தென்றல் – 141

கதிரின் காயத்துக்கு மருந்து போட்டு விட்டு, கிச்சன் சென்று அவன் சாப்பிட உணவு எடுத்து வந்தாள். அவனோ, “இல்ல எனக்கு” என்று சொல்லும் முன்னே, அவனருகில் அமர்ந்து, ஒரு வாய் உணவை எடுத்து அவன் முன் நீட்டினாள். இப்போது அவனால் மறுக்க முடியவில்லை.

ஏதோ அவன் அன்னையே வந்து ஊட்டுவது போல் ஒரு எண்ணம். அதில் அவளைப் பார்த்தப்படியே உணவை மெல்ல விழுங்கினான். அவளுக்கோ, இன்னும் கூட கண்ணெல்லாம் கலங்கித்தான் இருந்தது.

அவனிடம் என்ன நடந்தது என்று கேட்டாலும், அவன் சொல்ல மாட்டான். இவளும் கேட்க மாட்டேன் என்ற பிடிவாதத்தில் இருந்தாள். ஆனாலும் மனம் ஆறவே இல்லை. அவன் காயத்தையேத்தான் பார்த்தாள்.

அதைக் கவனித்தவனோ, “நீ சாப்டீயா?” என்று அவள் கவனத்தை திசை திருப்ப முயற்சித்தான். அதில் அவனுக்கு பதில் சொல்லாது அடுத்த வாயை அவனின் முன் நீட்ட, “உண்ட்டத்தான கேட்கிறேன்” என்று அழுத்திக் கூறினான்.

அதில் இப்போது கோவமாய் அவனை முறைத்தவளோ, “நான் மட்டும் நீங்க கேட்டவுடனே பதில் சொல்லனும், ஆனா நீங்க எண்ட்ட எதையும் சொல்ல மாட்டீக. அப்படித்தேன்ன?” என்றாள்.

அவளின் கோவத்தில் அவள் மூக்கு நுனியும், இப்போது அழகாய் சிவந்தது. அதில் இறுக்கம் தொலைத்து, சற்றும் யோசிக்காமல், அவள் மூக்கு நுனியில் மெதுவாய் இதழ்பதித்தான்.

அதில் அவள் அதிர்ந்து விழிக்க, அவனோ, “உன்ட்ட சொல்லாம, நான் எங்க போயிடப் போறேன்? சொல்றேன் ஆனா அதுக்கு நேரம் இதில்ல” என்றவனின் அடிபடாத கரம் அவள் இடையை சுற்றி வளைத்து தன் பக்கம் இழுத்தது.

அவனின் தொடுதலில், இங்கே இவளின் உள்ளம் தத்தளிக்க ஆரம்பிக்க, அவளின் தேகமும் கூட, அவனின் இழுப்புக்கு செல்ல, இவளின் கோவம் தான் இன்னும் கோவப்பட்டு அவள் விழியில் சிவப்பை கூட்டியது.

அதே நேரம், அவள் கழுத்து வளைவில், மீசை முடி உரச, உலாவிக் கொண்டிருந்தவனின் செயலில், அவளின் கன்னமும் சேர்ந்தே சிவக்க, இப்போது அவளுக்கு கோவத்தை இழுத்துப் பிடிக்கவா? இல்லை வெட்கத்தை மறைக்கவா? என்றே புரியாத நிலை.

அவளின் உணர்வு தடுமாற்றத்தை பயன்படுத்தி, அவள் மேனியின் சுவாசத்தை ஆழ்ந்து சுவாசித்தான். அவனின் செயலில், இங்கே உள்ளங்கால் தொட்டு, உச்சந்தலை வரை, ஜில்லென்ற உணர்வு சரசரவென்று பரவ, அவள் பூனை ரோமங்கள் எல்லாம் சிலிர்த்து அவள் தவிப்பை சொல்லியது.

கையில் இருந்த தட்டை அவள் இழுத்துப் பிடிக்க, முடிந்த மட்டும் அவள் வாசத்தை அவள் கழுத்தில் முகம் முதைத்து தனக்குள் இழுத்துக் கொண்டவன், மெதுவாய் அவளை விட்டு விலகி முகத்தைப் பார்த்தான்.

அவளோ உணர்வுகளை மறைக்க உதட்டைக் கடிக்க, அதை தன் இதழ் கொண்டு விடுவிக்கவே நினைத்தான். ஆனாலும் கூட அவள் வலியின் ஆழத்தை உணர்ந்து, “சாப்டு” என்றான்.

