நிலா ஈரத் தலையுடன் இருப்பதைப் பார்த்த கதிர் மற்றதை மறந்து, “ச் இந்த குளிருல எதுக்கு தலைக்கு தண்ணி ஊத்துன” என்றப்படி அவள் தலையை துவட்டி விட ஆரம்பித்தான். அவனின் செயலில், அவளுக்கு சட்டென்று பழைய விஷயங்கள் நினைவுக்கு வர, மனம் ஒரு நொடி சிறுமியாய் மாற துடித்தது.
ஏதோ ஒரு வேகத்தில் துவட்டி விட ஆரம்பித்தவனுக்கு, சில நொடிகளுக்குப் பின்னே, அவள் கார் கூந்தலின் வாசமும், அவள் மென் மேனியின் பரிஷமும் புரிந்தது. அதில் அவனின் மனமோ எக்குத் தப்பாய் துடிக்க, பட்டும் படாமல் மெதுவாய் அவள் தலையை துவட்டினாள்.
முடியில் இருந்து சிந்திய நீர்த்துளிகள், அவன் நெஞ்சில் விழ, அவனோ அவனையும் மீறி, அவள் வயிற்றோரம் கரம் கொடுத்து, பின்னிருந்து அவளை இறுக்கமாய் அணைத்தான்.
சட்டென்று அவள் இடையை சுற்றி படர்ந்த அவன் கரத்தின் இறுக்கத்தில், இங்கே இவளும் அதிர்ந்து அவனுக்குள் அடங்கித்தான் போனாள். அவன் சொல்லுக்கே மறு பேச்சு அவளுக்கு பேச தெரியாது. அப்படி இருக்க, அவன் செயலுக்கா எதிர்வினை காட்டிவிடுவாள்?
நீண்ட வருடங்களுக்குப் பின் உணரும் அவளின் நெருக்கம். அவள் தோள்பட்டையில் தாடையைப் பிடித்து, அவள் பக்கம் திரும்பி, கன்னத்தை உரசும் தூரத்தில், “தென்றல்” என்று மெதுவாய் முனங்கினான்.
அவனின் அழைப்பில், இங்கே இவளின் உள்ளம் கரைய, அவளோ விழி மூடினாள். அவனோ முனங்கியப்படியே அவள் கழுத்தில் மீசை முடி உரச முகத்தை தேய்த்தான். அதில் அவள் கரத்தை இறுக்கி மூடிக் கொள்ள, அவனோ அவன் பிடித்திருந்த அவள் இடையை மேலும் அழுத்தினான்.
“மாமா” என்றவள் சட்டென்று திரும்பி அவன் மார்பில் முகத்தைப் புதைத்தாள். அவள் அணைப்பில், இங்கே இவனின் மோகம் கூட, அவளை மேலும் மேலும் என்று தனக்குள் இறுக்கிக் கொண்டவனுக்கு, அது மட்டுமே போதுமானதாய் நிச்சயம் இல்லை. அவனின் இரு கரத்துக்குள் தன்னை முற்றும் முழுதாய் கொடுத்தவள் விழி திறக்கவே இல்லை.
அவனின் கரம் இடையில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாய் முதுக்கை வருடிக் கொள்ள, இவளின் கரங்களும், அவன் சட்டையை இறுக்கிப் பிடித்தது.
அவனுக்கே உண்டான வாசம், அவன் பிடியின் இறுக்கம். மொத்தமாய் நிலாவை தன்னிலை இழக்க வைக்க, அங்கே அவனெல்லாம், இவ்வுலகிலேயே இல்லை. இருவரின் மனதிற்குள் அத்தனை பிணக்கு இருக்க, ஆனால் இருவரின் தேகமும் ஒட்டி உறவாட நினைக்க, தடுக்கவோ, விலகவோ முடியாத நிலை.
