தென்றல் – 145

கார் சத்தம் கேட்டு, செல்வி வேகமாய் வெளியில் வர அவர்களுக்கு முன்பாக “கார் கார்” என்றப்படி கதிரவன் முன்னே ஓடினான். “டேய் பொறுமையா போடா” என்று செல்வி சொல்லிய எதுவும் அவன் கேட்கவில்லை.

ஏற்கனவே முருகேசன், இன்று நிலா வருவதாக சொல்லியிருக்க, அவனோ காலையில் இருந்து ரோட்டில் எந்த கார் சென்றாலும், “அக்கா. அக்கா” என்று ஓடிக் கொண்டிருந்தான்.

கதிரவன் ஓடவும், தாமரையும், “செத்த நில்லுடா” என்றப்படி அவரும் பின்னே வந்தார்.

“இறங்கு” என்று கதிர் சொல்ல, நிலாவும் சிறு தயக்கத்துடன் இறங்கினாள். அவள் இறங்கிய மறு நொடி, “அக்கா” என்று ஓடி வந்து அவளின் காலைக் கட்டிக் கொண்டான் கதிரவன்.

அதுவரை இருந்த தயக்கம் அவனைப் பார்த்ததும் மறைந்திருக்க, “அம்மு” என்று அவனைத் தூக்கி முத்தமிட்டாள்.

உடனே அவனும் வேகமாய் அவள் கன்னத்தில் முத்தமிட்டு, “இனி இங்கத்தான இருப்பீங்க?” என்று அவன் ஆர்வமாய் கேட்க, அவளுக்கோ என்ன பதில் சொல்ல என்று தெரியவில்லை.

அவள் ஒரு வித அமைதியில் உறைய, “அதேன் அவென் கேக்கான்த்தேன்ன சொல்ல வேண்டியதுத்தேன்ன. இனி இங்கத்தேன்னு” என்று தாமரை எடுத்துக் கொடுத்தார்.

அதில் தன் அம்மாவை முறைக்க நினைத்தாலும் கூட, நீண்ட நாட்களுக்குப் பின் அவரைப் பார்த்ததும், “ம்மா” என்று கட்டிக் கொண்டாள். அதில் அவருமே, “என் ராசாத்தி. எப்படிடி இருக்க. மொத்தமா, இந்த அம்மா வேணாம்னு ஒதுக்கிட்டீயாக்கும்” என்று சிறு ஆதங்கத்துடன் கேட்டார்.

“ச் என்னம்மா” என்று நிலா சொல்லும் முன்னே, “அட என்னக்கா நீ? வந்த புள்ளைக்கு ஆரத்தி எடுக்காம, எதையாச்சும் பேசிகிட்டு” என்று செல்வி சொல்ல, அப்போதே தன் சித்தியைப் பார்த்தாள்.

அதில் வேகமாய் அன்னையில் இருந்து “சித்தி” என்று அவரையும் கட்டிக் கொண்டாள். அவருக்கோ கண்ணெல்லாம் கலங்கியது. “எப்படித்தா இருக்க?” என்றார்.

“அக்கா, தங்கச்சி ரெண்டு பேரும் போன்ல புள்ளைய அப்படி வைஞ்சிட்டு, இப்போ அப்படியே அக்கற இருக்கிற மாதிரி கொஞ்சுறது” என்றப்படி முருகேசன் வந்தார்.

“ப்பா” என்று கதிரவன் முருகேசனிடம் ஓட, அதற்குள் தாமரையோ, “எங்கப் புள்ளைய, நாங்க வையுறோம், இல்ல கொஞ்சுறோம். உமக்கென்ன” என்றார்.

“க்கும் போச்சு போ. கேட்டீயாடா? இனிமே உன் அம்மைக்கும், பெரியம்மாக்கும், நீ கண்ணுக்கு தெரிய மாட்ட” என்று கேலியாய் முருகேசன் சொல்ல, “நான் அக்கா கூடத்தேன் இனி இருப்பேன்” என்றான் கதிரவன்.

“டேய் அவ உனக்கு அத்த டா” என்று முருகேசன் சொல்ல, அதில் கதிரவனோ, கதிரை முறைத்தப்படியே, “இல்ல நிலாக்கா எனக்கு அக்காத்தேன்” என்று அழுத்திக் கூறினான்.