அவனின் வார்த்தையில் இப்போது இரு சொட்டு கண்ணீர் சட்டென்று திரண்டு, அவள் கன்னத்தை தாண்டி அவன் கரத்தில் வந்து விழுந்தது. அதில் அடிப்பட்டதைப் மறந்து, வேகமாய் அவள் கண்ணீரைத் துடைக்க, கரத்தை உயர்த்தினான்.

வலியில் அவன் முகம் சுணங்கியது. அதற்குள்ளாக, அவன் கைப் பிடித்து தடுத்து, தன் கண்ணீரை புறங்கையால் துடைத்தவள், “நான் சாப்பிடுறேன். நீங்க முதல்ல சாப்பிடுங்க” என்று அடுத்த வாயை அவனுக்கு ஊட்டினாள்.

அவள் சொன்னால் செய்வாள் என்பதால், அவனும் வாங்கிக் கொண்டான். ஆனால் இருவருக்குள்ளும், வலியும், காதலும் நிரம்பி வழிந்தது. ஆனால் இரண்டையுமே அந்த நேரத்தில் அவர்களால் காட்ட முடியவில்லை.

அவன் சாப்பிட்டு முடித்ததும், அங்கிருந்து எழுந்து சென்றவள், அவளுக்கும் ஒரு தட்டில் சாப்பாடு போட்டு சாப்பிட ஆரம்பித்தாள். அவள் சாப்பிட்டு முடிக்கும் வரை அங்கே அமர்ந்திருந்தவன், அவள் கை கழுவிவிட்டு வரும் முன் அவனுக்கான அறைக்குள் சென்றிருந்தான்.

அதில் இவளுக்கோ கோவம் தான் வந்தது. “நான் ஏதும்மே பண்ணக் கூடாது. அதேன்ன உங்க விருப்பம். செரி. எல்லாம்மே உங்க விருப்பமாவே இருந்துட்டு போட்டும்” என்று வந்த கண்ணீரை உள்ளிழுத்துக் கொண்டு அவளறைக்கு சென்று கட்டிலில் படுத்தாள். ஆனால் உறக்கம் தான் வர மறுத்தது. ஒரு கட்டத்தில் அவளுடைய கோவம் எல்லாம் பின்னே செல்ல, அவனைப் பார்க்க நினைத்து கதவைத் திறந்து வெளியில் வந்தாள்.

அங்கே அவனோ சோபாவில் அமர்ந்து லேப்டாப்பில் எதையோ பார்த்துக் கொண்டிருந்தான்.

அதில் இவளோ, “இன்னும் தூங்காம என்னத்தப் பன்ணிட்டிருக்கீங்க?” என்று கேட்டப்படி அவனின் பின்னே வர, அவனோ ஏதோ ஒரு சிசிடிவி கேமரா காட்சியை ரொம்ப தீவிரமாய் பார்த்துக் கொண்டிருந்தான்.

அவளைப் பார்த்ததும், அவனோ, “செத்த வேல இருக்கு அதேன். நீ போயி படு” என்று சொல்ல, அவளோ அதை செய்யாது, அவனுக்கு அருகில் இருந்த சோபாவில் வந்தமர்ந்தாள். அவனும் அதற்கு மேல் எதுவும் சொல்லவில்லை. தீவிரமாய் அவன் லேப்டாப்பில் மூழ்கியிருக்க, இம்முறை அவள் கேட்காமலே, “ஒரு பொண்ண கிட்னாப் பண்ணிட்டாங்க. அந்த கேஸுலத்தேன் இருக்கேன்” என்றான்.

அவனின் பதிலில், “என்ன? ஆறு கடத்துனா? எதுக்காக?” என்று பதட்டமாய் அடுத்தடுத்த கேள்வியைக் கேட்டாள். அதில் அவனோ, “கஸ்டம் ஆபிசரோட பொண்ணு. ஏதோ, அவங்க பொருள, இவரு பிடிச்சு வச்சிருப்பாரு போல, அதனால அத ரிலீஸ் பண்ண சொல்லி, மிரட்டுறாங்க. பட் இன்னும் அந்த கேங்கோட டீடெய்ல்ஸ் பத்தி தெரியல” என்றான்.

அப்போதே அவளுக்கு அன்றொரு நாள் செய்தியில் கேட்ட விஷயங்கள் எல்லாம் நினைவுக்கு வர, “தெரியலன்னா, இப்போ என்னப் பண்ணப் போறீங்க?” என்றாள்.

