடவே இல்லை. அவளை அழைத்து, அது என்ன? இது என்ன? என்று ஏதாவது கேட்டுக் கொண்டேத்தான் இருந்தான்.
அதில் கதிருக்கோ அத்தனை எரிச்சல். அவன் முகத்தில் அப்பட்டமாய் தெரிந்தது. அதைக் கவனித்த தாமரையோ செல்வியிடம், “ஏண்டி, அவென்னத்தேன் செத்த நேரம் நீ வாங்கி வச்சுக்கோயேன்” என்றார்.
அதில் தன் அக்காவைப் பார்த்த செல்வியோ, “உம்மாள முடிஞ்சா, நீத்தேன் அவன கூப்டு வெச்சிக்கிடுறது. மிச்ச நேரம் எல்லாம் உன் கூடத்தேன்ன இருப்பான்” என்றவரும் என்னத்தான் செய்வார்? அவனும் கதிரவனிடம் எவ்வளவோ கெஞ்சி பார்த்து விட்டார். அதற்கு மேல் ஏதாவது சொன்னால் அழுக ஆரம்பித்து விடுவான். இன்று அவனுக்குத்தான் விஷேசமே, இன்னேரத்தில் அழுதுக் கொண்டிருந்தால், மற்ற வேலைகளைப் பார்க்க இயலாது. அதனால் தான் விஷேசம் முடியும் வரைக்கும் அவன் அமைதியாக இருந்தாலே போதும் என்ற மன நிலையில் விட்டு விட்டார்.
“எங்க?அக்கா, அக்கான்னுட்டு அவள வால் பிடிச்சிட்டுல்ல திரியிறான்” என்று தாமரை சொல்ல, “எம் புள்ளைக்கு தெரியிற நேக்கு கூட உம்ம தம்பிக்கு தெரியில. அழுதப் புள்ளத்தேன் பால் குடிக்கும். இப்படி மூஞ்ச தொங்கப் போட்டுட்டு திரிஞ்சா மட்டும், அம்புட்டும் நடந்திடுமா” என்றார் முருகேசன். முன்பெல்லாம். அவர் முற்றும் முழுதாய் கதிருக்குத்தான் ஆதரவு தெரிவித்திருந்தார். ஆனால், என்று நிலாவின் விஷயத்தில், அவளை கட்டாயப்படுத்தி அனுப்பி வைத்தானோ, அப்போதிருந்தே மருமகனின் மீது கோவம் தான். இப்போதும் கூட அவன் வீம்பை விட்டு விட்டு போய் பேசினால், அத்தனையும் முடிந்து விடும். இருந்தும் அதை செய்ய மாட்டேன் என்பது போல் இருப்பவனைப் பார்க்க ஆத்திரம் தான் வந்தது.
அதற்குள் அங்கே உறவினர்களும் வர ஆரம்பித்திருக்க, அனைவரையும் வரவேற்க வேண்டிய நிலை. வந்தவர்களின் பார்வை எல்லாம், நிலாவைத் தேடியது. பின்னே நேற்று வரை எப்படியோ, இப்போது அவள் ஒரு மாவட்ட கலெக்டர். பொறாமையும், போட்டியும் சிலரின் கண்ணுக்கு தெரிந்தாலும் கூட, அவளுடைய அந்த பதவி அத்தனைப் பேரையும் வாயடைக்க வைத்தது என்பதுத்தான் உண்மை.
“மதினி. எங்க கலெக்டரம்மாவ காணும்” என்று கேட்ட துளசிக்கெல்லாம் நிலா கலெக்டர் ஆனதில் அத்தனை சந்தோஷம். அப்போதே கதிரவனை தூக்கிக் கொண்டு வந்த நிலாவோ துளசியைப் பார்த்ததும், “அத்த” என்று புன்னகை முகமாய் அழைத்தாள்.
அவளின் அழைப்பில், “அடியாத்தே, ரிப்பன் கட்டி விடுங்கத்தன்னு சொல்லிட்டு ஓடி வந்த என் நிலாவா?” என்ற துளசிக்கெல்லாம் அத்தனை நெகிழ்வு.
“அத்த” என்று அவள் செல்லமாய் சினுங்க, “ரொம்ப சந்தோஷம்டா” என்ற துளசி அவளுக்கு சுற்றி போட்டாள்.
