காலையிலேயே அங்கு செல்ல வேண்டும் என்பதால், அதிகாலையிலேயே அனைவரும் எழுந்து கிளம்ப ஆரம்பிக்க, நிலாவோ இன்னும் கூட அவனின் மார்பில் தான் படுத்து விழி மூடியிருந்தாள். அவளை எழுப்பவும் முடியாது, யாராவது வந்து விடுவார்களோ? என்று சுற்றி முற்றியும் பார்த்தப்படி கதிர் இருந்தான். ஆனால் அவர்களின் அந்த நெருக்கத்தை ஏற்கனவே முருகேசன் மூலம் அத்தனைப் பேரும் அறிந்திருந்தனர் என்பது வேறு கதை.
அவர் நள்ளிரவு போல், வேலையை முடித்து விட்டு கதிரைப் பார்க்க வரும் போதே நிலா அவனுடன் படுத்திருப்பதை பார்த்து விட்டு அமைதியாய் அவருடைய அறைக்கு சென்றிருந்தார். சென்றதோடு செல்வியிடமும் நாசுக்காய் அதை சொல்லியிருக்க, அவரோ காலையில் எழுந்தவுடனே அதை தாமரையிடமும் பகிர்ந்திருக்க, யாரும் பின் பக்கம் செல்லவில்லை. வேலையாட்களையும் அவர்கள் தனிமைக்கு இடையூரு கொடுக்க அனுமதிக்கவில்லை.
இங்கே கதிரவன் தான், “அக்காட்ட போனும்” என்று எழுந்ததில் இருந்து ஆர்ப்பாட்டம் செய்துக் கொண்டிருக்க, செல்வியும், தாமரையும் தான் போராடி அவனை குளிப்பாட்டி உடை மாற்ற வைத்தனர். இங்கே சில நொடிகளில் மெதுவாய் கண் விழித்த நிலாவோ, கதிரைப் பார்த்தாள். சில நொடிகள் அவன் முகத்தையே இமைக்காது பார்த்தாள்.
அவளின் பார்வையில் இவனும் அவளைப் பார்த்து, “நிலா” என்று ஏதோ பேச முயற்சிக்க, அவன் வாயை தன் கரத்தால் மூடி அவன் கன்னத்தில் அழுத்தி முத்தமிட்டாள்.
அதில் அவன் ஒரு வித இன்ப அதிர்ச்சியுடன் அவளைப் பார்க்க, “அம்முட்ட போயி பொறாம படலாம் ஒன்னுமில்ல. நிலாக்கு, கதிரவனுக்கும், கதிருக்கும் வித்தியாசம் தெரியும்” என்று சிறு கோவத்துடன் அழுத்தமாய் சொல்லிவிட்டு, அங்கிருந்து எழுந்தாள்.
அவளின் செயலில், இங்கே இவனின் முகத்தில் புன்னகை தழும்பியது. “கதிரு பொண்டாட்டிக்குத்தேன் எல்லாமே தெரியுமே” என்றான்.
அதில் மெலிதாய் வெட்கம் எட்டிப் பார்த்தாலும், அதை வெளிக்காட்டாது, “ஆனா கதிருக்குத்தேன், அவீக பொண்டாட்டிய தெரியாது” என்று உதட்டை சுழித்து சொல்லிவிட்டு வீட்டுக்குள் ஓடியிருந்தாள்.
அவள் வார்த்தை அவனை காயபப்படுத்துவதுக்கு பதிலாக, புன்னகையைத்தான் மீட்டுக் கொடுத்தது. மெலிதாய் மீசை முடியை நீவியப்படி, தன் கன்னத்தையும் தடவினான். அவள் கொடுத்த அந்த ஒற்றை முத்தம், அவனின் அத்தனை கவலையையும் அகற்றியிருக்க, சிறு துள்ளலுடனே அவளின் பின்னே வந்தான்.
