தென்றல் – 126

நிலா ஊட்டவும் வழக்கத்தை விட சற்று அதிகமாய் உண்டவன், அவளையும் சாப்பிட சொல்லிவிட்டு கோவிலுக்கு வந்தான். அங்கே ஊர் தலைவர்களிடம் சில விஷயங்களை பேசிவிட்டு சிவாவைத்தான் தேடினான்.

அவனின் முன் குமார் வந்து நிற்க, அவனோ அவனைக் கண்டுக் கொள்ளாது செல்ல முயற்சிக்க, “என்ன மன்னிச்சுடுங்கண்ணே. இனி செத்தாலும் தப்பு பண்ண மாட்டேன். ஏதோ புத்தி கெட்டுப் போயி” என்றப்படி காலில் அவன் விழுந்தான்.

அதில் கோவத்தை இழுத்துப் பிடித்து, “இப்புடி என் கால்ல புடிக்கிறதுக்கு பதிலா, போயி உன் பொஞ்சாதி கையைப் பிடிச்சு கடைசி வர உண்மையா வாழப் பழகு. ஆனா, என் முன்னாடி மட்டும் வராத” என்று அவனைப் பார்க்காது சொல்லிவிட்டு அங்கிருந்து சென்றான்.

அதென்னவோ, மனைவிக்கு துரோகம் செய்தவனை மீண்டும் மன்னித்து ஏற்றுக் கொள்ள அவனுக்கு மனம் வரவில்லை. அதற்குள் அங்கு வந்த சிவா, “எண்ணண்ணே? என்ன தேடுனதா சொன்னாக” என்று வந்து நின்றான்.

அதில், “செந்தில் மாமா இப்போ எங்கன இருக்காக?” என்று கதிர் கேட்க, “அவரு, காலையிலையே, கிளம்பிட்டாருண்ணே. நானும் அவர இருக்க சொல்லிப் பாத்தேன் கேட்கல” என்றவன் நடந்ததை கூறினான்.

“செரி. ஆனா எதுக்கும் அவரு மேல ஒரு கண்ணு இருக்கட்டும்” என்று சொல்ல, அவனும் சரி என்றான். அடுத்தடுத்து ஒரு வாரம் மின்னலென ஓடியது.

கடைசி நாள் திருவிழா நாளை என்பதால் ஊருக்கு அத்தனைப் பேரும் வந்திருந்தனர். பெரிய வீட்டிலும் நீண்ட நாட்களுக்குப் பின், சொந்தப் பந்தங்கள் கூடியிருந்தது. அதனால் நிலாவுக்கு நிற்க கூட நேரம் இல்லை.

ஒரு வாரமாய் கதிருக்குமே கோவில் வேலை முற்றிலும் இருக்க, சில நாட்களில் இரவு கூட வர முடிந்திருக்கவில்லை. கோவிலில் தான் இருந்தான். இன்று சற்று தலை வலிப்பது போல் இருக்க, வீட்டுக்கு வந்திருந்தான்.

கதிரைப் பார்த்ததும், “ஐ சித்தப்பா, வந்துட்டாக. மாமா வந்துட்டாக” என்று குழந்தைகளின் கூட்டம் அவனை சுற்றி வளைத்தது. அவர்களைப் பார்த்ததும் தன் உடல் சோர்வை மறைத்து விட்டு, அவர்களிடம் சிரித்த முகமாய் பேசினான். பின் அவர்களுக்கு காசு கொடுத்து அருகில் இருக்கும் கடைக்கு சென்று பிடித்ததை வாங்கிக் கொள்ள கூறினான்.

“வாய்யா. என்ன ரொம்ப வேலையா?” என்று பெரியப்பா முறையில் இருக்கும் ஒருவர் கேட்க, “ஆமா பெரியப்பா. செத்த வேல, அதேன் உங்கள கூட்டியார வர முடியல” என்றவன் ஹாலில் அமர்ந்திருந்த உறவுக்காரர்களிடம் பேசினான்.

ஆனால் பார்வையோ மனைவியைத் தான் தேடியது. அதைக் கவனித்த முறைப் பெண்களின் கூட்டம் எல்லாம், “என்ன மச்சான்? அப்படி ஆற தேடுறீக? அதேன் முறப் பொண்ணுங்க இத்தனைப் பேரு இங்கனத்தேன்ன இருக்கோம்” என்று வம்பிழுக்க ஆரம்பித்தனர்.