“நீ கலெக்டர்த்தேன்ன, நீயே சொல்லு அடுத்து என்னப் பண்ணலாம். நீயும் ட்ரெய்னிங் எல்லாம் முடிச்சிருக்கத்தேன்ன?” என்றான்.

அதில் அவளோ, சற்றும் யோசிக்காது, “அந்த பொருள ரிலீஸ் பண்ணிட்டு, அந்தப் பொண்ண பர்ஸ்ட் ரெஸ்கியூ பண்ணுவேன்” என்றாள்.

உடனே புருவத்தை உயர்த்தி அவளைப் பார்த்தவனோ, “ஒரு பொண்னுக்காக, போலீஸ் கைப்பற்றுன இல்லீகல் திங்க்ஸ, அவங்களுக்கே ஒப்படைச்சிடனுமா? அப்போ அவனுங்க இதே மாதிரித்தேன்ன அடுத்தடுத்து பண்ணுவானுங்க” என்றான் கதிர்.

“பண்ணட்டும்” என்று நிலா சொல்ல, “நிலா” என்று அவன் சற்று குரலை உயர்த்த, “தப்பு பண்ணது ஆறுன்னு கண்டுப்பிடிக்க முடியாத பட்சத்துல, அவுகள இன்னும் நாலு தப்பு சேர்த்து பண்ண வைக்கனும். அப்பத்தேன், அது யாருன்னு நம்மளால கண்டுப்பிடிக்க முடியும். அது முடியலன்னாக் கூட, குறைஞ்சபட்சம், அதப்பத்துன விவரம் நமக்கு தெரியவரும். இப்போ இந்தப் பொண்ண கடத்துனவங்களுக்கு, அவங்க வேல முடியலன்னா, அந்த பொண்ன கொன்னுட்டு, அடுத்த வேலைய பார்ப்பானுங்க. ஆனா சர்வீஸ்ல இருக்கிற நம்ம, அப்படி ஒரு பொண்ணோட உயிர ஈஸியா எடுத்துக்க முடியாதுல்ல. குற்றவாளிங்கள கண்டுப்பிடிக்கிறது எவ்வளவு முக்கியமோ, அத விட, பொதுமக்களோட பாதுகாப்பு ரொம்ப முக்கியம்” என்றாள்.

அவளின் தெளிவான வார்த்தையில், மெச்சித்துக் கொண்டாலும், அதை முகத்தில் காட்டாது, “ஏன் நம்ம அந்த பொண்ண வச்சி ரிஸ்க் எடுத்துப் பாக்கலாம் இல்லையா” என்று விடாது கேட்டான்.

அவளோ வெகு சாதாரணமாய், “நீங்க பண்ண ரிஸ்குக்குத்தேன்ன, கையில காயத்தோட வந்திருக்கீக. ரிஸ்க் எடுக்காம, நீங்க வேற வழிய யோசிக்க மாட்டீங்க. அப்போ இத்தனைக்கப்புறமும், உங்க கையில அவென் சிக்கலன்னா, நம்ம விட்டுத்தேன் புடிக்கனும். இதுக்கு மேல நம்ம ரிஸ்க் எடுக்கிறது, தெரிஞ்சே அவன தப்பிக்க வைக்கிற மாதிரி இருக்கும்” என்றாள்.

தன்னைப் பற்றிய புரிதலில், அவன் மீசையோரம் புன்னகை துளிர்க்க, அதை அடக்கி, அவளுடைய இந்த தெளிவான அறிவுரையை, மனதிற்குள் மெச்சிக் கொண்டான்.

அவளையே அவன் விழி எடுக்காது பார்க்க, “ரொம்ப நேரம் ஆச்சு. தூங்குங்க” என்று சொல்லியப்படி அவள் எழ சென்றாள். அதற்குள்ளாக, அவளை ஒரு கரத்தால் இழுத்து தன் மடியில் அமர வைத்தவன், அவள் கன்னத்தில் அழுத்தி இதழ் பதித்தான்.

அவனின் முத்தத்திலும், நெருக்கத்திலும் தடுமாறினாலும், சிறு கோவத்துடன், விலக முயல, “கலெக்டர் மேடம் என் வேல மொத்தத்தையும் லேசாக்கி கொடுத்திருக்கீங்க. அப்போ நானும் கொடுக்கனும்த்தேன்ன” என்றவனின் கரம் இப்போது அவள் ஆடைக்குள் புகுந்து அவள் இடையை தழுவ முயற்சித்தது.

