உடை மாற்றி வந்த நிலா, இன்னும் கதிர் ஹால் சோபாவிலேயே அமர்ந்திருப்பதைப் பார்த்து புருவத்தை நெறித்தாள். மணியைப் பார்க்க, அதுவோ கிட்ட தட்ட மணி பதினொன்றை தாண்டியிருந்தது.
“சாப்டாரா? இல்லையான்னு வேற தெரியல” என்று யோசித்தப்படி அவனின் முன்னே வந்து நிற்க, ஒரு நொடி அவளிடம் ஊருக்கு அழைப்போமா? என்று நினைத்து நிமிர்ந்தான்.
ஆனாலும் ஏனோ அவள் கண்ணில் இருந்த ஏதோ ஒன்று அதைத் தடுக்க, “போன வேல முடிஞ்சிதா?” என்றான்.
“முடிஞ்சிடும்னுத்தேன் நினைக்கிறேன். சாப்டீகளா?” என்றவளின் பார்வை டைனிங் டேபிளை ஒரு நொடி சென்று அலசி அவனிடம் வந்து நிற்க, “ம்” என்றப்படி அவனின் அறைக்கு சென்று படுத்துக் கொண்டான்.
இவளும் எதுவும் சொல்லாது, அமைதியாய் கிச்சனுக்குள் சென்று அவனுக்கு குடிக்க பால் எடுத்து வந்து அவனிடம் நீட்டினாள். “இல்ல” என்று சொல்லும் முன்னே, “மஞ்சள் போட்டிருக்கேன். தொண்டைக்கு இதமா இருக்கும்” என்றாள்.
ஏனெனில் அவன் பேசியதிலேயே தொண்டை சரி இல்லை என்பதை உணர்ந்தவள், அதற்கான மருந்தை நீட்ட, மனமோ அவளின் அன்பிலும், அக்கறையிலும் கரைந்தது. அப்படியே அவளை இழுத்து அணைத்து, தன் மன்னிப்பை வேண்ட, அவனுடைய ஒவ்வொரு செல்லும் துடித்தது.
ஆனாலும் கூட, அவன் கேட்டால், அவள் மன்னித்து விடுவாளே. ஆனால் அதற்காக அவள் பட்ட கஷ்டங்களை எல்லாம் அவள் மறந்து விட்டாள் என்று ஆகிவிடாதே. அதனால் அதை செய்யாது அந்த பால்லை வாங்கிக் கொண்டான்.
அவனின் மனைவியோ, அவனின் சிறு சிறு அசைவையும் ஆராய்ச்சியாய் பார்த்துக் கொண்டிருந்தாள். தன்னிடம் எதையோ சொல்ல நினைப்பதையும், அதை சொல்ல முடியாது இழுத்துப் பிடிப்பதையும் கவனித்தாள். எப்படியும் கேட்டால் சொல்ல மாட்டான். அவளுக்குமே இத்தனை நேரம் இருந்த அலைச்சல் உறங்க அழைக்க, அமைதியாய் கட்டிலில் சென்று படுத்துக் கொண்டாள்.
கிளாஸை அருகில் இருந்த மேஜையில் வைத்து விட்டு அவள் பக்கம் திரும்பி படுத்தான். உறக்கத்திலும், அவள் முகத்தில் இருந்த அந்த கனிவு, அவனை மேலும் மேலும் இம்சித்தது. அவள் நெற்றி வரை குனிந்தவன், பின் முத்தமிடாது அமைதியாய் அவள் கரத்தைப் பிடித்துக் கொண்டு விழி மூடினான். அதில் மெலிதாய் கண்ணைத் திறந்த நிலாவோ, அவனை முறைத்தாலும், அவனை சற்று நெருங்கிப் படுத்துக் கொண்டாள்.
இப்போது அவனின் இதழ் பட்டும் படாமல், அவள் நெற்றியை மெலிதாய் உரசியது. ஏனோ இருவருக்குள்ளும் சிறு இடைவெளி இருக்க, இப்போதைக்கு, இந்த மெல்லிய உரசலே போதுமானதாய் இருக்க, அவன் கரத்திற்குள் இருந்த தன் விரல்களை, அவனுக்கே கொடுத்தவளும் கண் மூடினாள்.