“ஆயிரம் முறப் பொண்ணுங்க இருந்தாலும், என் ராசா முறையா கட்டுனவளத்தேன் தேடுவான்” என்று சங்கரேஸ்வரி சொல்ல, “ஏ கிழவி எல்லாம் உன்னாலத்தேன். இப்படி பேசி பேசித்தேன். என் மச்சான்ன கன்னாலத்துக்கு முன்னாடியும் சைட் அடிக்கவுடல. இப்பவும் வந்து இடைஞ்சல கொடுத்துட்டு இருக்க” என்று ஒருவள் வீராப்பாய் கூறினாள்.

“இப்போ என்னத்தடி நான் தப்பா சொல்லிட்டேன். என் ராசா ராமனாக்கும்” என்று சங்கரேஸ்வரி சொல்ல, “என் மச்சான்ன எப்புடி எங்க வழிக்கு கொண்டு வரனும்னு தெரியும் நீ ஓரமோ போ பாட்டி” என்று இன்னொருவளும் சொல்ல, “ஏத்தா அவுக ஏதோ சின்னப் புள்ளைக, முறைக்கு வம்பு பேசிட்டிருக்குக, நீ எதுக்கு அவுகளுக்கு ஊடால போற, அவனாச்சு, அவன் முறப் புள்ளைகளாச்சு. நீ இங்குட்டு வா. முறப் புள்ளைகள சமாளிக்கிறதும், வீரம்த்தேன்” என்று சங்கரேஸ்வரியை இன்னொருவர் அழைக்க, அவரும் அவர்களுடன் கலந்துக் கொண்டார்.

அதற்குள் கதிரின் தங்கை முறைப் பெண்களெல்லாம் அங்கு வந்து, “அதெல்லாம் எங்கண்ணே அசால்டா சமாளிக்கும்” என்று சீண்டி விட, அவனோ மீசையை நீவியப்படி மெலிதாய் புன்னகைத்தான்.

“இந்த சிரிப்ப பாத்துத்தேன்ன, அந்த மெட்ராஸ் புள்ள, இவரு பின்னாடியே சுத்தி திரிஞ்சா” என்று ஒருவள் எதார்த்தமாய் மஞ்சரியைப் பற்றி பேசுவதற்கும், நிலா காபி தட்டுடன் அங்கு வருவதற்கும் சரியாக இருந்தது.

கதிரை சுற்றி அத்தனைப் பேரும் பேசிக் கொண்டிருக்க, அவனுக்கு அவர்கள் பேசியது சரியாக கேட்கவில்லை. ஆனால் அவர்கள் பின்னால் வந்த நிலாவுக்கு அத்தனையும் கேட்டிருந்தது.

அவளைப் பார்த்ததும், “என்னத்தடி உளறிட்டிருக்க, செத்த கம்முன்னு இரு” என்று இன்னொருவள் இடிக்க, அப்போதே அவளும் நிலாவைப் பார்க்க, “வாத்தா நிலா. எப்புடி இருக்க?” என்று பேச்சை மாற்ற முயற்சித்தாள்.

“நல்லாருக்கேன்த்த. காபி எடுத்துக்கோங்க” என்றவள் அனைவருக்கும் காபி கொடுக்க, நிலாவின் குரலில் பட்டென்று திரும்பினான் கதிர். ஒரு வாரமாய் அவளின் முகத்தைக் கூட சரியாக பார்க்க முடியவில்லை.

அதில் அவளையே அவன் பார்த்திருக்க, நிலாவோ அவனைத் தவிர்த்து அத்தனைப் பேருக்கும் காபி கொடுத்தாள். “என்னடி? உன் வூட்டுக்காரருக்கு காபி கொடுக்காம, எங்களுக்கு கொடுத்திட்டிருக்க, அவருக்கு முதல்ல கொடு. அப்பத்தேன்ன, எங்க கூட தெம்பா பேச முடியும்” என்று சீண்டலாய் கூறினாள்.

அதில் நிலாவோ, சற்றும் அசராமல், “இன்னேரத்துக்கு மாமா காபி குடிக்க மாட்டாக” என்று அவர்களிடம் சொல்லியவள், “சுடுதண்ணி போட்டு வச்சிருக்கேன் மாமா. போயி குளிச்சிட்டு வாங்க” என்றாள்.

அவனுக்கோ தலை வலி சற்று அதிகமாயிருக்க, காபியை எடுக்க தான் நினைத்தான். ஆனால் நிலா அப்படி சொல்லியிருக்க, அதற்கு மேல் அதை எடுக்க மனம் வரவில்லை. அமைதியாய் மேலே சென்றான்.