செல்வியோ, தாமரையிடம் இருவரையும் கண் காமிக்க, அவருக்குமே இருவரின் இணக்கம் ஒரு வித நிம்மதியைக் கொடுத்தது. “என்னய்யா அசந்து தூங்கிட்டீங்களா? போங்க போயி கிளம்பி வாங்க. குடிக்க ஏதாச்சு தரட்டா?” என்று கேட்க, “இல்லக்கா” என்றப்படி கதிர் மேலே செல்ல நிலா ஏற்கனவே அறைக்கு சென்றிருந்தாள்.
அவள் எடுத்து வைத்த புடவையை கட்டிலில் வைத்து விட்டு, அவள் குளிக்க சென்றிருக்க, கதிரோ அந்த புடவையை எடுத்து கபோர்டில் வைத்து விட்டு, அவன் அவளுக்காக வாங்கியிருந்த புடவையை அங்கு எடுத்து வைத்தான்.
அவள் வர மாட்டாள் என்று நினைத்தாலும் கூட, அவளுக்காக வாங்கித்தான் வைத்திருந்தான். அவன் மட்டும் அல்ல, இங்கே செல்வியும், முருகேசனும் கூட இருவருக்கும் உடை எடுத்து வைத்திருந்தனர்.
அவர் அதை கொடுக்க அங்க வர, கதிரோ, “அக்கா புடவ” என்றவன் அந்தப் புடவையைப் பார்க்க, அதில் புரிந்துக் கொண்டவரோ, “செரிடா. நீ இந்த சட்டைய போட்டுக்கோ. புடவைய பொறவு அவ ஜாக்கெட் தைச்சி போட்டுக்கட்டும்” என்றார்.
“ம்” என்றவன் தலையாட்ட, நிலாவிடம், அவன் வாங்கி வந்திருந்த புடவையை அவர்கள் கொடுத்ததாக சொல்ல நினைத்தான். செல்வி சென்று விட, இப்போது சிறு தயக்கத்துடன் அவள் குளியலறையில் இருந்து வெளியில் பார்த்தாள்.
அதைப் புரிந்தவன் அங்கிருந்து பால்கனிக்கு சென்று விட, அவளோ இப்போது கேள்வியாய் அந்த புடவையைப் பார்த்தாள். அதைக் கவனித்தவன், “அக்கா கொடுத்தாக” என்று சொல்ல, அவளும் எதுவும் சொல்லாது அதை எடுத்துக் கொண்டு, அவனிடம் துண்டைக் கொடுத்தாள்.
அதில் அவன் குளிக்க சென்று விட, இங்கே அந்த புடவையையே பார்த்தவளோ, அதை கட்டிக் கொள்ளாது அவள் கொண்டு வந்திருந்த அந்த புடவையையே எடுத்து கட்ட ஆரம்பித்திருந்தாள்.
இங்கே அவன் வெளியில் வரும் போது, அவள் அவன் எடுத்து கொடுத்த புடவையை கட்டாது, வேறு புடவையில் இருக்க அவன் மனம் அப்படியே வாடிப் போனது.
அதில், தலையைக் கூட துவட்டாது, “அந்த புடவைய கட்டலையா?” என்றான்.
“புது புடவ மடிப்பு செரியா வராது. சித்திட்ட சொல்லிக்கிறேன்” என்றவள் தன் புடவையை சரி செய்தப்படி கண்ணாடி முன்னே சென்று நின்றாள்.
அவளின் செயலில், “இல்ல வேண்டாம்” என்று அவன் சொல்ல, அதில் கண்ணாடி வழியே அவனைப் பார்த்தவள், “என்ன வேணாம்?” என்றாள்.
“இல்ல அக்காட்டலாம் சொல்ல வேணாம். நான் சொல்லிக்கிறேன்” என்று அவன் சொல்ல, அவனை திரும்பி ஒரு நொடி பார்த்தாள். பின் ஏதும் சொல்லாது, “செரி” என்றவள் தலை வார ஆரம்பித்தாள்.