“சும்மா சொல்லக் கூடாது மச்சான். நின்னு சாதிச்சுப்புட்டீங்க” என்று துளசி கதிரிடம் கேட்க அவனும் ஒரு புன்னகையுடன் நின்றிருந்தான். அதன் பின் வந்த இன்னும் சிலரும் கூட, “பாத்து எத்தன வருஷம் ஆச்சு, எப்படித்தா இருக்க?” என்று அவளிடம் நலம் விசாரித்தனர்.
அவள் முகத்தில் எந்த வித கர்வமும் இல்லைத்தான். ஆனாலும், அந்த பதவி தந்த நிமிர்வு அவள் முகத்தில் இருக்க, அனைவருமே அவளை அதிசயமாய்த்தான் பாவித்தனர்.
அதற்குள் அங்கு வந்த சங்கரேஸ்வரி, தன் பேத்தியின் முகத்தை தொட்டு, “என் பேத்தி ஜில்லா கலெக்டர்.” என்று சொல்லிய பெரியவரின் முகத்தில் அத்தனை பெருமை.
“ஏன் இப்போ என் மச்சான் மட்டும் என்னவாம்? அவரும் பெரிய போலீஸாக்கும்” என்று துளசி சொல்ல, “ஆமா, ஆமா போலீஸு, கலெக்டர்னு பகுமானம் பண்ணிக்கிட்டாலும், இருக்குற குற மறைஞ்சிடுமா என்ன?” என்று ஏழனமாய் கேட்டபப்டி அங்கு வந்திருந்தாள் பிரியா.
அவளின் வார்த்தையில், நிலாவின் உள்ளம் வெகுவாய் கலங்கித்தான் போனது. அதே நேரம் அவள் பேச்சில் துளிர்த்த கோவம் அவள் கண்ணில் தெரிந்தது.
இங்கே கதிருக்கோ அவளை அடித்து வீழ்த்தி விடும் கோவம், இப்போது ஐந்து மாத கர்ப்பினியாக அவள் நின்றிருக்க, யாருக்கும், எதுவும் செய்ய முடியாத நிலை.
“கோவிலுக்கு வந்தீயா? நீயும் உன் குடும்பமும் நல்லா இருக்கனும்னு வேண்டுனீயான்னு இல்லாம, உமக்கெதுக்கு அடுத்த வூட்டு கத” என்று துளசித்தான் கோவமாய் கூறினாள்.
“எனக்கெதுக்கு அடுத்த வூட்டு கத எல்லாம். என்னமோ ஊருல இல்லாத கலெக்டர்னு சில பேரு கொட புடிச்சிட்டு திரியிறாகளே. எம்புட்டு பெரிய கலெக்டரான என்ன, அம்மான்னு சொல்ல ஒரு புள்ள இல்லத்தான்ன?” என்று வார்த்தையை சாட்டையாக்கி அவள் விலாச, அந்த அடி நிலாவை வீழ்த்தியது என்பது முற்றிலும் உண்மை.
அவளிடம் சரிக்கு சமமாய் நின்று சவால் விட்ட நிலாத்தான். அதை விட அதிக தைரியமும், துணிச்சலும் இருந்தும், இப்போது அவளுக்கு பதில் சொல்ல முடியாத நிலையில், கதிரை அடிப்பட்ட பார்வைப் பார்த்தாள்.
அந்தப் பார்வையில் நிச்சயம், அப்படி ஒரு அனல். “பார் இதுத்தான் எனக்கு நீ வாங்கிக் கொடுத்த பட்டம். என்னை கலெக்டராக்கி அழகு பார்த்தாய் அல்லவா? அதுக்கு உனக்கும் கிடைத்த தண்டனை இது” என்றது.
இங்கே கதிரோ, “இன்னும் ஒத்த வார்த்த பேசுன” என்றவன் அடிக்கவே கை ஓங்கியிருந்தான். அதற்குள் முருகேசன் தான், “மருமவனே, கண்டதுங்கள அடிச்சு உன் கைய ஏன் அழுக்காக்கிற. அடுத்தவக குடும்பத்த கெடுக்கனும்னு அலையறவுகள்லாம். நல்லா இருக்கிற மாதிரித்தேன் தெரியும். ஆனா அவுகளுக்கு ஒரு நேரம் வர்றப்பத்தேன் அம்புட்டும் புரியும். நீ வா” என்று அவனை இழுத்துக் கொண்டு சென்றார்.
