தென்றல் – 142

நீண்ட வருடங்களுக்குப் பின், மனைவியின் முகத்தைப் பார்த்தப்படி கண் விழித்தான் கதிர். அது அந்த காலைப் பொழுதை மட்டும் அல்ல, அன்றைய பொழுதையுமே நல்லதாய் மாற்றிக் கொடுத்திருந்தது. காயத்தின் வலி குறைந்திருந்தாலும், இன்னும் கூட சிறு வலி இருக்கத்தான் செய்தது. நிலா மருத்துவமனைக்கு அழைத்தும், வர மறுத்து, அவன் வேலையைப் பார்க்க சென்று விட்டான்.

அதில் அவளுக்கோ கோவம் தான். ஆனாலும் கடத்தப்பட்ட பெண்ணை மீட்க வேண்டும். அப்படி இருக்க, அவளும் அவனின் வேலைக்காக அமைதிக் காத்தாள். நிலா சொல்லியது போல் தான் கதிர் செய்தான். ஆனால் இன்னும் சில வேலைகளையும் சேர்த்து பார்த்திருந்தான்.

அடுத்த இரண்டு நாளில், அந்தப் பெண்ணை கடத்தியவர்களே, திரும்ப ஒப்படைத்திருந்தனர். ஒரு காவலனாய் அது அவனுக்கு தோல்வித்தான். ஆனாலும் பொறுமையாய் இருக்க வேண்டிய சமயம் என்பதால், இப்போதைக்கு, அந்த கடத்தல் பின்னனியில் யார் இருக்கிறார்கள், என்பதை முதலில் கண்டுப்பிடிக்க நினைத்தான்.

இப்படியாக அந்த வாரமும் அழகாய் செல்ல, நிலா அவனுடன் தான் படுத்துக் கொண்டாள். ஏதோ அவள் அருகில் படுத்திருப்பதே அவனுக்கு போதுமானதாய் இருந்தது. இன்று ஒரு வித சந்தோஷ மன நிலையில் தான் கதிர் வீட்டுக்குள் நுழைந்தான்.

ஆனால் நிலாவின் முகத்திலோ அப்படி ஒரு பதட்டம். அதில் முதலில் கேட்க நினைத்தவன், அதன் பின் அவளோ ஷீபாவிடம், ஏதோ வேலைக் குறித்து மும்முரமாக பேசிக் கொண்டிருந்தாள்.

அதனால் அவனும் அவளை தொந்தரவு செய்யாது, உள்ளே சென்று தன் உடையை மாற்றி வெளியில் வந்தான். அவளோ இன்னும் கூட யாருடனோ தீவிரமாய்த்தான் பேசிக் கொண்டிருந்தாள்.

ஏதோ பிரச்சனை என்பது வரை புரிந்தது, இவளோ, “நோ சார் பர்மிஷன் கொடுத்தா, அது இன்னும் சிக்கல்ல பெருசுபடுத்தும். எனக்கு ஜஸ்ட் ஒன் டே டைம் கொடுங்க. நான் ஹேண்டில் பண்ணிக்கிறேன்” என்று சொல்லிக் கொண்டிருந்தாள்.

அந்தப் பக்கம் என்ன சொல்லப் பட்டதோ, இவள் மீண்டும் யாருக்கோ கால் செய்து பேச ஆரம்பித்திருந்தாள். அதில், சத்தம் கூட கொடுக்காது, கிச்சன் சென்று அவனே இருவருக்குமான இரவு உணவை சமைக்க ஆரம்பித்தான்.

அவன் ஏதோ ஒரு பாடலை கேட்டப்படி சமைத்து முடித்து வெளியில் வர, நிலாவோ வெளியில் செல்ல தயாராகி நின்றிருந்தாள். அதில் புருவத்தை நெறித்தவன் மணியைப் பார்த்தான். கிட்ட தட்ட எட்டு மணிக்கு மேலாகியிருந்தது.

அவளுக்கோ, அதுவரை கதிர் கூட கண்ணில் படவில்லை. கிளம்பும் போதே அவனைப் பார்த்தவள், “செத்த வேல இருக்கு. கிளம்புறேன். உங்களுக்கு சாப்பாடு நான்” என்று சொல்லும் முன்னே, “ஒரு நிமிஷம்” என்று சொல்லிவிட்டு அவளுக்கான உணவை தட்டில் போட்டு எடுத்து வந்தான்.