இவனோ அங்கே தள்ளி இருந்த அந்த புடவையே பார்த்தான். அவன் பார்வையை கவனித்தாலும் அதை கண்டுக்கொள்ளாதது போல், அவள் வேலையை தொடர்ந்தாள். அவனும் ஒரு பெருமுச்சுடன் தன் உடையை எடுத்து கொண்டு உடை மாற்றி வந்தான்.
நிலாக்கு பூ கொடுக்க வந்த செல்வியோ, அவள் கட்டியிருந்த புடவையைப் பார்த்து, “ஏன் அந்த புடவைய கட்டலையா நீ?” என்றார்.
அதில் அவளோ, “ஏன் இந்த புடவ நல்லாத்தேன்ன சித்தி இருக்கு?” என்றாள். “ஏண்டி அவென் அம்புட்டு ஆசையா எடுத்துட்டு வந்திருக்கான். அத எடுத்து கெட்டிக்கிட்டா உனக்கென்ன? இம்புட்டு வீம்பு ஆகாதுடி” என்று தாமரை கோவமாய் தன் மகளை திட்ட ஆரம்பிக்க, நிலாவோ கதிரைப் பார்த்தாள்.
அவனோ, “க்கா” என்று தாமரையை அடக்கப் பார்க்க, அவரோ வழக்கம் போல் நிலாவை திட்டிக் கொண்டே போக, ஒரு கட்டத்தில் நிலாவோ, “இப்போ என்ன அந்த புடவைய கட்டனும் அம்புட்டுத்தேன்னே. செரி போங்க கட்டிக்கிறேன்” என்றாள்.
“இதெல்லாம் நாங்க சொல்லித்தேன் நீ செய்யனுமா?” என்று தாமரை சிறு ஆதங்கத்துடன் கேட்க, “உங்க தம்பித்தேன் எனக்கு வாங்கிட்டு வந்தாங்கன்னு எனக்கென்ன ஜோசியம்மா தெரியும்?” என்று கதிரைப் பார்த்தப்படி கேட்டாள்.
அதில் தாமரையோ, அவள் சொன்னதை சரியாய் புரிந்துக் கொள்ளாது “ஏண்டி பொண்டாட்டிக்கு வாங்கிட்டு வராம வேற எவளுக்கு வாங்கிட்டு வந்துடப் போறான்?” என்று கோவமாய் கேட்க, அதற்குள் செல்வித்தான் தன் தம்பியை கோவமாய் பார்த்தார்.
“அக்கா நீ முத கீழ போ. அங்க கதிரவன் தனியா இருக்கான்” என்று சொல்லி அனுப்ப, நிலாவோ, அந்த புடவையை எடுத்து கொண்டு குளியலறைக்குள் சென்றாள்.
இங்கே செல்வியோ கதிரிடம், “ஏண்டா? நீ வாங்கிட்டு வந்தேன்னு சொல்லி கொடுக்கிறதுக்கென்ன வந்திச்சி உனக்கு?” என்றார்.
“இல்லக்கா. அது” என்று அவன் தடுமாற, “கதிரு நீ பண்றது எதுவுமே செரியில்ல. பொம்பள புள்ள மனச திரும்ப திரும்ப வருத்தப்பட வைக்காத” என்றார்.
அவன் அமைதியாய் நிற்க, கையில் இருந்த பூவை அவனிடம் கொடுத்தவர், “ரெண்டு பேரும் என்னத்தேன் பண்ணப் போறீகளோ?” என்று தலையில் அடித்துக் கொண்டு அங்கிருந்து சென்றிருந்தார்.
இங்கே உள்ளே சென்ற நிலாவுக்கோ அத்தனைக் கோவம். அவன் வாங்கி வந்தது என்று அவளுக்கும் தெரியும். ஆனால் அதை அவன் சொல்லட்டும் என்று அவள் எதிர்பார்த்திருக்க, அவனோ அதை சொல்லவில்லை. அதனால் தான் வேண்டுமென்றே, அந்த சேலையை கட்டாது, வேறு சேலையை எடுத்துக் கட்டினாள்.
