பஞ்சாயத்து தண்டனையைக் கேட்டு அங்கு வந்த வெள்ளையம்மாள், “எம் புள்ளையப் பத்தி எனக்குத் தெரியும். அவென் அப்புடி தப்பு பண்ணான்னா, அத அந்தப் புள்ளைய வந்து சொல்ல சொல்லுங்க” என்றார்.
“அதெப்டித்தா, பொம்பள புள்ள வந்து சொல்லும்” என்று ஒருவர் கேட்க, “அந்தப் பொம்பளப் புள்ளைக்காகத்தான, அம்புட்டுப் பேரும் எம்புள்ளைய குற்றம் சொல்லிட்டு இருக்கீக, அப்போ அவ வரட்டும், வந்து எம் புள்ள தப்பு பண்ணான்னு சொல்லட்டும், நானே அந்த சாட்டைய எடுத்து எம் புள்ளைக்கான தண்டனைய கொடுக்கிறேன்” என்றார்.
ஏனோ அந்த நொடி கதிருக்கு ஆதரவாய், வெள்ளையம்மாள் மட்டும் தான் இருந்தார். ஏனெனில் சங்கரேயன் கூட அமைதியாய் நின்றிருக்க, கதிரை முழுதாய் அவனின் அம்மா மட்டும் தான் நம்பினார்.
அதில் அவன் தன் தாயைப் பார்க்க, “உம்மப் பத்தி எமக்குத் தெரியும்ய்யா. இத்தன பலியையும் தாண்டி எம்புள்ள அமைதியா நிக்கான்னா, அதுக்குப் பின்னாடி நிச்சயம் விஷயம் இருக்கும். அதுவும், கண்டிப்பா, அந்தப் புள்ளையோட நல்லதுக்காத்தான் இருக்கும்” என்றார்.
அவர் அப்படி சொல்லிக் கொண்டிருக்கும் போதே, அங்கு தன் அப்பாவுடன் வந்த மஞ்சரி, “கதிரு மேல எந்த தப்பும் கிடையாது” என்றிருந்தாள்.
அங்கே அவளை யாருமே எதிர்பார்க்கவில்லை. கதிரே சிறு அதிர்வுடன் தான் அவளைப் பார்த்தான். “பொறவு ஏன்மா, நீ ராத்திரியோட ராத்திரியா ஊர விட்டு போன?” என்று ஒருவர் கேட்க, “அது” என்றவள் பாண்டியைப் பற்றிய விஷயத்தை சொல்ல நினைத்தாள்.
ஆனால் அதற்குள்ளாக, மஞ்சரியின் அப்பாத்தான், “அவளோட அம்மாக்கு உடம்புக்கு முடியலன்னு, நான் தான் வர சொன்னேன். இந்த கதிருத் தம்பித்தேன், பத்திரமா எம்புள்ளைய பஸ் ஏத்தி விட்டதா எம் பொண்ணு வந்து சொன்னா. அந்த தம்பிக்கு நன்றி சொல்லத்தான் போன் பன்ணேன். பன்ணப்பத்தான், எனக்கு இந்த பஞ்சாயத்து விஷயம் தெரிஞ்சிடு. அதான் பிளைட் புடிச்சி உடனே வந்துட்டோம்” என்றவருக்கு தன் மகளைப் பற்றிய விஷயம் வெளியில் வர விருப்பமில்லை. அது கதிருக்கு புரிந்தது.
ஆனாலும், “உங்கள ஆறும் மிரட்டி, இப்புடி சொல்ல சொன்னாகளா?” என்று விடாது கேட்க, “நாங்க எதுக்கு பயப்படனும். எம் புள்ளையாள, ஒரு நல்ல புள்ள பேரு கெட்டு போயிடக் கூடாதுன்னுத்தான் என் வேலைய விட்டுட்டு வந்தேன்.” என்று மஞ்சரியின் அப்பா உறுதியாய் சொல்லிவிட, பஞ்சாயத்தில் அந்த தண்டனை பின் வாங்கப்பட்டது.