அடுத்த இரண்டு நாட்கள், முற்றும் முழுதாக நிலாவுக்கு வேலையில் கழிந்தது. கதிருமே சில வேலைகளில் இருக்க, அன்றைய தினம், செல்வி மனம் கேளாது நிலாவுக்கு கால் செய்து விட்டார்.
அவர் பேசியதை எல்லாம் கேட்ட நிலாவுக்கு ஏனோ இப்போது கதிரின் மீது கோவம் வந்தது. தன்னிடம் இது குறித்து அவன் பேசவே இல்லை. அப்படி இருக்க, இவர்கள் மாறி மாறி அழைக்கவும், “அவுகளுக்கே என் கூட வந்து நிக்க விருப்பமில்ல, பின்ன எதுக்கு?” என்றாள்.
“அவெனுக்கு விருப்பமில்லன்னு அவென் உண்ட்ட சொன்னான்னா நிலா?” என்று கடுமைக் கூட்டி செல்வி கேட்டார். ஏனோ இத்தனை நாள் வரையிலும் கூட நிலாவுடைய நியாயம் புரிந்து அவளுக்குத்தான் ஆதரவு நீட்டினார். இப்போதும் கூட நிலா பக்கம் இருக்கும் நியாயம் புரியத்தான் செய்தது. ஆனால் இப்படி இருவரும் முறுக்கிக் கொண்டே திரிந்தால் இது என்று சரியாவது? அதனால் தான் இன்று சற்று கடுமை கூட்டி பேச ஆரம்பித்தார்.
“விருப்பம்னு மட்டும் அவுக சொன்னாகளா?” என்று அவள் எதிர்கேள்வி கேட்க, “செரி நிலா. அவெனுக்கு விருப்பம் இருக்கு. இல்ல. அத விடு. அவென் உமக்கு மட்டுமில்ல. கதிரவனுக்கும் அவென் தான மாமன். அப்போ அவெனுக்கு செய்ய வேண்டியத அவென் செஞ்சித்தேன்ன ஆவனும். அவென் மாமன்னா, நீத்தேன்ன அத்த. பொறவு, உங்க சண்டையில, எதுக்கு எம்புள்ளைய ஒதுக்குறீங்க? சபையில, உன் மாமன் ஒத்தையில வந்து நின்னா உமக்கு சந்தோஷமா? ஏற்கனவே அவென்ன பத்தி பேசுறது போதாதா? அவென் உன்ன விட்டுக் கொடுத்துட்டான்னுத்தேன்ன, நீ கோவப்படுற. பொறவு இப்போ நீயும் அதத்தான்ன பன்ற. உன் கோவத்துக்கு மறுபடியும் அவென் எல்லார் முன்னாடியும் தல குனிஞ்சு நிக்கனுமா? நீ எம் பொண்ணா வரலன்னாலும், அவென் பொண்டாட்டியா வந்து நின்னுத்தேன் ஆவனும். உங்க சண்டைய என்னமோ பண்ணிக்கோங்க. எமக்கு அவென் அவென் பொண்டாட்டியோட வந்து நிக்கனும். நீங்க இங்க வந்து தங்க கூட வேணாம். வந்துட்டு போனா கூட போதும்” என்றவர் உறுதியாய் சொல்லிவிட்டு கால்லை கட் செய்து விட்டார்.
ஆனால் இங்கே நிலாவுடைய கண்ணில் தான் கண்ணீர் வந்தது. அதற்குள், தாமரையிடம் இருந்து அடுத்த அழைப்பு வந்திருக்க, அவரும் அவருடைய் கோவத்தை மொத்தமும் அவரிடம் இறக்கியவர், “உன் அப்பன், என் தம்பிய ஜெயிலுக்கு அனுப்பனும்னு கங்கனம் கட்டுனான். இப்போ நீ அவென்ன மொத்தமா, இந்த ஊர் முன்னாடி அசிங்கப்படுத்தனும்னு முடிவு பண்ணிட்டீயா?” என்று கோவமாய் சொல்லிவிட்டு வைத்து விட்டார்.
