பாண்டி ஒரு திட்டம் தீட்டியிருக்க, வீட்டில் இருந்த அனைவரும் திருவிழாவுக்கு செல்ல தயாராகிக் கொண்டிருந்தனர். கடைசி நாள் திருவிழா என்பதால், காலையில் இருந்தே கோவிலில் கூட்டம் அலைப் பாய்ந்தது.
சுற்றி இருந்த கடைகளில் எல்லாம், பெண்களும், சிறுவர்களும் சிரித்தப்படி வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தனர். புதிதாய் திருமணம் செய்துக் கொடுத்த பெண்கள் எல்லாம் அவர்கள் இல்லத்துக்கு வந்திருந்தனர். எங்குப் பார்த்தாலும் மகிழ்ச்சியின் ஆர்ப்பாட்டமாய் ஊரே அத்தனை சந்தோஷமாய் இருந்தது.
ஆங்காங்கே, இளைஞர் பட்டாளம் நின்று, தங்கள் மனதுக்கு பிடித்த பெண்களை சைட் அடிக்கும் வேலையும் பார்த்துக் கொண்டிருந்தனர். இன்னொரு பக்கம் புதிதாய் நிச்சயம் செய்துக் கொண்டவர்கள், ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ளவும் அந்த திருவிழா ஏதுவாக இருந்தது.
பெரியவர்கள் எல்லாம், அவர்களின் நண்பர்கள், உறவினர்களுடன் அமர்ந்து, அந்த கோவிலைப் பற்றியும், அவர்கள் காலத்தில் எப்படி எல்லாம் இருக்கும் என்பதையும் பற்றி பேசிக் கொண்டிருந்தனர். நீண்ட வருடங்களுக்குப் பிறகு, பெரிய வீட்டிலும், மகிழ்ச்சி நிறைந்து வழிந்தது. அத்தனை சொந்தமும் வந்திருக்க, நிலாவைத்தான் கையில் பிடிக்க இயலவில்லை. ஆனால் எத்தனை வேலை இருந்தாலும், கதிருக்கு தேவையானதை பார்த்து பார்த்து கவனித்தாள்.
அன்று கோவிலில் விளையாட்டுப் போட்டி எல்லாம் நடக்கவிருக்க, அதற்கான ஏற்பாடெல்லாம் சரியாக இருக்கிறதா? என்பதைப் பார்க்க கதிர் கிளம்பிக் கொண்டிருந்தான்.
அங்கு வந்த நிலாவோ, அவனருகில் வந்து நெற்றி, கழுத்தில் கை வைத்து காய்ச்சல் எதுவும் இருக்கிறதா? என்றுப் பார்த்தாள். அவளின் செயலில், சிரித்தவன், “அதேன் நேத்தே என் பொண்டாட்டி என்ன சரி பண்ணிட்டாளே” என்றான்.
அதில் அவளோ, “கவனம் மாமா” என்றாள். ஏனெனில் காலையில் இருந்தே அவள் மனம் என்னமோ தவறாய் நடக்கப் போவதாக சொல்லிக் கொண்டிருந்தது.
அவள் முக வாட்டத்தை கவனித்தவன், “என்னாச்சு? ஆறும் ஏதும் சொன்னாகளா?” என்று அவள் கன்னத்தில் கை வைத்துக் கேட்டான்.
“ஆ..ங் என்ன ஆறு மாமா என்ன சொல்லப் போறாக, அதெல்லாம் ஒன்னுமில்ல. நீங்க கவனமா இருங்க” என்று அதையேத்தான் அழுத்திக் கூறினாள்.
அதில் அவள் இடையோரம் கைக் கொடுத்து, அவளை தன்னருகில் நெருக்கிப் பிடித்து நிறுத்தியவன், “எம் பொண்டாட்டி, வூட்டுல இருக்கிறப்ப, எம்ம கவனம் எப்புடி அங்குட்டுப் போகும்?” என்றான்.
அவன் கேட்ட விதத்தில் பெண்ணவளின் வதனம் சிலிர்க்க, முகமும் மெல்லமாய் சிவந்தது.
அவளுடைய சிவந்த முகத்தைப் பார்த்தவனின் இதழ்கள், அவளை முத்தமிட சொல்லி ஆசைப்பட, அவனும் அவள் நெற்றியில் இதழ் பதிக்க சென்றான்.
அதற்குள்ளாக, “நிலா” என்று உறவுக்காரப் பெண் கதவை தட்டும் சத்தம் கேட்க, அதில், அவனோ, “செத்த நேரம் எம் பொண்டாட்டி கூட இருக்க வுட மாட்டாங்களே” என்று அலுத்துக் கொண்டவன், “போயி பாரு” என்றான்.