இப்போது கையில் இருந்த புடவையைப் பார்த்தாள். குளியலறையில் இருந்து வெளியில் வந்தவள் தன் சித்தியை பார்க்க, அவரோ சென்றிருக்க, கதிர் அவளிடம், “இல்ல சொல்லனும்னுத்தேன் நினைச்சேன்” என்றான்.
அவளோ, “புது புடவ மடிப்பு வராது” என்றாள். ஒரு நொடி அவனுக்கு புரியவில்லை. “செரி உனக்கு புடிக்கலன்னா, இதையே கட்டிக்கோ. நான் அவீக கிட்ட பேசிக்கிறேன்” என்று அங்கிருந்து நகரப் போக, அவளோ கடுப்பாய் “கட்டிவிடுங்க” என்றப்படி கட்டியிருந்த சேலையை அவிழ்த்தாள்.
அவளின் செயலிலும், வார்த்தையிலும் அவன் ஒரு நொடி அதிர்ந்து பின் மீண்டும் தன்னைத் தானே திட்டிக் கொண்டவன், அப்போதே அவள் சொல்லியதற்கான அர்த்தம் விளங்க அவளைப் பார்த்தான்.
அவளோ, கோவத்தில் கழட்ட கை வைத்திருக்க, இப்போது மெலிதாய் வெட்கம் எட்டிப் பார்த்தது. இருந்தும் அதை பொருட்படுத்தாது அவனிடம் புடவையை நீட்ட, அவனோ புடவையை வாங்காது அவளையே பார்த்தான்.
“நேரமில்ல கீழ போவனும்” என்று அவள் அவன் பக்கம் திரும்பாது சுவற்றைப் பார்த்து சொல்ல, இப்போது புடவையை வாங்கியவன் அவளுக்கு வேகமாய் கட்டி விட ஆரம்பித்தான்.
கோவம் தான். வருத்தம் தான். ஆனால் அவனின் ஒவ்வொரு உரசலுக்கும், பெண்ணவளின் தேகம் பூவாய் மலர, அவனுமே அவளுக்காய் ஆசையாய் வாங்கி வந்திருந்த புடவையை ஆசை தீரவே கட்டி விட்டான். பல இடங்களில் வேண்டுமென்றே அவன் அத்து மீற, அதை உணர்ந்திருந்தாலும், அதைக் கண்டுக் கொள்ளாதது போல் தான் நின்றாள் நிலா.
பின்னே அவள் உணர்வுகளைக் காட்டினால், இவன் என்னவோ தவறு செய்தது போல் முகத்தை திருப்புவான். அதனாலையே, அவனின் இம்சைகளை கண்டுக் கொள்ளாதது போலவே சமாளிக்க முயன்றாள்.
அவன் கட்டி விட்டு விலக, இவளோ கண்ணாடியில் தன்னைப் பார்த்தாள். அவனோ அவளையே வைத்தக் கண் வாங்காது பார்த்திருந்தான். அதில் அவளோ, “க்கும் பார்வைக்கு ஒன்னும் குறைச்சலில்ல” என்று தனக்குள்ளே முனுமுனுத்துக் கொண்டவள், “போலாம்மா?” என்றாள்.
“ம்” என்று தலையாட்டியவன் பின், “ஒத்த நிமிஷம்” என்றப்படி சென்று தன் கபோர்டைத் திறந்து அதில் இருந்த ஒரு நகைப்பெட்டியை எடுத்து வந்து அவளிடம் நீட்டினான்.
இம்முறை அவள் அவனை முறைக்க, “உனக்குத்தேன் வாங்குனேன். புடிச்சிருக்கா?” என்றான். அதன் பின்னே அவள் அதை எடுத்துப் பார்க்க, உள்ளே ஒரு செயினும், ஒரு செட் வளையலும் இருந்தது.