அவள் இடப்பக்க கழுத்தில் இருந்து வலப்பக்கம் தன் முகத்தை நகர்த்தி சில கனம் அங்கேயே மூழ்கியவனின் தேகம் பெண்ணவளின் மென்மையை முற்றும் முழுதாய் உணர நினைக்க, “அக்கா” என்ற கதிரவனின் குரலில் இருவரின் மோன நிலையும் மொத்தமாய் கலைந்தது.
பட்டென்று அவன் அவளை விட்டு விலக, அவளுமே அவனை விட்டு ஒரு அடி எடுத்து வைக்க, “ஏண்டா. அக்கா வருவாடா. நில்லுடா” என்ற செல்வி அவனின் பின்னே அவனைத் தூக்க ஓடி வந்தார். அவனோ அதற்குள் அறைக்குள் நுழைந்திருக்க, சட்டென்று தன்னை மீட்டெடுத்திருந்தாள் நிலா.
ஆனால் கதிருக்குத்தான் சட்டென்று வெளிவர முடியவில்லை. அவனால் நிலாவை நிமிர்ந்துக் கூட பார்க்க முடியவில்லை. அறைக்கு வா என்று உரிமையாய் கூட அழைத்து வராது, இப்படி வந்ததும் அவளிடம் ஏதோ எல்லை மீறியது போல் ஒரு உணர்வு.
இங்கே கதிரவனை தூக்கியிருந்த நிலாவோ, கதிரைப் பார்க்கத்தான் செய்தாள். அவன் முகத்தில் அத்தனை வேதனை தெரிய, ஏனோ அவனை விட அது அவளுக்குத்தான் அதிகமாய் வலித்தது. அதே நேரம் அவளுக்கு கோவமும் வந்தது.
அவள் என்றுமே அவனை தனித்து பார்த்தது கிடையாது. அவன் செய்கையை தடுத்தது கிடையாது. அதை என்றுமே தவறாய் நினைத்தது கிடையாது. ஆனால் அவன் மட்டும், ஆரம்பத்தில் இருந்து இப்போது வரை, அவனின் உரிமையாய் அவளை பார்க்காமல் இருப்பதே அவளுடைய கோவத்துக்கு காரணம்.
இருவரின் முகத்தைப் பார்த்த செல்வியோ, “ஐயோ மறுபடியும் ஏதோ சண்டைப் போட்டுக்கிட்டாங்க போலையே” என்று நினைத்தவர், “ஏண்டா? இப்படி படுத்தி எடுக்கிற” என்று கதிரவனை திட்டினார்.
“நான் அக்கா கூட இருப்பேன்” என்று அவன் அடம்பிடிக்க, நிலாவோ, “சித்தி நான் பாத்துக்கிடுறேன். நீங்க போங்க” என்று அவள் சொல்ல, “இன்னேரத்துல தலைக்கு தண்ணி ஊத்துனீயாக்கும்” என்று கேட்டவர், அவரே வந்து நிலாக்கு சிக்கு எடுத்து விட ஆரம்பித்தார்.
கதிரோ அங்கேயே நிற்க, “என்னடா? இன்னும் நீ குளிக்க போலையா? போயிட்டு வா. ரெண்டு பேரும் முதல்ல வந்து சாப்பிடுங்க” என்று சொல்ல, அவனும் துண்டை எடுத்துக் கொண்டு குளிக்க சென்றான்.
அதன் பின் செல்வியோ, “நில்லு சாம்புராணி எடுத்துட்டு வரேன்” என்றவர் அவள் மறுப்பையும் கேட்காது அவள் முடியை காய வைத்தார். அதற்குள் கதிரும் குளித்து விட்டு வந்திருக்க, சாப்பிட கீழே சென்றனர்.
சாப்பிடும் போதும் கூட கதிரவன் நிலாவுடன் ஒட்டிக் கொள்ள, கதிர் தனியாக அமர்ந்திருந்தான். அதைப் பார்த்த முருகேசனோ, “கண்ணா, அப்பாட்ட வா. நான் ஊட்டுறேன்” என்று சொல்ல, “இல்ல இல்ல எனக்கு நிலாக்காத்தேன் ஊட்டனும்” என்று அடம்பிடித்தான்.