“ஒரு அக்கா மவளையே சமாளிக்க முடியல. இதுல இவென் வேற” என்று நொந்தவன், “மாமா” என்றான்.

“பேசாத மாப்பிள்ள. புள்ளைய மட்டும் கூப்பிடாம நீ ஒத்தையில வந்து நின்னுருக்கனும். பொறவு தெரிஞ்சிருக்கும்” என்று கோவமாய் கூறினார்.

அதில் அவனோ, “வேணாம்ய்யா. அவத்தேன் அன்னிக்கே சொல்லிருக்காத்தேன்ன அப்போ அத அப்பவே ஒத்த போன்ன போட்டு சொல்லிருக்கலாம்ல. அம்புட்டு பிரச்சனைக்கும் காரணமே நீர்த்தேன்” என்றான்.

“ஏண்டா? பொண்டாட்டியா வாடின்னு கூப்டு வர சொன்னா, அத பண்ணாம, நீ என்னையவே நொட்டம் சொல்லிட்டிருக்கீயால?” என்று முருகேசன் பேச, “இன்னும் எம்புட்டு நேரம் புள்ளைங்கள வாசல்லையே நிக்க வச்சி பேசப் போறீக” என்றப்படி சங்கரேயன் அங்கு வந்தார்.

அவரைப் பார்த்ததும் நிலாவுக்கோ வார்த்தையே வரவில்லை. “வேண்டாம் கண்ணு போகாதடா” என்று அந்த பெரியவர் அவள் கைப் பிடித்து கெஞ்சி கேட்டும் கூட, அவளால் அவர் ஆசையை நிறைவேத்தியிருக்க முடியவில்லை.

“தாத்தா” என்றவளின் கண்ணீரைப் பார்த்தவருக்கோ, “அட என்னத்தா? நீ முதல்ல வூட்டுக்குள்ளார வா” என்றவர் அழைக்க, அதன் பின்னே செல்வியும், தாமரையும் கதிரைப் பார்த்தனர்.

அவனோ இருவரையும் முறைத்தான். “ஏன்க்கா, அவள போட்டு” என்று ஆரம்பிக்கும் போதே நிலா அவனை திரும்பிப் பார்க்க அப்படியே வாயை மூடிக் கொண்டான். பின்னே, அவன் ஏதாவது சொல்லப் போய், அவனின் அக்கா மகள் மீண்டும் முருங்கை மரம் ஏறிவிட்டால் என்ன செய்வது?

அவனையும், நிலாவின் பார்வையையும் கவனித்த பெரியவர்களோ, “என் தம்பிய என்னத்தடி பாக்குற” என்று தாமரை கேட்க, அவளோ, “நான் ஒன்னும் உங்க தம்பிய பாக்கல. என் தம்பிய பார்த்தேன். வாடா அம்மு” என்று கதிரவனை அழைக்க வேகமாய் அக்காவிடம் ஓடினான்.

“இந்த அவமானம் உனக்கு தேவையா?” என்று கதிரின் மனம் கேட்க, நிலாவோ கதிரை மீண்டும் அழுத்தமாய் பார்க்க, அவனோ அடுத்த நொடி அமைதியாய் அவளின் அருகில் வந்து நின்றான்.

“ஆனாலும் இவளுக்கு இம்புட்டு அழுத்தம் ஆகாதுடி. பார்த்தீயா, என்னமோ சின்னப் புள்ள தெரியாம பன்றான்னு சொன்ன. பாரு முழு மனுசன, அவ இஷ்டத்துக்கு வளைச்சிட்டு நிக்கா” என்று தாமரை செல்வியிடம் சொல்ல, “உங்க தொம்பிக்காரன விட எம் புள்ளைக்கு வீம்பு கம்மித்தேன். இப்படியே நின்னு பேசிட்டிருந்தா விடிஞ்சிடும். போயி ஆரத்திய கரைச்சி எடுத்துட்டு வாங்க. காலையிலையே குல தெய்வ கோவில் போனும். நான் போய் வண்டிக்காரன் கிட்ட ஒத்த வார்த்த சொல்லிட்டு வந்திடுறேன்” என்றப்படி முருகேசன் செல்ல, நிலாவோ “சித்தப்பா, ட்ரைவரண்ணாக்கு” என்று சொல்லும் முன்னே, “நான் பாத்துக்கிறேன் மா. நீ உள்ளாரப் போ” என்றார்.