அவள் மீண்டும் அவனிடமே அதைக் கொடுக்க, அவனோ அவளைப் பாவமாய் பார்த்தான். அதில் கையில் அணிந்திருந்த வளையலை அவனைப் பார்த்தப்படியே கழட்ட, இப்போது வேகமாய் அவள் கையைப் பிடித்து அந்த தங்க வளையலை ஒவ்வொன்றாய் போட்டு விட்டான்.
பின் செயினையும் எடுத்துப் போட்டு விட்டவன், அதில் கொக்கி சற்று பெரிதாய் இருக்க, இப்போது பல்லால் அதை கடித்து அவன் சரி செய்ய, அவனின் மீசை அவள் பின்னங்கழுத்தை அழுத்தி உரசியது.
அதில் அவள் நெளிய, இங்கே அவளை அசையாதுப் பிடித்து நிறுத்தியவன், இப்போது அழுத்தமாகவே அவள் பின்னங் கழுத்தில் இதழ் பதித்தான். அவனின் செயலில், அவள் அவனைப் பார்க்க, அவனோ, எதுவுமே தெரியாதது போல் செயின் கொக்கியை சரி செய்து விட்டு அங்கிருந்த பூவை எடுத்து அவள் தலையில் வைத்து விட்டான்.
ஏனோ அந்த சில நொடிகள், நிலாவின் கோவம் மறைந்திருக்க, தன் முன்னே இருந்த குங்குமத்தை எடுத்து அவனிடம் நீட்டினாள்.
அதில் இப்போது அழகாய் சிறு புன்னகையுடன் அதை எடுத்து அவள் நெற்றியில் வைத்து விட நீண்ட வருடங்களுக்குப் பின் ஒரு நிறைவை அவள் உணர்ந்தாள்.
“போவோம்மா?” என்று அவன் கேட்க, “நல்லா இருக்கா?” என்றாள் அவள்.
அதில் இப்போது அவளை மேலிருந்து கீழாக பார்த்தவனின் பார்வை ஊசியாய் அவளை துளைக்க, அவளோ கூச்சத்தில் நெளிந்தாள். அவள் கூச்சத்தை மேலும் அதிகரிப்பது போல், மெலிதாய் தெரிந்த அவள் மெல்லிடையில் கரம் கொடுத்து தன் பக்கம் இழுத்தான்.
அதில் அவள் அவனின் மீதே வந்து மோதி நிற்க, “கதிரு பொண்டாட்டி நல்லாத்தேன் இருப்பா” என்றான். அவளோ அவனை முறைக்க, அவள் நெற்றி முட்டி, “புடிச்சிருக்கா?” என்றான்.
“ம்” என்று அவள் தலையாட்ட, அவனோ அவள் கன்னத்தில் இதழ் பதிக்கப் போக, “ம்மா. விடு. அக்காட்ட போணும்” என்று கதிரவனின் சத்தத்தில், இருவரும் வேகமாய் விலகினர்.
உள்ளே வந்த கதிரவனை கதிரோ இப்போது அப்பட்டமாய் முறைக்க, அவனும் சரிக்கு சமமாய் அவனை நின்று முறைத்தான். நிலாவோ அதைப் பார்த்து அழகாய் புன்னகைத்தாள்.
(க்கும் ஏன்பா கதிரவா? அவனே எப்பயாச்சும்த்தேன் ஒரு பார்முக்கு வறான். அதையும் இப்புடி கெடுத்து வுட்டா என்னய்யா அர்த்தம். செரி அடுத்து என்னாகப் போதுன்னு அடுத்தடுத்த எபிசோட்ல பாக்கலாம். அதுக்கு முன்னாடி இன்னிக்கு எபிசோட்ல உங்களுக்கு பிடிச்ச சீன் எதுன்னு மறக்காம கமெண்ட்ல சொல்லுங்க. அப்படியே எப்பவும் போல லைக் பண்ணிட்டு உங்க ப்ரண்ட்ஸ் கூட ஷேர் பண்ணுங்க)
தென்றல் தீண்டுமா?..
Keerthi Keerthi
spr…. 😊✨✨✨