அதில் அவனை முறைத்தவளோ, “ச் உங்கள ஆறு காயத்த வச்சிக்கிட்டு சமைக்க சொன்னது” என்று கேட்டு முடிக்கும் முன்னே, அவளுக்கு உணவை ஊட்ட ஆரம்பித்திருந்தான். அதில் அவள் கண்கள் சட்டென்று கலங்க முயற்சித்தது. அதற்குள் அவன் தான் அவளுக்கு குடிக்க தன்ணீரை புகட்டி, “வேலையில சின்சியரா இருக்கிறது எவ்வளவு முக்கியமோ, அதே அளவுக்கு பொறுமையா இருக்கவும் தெரிஞ்சிருக்கனும்” என்றான்.

அவனின் அறிவுரையை அவள் என்று மீறியிருக்கிறாள். அதனால் முகத்தில் இருந்த பதட்டத்தை அவள் தணிக்க முயற்சிக்க, அவளுக்கு சாப்பாடு ஊட்டி முடித்தவன், கை கழுவிவிட்டு வந்தான்.

“செரி நான்” என்று நிலா அடுத்த அடி எடுத்து வைக்கும் முன்னே அவளை இழுத்து இறுக்கமாய் அணைத்திருந்தான். அன்றொரு நாள், அவள் பரீட்சை எழுத செல்லும் முன் அவள் ஓடி வந்து கட்டி அணைத்த காட்சி இருவருக்குமே நினைவில் வந்து நின்றது.

ஆனால் இப்போது நிலாவும் அவன் மார்பில் அழுத்தமாய் முகம் புதைத்து, தன் பதட்டத்தை போக்கிக் கொண்டாள். அவளுக்குமே அந்த நேரம் அவனின் அணைப்பு தேவையாய் இருந்தது.

முழுதாய் சில நிமிடம் இருவருமே வேறு உலகில் இருக்க, நிலாவுடைய கைப்பேசி இசைத்து அதன் இருப்பை உணர்த்தியது. அதில் நிலா மெதுவாய் அவனை விட்டு விலக, அவனோ அவள் கையைப் பிடித்து, “நான் வேணுன்னா, வர” என்று கேட்டு முடிக்கும் முன்னே, “நீங்க சாப்டு தூங்குங்க. நான் வர நேரமானாலும் ஆகும்” என்றப்படி நிலா வெளியில் சென்றாள்.

அதில் அவன் அப்படியே அங்கேயே நிற்க, வெளியில் சென்ற நிலா தலையை மட்டும் உள்ளே நீட்டி, “வந்திடுறேன்” என்று அழுத்தி சொல்லிவிட்டு அங்கிருந்து சென்றாள்.

அவளின் வார்த்தையில், அப்போதே தன்னுடைய தவறு அவனுக்கு புரிந்தது. வரவா? என்று கேட்காது, வருகிறேன் என்று சொல்லியிருந்தால், நிச்சயம் சரி என்றிருப்பாள்.

இப்போது அவன் கிளம்ப நினைத்து, அடி எடுத்து வைக்க, “சாப்டு தூங்குங்க. நான் பாத்துப்பேன். சாப்பிடுங்க” என்று குறுஞ்செய்தி அனுப்பியிருந்தாள்.

அவள் அத்தனை தூரம் சொன்ன பின், அவனும் அப்படியே ஹால் சோபாவில் அமர்ந்து சாப்பிட்டான். அதற்குள் வீட்டில் இருந்து அவனுக்கு அழைப்பு வந்தது.

ஏற்கனவே நிலா வர முடியாது என்று சொல்லியதை, அவனிடம் முருகேசன் சொல்லியிருந்தார்.

அவனோ, “அவள கட்டாயப்படுத்தாதீங்க” என்றிருந்தான். இப்போது வீட்டில் இருந்து அழைப்பு வந்தது.