அதற்குள்ளே ராணி ஆரத்தி எடுத்து வந்திருக்க, இருவருக்குமாய் ஆரத்தி எடுத்து உள்ளே அழைத்து சென்றனர். ஏனோ உள்ளே நுழையும் நொடி நிலாவுக்கு கண்ணெல்லாம் கலங்கியது. அதை உணர்ந்தது போல் கதிர் அவள் கரத்தை அழுத்திப் பிடித்தான்.

மீண்டும் அவனைத்தான் குற்றம் சுமத்தும் பார்வைப் பார்த்தாள். அவளை விட அவள் கையில் இருந்த கதிரவன் தான் கதிரை அப்படி முறைத்தான்.

அதன் பின், “செரித்தா. ரொம்ப தூரத்துல இருந்து வறீங்க. முதல்ல போயி குளிச்சிட்டு வாங்க. நான் சாப்பாடு எடுத்து வைக்கிறேன்” என்று செல்வி சொல்ல, “ம்” என்றவளுக்கு கதிருடைய அறைக்கு செல்ல மனமே இல்லை. அவன் தானே அந்த அறைக்குள் அவளே வர கூடாது என்று சொல்லியிருந்தான்.

அதனால் அவள் நேரே செல்வியின் அறைக்கு செல்லப் போக, “அங்க எங்கடி போற. மேலத்தேன் உன் ரூம் இருக்கு” என்றார் தாமரை.

“இல்ல நான் சித்தி ரூம்லையே” என்று நிலா ஆரம்பிக்க, கதிருக்கோ அதற்கு மேல் அங்கு நிற்க முடியவில்லை. அமைதியாய் அவன் அங்கிருந்து மேலே செல்ல முயன்றான்.

அதற்குள் கதிரவனோ, “அக்கா நீ என் ரூமுக்கு வாக்கா” என்று அவளை இழுத்தான். அவளொ கதிரைத்தான் பார்த்தாள். “ஒத்த வார்த்த வான்னு கூப்பிட மாட்டீங்கத்தேன்ன” என்று அவள் தனக்குள் நினைக்க, அவனுக்கோ எந்த முகத்தை வைத்துக் கொண்டு அவளிடம் அழைக்க என்று தெரியவில்லை.

அதற்குள் நிலைமையை கையில் எடுத்த செல்வித்தான், “ரூமு முழுக்க கோவிலுக்கு போறோம்னு பொருளா எடுத்து வச்சிருக்கேன். நீ மேல போயி செத்த ஓய்வெடும்மா” என்று அவள் கையைப் பிடித்து சொல்ல, கதிரோ, அடுத்த அடி எடுத்து வைக்காது அவளையே பார்த்தான்.

“ஏண்டா இப்புடி நிக்கிற. உன் பொண்டாட்டிய கூட்டிட்டு போயேன்” என்று சங்கரேயன் குரல் கொடுக்க, அவன் அவளை மீண்டும் பார்த்தான். அதற்குள்ளாக நிலாவே ஏதும் பேசாது, அவனுக்கு முன்னே படியேறியிருந்தாள். அதன் பின் கதிரும் அவளுடனே சென்றான்.

இதை எல்லாம் பார்த்த செல்விக்கும், தாமரைக்கும் ஐயோ என்றிருந்தது. “என்னடி இதுங்க ரெண்டும் இப்புடி இருக்கு?” என்று வாய் விட்டே தாமரை புலம்ப, “செரி வந்த உடனே ஆரம்பிக்காத. பொறவு இருக்கிறதும் இல்லாம போயிடப் போது. செத்த இவங்கள விட்டுத்தேன் புடிக்கனும்” என்றார் செல்வி.