அதில் சிறு புன்னகையுடன் சென்று கதவைத் திறக்க, அங்கே நின்றிருந்தப் பெண்ணோ, “நிலா, இவன்ன இங்க படுக்க போட்டுக்கவா? கீழ புல்லா சத்தமா இருக்குன்னு, அழுதுட்டு உறங்க மாட்றான்” என்றாள்.
“இதுல என்ன சித்தி இருக்கு. தம்பிய கொடுங்க” என்று அந்த குழந்தையை வாங்கி வந்து அவர்கள் கட்டிலில் படுக்க வைத்தாள், அதற்குள்ளாக கதிரும், “என்னம்மா, உன் வூட்டுக்காரன் இன்னும் வரலையா?” என்றவன் தங்கையிடம் விசாரிக்க, “இல்லண்ணே, ஏதோ வேலையாம் கருக்கல்க்குள்ள வந்துடுவேன்னு சொன்னாரு” என்றாள்.
உடனே உறங்கிக் கொண்டிருந்த குழந்தையின் கன்னத்தில், நிலாவைப் பார்த்தப்படி அழுத்தி முத்தமிட்டவன், “வந்து திருப்பி வாங்கிக்கிறேன்” என்று சீண்டலாய் சொல்ல, நிலாவோ உதட்டைக் கடித்தாள்.
அவள் வெட்கத்தை ரசித்தப்படியே அவன் வாசலைத் தாண்ட, கதவில் இடித்துக் கொண்டான்.
“அச்சோ மாமா” என்று நிலாவும், “பாத்துண்ணா” என்று அவளும் சொல்ல, அவனோ, “ஒன்னுமில்ல, சரியா கவனிக்கல. நான் வரேன்” என்று கிளம்பினான்.
“செத்த இருங்க மாமா” என்றவளுக்கு ஏனோ அத்தனைப் பதட்டம். “இல்ல நிலா” என்றவன் சொல்ல முயற்சிக்க, அவள் கண்களில் தெரிந்த கெஞ்சலில் அமைதியாய் உள்ளிருந்த சோபாவில் அமர்ந்தான்.
அவளோ அவனுக்கு குடிக்க தண்ணீர் எடுத்து வந்துக் கொடுக்க, அதை வாங்கிக் குடித்தவன், “சின்ன விஷயத்துக்கெல்லாம், கதிரு பொண்டாட்டி பதட்டப்படலாமா?” என்று அவளுக்கு மட்டும் கேட்கும் தோனியில் சொல்லிவிட்டு எழுந்தான்.
அவளுக்கோ என்ன என்று தெரியவில்லை. ஆனால் மனதின் பரிதவிப்பு மட்டும் தீரவே இல்லை.
மீண்டும் அவன் கையைப் பற்றியவள், “எனக்காக கவனமா இருங்க மாமா” என்றாள்.
அதில் அவள் கரத்தின் மீது தன் கரத்தைப் பதித்து, “செரி சீக்கிரமே வந்துடுறேன். நீயும் வேல வேலன்னு ஓடாம, செத்த தூங்கி ஓய்வெடு” என்றான்.
அதற்குள்ளாக கதிரின் மொபைல் அடிக்க, “செரி நிலா வரேன்” என்றப்படி அங்கிருந்து சென்றான். செல்பவனையே நிலா பார்த்துக் கொண்டிருக்க, “அதெல்லாம் எங்கண்ணாவ எந்த காக்காவும் தூக்கிட்டு போயிடாது. நீ போட்டு உன் மனச குழப்பிக்காத” என்றாள் அவள்.
“ம்” என்று தலையாட்டியவளின் மனம் மட்டும் இன்னும் ஆர்ப்பரிப்பை குறைத்துக் கொள்ளவில்லை. இருந்தும் வந்தவர்களையும் பார்க்க வேண்டும் என்பதால், அங்கிருந்த தன் பாட்டியின் புகைபபடம் முன் சென்று நின்றவள், “மாமாக்கு ஏதும் ஆகக் கூடாது. அவரு நூறு வயசுக்கு நல்லா இருக்கனும்” என்று வேண்டிக் கொண்டாள்.
அதன் பின் அவரவர் வேலையைப் பார்க்க ஆரம்பிக்க, இங்கே கோவிலுக்கு வந்த கதிரோ, எல்லாம் சரியாக நடக்கிறதா என்று விசாரித்தான்.
சிவாவோ, “ஏண்ணே, வேணும்னே கபடி போட்டிக்கு அசலூரு காரணுங்கள இறக்கிருக்கானுங்க. அவனுங்க பத்தி பார்த்ததுல, ஒன்னும் செரியாப்படல” என்று நிதர்சனத்தை கூறினான்.