அதன் பின் கதிர் பெரிய வீட்டுக்கு செல்லவே இல்லை. மதுரையில் ரூம் எடுத்துத்தான் தங்கியிருந்தான். அவனுக்கு ஊருக்கு வரவே விருப்பம் இல்லை. சங்கரேயனிடம் எவ்வளவு சொல்லியும், அவர் மீண்டும் ஊர் தலைவர் பதவியை மறுத்து விட்டார்.
வெள்ளையம்மாள், கதிரை அழைத்தும், அவன் வீட்டுக்கு வரவில்லை. தாமரைக்கோ குழப்பமாய் இருந்தது. ஆனால் செந்தில், “பஸ்ஸ்டாண்ட்ல வச்சே, நம்ம பாத்தோம்த்தான. அந்தப் புள்ள ரொம்ப பயந்து போயிருந்திச்சு. அதேன். இப்படி பொய் சொல்லுது. காசு பணம் இருந்தா என்ன வேணும்னாலும் பன்ணலாம்னு சும்மாவா சொல்றாக” என்று ஏத்தி விட்டிருந்தார். கண்ணால் தாமரை பார்த்திருக்க, ஏனோ அவரால் அது இல்லை என்று மறுக்கமுடியவில்லை.
அடுத்த ஒரு வாரம், கதிர் ஊருக்குள் வரவில்லை. அதன் பின் முருகேசன் தான், “ஏன்யா நீ என்ன தப்பு பண்ண? தப்புப் பண்ணவன்லாம், ஊருக்குள்ள பதிவிசா சுத்துறப்ப, நீ ஏன் மாப்புள்ள ஒழிஞ்சுக் கெடக்கனும். நீ வா” என்று அழைத்து வந்திருந்தார்.
அப்போதும் அவன் பெரிய வீட்டுக்கு செல்லவில்லை. தோட்டத்து வீட்டுக்குத்தான் சென்றிருந்தான். அங்குத்தான் இருந்தான்.
அது தெரிந்து செந்திலுக்கு மீண்டும் பயம் வந்திருந்தது. “என்ன பாண்டி, அவென் அப்படியே வராம போயிடுவான்னு நினைச்சேன். இப்போ திரும்ப வந்துட்டான்னே. என்னப் பண்றது?” என்று கேட்டார்.
“இந்த நேரத்துல அவென்ன போட்டா, அவென் தற்கொலை பண்ணிட்டான்னு கூட சொல்லிடலாம்” என்று பாண்டி ஒரு திட்டத்தை தீட்ட, அதற்கான வேலையைப் பார்த்தார்.
அதற்கிடையில், வெள்ளையம்மாள், வீட்டில் இருந்த நகையில் சிலது குறைவது பற்றி, சிவாவிடம் விசாரிக்க, அவனோ அவனுக்கு தெரிந்ததைக் கூறினார்.
அதைக் கேட்டவருக்கு அப்படி ஒரு கோவம். வீட்டில் ஒருவர் தப்பு செய்தாலே, அவரை அத்தனை எளிதில் மன்னிக்க மாட்டார். அப்படி இருக்க, சாமி நகைகளில், செந்தில் கை வைத்திருப்பதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
உடனே பஞ்சாயத்துக்கு ஏற்பாடு பண்ண சொல்லியிருந்தார். விஷயம் என்னவென்று சொல்லாது, செய்திருக்க, அது தெரிந்து கதிர், தன் அம்மாவைப் பார்க்க கிளம்பினான்.
இங்கே ஏற்கனவே செந்தில் தாமரையிடம் சொல்லி, வெள்ளையம்மாளையும் செல்வியையும் கோவிலுக்கு அழைத்து செல்ல ஒரு திட்டம் தீட்டியிருந்தார்.