இவளுக்கோ அழுது கண்ணெல்லாம் சிவந்திருக்க, எதுவும் சொல்லாது வைத்து விட்டாள். கதிரோ இன்னும் கூட வீடு வந்திருக்கவில்லை. சிறு கோவம் துளிர்த்தது.
ஒரு முடிவு எடுத்தவளாய், முருகேசனுக்கு கால் செய்து, “நான் ஊருக்கு வரேன் சித்தப்பா. உங்க மருமவென் என்ன அழைச்சிட்டு வருவாரா? இல்ல நானே வரனுமான்னு கேட்டு சொல்லிடுங்க” என்று சொல்லிவிட்டு அழைப்பை வைத்து விட்டாள்.
அதில் முருகேசனோ, “இவென் ஏன்த்தேன் இப்புடி இருக்கான்? பொண்டாட்டிய வான்னு கூப்பிட கூடவா இவெனுக்கு கசக்குது. இதுல புள்ள குரலே வேற சரியில்ல” என்றவர் அடுத்த நொடி கிளம்பி செல்வியைப் பார்க்க சென்றார்.
“நிலாட்ட பேசுனீயா?” என்று சிறு கோவத்துடன் கேட்க, அதில் சிறிது தயங்கினாலும், “ஆமா பேசுனேன். இப்போ என்னத்தேன் என்ன பண்ண சொல்றீக? நான் அப்புடி பேசலன்னா, அவெ இந்தப் பக்கம் வர்றத பத்தி யோசிக்கவே மாட்டா” என்றார்.
“உன் தம்பி கூப்டா வரப் போறா. அவென் அத பண்ணல. இப்போ அவென் அக்காங்க ரெண்டு பேரும், அவ மேலத்தேன் அம்புட்டு தப்புன்ற மாதிரி பேசுறீக. அவ இடத்துல இன்னேரம் வேற ஒரு பொண்ணு இருந்திருந்தா, அப்போ தெரிஞ்சிருக்கும், உங்களுக்கும், உங்க தம்பிக்கும். இறங்கிப் போறான்னு, அவெள்ளையே போட்டு எல்லாத்துக்கும் உருட்டாதீங்க” என்று கோவமாய் கூறினார்.
அதில் அவரின் கையைப் பிடித்த செல்வியோ, “தப்பு என் தம்பி மேலத்தேன். அதுக்குன்னு, இவ வாழ்க்கையும் சேர்ந்து கெட்டுப் போனுமா? இப்படி நம்ம கண்ண விட்டு தள்ளியே இருந்தா, பொறவு நம்மளும் என்னத்தேன் பண்றது. இந்த வாட்டி அவ வரட்டும். இங்க இருந்து போறப்ப, ரெண்டு பேரும் மனசு ஒத்துத்தேன் போவாக. நீங்க வேண்ணா பாருங்க” என்று செல்வி நம்பிக்கை கொடுக்க முருகேசனுக்கோ நல்லது நடந்தால் சரி என்ற எண்னம் தான்.
“ஆனாலும் உம் தம்பிக்கு இம்புட்டு வீம்பு ஆகாது” என்றவர், நிலா சொல்லியதை சொல்ல, செல்விக்குமே கதிரின் மீது கோவம் தான் வந்தது.
“செரி. ஏதா இருந்தாலும் வந்ததும் பேசிக்கலாம். இப்போதைக்கு அவெண்ட்ட, அவள கூட்டியார மட்டும் சொல்லுங்க. அத விட்டுட்டு நீங்க ஏதாச்சு சொல்லி, அப்புறம் அவென் முரண்டு புடிக்கப் போறான்” என்றார் செல்வி.
இப்படியாக செல்ல, அன்றிரவு கதிர் வந்ததும், அவள் சென்று அவளுடைய அறையில் படுத்துக் கொண்டாள். அதில் புருவத்தை நீவியவன், “இப்போ இவெளுக்கு என்னாச்சு?” என்று யோசித்தாலும். ஏன் என்று கேட்கவில்லை.
அவெனுக்கு சாப்பாடை அவள் எடுத்து வைத்து சென்றிருக்க, கோவத்திலும் தன் வயிறு நோகாது பார்க்கும் மனைவியை மெச்சிக் கொண்டான்.