அதற்கும் பிரியா ஏதோ பேசப் போக, “ஹேய், ஏண்டி? இதுக்குத்தேன் உன்ன வர வேண்டாம்னு சொன்னேன்” என்று மகளுக்காக அவளின் தாய் மற்றவர்களிடம் மன்னிப்பை வேண்டி, அங்கிருந்து இழுத்து சென்றார்.
ஏனோ, நிலாக்குத்தான் அதன் பின் யாரையும் பார்க்கவே முடியவில்லை. அவனின் நிலையைப் பார்த்த செல்விக்கும், தாமரைக்கும் என்னச் சொல்ல என்றே தெரியவில்லை. நிலா தனியே சென்று விட்டாள்.
அதில் அங்கு சென்ற துளசித்தான், “ச் என்னத்தத்தேன் நீ கலெக்டருக்கு படிச்சீயோ, இவளாம் ஒரு ஆளு, இவ சொன்னான்னு, இப்புடி கலங்கி நின்னா ஆச்சா, பொறாம புடிச்சவ பேச்சுக்கு இம்புட்டு இறங்கி போவீயா நீ? எண்ணி பத்தாவது மாசத்துல புள்ளைய பெத்து அவ முன்னாடி நிப்பீயா, அத வுட்டுட்டு அழுதுட்டு இருக்கா” என்றவள் நிலாவை அணைத்துக் கொண்டாள்.
மற்ற நேரமாக இருந்திருந்தால், நிச்சயம் துளசி, பிரியாவை அடித்திருப்பாள். இப்போது இருவரும் ஒரு வீட்டில் தான் மருமகளாக இருக்கிறார்கள்.
அவளை தன் கொளுந்தனுக்கு எடுக்கவே வேண்டாம் என்று எவ்வளவோ சொல்லியும், முருகேசன் வந்து பேச சம்மதித்தனர். அவள் இப்போது இருக்கும் இந்த வாழ்க்கையே, கதிர் அவளுக்கு போட்ட பிச்சை. அதை எல்லாம் சற்றும் கருத்தில் கொள்ளாது அவள் தன் நிலாவையும், மச்சானையும் அவமானப்படுத்தியதை அவளால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை.
நிலா சற்று தேறும் முன் மீண்டும் அங்கு வந்திருந்த பிரியாவோ, “அழு. நல்லா அழு. நான்த்தேன் சொன்னேன்ல. அடுத்தவக வாழ்க்கைய அப்படி எல்லாம் ஒருத்தி மொத்தமா முழுங்கிட்டு போயிட முடியாது” என்றாள்.
அதில் துளசியோ, “ஆறுடி அடுத்தவ வாழ்க்கைய வாழ்ந்துட்டு திரியிறா. இல்ல தெரியாமத்தேன் கேட்கேன், கல்யாணம் ஆனதுல இருந்து என் கொளுந்தன் வெளி ஊர்லத்தேன் கெடக்கான். அப்படி இருக்கிறப்ப, நீயே ஐஞ்சு மாசம் சுமந்துட்டு நிக்கிறப்ப, என் மச்சான், கூடவே இருந்து, அவரு பொண்டாட்டிய ஊர் மெச்சுற கலெக்டராக்கிருக்காரு. அத பார்த்து வயிறெறிஞ்சன்னா, அது உம் புள்ளைய” என்று துளசி வேகமாய் சொல்லப் போக, “அத்த வேணாம்” என்று அவள் கையைப் பிடித்து வேகமாய் தடுத்தாள் நிலா.
அவள் பேசுவதற்கு, அவள் வயிற்றில் வளரும் கரு என்ன பாவம் செய்தது? “ச் என்ன விடு நிலா. உன் நல்ல மனசெல்லாம், இவெளுக்கு எந்த ஜென்மத்துலையும் புரியாது” என்றார் துளசி.
“என்ன? என் வயித்துல வளர்றது உங்க கொளுந்தன் புள்ள இல்லன்னு சொல்றீகளோ? செரி அப்போ அதென்ன உங்க புருஷன்” என்று பிரியா ஆரம்பிக்க, அவளின் கன்னத்தில் ஓங்கி அடித்திருந்தான் அவளின் கணவன்.