ஆனால் செல்வியும், தாமரையும் மட்டுமே சென்றிருக்க, கதிரை கொலை செய்வதற்காக வந்த செந்தில் வெள்ளையம்மாளிடம் மாட்டியிருந்தான். அவரோ கோவமாய், அது குறித்து அவரிடம் விசாரித்தார்.
“என்ன? எம் புள்ளைய கட்டிக் கொடுத்திருக்கேன்னு பூச்சாண்டி காட்டுறீயா? எம் புள்ள உம்ம மாதிரி அயோக்கியனுக்கு பொண்டாட்டியா வாழ்றத விட, என் வூட்டுல கடைசி வர ராணியா வாழ்ந்துட்டுப் போற. எம் பையன், அவளுக்கும் அவ புள்ளைக்கும் வேண்டியத பாத்து கொடுப்பான். நாளைக்கு பஞ்சாயத்துல உமக்கு இருக்கு” என்று வெள்ளையம்மாள் கூறினார்.
அவருக்கு தெரிந்து விட்ட பயத்தில் வெள்ளையம்மாளை குத்தியிருந்தார் செந்தில்.
அதை அவருமே எதிர்பார்த்திருக்கவில்லை. அதன் பின் அங்கு வந்த கதிர் அதைப் பார்த்திருக்க, அவனோ செந்திலை குத்த சென்றான். அதற்குள்ளாக, வெள்ளையம்மாள் தடுத்து விட, “ம்மா” என்று அவரை மடித் தாங்கியிருந்தான்.
“கோவப்படாதய்யா. கோவம் உன் கனவ அழிச்சிடும். உம்ம காக்கி சட்டையில அம்மா பாக்கனும். இனி நீத்தேன் உம் அக்காளையும், அக்கா மவளையும் பாத்துக்கனும்” என்று சொல்லியவர் கண் மூடியிருந்தார்.
“ம்மா” என்றவன் கத்தியை உருகுவதற்கும், தாமரை அதைப் பார்ப்பதற்கும் சரியாக இருக்க, நிலாவை செந்தில் மிரட்டியிருக்க, அவள் அமைதியானாள்.
கதிர் காரியம் செய்யவே கூடாது என்று தாமரை உறுதியாய் இருக்க, ஊர் காரர்கள் தான், அவரை சமாதானப்படுத்தினர். காரியம் செய்த கையோடு, போலீஸ் ஜீப் வீட்டு வாசலில் வந்து நிற்க, யாருக்கும் எதுவும் புரியவில்லை.
“உங்கள அரெஸ்ட் பண்ண வந்திருக்கோம்” என்று போலீஸ் சொல்வதற்கும், “ஐயா கதிர் தம்பிக்கு செலக்சன் ஆர்டர் வந்திருக்கு” என்று போஸ்ட் மேன் சொல்வதற்கும் சரியாக இருந்தது. காக்கி சட்டைப் போட்டுக் கொண்டு கம்பீரமாய் போலீஸ் ஜீப்பில் ஏற வேண்டியவன், கைதியாய் ஏறி சென்றான். அதோடு சேர்த்து அவனுடைய போலீஸ் ஆக வேண்டும் என்ற கனவும் காற்றோடு கரைந்துப் போனது.
செந்திலும், சங்கரேயனும் தான் யார் யாரையோ பார்த்து கதிரை ஜாமினில் அழைத்து வந்தனர். ஆனால் அவன் வீட்டுக்குள் செல்லவில்லை. அவனைப் பார்த்து அனைவரும் பரிதாபப்பட்டனர். சிலர் அவன் முன்னால், பாவப்படுவது போல் காட்டிக் கொண்டு, அவனை முன்னே விட்டு பின்னே கேலி செய்தனர்.