“என்னமோடி. எனக்கு மனசே ஆறல. இதுக்காடி, இவிங்க ரெண்டு பேருக்கும், படிக்கிற காலத்துலையே கன்னாலத்த முடிச்சிக் கொடுத்தோம். இதுல நாளைக்கு வர்றவீங்க வேற கண்டத பேசுங்க. என்னத்தேன் நடக்கப் போதோ, அந்த மீனாட்சி அம்மனுக்குத்தேன் வெளிச்சம்” என்று புலம்பியப்படி சமையலறைக்குள் சென்றார்.

தாமரை வெளியில் புலம்பிவிட்டார். ஆனால் செல்விக்கோ ஊராரின் பேச்சை நினைத்து சிறு அச்சம் இருக்கத்தான் செய்தது. இருந்தும் தந்தையின் முகவாட்டத்தை பொறுக்க இயலாது, “அதேன் வூட்டுக்கு வந்துட்டாங்கத்தேன்ன. பாத்துக்கலாம்” என்று சொல்ல, “என்னமோம்மா. நான் என் சாமிக்கிட்ட போயி சேருறதுக்குள்ள, என் வூட்டு புள்ளைங்க எல்லாம் சந்தோஷமா இருக்கிறத பாத்தா போதும்” என்று சொல்லியப்படி அறைக்குள் சென்றார்.

அதற்குள் கதிரவனோ, “இப்போ ஏன்ம்மா, அவரு கூட என் அக்காவ இருக்க சொன்ன” என்று திட்டினான்.

அதில் தன்னுடைய நான்கு வயது வாண்டை முறைத்துப் பார்த்தவரோ, “டேய். நாங்களே அவீங்க எப்போ சேருவாங்கனு கெடக்கோம். நீ என்னென்னா, ஏண்டா வந்ததுல இருந்தே ஏழரைய இழுத்துட்டு நிக்க” என்றாள் செல்வி.

“போம்மா. அக்கா பாவம். அக்காவ அவர் முறைச்சிட்டே இருப்பாரு” என்று சொல்ல, “எதே? என் தம்பி உன் அக்காவ முறைக்கிறானா? உன் அக்காத்தாண்டா, என் தம்பிய முறைச்சிட்டு திரியிறா. முதல்ல அவள அத்தன்னு கூப்டு பழகு” என்றப்படி தன் மகனை தூக்கிக் கொண்டு அவர் அறைக்கு சென்றார்.

இங்கே மேலே அறைக்குள் செல்லாது அறை வாசலிலேயே நிலா நின்றிருக்க, கதிரோ அவளை கேள்வியாய் பார்த்தான்.

அவளோ, “இன்னிக்கு ஒரு நாளைக்கு உள்ள வரலாம்த்தேன்ன. இல்ல” என்று சொல்லி முடிக்கும் முன்னே அவள் கைப் பிடித்து உள்ளே அழைத்து சென்றிருந்தான்.

“நான் உன் மனச கஷ்டப்படுத்திட்டேன்னு தெரியும். ஆனா அப்போ சொன்னதுக்கெல்லாம் ஒரு அர்த்தமும் கிடையாது. சும்மா அத போட்டு யோசிச்சி” என்றவன் சொல்லி முடிக்கும் முன்னே, “அர்த்தமே இல்லாமத்தேன் அம்புட்டும் பண்ணீங்களா நீங்க?” என்று அடுத்த கேள்வியை அவள் எடுத்து வைக்க, கதிருக்கோ என்ன சொல்ல என்றே தெரியவில்லை.

அவன் தடுமாறினான். அவளோ சில நொடிகள் அவனைப் பார்த்து விட்டு பின் எதுவும் சொல்லாது தான் கொண்டு வந்திருந்த பையை ஓரமாய் வைத்தவள், துண்டை எடுத்துக் கொண்டு குளியலறைக்குள் சென்று விட்டாள்.

இங்கே அப்படியே சோபாவில் அமர்ந்தவனுக்கோ, இந்த பிரச்சனையை எப்படி சரி செய்ய என்று சுத்தமாய் தெரியவில்லை. “என்னடா கதிரு. இப்புடி போட்டு குழப்பி வச்சிருக்க. இப்போ என்னத்தேன் பண்ணப் போற?” என்று அவன் மனசாட்சி கேள்வி கேட்க, அவனோ அங்கே பெரிதாய் மாட்டப்பட்டிருந்த அவர்களுடைய புகைப்படத்தைப் பார்த்தான்.