ஏனோ கதிருக்கு தன் அக்கா மகனின் மீது சிறிதாய் பொறாமை உணர்வு துளிர்த்தது. பின்னே உரிமையுடன் அவன் அருகில் இருக்க, இந்த சிறுவன் என்னவோ அத்தனை உரிமையையும் எடுத்துக் கொள்ள, இவனுக்கு எரிந்தது. அது அவன் முகத்திலேயே தெரிந்தது.
அதைக் கவனித்த தாமரையோ, “ஐயா ராசா. பெரியம்மாட்டா வா. நான் ஊட்டுறேன். அவீக சாப்பிடட்டும்” என்றார்.
“ம்ஹூ” என்று அவன் அடம்பிடிக்க, நிலாவோ, “விடும்மா. அதேன் நான் இருக்கேன்த்தேன்ன நான் பாத்துக்கிடுறேன்” என்றவள் கதிரவனை தன் மடியில் வைத்து ஊட்டி விட ஆரம்பித்தாள். இங்கே கதிருக்கோ சாப்பாடு உள்ளிறங்கவே இல்லை.
அவர்களை சிறு ஏக்கத்துடன் பார்த்தவன், பாதி சாப்பாட்டில் எழுந்துக் கொள்ள, “அட என்ன மாப்பிள்ள? எந்திரிச்சிட்ட?” என்று முருகேசன் கேட்க, “போதும் மாமா” என்றவன் எழுந்துக் கொண்டான்.
அதன் பின்னே நிலா கதிரைப் பார்க்க, அவனோ அவளைப் பார்க்காது அங்கிருந்து சென்றிருந்தான். அவனை சில நொடிகள் பார்த்தவள், “வேணும்னு கேட்டாத்தேன் எதுனாலும் கிடைக்கும்” என்று தனக்குள் உதட்டை சுழித்துக் கொண்டாள்.
உடனே செல்வியோ, “ஏத்தா நீ முத சாப்பிடு” என்று கதிரவனை வாங்கிக் கொள்ள, அவளுக்கும் கூட சாப்பாடு உள்ளே செல்ல மறுத்தது. ஆனால் அதற்குள் கதிரவனோ, “அக்கா நான் ஊட்டட்டா?” என்று அவளுக்கு ஊட்ட, அறைக்கு செல்ல திரும்பிய கதிரின் பார்வையில் அது விழுந்தது.
மீண்டும் ஒரு ஏக்கப் பார்வையைப் பார்த்தவன், மேலே செல்ல நடந்தான். அதற்குள்ளாக முருகேசன் ஏதோ கேட்க, அவருடன் அது குறித்து பேசிக் கொண்டிருந்தான். பின்பு அனைவரும் சாப்பிட்டு எழ, கதிரவனோ, “அக்கா இன்னிக்கு மொட்ட மாடியில படுப்போம்மா?” என்றான்.
அதற்கு மேல் கதிருக்கு சுத்தமாய் முடியவில்லை. சோபாவில் இருந்து எழுந்தவன் முருகேசனிடம், “அக்கா மாமா பைக் சாவி எங்க?” என்று கேட்டப்படி செல்வியின் அறைக்கு சென்றான்.
“எதுக்கு மாப்பிள்ள இன்னேரத்துல அத கேட்கிற” என்று முருகேசன் கேட்க, “ஒரு எட்டு மில்லு வரைக்கும் போயிட்டு வரேன்” என்றவன் அவர் சொல்வதை கேட்காது உள்ளே சென்று சாவியை எடுத்துக் கொண்டு வெளியில் வந்தான்.
ஏனோ அவனைத் தவிர மீதி அனைவருமே அவளுக்கு நெருக்கமாய் இருப்பது போல் தோன்றியது. அது அவனுக்கு வலித்தது. அங்கு இருந்து அதை எல்லாம் பார்க்கவும் அவனால் முடியவில்லை.