“கலெக்டர் மேடமுக்குன்னு, நீங்க ஏதும் எனக்கு கொடுக்க தேவையில்ல” என்று அவன் கையை தடுத்துப் பிடித்து சொல்லிவிட்டு அவனை விட்டு எழுந்தாள்.

அதில் அவளின் கோவம் அவனுக்கு தெளிவாய் புரிந்தது. ஆனாலும், அதை மறைத்து, “அப்போ என் அக்கா மவளுக்கு கொடுக்கலாம்த்தேன்ன” என்றான்.

இப்போது இன்னும் கோவமாய் முறைத்தவள், “உங்க அக்கா மவளுக்கு, குச்சி மிட்டாயும், பஞ்சு மிட்டாயும் வாங்கி கொடுங்க, அத தின்னுட்டே உங்க மடியில வந்து உட்கார்ந்துப்பா. இந்த முத்தம் கித்தம்லாம், ஒன்னும் வேணாம். அதுவும் போக, உங்க அக்கா மவ ஒன்னும் இங்க இல்ல” என்று உதட்டை சுழித்து சொல்லிவிட்டு அங்கிருந்து சென்றாள்.

இம்முறை கதவை சாத்தாமலே, அவனைப் பார்த்தப்படியே கட்டிலில் சென்று படுத்துக் கொண்டாள். அதைப் பார்த்தவனின் முகத்தில் புன்னகை அரும்பியது.

அவள் அப்படித்தான் அவன் ஹாலில் இருக்கும் வரை கதவை மூட மாட்டாள். அவனிடம் இத்தனை எதிர்த்து பேசுபவள், ஒரு நாளும் அவனை அவள் அறைக்குள் வராதே என்றும் சொல்லியது இல்லை. அவன் முன்னே தெரியாது கூட கதவை பூட்டியதும் இல்லை. 

தெரியாமல் கூட தன்னை காயப்படுத்த மறுக்கும் பெண்ணவளிடம், தான் காட்டிய பாராமுகம் அவளை எத்தனை வதைத்திருக்கும் என்று அவனுக்கே புரிந்தது. எத்தனை நாள் கெஞ்சி அவன் முன்னே வந்து நின்றவளின் முகத்தை கூட பார்க்காது கதவை அடித்து சாத்தியிருப்பான். இப்போது அது எல்லாம் அவனை என்னமோ செய்தது. 

அதில் லேப்டாப்பை மூடியவன், அங்கே கட்டிலில் படுத்திருந்தவளின் முகத்தைப் பார்த்தான். அவளும் அவன் பக்கம் பார்த்தப்படித்தான் படுத்திருந்தாள்.

அதில் கரத்தைக் கோர்த்து நீட்டி அலுப்பு முறிக்க நினைக்க, முழங்கையின் காயம் தன் இருப்பை சொல்ல, அவன் முகத்தை சுழித்தான். அது இங்கே இவளுக்கு வலித்தது.

“கொஞ்சம் கூட அடிப்பட்டிருக்குன்ற நினப்பே இல்ல” என்று சொல்லியவள், அங்கிருந்து எழுந்து மீண்டும் அவனிடம் வந்தாள்.

“தூங்கத்தேன் போறேன்” என்று அவன் சொல்ல, “அந்த ரூம்ல ஏசி செரியா வேல செய்யல” என்றாள்.

அவளின் வார்த்தையில், “நாளைக்கு ஆள் வர சொல்றேன். இல்ல இப்பவே பாக்கவா?” என்று குழப்பமாய் கேட்டான். அதில் அவனை முறைத்தவளோ, “இந்த கைய வச்சிட்டு நீங்க என்னப் பாக்கப் போறீங்க. நான் நாளைக்கு ஆள் வர சொல்லிக்கிறேன். எனக்கு ஏசியில படுத்தே பழகிடுச்சி” என்றாள்.

அதில் அவனோ குழப்பமாய் பார்த்தான். குளிர் காலத்தில் சற்று அதிகமாய் காற்று அடித்தாலே அத்தனை பெட்சீட்டை இழுத்து மூடி படுத்துக் கொள்வாள். பற்றாக்குறைக்கு அவனின் சட்டைக் கூட அவளிடம் தான் மொத்தமாய் இருக்கும். அவனுக்குள்ளே புகுந்துவிடும் அளவுக்கு, அப்படி நடுங்குவாள். இத்தனை நாளில் அவள் ஏசி போட்டு உறங்கி கூட அவன் பார்த்ததில்லை. இப்போது சட்டென்று அவள் அப்படி சொல்லவும், இவனுக்கோ, “செரி இப்போ நான் என்னப் பண்ணட்டும்?” என்றான்.