அதில் புருவத்தை நெளித்தவன், “அவுகளா வம்பிழுக்காத வர நம்மளும் ஏதும் பண்ண வேண்டாம். ஏதாச்சும் வம்பிழுக்கிற மாதிரி தெரிஞ்சா அப்போ பாத்துக்கலாம். இருந்தாலும், போனவாட்டி மாதிரி, பொம்பள புள்ளைங்க மேல கை வைக்காம பாத்துக்கனும். அதனால அவனுகள லேசா நினச்சிட கூடாது” என்று கூறினான்.
“செரிண்ணே. செந்தில் மாமா, டவுனுக்கு போயிருக்காகப் போல, அவுக உரக்கடையிலையும் ஆள் இல்ல” என்று சிவா சொல்ல, “செரி அத நான் என்னென்னு பாத்துக்குறேன். நீ இங்கன நின்னு பாத்துக்கோ” என்றவன், கோவிலில் எல்லாம் சரியாக இருக்கிறதா என்று பார்க்க சென்றான்.
அவன் சென்ற நேரம் ஊர் பெரியவர்கள் மாற்றி, மாற்றி எது குறித்தோ விவாதித்துக் கொண்டிருக்க, அவனும் அங்கு சென்று என்னவென்று விசாரித்தான்.
“அதொன்னுமில்ல தம்பி வழக்கமா ஊர் கும்பம் ஒன்னுத்தேன் எடுப்போம். இந்த வாட்டி, மூணா எடுக்கலாம்னு ஐயா சொல்லிருந்தாரு” என்று ஊர் தலைவர் சொல்ல, “செரி ஐயா சொன்னாகன்னா, அதையே பண்ணுங்க” என்றான்.
“அதுலத்தேன்யா செத்த சிக்கலு” என்றவர் சொல்ல தயங்க, “என்ன சிக்கலு?” என்று அவன் கேட்க, அவர்களோ அப்போதும் சொல்ல தயங்கினர்.
அதில் அவனோ, “சொன்னாத்தேன்ன அதுக்கு நான் வழி சொல்ல முடியும்?” என்று கேட்டான்.
“இல்லய்யா. வழக்கமா நம்ம அப்பாக்குத்தேன் ஒத்த கும்பம் எடுப்போம். இந்த வாட்டி, திருவிழாக்கு எம் எல் ஏ குடும்பமும் வர்றதா இருந்திச்சு. அதனாலத்தேன் மூணா எடுக்கலாம்னு முடிவெடுத்தோம். இப்போ என்னென்னா, எம் எல் ஏ கூட, நம்ம கலெக்டரும் வராராம்” என்றார்.
“செரி அதுனால என்ன?” என்று கதிர் கேட்க, அதற்குள் அங்கு வந்த முருகேசனோ, “அந்த எம் எல் ஏ இந்த ஊருக்கு செஞ்சத விட, என் மாப்புள்ளையும், என் மாமாவும் இந்த ஊருக்கு அத்தன செஞ்சிருக்காக” என்று கோவமாய் கூறினான்.
“இல்ல முருகேசு அது தெரியாமலா. ஆனாலும் பதவிக்குன்னு ஒரு மருவாத இருக்குள்ள. அத நம்மளும் கொடுக்கனும்த்தேன்ன” என்ரு ஒருவர் சொல்ல, அதில் கதிரின் மனம் ஒரு நொடி அடி வாங்கியது.
ஆனாலும் அதை உள்ளடக்கி, கோவமாய் ஏதோ சொல்ல வந்த முருகேசனிடம், “மாமா அவசரப்படாத. அவுக சொல்றதும் செரித்தேன்ன. எனக்கு, இந்த மருவாத எல்லாம் எதுக்கு? அதேன் அப்பாக்கு செய்றாகத்தேன்ன. அதுவே போதும்” என்றான் கதிர்.
“என்னல பேசுற நீ? இந்த கோவிலே நம்ம குடும்ப” என்று முருகேசன் பேச முயற்சிக்க, “மாமா” என்று அவரை அடக்கினான்.
“நீங்க தப்பா ஏதும் எடுத்துக்கலையே தம்பி” என்று பெரியவர் தயக்கமாய் கேட்க, “இதுனால எனக்கு ஏதும் ஆகப் போறதில்ல, ஆரம்பத்துலையே இதெல்லாம் வேனாம்னுத்தேன் நான் சொன்னேன். நீங்க மரியாதைய கலெக்டருக்கே பண்ணிடுங்க” என்று அழுத்தம் திருத்தமாய் சொல்லிவிட்டு கதிர் அங்கிருந்து சென்றிருந்தான்.