மற்றவர்களுக்கு அது தெரிந்ததோ? என்னவோ நிலாவால் அதை புரிந்துக் கொள்ள முடிந்தது. ஆனால் அவள் என்ன செய்ய முடியும்? இதெல்லாம் அவனால் தானே நடந்தது. அதனால் அவள் எதுவும் சொல்லாது அமைதியாய் இருக்க, தாமரையோ, “ஏண்டி கண்ட நேரத்துல உன் வூட்டுக்காரன் எங்கேயோ போறேன்ங்கிறான். நீ ஒத்த வார்த்த போகாதீங்கன்னு சொன்னா குறஞ்சா போயிடுவ” என்றார்.
அதில் கடுப்பானவளோ, “நான் சொன்னா மட்டும் அவுக கேட்கப் போறாகளா? வா அம்மு. நம்ம மொட்ட மாடிக்கு போலாம்” என்றவள் கதிரவனை தூக்கிக் கொண்டு மேலே சென்று விட்டாள்.
இங்கே வெளியில் வந்த முருகேசனோ, “நில்லு நானும் வரேன்” என்று சொல்ல, அவனோ “இல்ல காலையில கோவிலுக்கு கிளம்பனும்த்தேன்ன. நீங்க இருங்க” என்றவன் பைக்கை ஸ்டார்ட் செய்தான்.
நிலாவோ மாடியில் நின்று அவனைத்தான் பார்த்தாள். சட்டென்று ஏதோ உள்ளுணர்வு உந்த, மேலே நிமிர்ந்தான். அதற்குள்ளாக கதிரவன் நிலாவை, மேலே இருந்த அந்த வெண்ணிலாவை காட்டி ஏதோ கேட்க, அவளும் பார்வையை திருப்பி வானத்தைப் பார்த்திருந்தாள்.
அதைக் கவனித்திருந்த முருகேசனோ, பைக்கில் இருந்து சாவியை எடுத்தார். அதில் அவனோ, “ச் சாவிய கொடுய்யா” என்று கடுப்பாய் சொல்ல, “என்னாச்சுடா உனக்கு?” என்றார்.
அதில் அவனோ பதில் சொல்லாது அமைதியாகிவிட, “மனசுக்குள்ள ஒன்ன வெச்சிட்டு அந்தப் புள்ளைய பாத்தா, அந்தப் புள்ள அத்தனையும் புரிஞ்சிக்கனுமா? முதல்ல உம் மனசுல என்ன இருக்குன்னு அந்தப் புள்ளக்கிட்ட சொல்லு. அப்பவும் அவ புரிஞ்சிக்கலையா? போயி மன்னிப்பு கேளு. உடனே கொடுக்கலன்னாலும், பொண்டாட்டிக்கிட்ட இறங்கிப் போறதொன்னும் தப்பு இல்ல. முதல்ல உள்ளார போ” என்று அதட்டிக் கூறினார்.
“இல்ல மாமா. உனக்கு சொன்னா புரியாது” என்றவன் மீண்டும் அங்கேயே நிற்க, “செரிய்யா. எமக்கு எதுவும் புரிய வேணாம். ஆனா இந்த நேரத்துல நீ எங்கேயும் போ வேணாம்” என்று அவர் மறுத்து விட, அவனோ பைக்கை நிறுத்தி விட்டு அங்கிருந்த பின் வீட்டுக்கு சென்றான்.
முருகேசனுக்கும் அதற்கு மேல் என்ன சொல்ல என்று தெரியவில்லை. அவருக்கும் வேறு வேலைகள் எல்லாம் இருக்க அதை பார்க்க சென்றார்.