“நீங்க ஒன்னும் பண்ண வேணாம். நான் உங்கள ஒன்னும் பண்ண மாட்டேன். அத மட்டும் நம்புனா போதும்” என்றாள்.

இப்போது சுத்தமாய் புரியவில்லை அவன் முழித்த முழியில் இன்னும் கடுப்பானவளோ, “என்னத்தேன் பெரிய ஆபிசரோ? இதுல என்ன சின்னப் புள்ள சின்னப்புள்ள சொல்ல வேண்டியது. எதுவுமே புரிஞ்சிக்க தெரியல” என்று வாயுக்குள் முனுமுனுத்தவள், அவனுடைய அறைக்குள் நுழைந்து அவனைப் பார்த்தாள்.

அப்போதே அவனுக்கு அது புரிய, “ச்சே, என்னடா கதிரு, சின்னப் புள்ள முன்னாடி அசிங்கப்படுறீயேடா” என்று தன்னைத் தானே திட்டியவன் எழுந்து அவனின் அறைக்கு வந்தான்.

அவளோ அறைக்கதவை உள்பக்கமாய் தாழிட்டுவிட்டு, அவனின் கட்டிலில் ஒரு ஓரத்தில் சென்று படுத்துக் கொண்டாள். அதில் மெலிதாய் சிரித்தவன், விளக்கை அணைத்து விட்டு இரவு விளக்கை ஒளிரவிட்டான். அந்த சிறிய வெளிச்சத்தில், அங்கே ஓவியமாய் படுத்திருந்த மனைவியை மனம் பாரபட்சமே இல்லாமல் ரசித்தது.

ஆனாலும் அவனுக்குத் தெரியும். அவள் அவனுடன் வந்து இருப்பதுக்கு ஒரே காரணம் தான். அவனுக்கு அடிப்பட்டுள்ளது. இவனுக்கு ஏதாவது தேவை என்றாலும் அவன் இவளிடம் கேட்க மாட்டான். அதனால் தான் அவளாகவே அங்கு வந்திருந்தாள்.

இப்போது அவளின் அருகில் குறிப்பிட்ட இடைவெளி விட்டு படுத்தவன் அவளைப் பார்த்தான். அவளோ அவனுக்கு முதுகு காட்டி படுத்திருக்க, பின்னிருந்து மொத்தமாய் அவளை அணைத்துக் கொள்ள மனம் துடித்தது. ஆனாலும் அவளின் கோவம் புரிய இழுத்துப் பிடித்தான். அப்போதும் கூட, அவனின் கரம் அவள் இடையோரம் செல்ல, சட்டென்று திரும்பினாள்.

அதில் அவன் கரத்தை விலக்கிக் கொள்ளப் போக, இப்போது கட்டிலை விட்டு எழுந்திருந்தாள் அவள். “ஏய் செரி நான் கை போடல. நீ படு” என்று அவன் சொல்லி முடிக்கும் முன்னே அவனுக்கு மறுபக்கமாய் வந்து படுத்துக் கொண்டவள், அவன் அடிப்பட்ட கையை பத்திரமாய் எடுத்து தன் மேல் போட்டுக் கொண்டு விழி மூடினாள் நிலா.

(ஆனாலும் ஐ லைக் திஸ் கியூட் கோவம் செல்லம். ஏன்பா கதிரு. கொஞ்சமாச்சும் இந்தப் புள்ளைய பாத்து கத்துக்கோ. செரி அடுத்து என்னாகப் போதுன்னு அடுத்தடுத்த எபிசோட்ல பாக்கலாம். அதுக்கு முன்னாடி இன்னிக்கு எபிசோட்ல உங்களுக்கு பிடிச்ச சீன் எதுன்னு மறக்காம கமெண்ட்ல சொல்லுங்க. அப்படியே எப்பவும் போல லைக் பண்ணிட்டு உங்க பிரண்ட்ஸ் கூட ஷேர் பண்ணுங்க)

தென்றல் தீண்டுமா?..

Comments   1

*** தென்றல் – 141 - படைப்பை ரேட் செய்யுங்கள் ***