அவனுடைய சந்தோஷம், நிம்மதி என்று அத்தனையும் பறிப்போனது. தாடியும் கீடியுமாய் உலகையை வெறுத்தவன் போல் திரிந்த கதிரைப் பார்த்த முருகேசனுக்கு மனம் ஆறவில்லை. செல்வி வெள்ளையம்மாள் இறந்ததில் இருந்து வீட்டிலேயே இருந்துக் கொண்டார். முருகேசனும் தன்னுடன் அழைக்கவில்லை.
அதன் பின் கதிருடைய வாழ்க்கையை சரியாக்கிவிட்டுத்தான், அந்த வீட்டை விட்டு வருவேன் என்று செல்வி சொல்ல, முருகேசனும், “சரி உன் இஷ்டம்” என்றிருந்தார்.
முருகேசன் தன்னுடன் அவனை உரக்கடைக்கு அழைத்து செல்ல, அங்கே வருபவர்களும், நடந்த விஷயத்தை பேசி பேசி அவனை காயப்படுத்தினர்.
உடன் இருந்தவர்களே, “என்னமோ போலீஸ் ஆகப் போறேன் அது இதுன்னு சொன்ன” என்று கேலி பேச ஆரம்பித்தனர்.
அப்போது முடிவெடுத்தான். அத்தனைப் பேரின் முன்னாலும், வாழ்ந்து காட்ட வேண்டும் என்று. அதனால் விவசாயத்தை கையில் எடுத்தான். வேலையில் மட்டுமே தன்னுடைய முழு கவனத்தையும் செலுத்தினான். கேஸ் வருடா வருடம் நடந்துக் கொண்டே இருந்தது. கதிர் வெள்ளையம்மாள் சொல்லிய கடைசி வார்த்தைக்காக, செந்திலைக் காட்டிக் கொள்ளவில்லை.
அக்காவும், அக்கா மகளும் அவன் பொறுப்பு என்று அவர் எதற்காக சொன்னார் என்று அவருக்குத்தானே தெரியும். ஆனால் அவனோ, தாமரையின் வாழ்க்கையையும், நிலாவின் வாழ்க்கையையும் யோசித்து, தன் வாழ்க்கையை தொலைத்தான்.
நடந்த விஷயங்களை எல்லாம் முருகேசன் சொல்லி அழ, இங்கே நிலாவுக்கு கண்ணீர் வரவில்லை. மாறாக அவளுக்கு கோவம் வந்தது. அவள் கண்களில் அப்படி ஒரு அழுத்தம்.
அவளுக்கு இத்தனை விஷயங்கள் நடந்தது என்று தெரியவே தெரியாது. அவளுடைய அப்பாத்தான் கொலை செய்தார் என்று அவளுக்குத் தெரியும். ஆனால், அவரால் கதிர் அவன் வாழ்க்கையில் இத்தனை இழந்திருப்பான் என்று நினைக்கவே இல்லை.
“எப்புடி மாப்புள்ள அவென்ன உன்னால மன்னிக்க முடிஞ்சிச்சி?” என்று முருகேசன் கதிர் சட்டையைப் பிடித்துக் கேட்டார்.
“அவரு என் நிலாவோட அப்பா மாமா. அவரு எண்ட்ட இருந்து எத வேணும்னாலும் பறிச்சிருக்கலாம். ஆனா, என்னோட மொத்த சந்தோஷமா, என் பொண்டாட்டி இருக்கா. எனக்கு அது போதும்” என்றான். அவனின் ஒற்றை வார்த்தையில், இப்போது நிலாவுடைய கண்களில் இருந்து கண்ணீர் வடிந்தது.
“இல்லல்ல அவென்ன நான் வெட்டி” என்று முருகேசன் மீண்டும் எழ முயற்சிக்க, “அவர வெட்டனும்னா, முதல்ல எம்ம வெட்டிப் போடுங்க. என் வாழ்க்கையில என் அம்மாவா எனக்கு கிடைச்ச நிலாவ, அப்பா இல்லாதவளா பாக்க முடியாது” என்று அத்தனை அழுத்தம் திருத்தமாய் கூறினான் கதிர்.