அதில் புருவத்தை நீவியவனோ, அட்டண்ட் செய்து, “சொல்லுக்கா” என்றான். “என்னத்தடா சொல்ல சொல்ற, புருஷனும், பொண்டாட்டியுமா வந்து நின்னுங்கன்னு சொன்னா, அவ என்னமோ அந்த முறுக்கு முறுக்குறா. நீ என்னவோ, அவ விருப்பம்த்தேன் எல்லாம்னுட்டீயாம்? இப்புடி அத்தனையும் நீங்களே முடிவு எடுத்துட்டா, பொறவு, குடும்பம்னு நாங்க என்னத்துக்கு இருக்கனும். ஆத்தா இருந்திருந்தா, இன்னேரம் ரெண்டு பேர் தலையிலையும் தட்டி, சொல்லியிருக்கும், அதத்தேன் என்ன கட்டுன மகாராசன் இல்லாம ஆக்கிட்டான்னே, இப்போ நானும் செஞ்ச பாவத்துக்கு, உன்கிட்டையும் அவகிட்டையும் பேச முடியாம கெடக்கேன்” என்று கோவமாய் ஆரம்பித்து சோகமாய் முடித்திருந்தார் தாமரை.

அதில் கதிரோ, “என்னக்கா பேசுற, உன்ன என்னிக்குமே நான் என் அக்காவா இல்லாமா அம்மையாத்தான் பாக்குறேன்” என்றான்.

“என்னத்த பாக்குறீயோ? என் ஆத்தாக்குத்தேன், உன்ன குடும்பமா பாக்க கொடுத்து வைக்கல, இப்போ எனக்கும் அந்த கொடுப்பன கெடைக்காமலே போயிடுவேன் போல. உன்ட்ட சொல்லி என்னாகப் போகுது? நான் பெத்தது சரியில்ல. என்ன கட்டுனவன், உன் கனவு அழிச்சிட்டான். இப்போ நான் பெத்தது உன் வாழ்க்கையையும் சேர்த்து அழிச்சிட்டு நிக்குது” என்று புலம்பி முடிக்கும் முன்னே, “அக்கா” என்று கோவமாய் கத்தியிருந்தான்.

அவனின் கத்தலில், “இப்போ நான் என்னடா இல்லாதத சொல்லிட்டேன்? அவள படிக்க வச்சி கலெக்டர் ஆக்குனது நீ. ஆனா அவ என்னவோ சீமையில இல்லாத பொண்ணுக்கணக்கா துள்ளிட்டு திரியிறா. அவென் உடம்புல ஓடுற இரத்தம்த்தேன்ன, இவ உடம்புலையும் ஓடுது. அதேன் என் குடும்பத்த மொத்தமா” என்று அவர் மீண்டும் சொல்லும் முன்னே, “இன்னும் ஒத்த வார்த்த என் பொண்டாட்டிய பத்தி பேசுன, பொறவு உனக்கு தம்பின்னு ஒருத்தன் இருக்க மாட்டான்” என்று அத்தனை ஆக்ரோஷமாய் கத்தியிருந்தான்.

அதில் தாமரை அதிர்ந்து, “ஐயா ராசா. போதும்யா. நான் ஏதும் பேசல, எனக்குன்னு இருக்கிற ஒரு உறவையும் நான் இழந்துட்டு நிக்கனுமா?” என்று கண்ணீரோடு கேட்க, அதில் கோவத்தை இழுத்துப் பிடித்த கதிர், “அக்கா. நிலா மேல எந்த தப்புமே கிடையாது. இப்பவும் அவ என்ன நல்லாத்தேன்” என்று சொல்லி முடிக்கும் முன்னே, “அவெ மேல எந்த தப்பும் இல்ல. அவள பெத்ததுத்தேன் நான் பண்ண தப்பு. நீ செல்விட்ட பேசு” என்றவர், அவரிடம் மொபைலை கொடுத்திருந்தார்.

செல்வியோ தாமரையிடம், “என்னத்தக்கா பண்ணிட்டு திரியிற? சொன்னா கேட்கவும் மாட்டீங்கிற” என்றவர் கதிரிடம், “கதிரு. சாப்டீயா?” என்றார்.

“அதெல்லாம் சாப்டேன்க்கா. இப்போ அக்காக்கு என்னவாம்?” என்று பொறுமையாகவே கேட்டான். “அதொன்னுமில்லப்பா. கதிரவனுக்கு மொட்டை அடிச்சு காது குத்தலாம்னு முடிவு பன்ணி சாமிக்கிட்ட நாலு கேட்க போயிருந்தோம். அங்க இருந்த உறவுக்காரங்க. ஏதோ, பேசியிருப்பாங்க போல. அதேன் அக்கா, இப்புடி” என்றார்.