அதில் நிலாவோ ஒரு நொடி அவனைப் பார்த்து விட்டு, அதன் பின் மற்றவர்களுக்கு என்ன வேணும் என்பதை பார்த்து செய்ய கூறினாள். செல்வியை ஒரு வேலைக் கூட பார்க்க கூடாது என்று சொல்லியிருந்தாள். தாமரையும் உடன் இருக்க, இப்போது நிலா மேலே சென்றாள்.

அதற்குள் அவளை இடைமறித்த துளசி, “மச்சான் மட்டும்த்தேன்ன, குளிக்க போறாக. இல்ல நீ போயித்தேன் மச்சானுக்கு முதுகு தேய்ச்சி விடனுமா?” என்று சீண்டலாய் கேட்டாள்.

அதில் அவளோ, சற்றும் அசராமல், “என் மாமாக்கு நான்த்தேன்ன தேய்ச்சி விடனும்?” என்று கேள்வி கேட்டு விட்டு மேலே சென்றாள்.

அவளின் கேள்வியில், “என்னடி இவ? இப்புடி சொல்லிட்டுப் போறா. நம்ம நிலாவா இது?” என்று துளசியிடம் இன்னொருவள் கேட்க, “ம் அது மச்சான் பொண்டாட்டியாச்சே. பேசவா கத்துக் கொடுக்கனும்” என்று நக்கலாய் சொல்லிவிட்டு அங்கிருந்து சென்றனர்.

இங்கே நிலா மேலே வந்துப் பார்க்க, கதிரோ கட்டிலில் படுத்திருந்தான். அதில் வேகமாய் அவனின அருகில் சென்றவள், அவன் நெற்றியில் கையை வைக்க, உடல் அனலாய் கொதித்தது.

“மாமா” என்றவள் அவனைத் தொட்டு எழுப்ப, மெதுவாய் கண்ணைத் திறந்தவன், “செத்த நேரம் தூங்கிக்கிறேன். ஆறாச்சும் கேட்டா, வந்திடுறேன்னு சொல்லு” என்றான். அவன் கண்கள் எல்லாம் சிவந்திருந்தது. குளித்து வந்ததுக்கும் அதற்கும், தலை முடியில் ஈரம் அப்படியே இருந்தது.

அதில் அவளோ, “ச் என்ன மாமா உடம்பு இப்படி கொதிக்குது. வாங்க ஆஸ்பத்திரி போலாம்” என்று அவனை எழுப்ப முயற்சித்தாள்.

“அதெல்லாம் ஒன்னுமில்ல. செத்த தூங்கி எந்திரிச்சா சரியா போயிடும்” என்றான். அவனின் வார்த்தையில் அவளை முறைத்தவளோ, கபோர்டில் இருந்த தைலத்தை எடுத்து, அவன் நெற்றி, மார்பில் தேய்த்து விட்டாள். ஏனோ அது சற்று ஆசுவாசத்தைக் கொடுக்க, “எனக்கொன்னுமில்ல” என்றான்.

அவளோ அருகில் கிடந்த துண்டை எடுத்து அவன் தலையை துவட்டி விட, மீண்டும் அன்னையின் முகம் தான் நினைவுக்கு வந்தது. அதில் அவன் அவள் மடியில் தலை வைத்துக் கொள்ள, அவளோ, மெதுவாய் அவன் தலையை கோதி விட்டாள்.

அதில் சுகமாய் அவன் கண் மூடி உறங்கிவிட, அவளும் அவன் எழும் வரை அப்படியேத்தான் அமர்ந்திருந்தாள். கிட்ட தட்ட மூன்று மணி நேரம், அவன் அசந்து உறங்கியிருக்க, அவளும் அவனை மடி தாங்கியிருந்தாள்.

அங்கே அப்படி செல்ல இங்கே பாண்டியோ, செந்திலிடம் “உனக்கு கொடுத்த கெடு முடியப் போது. என்ன முடிவு பண்ணியிருக்க?” என்று கோவமாய் கேட்டான்.

அதில் செந்திலோ, “என்ன கொண்ணு போட்டாலும் நான் இத பண்ண மாட்டேன்” என்றான்.

அதைக் கேட்டு நக்கலாய் சிரித்தவனோ, “அப்போ நீ பண்ண எல்லாத்தையும், இந்த ஊருக்கே படம் போட்டு காமிப்பேன்” என்றான்.