இங்கே அவனோ அந்த வீட்டுக்குள் நுழைய, பல வருடங்கள், அவனுடைய தனிமையை அந்த வீடுத்தான் போக்கியிருந்தது. இப்போதும் கூட ஏதோ தனித்து விட்ட உணர்வு, உள்ளிருந்த கயிற்றுக் கட்டிலை எடுத்து வெளியில் வந்து போட்டான். அறைக்கு செல்ல மனம் வரவில்லை.
அவள் இல்லாத அறையில் உறங்க முடியும் என்று தோன்றவில்லை. அப்படியே வானத்தில் தெரிந்த அந்த நிலாவைப் பார்த்தப்படியே விழி மூடியிருந்தான்.
நள்ளிரவு போல், ஏதோ உரச திடுக்கிட்டு கண்ணைத் திறந்தான். அவனின் மனைவித்தான் அவனின் அருகில் அவனை அணைத்துக் கொண்டு படுத்திருந்தாள். ஒரு நொடி கனவோ? என்று நினைத்து கண்ணைக் கசக்கிப் பார்த்தான்.
கனவில்லை நிஜம் என்பது போல அந்த சிறிய கட்டிலில் அவனை மொத்தமாய் தன் மஞ்சமாக்கி அவன் கழுத்தைக் கட்டிக் கொண்டு படுத்திருந்தாள் நிலா. நவம்பர் மாத குளிர் உடலை உருக்க, அவளோ மேலும் அவனை இறுக்கிக் கொண்டு படுத்தாள்.
“நிலா” என்று அவன் அவளை எழுப்ப முயற்சிக்க, “தூங்கு மாமா” என்று அறை உறக்கத்தில் சொல்லியப்படி அவளும் தூங்கியிருந்தாள். கதிரவனுடன் சிறிது நேரம் மொட்டை மாடியில் நின்று கதை பேசியவள். அவன் தூங்கவும் தன் தோளில் போட்டு தட்டிக் கொடுத்தான்.
அவளின் பார்வையோ எதார்த்தமாய், பின் பக்கம் பார்க்க, கதிர் அந்த கயிற்றுக் கட்டிலில் படுத்திருந்தான். பார்த்தவளுக்கு ஏனோ மற்றது எல்லாம் அப்படியே பின்னே சென்றது. அதற்குள் அங்கு வந்த செல்வி, கதிரவனை வாங்கிக் கொள்ள, நிலா அடுத்த நொடி அவனைத் தேடி அங்கு வந்திருந்தாள். வந்தவள் அவனை எழுப்பவெல்லாம் நினைக்கவில்லை அவனுடனே படுத்துக் கொண்டாள். அவன் தனிமை அவனை கொன்றதோ? என்னவோ? அவளை கொல்ல முயற்சித்தது. அதை போக்கிக் கொள்ள அவள் அவனை தன் மஞ்சமாக்கிக் கொண்டாள்.
இங்கே கதிரோ, தன் மேல் குழந்தையென உறங்குபவளைப் பார்த்தான். அவளின் நேஷத்துக்கு, தான் என்ன செய்யப் போகிறோம்? என்ற கேள்வி எழ, விடிய விடிய அவளை தட்டிக் கொடுத்து தூங்க வைத்திருந்தான் அவளின் மாமன்.
(ஆமா ராசா. நீ இப்படியே அவள சின்ன புள்ள கணக்கா தூங்க வை. நாளைக்கு விசேசத்துல இந்த ஊர் காரய்ங்க என்ன செய்ய காத்திருக்கானுங்களோ? சரி அது என்னென்னு அடுத்த எபிசோட்ல பாக்கலாம். அதுக்கு முன்னாடி இன்னிக்கு எபிசோட்ல உங்களுக்கு பிடிச்ச சீன் எதுன்னு மறக்காம கமெண்ட்ல சொல்லுங்க. அப்படியே எப்பவும் போல லைக் பண்ணிட்டு உங்க பிரண்ட்ஸ் கூட ஷேர் பண்ணுங்க)
தென்றல் தீண்டுமா?..
gayathri Shini
super sister