அவனுக்கும் புரிந்தது தான். எந்தளவுக்கு ஊர் ஆதரவாய் வந்து நிற்குமோ, அதே அளவுக்கு இப்படி ஏதாவது என்றால், அதை எப்படி எல்லாம் பேசியிருக்கும் என்று அவனுக்கும் புரிந்துத்தான் இருந்தது.

கதிர் அழைத்தால் அவள் வருவாள் தான். ஆனால் அவனுக்குத்தான் குற்ற உணர்ச்சியாய் இருந்தது. சொன்னதை செய்யும் கிளி பிள்ளையாய் அவள் இருக்க, அவளை காயப்படுத்திய தன் மனதிற்கு அவனே தண்டனைக் கொடுக்க நினைத்தான். நிச்சயம் அவள் அவனை காயப்படுத்தப் போவதில்லை. அப்படி இருக்க, இந்த விலகல், அவனுக்கு அவன் கொடுக்கும் தண்டனை. இப்போதும் குடும்பத்துக்கு என்று அவள் மனதை உடைக்க மனம் வரவில்லை.

“என்னக்கா? ஊர பத்தி தெரியாதா? அதுக்கெல்லாம மனச போட்டு குழப்பிக்கிடுறது?” என்றார். “செரிடா நாங்க எதையும் குழப்பிக்கல. நீ செத்த அவட்ட பேசிப் பாரேண்டா. நீ சொன்னா, அவ கண்டிப்பா கேட்பா” என்று செல்வி சொல்ல, “அதேன்க்கா நான் சொல்ல மாட்டேங்கிறேன். அவளுக்கா விருப்பமிருந்தா வரட்டுமே. திரும்ப திரும்ப அவள போட்டு எதுக்குக்கா கஷ்டப்படுத்தனும்?” என்றான் கதிர்.

“அதுக்குன்னு இன்னும் எத்தன நாளைக்கு ரெண்டு பேரும் ஊர் பக்கம் வராம இருக்கப் போறீக? அதுவும் போக, உங்கள என்ன இங்கேயேவா இருக்க கூப்பிடுறோம். ரெண்டு நாள் வந்துட்டு போங்கன்னுத்தேன்ன சொல்றேன். ஊருக்காண்டியாச்சும் வந்து நின்னுட்டு உடனே கூட கிளம்பிடுங்க. பொறவு உங்க சண்டைய பாருங்க” என்றார் செல்வி.

“என்னக்கா நீ? திரும்ப திரும்ப” என்ற கதிர் முடியாது என்று மறுக்க, “என்னமோ போ. கருவேப்பிள கொத்து கணக்கா, ஒத்தைக்கோர் மாமன் ராசனாட்டம் இருந்தும் என் புள்ளைக்கு நிம்மதியா ஒரு மொட்ட போட்டு காது குத்த முடியல. எனக்கும், என் புள்ளைக்கும் வாய்ச்சது அம்புட்டுத்தேன்” என்று சொல்லிவிட்டு செல்வி அழைப்பை வைத்து விட்டார்.

கதிருக்கோ என்ன செய்ய என்று தெரியவில்லை. அப்படியே அமர்ந்து விட்டான்.

இங்கே நிலாவோ அந்த அரசியல் வாதியின் வீட்டில் தான் அமர்ந்திருந்தாள். சுற்றிலும் பல அரசியல் பிரமுகர்கள் எல்லாம் இருந்தனர்.

ஆனாலும் அவளோ சற்றும் அசராது, “நான் என் பக்கம் சொல்ல வேண்டியத சொல்லிட்டேன் சார். இதுக்கப்புறம் நீங்கத்தான் முடிவு பண்ணனும்” என்றாள்.

“என்னம்மா? நீ தலைவர் முன்னாடி இருக்கார்ன்றத மறந்துடாத. சின்னப் புள்ளையாச்சேன்னு” என்று ஒருவர் பேசி முடிக்கும் முன்னே, “அப்போ நீங்களே பண்ணியிருக்க வேண்டியதுத்தான. என்கிட்ட எதுக்கு வந்து நிக்குறீங்க?” என்றாள்.