கள்ளங்கபடமின்றி சிரித்துக் கொண்டிருந்த அந்த நிலாவின் முகம், இங்கே இவனின் மனதை பாடாய்ப்படுத்தியது.

சில நிமிடங்களில் குளித்து இரவு உடையுடன் வெளியில் வந்தாள். அதில் அவனின் மனம் ஒரு நொடி அவளை அளவிட்டது. அவள் ஒரு புடவையை தான் எடுத்து வந்திருந்தாள். அதனால் அவள் அதை மாற்றியிருக்க, கதிரும் அவளுடைய பையைக் கவனித்தான்.

அந்த கபோர்டை திறந்தால், அது முழுவதும் அவளுடைய சேலைகள் தான். ஆனால் அவள் அதை செய்ய மாட்டாள் என்று தெரியும். கேட்டால், அது உங்க அக்கா மகளுக்கு வாங்கி கொடுத்தது என்று பாடம் எடுப்பாள்.

அதனால் அது குறித்து எதுவும் சொல்லாது ஆழ்ந்த மூச்சை உள்ளிழுத்தவன், அவனுக்கான உடையை எடுத்துக் கொண்டு குளியலறைக்குள் செல்லப் போக, அவன் கையைப் பிடித்து தடுத்தாள்.

அதில் அவன் அவளைப் பார்க்க, “ஹீட்டர் இப்பத்தேன் போட்டிருக்கேன். இன்னும் தண்ணி சூடாகல” என்றாள். “இல்ல பரவாயில்ல” என்று கதிர் சொல்லி முடிக்கும் முன்னே, “தண்ணி சூடாகட்டும்” என்று அழுத்திக் கூறினாள்.

அதில் அவன் அப்படியே அவளைப் பார்க்க, அவளோ, பிடித்திருந்த அவன் கரத்தை விடுவிக்கப் போக, இப்போது அவள் கையை அவன் விடாது இறுக்கிப் பிடித்தான்.

இந்த குளிர் தண்ணீருக்கெல்லாம் அவன் அஞ்ச மாட்டான் தான். ஆனால் அவனுக்கு உடல் நிலை சரியில்லாமல் போனதில் இருந்து, குளிர் தண்ணீர் சேர்க்க வேண்டாம் என்று மருத்துவர் சொல்லியிருந்தார். அதெல்லாம் அவன் பார்க்காது தான் ட்ரெய்னிங்கில் இருந்தான். அதுவும் அவளுக்குத் தெரியும். ஆனாலும் அவள் கண் முன்னே அவனை எக்கேடோ கெட்டுப் போ என்று சொல்ல முடியவில்லை.

இப்போது அவள் கரம் அத்தனை ஜில்லிட்டிருக்க, அவளோ தலையில் கட்டியிருந்த டவலை கூட கழட்டாது அப்படியே நின்றிருந்தாள்.

அதில், “தண்ணி சூடாகலன்னு தெரியுதுத்தேன்ன, பொறவெதுக்கு தலைக்கு தண்ணி ஊத்துன” என்றப்படி வேகமாய் அவள் தலையில் கட்டியிருந்த துண்டை அவிழ்த்து அவள் தலையை துவட்டினான். ஏனோ சட்டென்று அந்த இடத்தில் ஒரு வித இதமும், நெருக்கமும் சேர்ந்தே உருவாக முயற்சித்தது.

(இந்த அக்கறைய இன்னும் கொஞ்சம் கூட சேர்த்து காட்டலாம் கதிரு. செரி அடுத்து என்னாகப் போதுன்னு அடுத்தடுத்த எபிசோட்ல பாக்கலாம். அதுக்கு முன்னாடி இன்னிக்கு எபிசோட்ல உங்களுக்கு பிடிச்ச சீன் எதுன்னு மறக்காம கமெண்ட்ல சொல்லுங்க. அப்படியே எப்பவும் போல லைக் பண்ணிட்டு உங்க பிரண்ட்ஸ் கூட ஷேர் பண்ணுங்க)

தென்றல் தீண்டுமா?..

Comments   3

*** தென்றல் – 145 - படைப்பை ரேட் செய்யுங்கள் ***