அவளை சென்று பார்க்க நினைத்தவன் பின், “உமக்கு கையில காயம்னு அங்க வந்து படுத்தா. இப்போத்தேன் சரியாகிடுச்சில்ல. அதேன் போயிட்டா. இப்போ நீ அங்குட்டு போய் என்னத்த பண்ணப் போற?” என்று அவன் மூளை நச்சரிக்க, அவனும் அவன் அறைக்கு சென்று படுத்துக் கொண்டான்.
இங்கே கண்ணீரில் கரைந்த நிலா, தன்னிடம் ஏன் சென்றாய் என்று கூட கேட்காதவனை நினைத்து, கண்ணீரை மொத்தமாய் உள்ளிழுத்துக் கொண்டாள். அவளும் என்னத்தான் செய்வாள்? முடிந்த அளவுக்கு அவளும் தன் மனதை அவனிடம் சொல்லியாயிற்று. அவள் கோவத்தையும் காட்டியாயிற்று. ஆனால் எதையுமே கண்டுக் கொள்ள மாட்டேன் என்று அவன் இருக்க, இவளுக்கோ, கோவமும், ஆதங்கமும் சேர்ந்தே வந்தது.
அடுத்த நாள் இருவரும் வீட்டில் இருந்தும் கூட ஒரு வார்த்தை இருவரும் பேசிக் கொள்ளவில்லை. இன்னும் மூன்று நாளில் கதிரவனுக்கு குல தெய்வ கோவிலில் வைத்து காது குத்து வைப்பதாக இருந்தது. கடைசி நேரத்தில் தான் அந்த நாள் என்பதையே சொல்லியிருந்தனர். அதற்கு முன்னர் ஒரு நாள் சொல்லியிருக்க, கடைசியில் அவர்கள் கோவில் பூசாரியோ, இந்த நாளுக்கு மாற்றியிருந்தார்.
இப்போது அவளுக்கு அது வேறு சிக்கலை ஏற்படுத்தியிருந்தது. அதற்கடுத்த நாள் தான் இவள் கட்சி மீட்டிங்கிற்கு பர்மிஷன் கொடுத்திருந்தாள். அவள் அங்கு இருந்தே ஆக வேண்டும். கோவில் சென்று உடனே திரும்ப வேண்டும். அதுவும் போக, மீட்டிங் நடக்கும் இடத்தை சிறு ஆய்வு வேறு செய்துக் கொள்ள வேண்டும். கடந்த முறை நடந்த கலவரம் போல், இம்முறை எதுவும் நடக்க கூடாது என்று அத்தனை பாதுகாப்பு நடவடிக்கையை ஏற்பாடு செய்திருந்தாள்.
இதற்கிடையில் கதிரும் கூட, அவளிடம் அது குறித்து ஒரு வார்த்தை பேசியிருக்கவில்லை.
அவளாக செல்ல வேண்டுமா? இல்லை அவன் அழைத்து செல்வானா? இப்படி எதுவும் தெரியவில்லை. முருகேசனோ, கதிரிடம் நிலா சொல்லியதை சொல்லியிருக்கவில்லை.
அவனாகவே அழைத்து வரட்டும் என்று அவர் யோசித்திருக்க, கதிரோ நிலா அங்கு வரவில்லை என்றே முடிவு செய்திருந்தான். ஏனெனில் அவனுக்குமே தெரியும். அவள் அந்த கட்சி மீட்டிங் வேலையில் பிஸியாக இருப்பாள் என்று.
அவனுக்குமே இன்னேரத்தில் அவளை தனியே விட்டு செல்ல மனம் இல்லைத்தான். ஆனாலும் அக்கா மகனுக்கு அவன் செய்ய வேண்டிய கடமை அழைக்க, அவனுக்கு மட்டும் பஸ்ஸில் டிக்கெட் புக் செய்திருந்தான். அவன் செல்கிறான் என்றும் அவன் சொல்லியிருக்கவில்லை.