அவள் முகத்தில் தெரிந்த அந்த தைரியத்தைப் பார்த்தவர்களுக்கோ சிறு பிரமிப்புத்தான். ஆனாலும் உடனே எல்லாம் அவள் சொல்லியதை அவர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. ஆனால் நிலாவோ எடுத்த முடிவை விட்டுக் கொடுக்க மாட்டேன் என்று உறுதியாய் இருக்க, ஒரு கட்டத்தில், “செரிம்மா. நீங்க சொன்ன மாதிரியே, எங்க சைட் இருந்து எந்த பிரச்சனையும் நாங்க பண்ண மாட்டோம். அத மீறி ஏதாச்சும் நடந்தா, அதுக்கும் நாங்கத்தான் காரணம்னு எங்காளுங்க எழுதி கொடுப்பாங்க. இப்போ அந்த இடத்துல மீட்டிங் நடத்த பர்மிஷன் கொடுப்பீங்கத்தான?” என்று பொறுமையாகவே அந்த அமைச்சர் கேட்டார்.

அதில் அவளோ, “சரி. நாளைக்கே, உங்க சைட் இருந்து பிராபர் லெட்டர் ப்ரோசீட் பண்ணுங்க. நான் சைன் பண்ணிடுறேன்” என்றப்படி எழுந்துக் கொண்டாள். 

“சாப்டு போங்க” என்று அவர் மரியாதை நிமிர்த்தமாய் சொல்ல, “பரவாயில்ல சார். நன்றி வரேன்” என்று அழுத்தம் திருத்தமாய் சொல்லிவிட்டு அங்கிருந்து வெளியில் வந்திருந்தாள்.

கட்சித் தொண்டர்களுக்கே அத்தனை ஆச்சர்யமாய் இருந்தது, “அட என்னத் தலைவரே, சின்னப் புள்ளைக்கிட்ட போயி நீங்க இறங்கிப் போறதா? ரெண்டு தட்டு தட்டுனா பர்மிஷன் கொடுத்துட்டு போரா” என்று ஒருவன் சொல்ல, “அந்தப் பொண்ண பார்த்தா உனக்கு அப்படியா தெரியுது?” என்று அரசியலில் கை தேர்ந்தவர் என்பதை அவருடைய சிரிப்பு சொன்னது.

பின்னே நிலாவைத் தானே வந்ததில் இருந்து கவனித்திருக்கிறார். “இந்த மாதிரி அதிகாரிங்க கிட்டலாம் நம்ம பகைய வளர்க்க கூடாது” என்று அழுத்தி சொல்லிவிட்டு அவர் எழுந்துக் கொண்டார்.

“இல்லத் தலைவரே” என்று ஒருவன் இழுக்க, “போட்டும். இப்பத்தான்ன வந்திருக்காங்க. பாப்போம்” என்றவரின் வார்த்தைக்கு பின்னே இல்லாத அர்த்தமா என்ன?..

இங்கே நிலா வீடு வரும் போது கிட்ட தட்ட நள்ளிரவைத் தொட்டிருக்க, கதிரோ அப்போதும் ஹால் சோபாவில் தான் அமர்ந்திருந்தான்.

அதில் அவள் கேள்வியாய் அவனைப் பார்க்க, அவனுமே எதார்த்தமாய் திரும்ப அவளைப் பார்த்தான். இருவரின் பார்வைக்குள்ளும் ஏதோ ஒன்று இருக்க, கதிர் பார்வையை விலக்கிக் கொண்டான். நிலா உடை மாற்ற சென்று விட்டாள்.

(இப்போ அவுக அந்த கோவில் போவாகளா? மாட்டாகளா? எனக்கே புரியலையே. ஆனாலும் கதிரு நீ ஒரு வார்த்த அந்த புள்ளைய கூப்டு பாக்கலாம். நான் சொன்னா நீ எங்க கேட்கிற? செரி அடுத்து என்னாகப் போதுன்னு அடுத்தடுத்த எபிசோட்ல பாக்கலாம். அதுக்கு முன்னாடி இன்னிக்கு எபிசோட்ல உங்களுக்கு பிடிச்ச சீன் எதுன்னு மறக்காம கமெண்ட்ல சொல்லுங்க. அப்படியே எப்பவும் போல லைக் பண்ணிட்டு உங்க பிரண்ட்ஸ் கூட ஷேர் பண்ணுங்க)

தென்றல் தீண்டுமா?..

Comments   1

*** தென்றல் – 142 - படைப்பை ரேட் செய்யுங்கள் ***