“என்ன வேணும்னாலும் பண்ணிக்கோ” என்று செந்தில் உறுதியாய் சொல்ல, “அப்படியா? அப்போ இத கொஞ்சம் பாத்துட்டு பேசு” என்ற பாண்டி, சில காகிதங்களையும், வீடீயோக்களையும் போட்டுக் காட்டினான்.

அதை எல்லாம் பார்த்த செந்திலோ, “பச்ச துரோகி. உம்ம நான்” என்றப்படி பாண்டியின் சட்டையைப் பிடித்தான். “ஆறு நான் துரோகியா? இதெல்லாம் நான் வூட்டுல காமிச்சா, ஆறு துரோகின்னு அம்புட்டு பேருக்கும் தெரியும்” என்று நக்கலாய் கூறினான்.

அதில் செந்திலோ, “இங்கனப் பாரு பாண்டி. இது எல்லாத்துலையும் உமக்கும் பங்கிருக்கு” என்றார். “இருக்குத்தேன். ஆனா அதுக்கான ஆதாரம் உம்மகிட்ட இருக்கா?” என்று படு நக்கலாய் கேட்டான்.

அதில் செந்தில் இயலாமையுடன் நிற்க, பாண்டியோ, “இப்போ உன்கிட்ட இருக்கிறது ஒரே வழித்தேன். நீயே உம்ம மருமவென்ன கொன்னுட்டு, உன் பொண்ண எண்ட்ட கொண்டு வந்து ஒப்படைச்சிடு. இல்லைய்யா. உம்ம இங்கேயே வெட்டி வீசிட்டு, அந்தப் பழிய உம் மருமவென் மேல போட்டுட்டு, உம்ம பொண்ண நான் எடுத்துப்பேன்” என்றான்.

“பாவம் பன்றல்ல நீ” என்றவர் பாண்டியின் சட்டையைப் பிடிக்க, அதை அசராது விலக்கியவன், “புண்ணியமா பன்றதுக்கு, நான் என்ன உம் மருமவென்னா?” என்று அசட்டையாய் கேட்டான்.

அதில் செந்திலுக்கோ மூச்சு முட்டியது. ஏனெனில் அவர் மட்டும் சம்பந்தப்ப்பட்டிருந்தால் கவலைப் பட்டிருக்க மாட்டார். அந்த பாண்டியோ, இவர் செய்த திருட்டு தனத்தில் தாமரையையும் உள்ளிழுத்து வைத்திருந்தார். விஷயம் மட்டும் வெளியில் தெரிந்தால், இத்தனை நாள் தாமரைக்கு ஊரில் இருந்த அத்தனை மரியாதையும் பறிப்போகும். அவளுக்கு மட்டுமா, மகளின் வாழ்க்கையும் அல்லவா கேள்விக்குறியாகும்?

அதென்னவோ தப்பு செய்யும் போது கண்டுக்கொள்ளாத இறைவன் கூட திருந்த நினைக்கும் போது அதுக்கான மொத்த தண்டனையையும் உடனே கொடுக்க காத்துக் கொண்டிருந்தார்.

அவருக்கு தலை சுற்றியது. “இங்கனப் பாரு மாமா. உம்ம நான் இப்பவும் என் சொந்தமாத்தேன் பாக்குறேன். உமக்கும், எமக்கும் இருக்கிற ஒரே எதிரி அந்த கதிராவே இருந்துட்டு போவட்டுமே. நாளைக்கு அந்த கதிரு உசுரோட இருக்க கூடாது. இருந்தா, பொறவு உம்ம பொண்டாட்டி, புள்ளைங்க இந்த ஊருலையே இருக்காது” என்று படு நக்கலாய் சொல்லிவிட்டு அங்கிருந்து சென்றான்.

அதில் செந்திலோ பைத்தியம் பிடித்தது போல் அப்படியே அங்கேயே அமர்ந்து விட்டார். நிலாவிடம் பெரிதாய் பாசத்தை காட்டியது இல்லைத் தான். ஆனால் அது அவருடைய இரத்தமாயிற்றே. மூச்சு முட்டியது. இப்போது அவர் செத்தால் கூட அந்தப் பழி, கதிரைத்தான் போய் சேரும். தலையைப் பிடித்தார்.

“ஐயோ நான் பண்ண பாவம். இப்ப என் புள்ள வாழ்க்கைய பழி கேட்குதே” என்றவர் கதறி அழுதார்.