அவனின் பின்னால் வந்த முருகேசனோ, “எல்லாம் அவென்னாலத்தேன்ன” என்று கோவமாய் கேட்க, “ச் ஏன் மாமா? நீ வேற. என்னத்தேன் சொன்னாலும், பதவின்னு ஒன்னு இருக்குத்தான மாமா. இது நம்ம ஊரு. நம்ம கோவில். இதுல நமக்குத்தேன் முதல் மருவாத வேனும்னு அடம்பிடிச்சா, பொறவென்ன, அதுல மதிப்பு இருக்கப் போது. அப்பாக்கு எடுக்கிறாகத்தேன்ன அது போதும்” என்றிருந்தான்.
ஆனாலும் கூட அவனுக்கு சிறு வருத்தம் இருக்கத்தான் செய்தது. அது அந்த மரியாதையை நினைத்து அல்ல, அவனால் போலீஸ் ஆக முடியவில்லையே என்ற சிறு ஆதங்கம் அவனையும் மீறி எட்டிப் பார்த்தது.
அதில் மனம் என்னமோ செய்ய, “உங்கள வூட்டுல்த்தேன்ன இருக்க சொன்னேன்” என்று கேட்ட கதிர், “இனி நீங்க இங்கன இருந்து பாத்துக்கோங்க. நான் செத்த மில் வர போயிட்டு வரேன்” என்றான்.
“இல்ல மாப்புள்ள நானும்” என்று அவர் சொல்ல முயற்சிக்க, “மாமா, நேத்தே லோடு வந்திருக்குன்னு சொன்னாக. அது என்ன ஏதுன்னு கூட பாக்கல. அதத்தேன் செத்த போய் பாத்துட்டு வரப் போறேன். நீங்க இங்க இருங்க” என்று அழுத்தி சொல்லிவிட்டு தன்னுடைய பைக்கை எடுத்துக் கொண்டு கிளம்பியிருந்தான்.
அங்கே, கோவிலுக்கு எடுத்து செல்ல வேண்டிய பூஜை பொருட்களை எல்லாம் எடுத்து வந்த நிலா கால் தடுமாறி கீழே விழ சென்றாள். “ஹேய் நிலா பாத்து” என்று துளசி அவள் கையைப் பிடித்து நிறுத்த, அதற்குள்ளாக பூஜை பொருள் எல்லாம் சிதறி விழுந்திருந்தது.
“உனக்கொன்னுமில்லையே” என்று செல்வி பதற. “செத்த நிதானமா வந்திருக்கலாம்த்தேன்ன” என்று ஒருவர் சொல்ல, நிலாவுக்கோ மனம் மீண்டும் பதட்டமானது.
அவள் கொண்டு வந்த பொருளில் இருந்த குங்குமமும் கீழே விழுந்து கொட்டியிருக்க, அவளோ அதையே பார்த்தப்படி நின்றிருந்தாள்.
“நிலா ஏதும் அடிப்பட்டிருக்கா?” என்று செல்வி கேட்க, அதற்குள் அங்கு வந்த தாமரையோ, “ஒன்னு விழுந்தா அத எடுத்து வைக்க மாட்டீகளா” என்று சுற்றி நின்றவரை திட்டி விட்டு தன் மகளைப் பார்த்தார்.
அவளையும் சேர்த்து திட்டத்தான் வந்தார். ஆனால் மகள் ஒரு வித பதட்டத்தில் இருக்க, மற்றவர்களை அனுப்பிவிட்டு, “நிலா” என்று அவள் கையைப் பிடித்தார். அதில் அவளோ, “ம்மா” என்றவளுக்கு தன் மனதில் ஒடுவதை எப்படி சொல்வது என்று சத்தியமாய் புரியவில்லை.
செல்வியோ, “என்னத்தா ஆச்சு? எங்கேயும் அடிப்பட்டிருச்சா. இங்கனப்பாரு” என்று பதட்டமாய் அழைத்தார்.
“மாமா” என்றவளின் ஆழ் மனம் அழுத்தமாய் சொல்ல, அங்கே புல்லட்டில் சென்றுக் கொண்டிருந்தவனின் பைக் தடுமாறியது.
(எதே? அடுத்து என்னாவப் போதோ தெரியலையே. செரி அது என்னென்னு அடுத்தடுத்த எபிசோட்ல பாக்கலாம். இன்னிக்கு எபிசோட்ல உங்களுக்கு எந்த சீன் பிடிச்சிருந்திச்சுன்னு மறக்காம கமெண்ட்ல சொல்லுங்க. அப்படியே எப்பவும் போல லைக் பண்ணிட்டு உங்க பிரண்ட்ஸ் கூட ஷேர் பண்ணுங்க)
தென்றல் தீண்டுமா?..
0 Comments
No comments yet.