அன்று மதியம் கிளம்பினால் தான் சரியாக இருக்கும். ஆனால் கதிரோ அவளிடம் பேசவில்லை. அதற்கு மேல் பொறுமை இல்லாதவள், முதலில் பஸ்ஸில் டிக்கெட் புக் செய்ய நினைத்து பின், “இல்ல கார்லையே கிளம்பிடலாம். அப்போத்தான் அங்க முடிச்சிட்டு அப்படியே அடுத்த நாள், மீட்டிங் நடக்கிற இடத்துக்கு போக முடியும்” என்று முடிவெடுத்திருந்தாள்.
இங்கே கதிரோ பஸ்ஸில் செல்வதாக இருக்க, இரண்டு நாளுக்கு தேவையான உடையை தன்னுடைய பேக்கில் அடுக்கிக் கொண்டிருந்தான். வெளியில் ஹாலில் இருந்தவளின் பார்வையிலும் அக்காட்சி தெளிவாய் விழுந்தது.
“என்ன கூட்டிட்டு போக உங்களுக்கு மனசு இல்லல்ல மாமா. செரி பரவாயில்ல. ஆனாலும் உங்களுக்கு விருப்பம் இல்லன்னாலும், என்னால உங்கள எந்த இடத்துலையும் விட்டுக் கொடுக்க முடியாது. உங்க பொண்டாட்டியா நான் வந்து நிக்கத்தான் செய்வேன்” என்று தனக்குள்ளே சொல்லியவள், அமைதியாய் அவளறைக்குள் சென்று கதவடைத்துக் கொண்டான்.
இங்கே தன் உடைமையை எடுத்துக் கொண்டவன், அவளிடம் சொல்ல நினைத்துப் பார்க்க, அவள் அறைக் கதவு பூட்டப்பட்டிருந்தது.
அதில் நெற்றியை நீவியவன், “குளிச்சிட்டிருக்காளோ என்னவோ?” என்றவன், மணியைப் பார்த்தான். அவன் இப்போது கிளம்பினால் தான் பஸ்ஸை பிடிக்க சரியாக இருக்கும். அதனால் தட்ட நினைத்து பின் அதை செய்யாது, தன் பேக்குடன் வெளியில் வந்தான்.
அவனுடைய பைக்கை ஸ்டார்ட் செய்யும் சத்தம் கேட்டு, நிலா ஜன்னல் வழியே பார்த்தாள். அவன் பஸ் ஸ்டாப்புக்கு செல்ல கிளம்பிக் கொண்டிருக்க, அதைப் பார்த்தவளுக்கு மனம் விட்டுத்தான் போனது.
“எண்ட்ட சொல்லிட்டுப் போனும்னு கூட உங்களுக்கு தோணலத்தேன்ன” என்றவளுக்கு கன்ணீர் வர அப்படியே நின்றுவிட்டாள்.
இங்கே கதிரின் மனமோ, “பேசாம கதவ தட்டி சொல்லிட்டு போவோம்மா?” என்று யோசிக்க, “இல்ல இல்ல அவ முகத்த பாத்தா, பொறவு கிளம்பவே மனசு இல்லாம போயிடும்” என்று யோசித்தப்படி தன்னுடைய பைக்கை எடுத்துக் கொண்டு கிளம்பியிருந்தான் கதிர்.
(ஏன்ப்பா கதிரு. சீரியஸா சொல்றேன். செரி விடு நான் உன்ன ஒன்னும் சொல்லல. ஆனாலும்.. வாய் வரைக்கும் வருது ஆனாலும் உன்ன திட்ட முடியல. என்னமோ பண்ணு பொ. செரி அடுத்து என்னாகப் போதுன்னு அடுத்தடுத்த எபிசோட்ல பாக்கலாம். அதுக்கு முன்னாடி இன்னிக்கு எபிசோட்ல உங்களுக்கு பிடிச்ச சீன் எதுன்னு மறக்காம கமெண்ட்ல சொல்லுங்க. அப்படியே எப்பவும் போல லைக் பண்ணிட்டு உங்க பிரண்ட்ஸ் கூட ஷேர் பண்ணுங்க)
தென்றல் தீண்டுமா?..
Keerthi Keerthi
nxt podunga sis
gayathri Shini
nila pavam.thitumpothu nalla pesurom ana thapunu therinjum pesa thayangurom.