அதில் நிலா கண்ணீரைத் துடைக்க, அங்கே முருகேசனோ, “மாப்புள்ள” என்றவர் கதிரை கட்டிப் பிடித்து அழ ஆரம்பித்தார். ஏனோ மனம் தாங்கவே இல்லை. அவருடைய அண்ணனே, இபப்டி ஒரு பாவத்தை செய்திருக்கிறார் என்பது மூச்சு முட்டியது.
சில நிமிடங்களுக்குப் பின் கதிர், “இங்கனப்பாரு மாமா. இப்போ உமக்கு தெரிஞ்சது, தெரியாத மாதிரியே இருந்துட்டு போவட்டும். ஆறுக்கிட்டையும் எப்பவும் சொல்லக் கூடாது. இது என் மேல சத்தியம்” என்றான்.
அவனின் வார்த்தையில், முருகேசனோ, “உம் நல்ல மனசு அவெனுக்கு புரியலையேய்யா” என்றார்.
“அவெருக்கு புரியுது, புரியல. இப்போ நீரு என்ன காரியம் பண்ணி வச்சிருக்கீரூ?” என்று கோவமாய் கதிர் கேட்க, முருகேசனோ, “நான் என்னல்ல பண்ணேன்?” என்றார்.
“பொறவென்ன. அக்காக்கும், உமக்கும் எத்தன வருஷத்துக்கு பொறவு நல்ல காரியம் நடந்திருக்கு. இன்னேரத்துல நீ இப்புடி குடிச்சிட்டு வந்து நின்னா, என்ன அர்த்தம்?” என்றான்.
அவருக்கும் புரியத்தான் செய்தது. ஆனாலும் ஆதங்கத்தை தீர்க்க அவருக்கு வழித் தெரியவில்லை.
“இல்ல மாப்புள்ள. அது” என்றவர் தயங்க, “இந்த குடித்தான் மாமா, அத்தனப் பிரச்சனைக்கும் காரணம். நிதானம் இல்லாமத்தேன் எல்லாத் தப்பும் நடக்குது. புரிஞ்சிக்கோ மாமா. அக்காக்கும், எனக்கும் மட்டும் இல்ல. உம்ம குழந்தைக்கும் நீங்க வேனும். யாரோ பண்ண தப்புக்கு, புள்ளைக்குத்தேன் தண்டன கொடுக்கிறீங்க” என்று அவருக்கு அறிவுரை கூறினான்.
“செரிய்யா இனி குடிக்கல” என்றவர், உடனே மனைவியிடம் மன்னிப்பை கேட்க நினைக்க, அதற்குள்ளாக, “இத குடிங்க சித்தப்பா” என்றப்படி அங்கு வந்தாள் நிலா.
(வாம்மா. வந்துக் கொடு. ஆனாலும் உம்ம அப்பா பண்ணதுக்குலாம் கண்டிப்பா அனுபவிப்பாக. செரி நம்ம நிலா இதுக்கப்புறம் என்னப் பண்ணப் போறாங்கன்னு அடுத்தடுத்த எபிசோட்ல பாக்கலாம். அதுக்கு முன்னாடி இன்னிக்கு எபிசோட்ல உங்களுக்கு பிடிச்ச சீன் எதுன்னு மறக்காம கமெண்ட்ல சொல்லுங்க. அப்படியே எப்பவும் போல லைக் பண்ணிட்டு உங்க பிரண்ட்ஸ் கூட ஷேர் பண்ணுங்க)
தென்றல் தீண்டுமா?..
gayathri Shini
kathiroda vartha ultimate
Yasarath Yazar
nxt podunga sis please
Yasarath Yazar
nxt podunga sis
Yasarath Yazar
😔
Yasarath Yazar
nxt podunga sis plss
Anandhi G
sister super episode
Keerthi Keerthi
nxt podunga plss….
Keerthi Keerthi
nxt podunga plss….