இங்கே, மெதுவாய் கண்ணைத் திறந்த கதிரோ, இன்னமும் அவள் மடியில் படுத்திருப்பதைப் பார்த்து பதறி எழுந்தான். அதில் அவளோ, “என்னாச்சு மாமா?” என்றவள் அவன் நெற்றியில் கை வைத்துப் பார்த்தாள். காய்ச்சல் நன்றாக குறைந்திருந்தது.

“ச் இப்புடியேவா படுத்திருந்தேன்” என்றவனுக்கு சற்று குற்ற உணர்ச்சியாய் இருந்தது. அதில் அவளோ, “ஏதும் குடிக்க எடுத்து வரவா?” என்று எழ முயற்சிக்க, இத்தனை நேரம் மடக்கியே வைத்திருந்தது, அதன் வேலையைக் காட்டியது.

அவள் தடுமாற, “நிலா” என்று அவளை தாங்கிப் பிடித்து அமர வைத்தான். “நான்த்தேன் ஏதோ நினப்புல படுத்துட்டேன். அதுக்குன்னு இப்புடியேவா உட்கார்ந்திருப்ப” என்றவன் அவள் கால்லை எடுத்து தன் மடியில் வைத்தான்.

அவனின் செயலில், “நானும்த்தேன்ன மாமா உங்க மடியில படுத்துறங்குறேன்” என்று பதிலளித்தாள். அதில் அவனோ, “நீ பூக்கணக்கா இருப்ப. நான் அப்படியா? பாரு கால்லெல்லாம் சிவந்திருக்கு” என்றப்படி அவள் கால்லைப் பிடித்து விட்டான்.

அவனின் செயலில், அவள் அவனையேத்தான் பார்த்தாள். ஊரே அவனைப் பார்த்து பயப்படும். ஆனால் அவனோ, அவளின் கால்லை பிடித்துக் கொண்டிருந்தான்.

அவள் தடுக்கவெல்லாம் செய்யவில்லை. ஏனெனில் அவன் தான் அவளுக்கு சிறிதாய் முள் குத்தினால் கூட, இதைத்தான் செய்வான். அதற்கு அவள் பழகியிருந்தாள்.

“உங்க மனசு அந்த பூவ விட இளசு மாமா” என்றாள். அதில் அவளை அவன் பார்க்க, அவன் மடியில் இருந்த கால்லை விலக்கிவிட்டு, தலையை வைத்து படுத்துக் கொண்டாள். அவளின் செயலில், மெல்ல அவள் தலைக் கோதியவன், “அம்புட்டு வேலையும் ஏன் ஒத்தாளா பாத்து கஷ்டப்படுற” என்றான்.

“ஆறு ஒத்தாளப் பாக்குறா? அதெல்லாம் ஆள் இருக்காங்க” என்று நிலா சொல்ல, “ஆனாலும் நீத்தேன் அம்புட்டு வேலையும் பாக்குறன்னு அக்கா சொல்லுச்சி” என்றான்.

“அவுக எல்லாம் நம்ம வூட்டுக்கு வந்திருக்காக மாமா. அப்ப நம்மத்தேன்ன அவுகளுக்கு என்ன வேணும்னு பாத்து பண்ணனும்” என்றாள் நிலா, அவளின் வார்த்தையில் மீண்டும் அவனின் அன்னைத்தான் நினைவுக்கு வந்தார்.

அங்கே பாண்டியோ, அவன் ஆட்களிடம், “நான் சொன்னதெல்லாம் ஞாபகம் இருக்குத்தேன்ன” என்று குரோதமாய் அவன் திட்டத்தைப் பற்றி விளக்கிக் கொண்டிருந்தான்.

(ஏய்யா பாண்டி, ம்ஹூம் உமக்கெல்லாம் சொன்னா புரியாது. சரி திருவிழால என்ன நடக்கப் போதுன்னு அடுத்தடுத்த எபிசோட்ல பாக்கலாம். அதுக்கு முன்னாடி இன்னிக்கு எபிசோட்ல உங்களுக்கு பிடிச்ச சீன் எதுன்னு மறக்காம கமெண்ட்ல சொல்லுங்க. அப்படியே எப்பவும் போல லைக் பண்ணிட்டு உங்க பிரண்ட்ஸ் கூட ஷேர் பண்ணுங்க)

தென்றல் தீண்டுமா?..

Comments   2

*** தென்றல் – 126 - படைப்பை ரேட் செய்யுங்கள் ***