மனைவிக்கு சர்பிரைஸ் கொடுப்பதற்காக வந்திறங்கியவனின் முகம் வேப்பங்காயை குடித்தது போல் கசந்திருந்தது. பின்னே அவனின் மனைவி அவன் பங்காளி குடும்பத்தை அசிங்கப்படுத்துகிறேன் என்று, அவன் பிள்ளை, அண்ணன் அத்தனைப் பேரையும் அல்லவா அசிங்கப்படுத்திக் கொண்டிருந்தாள்.
இத்தனைக்கும், கதிருக்கும், அவனுக்கும் பெரிதாய் ஒத்துப் போகவும் செய்யாது. ஆனாலும் கூட மனைவியின் பேச்சு அவனுக்கே அறுவறுப்பைக் கொடுத்தது.
பிரியாவுமே கணவனை அந்த நொடி எதிர்பார்த்திருக்கவில்லை, “அர்ஜூன்” என்று அவள் ஏதோ பேசப் போக, “பேசாத. பத்து நிமிஷத்துல நீ இங்க இருந்து கிளம்பலன்னா, அம்புட்டுத்தேன்” என்று சொல்லியப்படி அங்கிருந்து கோவமாய் சென்றிருந்தான்.
அவனின் கோவத்தில் பிரியாவோ நிலாவைப் பார்த்து, “இப்போ உனக்கு சந்தோஷமா, உனக்குத்தேன் உம் புருஷன் கூட வாழ கொடுத்து வைக்கல. உன் கண்ணுப் பட்டு என் புருஷன் என்ன அடிச்சிட்டாரு” என்று அப்போதும் அந்த பழியைத் தூக்கி நிலாவின் மீதே போட்டாள்.
இப்போது நிலாவோ மொத்தமாய் உடைந்துப் போனாள். அப்படியே தடுமாறி விழ சென்றவளை, துளசி தாங்கிப் பிடிக்க, அதற்குள் அங்கு வந்த செல்வியோ, “சொந்தம்னு நினைச்சி உன்ன கூப்டதுக்கு. என் வூட்டு புள்ளைய அழ வச்சிட்டல்ல. தயவு செஞ்சு போயிடு” என்று கோவத்தை இழுத்துப் பிடித்து கத்தினார்.
இங்கே கதிரால், நிலாவை நெருங்கவே முடியவில்லை. அவளின் அழுகையில் இங்கு அப்படியே நொந்துப் போனான். அவனுடைய கை நரம்புகள் எல்லாம் புடைத்துக் கொண்டு வந்தது.
பிரியாவை வெட்டி விடுவான். அடுத்து, பேசும் அத்தனைப் பேரையும் வெட்டி விட முடியுமா? இல்லை இப்படி அவள் பேசுவதற்கு இடம் உருவாக்கி கொடுத்த தன்னை என்ன செய்வது? இறுக்கமாய் வந்தவன், பிரியாவைப் பார்த்து, “அன்னிக்கு சொன்னதுத்தேன். என் நிலா உன்ன மாதிரி கிடையாது. அவளுக்கு உன்ன மாதிரி பொறாம படவும் தெரியாது” என்றவன், “அத்த உங்க மூஞ்சுக்காக பாக்குறேன். இதுக்கப்புறம் இவ எங்க முன்னாடி வர கூடாது” என்று அவனின் அம்மாவிடம் சொல்ல, அவரும் பிரியாவை இழுத்துக் கொண்டு அவரின் மருமகனுடன் கிளம்பியிருந்தார்.
இங்கே ஆளாளுக்கு ஏதேதோ பேச, அந்த பார்வை எதையுமே நிலாவால் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை. அமைதியாய் அங்கிருந்த காருக்குள் சென்று அமர்ந்து விட்டாள்.
(ஏன்மா பிரியா உன்னால முடிஞ்சத நீ பண்ணிட்ட, அடுத்த எந்த ஏழரை வரப் போதுன்னு தெரியல. சரி அடுத்து என்னாகப் போதுன்னு அடுத்தடுத்த எபிசோட்ல பாக்கலாம். அதுக்கு முன்னாடி இன்னிக்கு எபிசோட்ல உங்களுக்கு பிடிச்ச சீன் எதுன்னு மறக்காம கமெண்ட்ல சொல்லுங்க. அப்படியே எப்பவும் போல லைக் பண்னிட்டு உங்க பிரண்ட்ஸ் கூட ஷேர் பண்ணுங்க)
தென்றல் தீண்டுமா?..
Keerthi Keerthi
spr… ✨✨
gayathri Shini
super sister