செந்தில் பற்றிய விவரம் தெரிந்தவுடன், தன்னுடைய புல்லட்டை எடுத்துக் கொண்டு, நேரே அவரின் குடோனுக்கு சென்றான். அங்கே, இவனைப் பார்த்ததும், செந்தில் பதட்டமாகி எழுந்து நிற்க, “என்ன? இன்னும் சாகாம உசுரோட வந்து நிக்கேன்னேன்னு பாக்குறீகளா?” என்றான்.
அவனின் பேச்சில் செந்திலுக்கோ சகலமும் ஆடித்தான் போனது. ஏனெனில் சின்ன சின்ன தவறுகளை பாண்டியுடன் சேர்ந்து செய்திருக்கிறார்த்தான். ஆனால் இப்படி கொலை செய்யும் அளவுக்கெல்லாம் சென்றதில்லை.
அதிலேயே, அவர் பேச்சு மூச்சின்றி நிற்க, “என்ன? இப்போ உங்க கண்ணு முன்னத்தான நிக்கேன். எங்க வெட்டி வீசும் பாப்போம்” என்றப்படி நெஞ்சை நிமிர்த்தியப்படி, நின்றான் கதிர்.
அதை யார் செய்திருந்தாலும் மன்னித்திருப்பான். ஆனால் சொந்த அக்காவின் கணவர், அத்தையின் மகன், இப்படி செய்ததை அவனால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. அவன் கண்ணில் அப்பட்டமான கோவம் தெரிந்தது.
“நகைய திருடி அடமானம் வச்சது நீயு. அத கொண்டு வந்து வைன்னு சொன்னதுக்கு என்ன கொல பண்ண ஆள் அனுப்புறீகளோ? ஊரு சொத்துல கைய வச்சிட்டு, நீரு நிம்மதியா காலர தூக்கி வுட்டுட்டு சுத்துவீக. நாங்களாம் பாத்துட்டு, கம்முன்னு கெடப்போம்மா?” என்று மீசையை நீவியப்படி கேட்டான். கையில் இருந்த அருவாளுக்கும், அவன் நின்ற தோற்றத்துக்கும் அப்படியே அய்யனாரைப் பார்த்தது போல் இருந்தது.
அதிலேயே செந்திலுக்கு வியர்க்க ஆரம்பித்தது. “இங்கனப்பாரு கதிரு. நம்ம எல்லாம் சொந்தக்காரங்க. இந்த சேதி தெரிஞ்சா, உன் அக்காளுக்கும் சேத்துத்தேன் கெட்டப் பேரு” என்றார்.
“ஓ சொந்தத்தப் பத்தி பேசுறீகளோ? சொந்தம்னு தெரிஞ்சுத்தேன் என்ன கொலப் பண்ண ஆள் அனுப்புனீகளோ, அப்போ, இந்த பாசம்லாம் எங்க போச்சு?” என்று கோவமாய் கேட்டான்.
“ஆறோ என்னப் பத்தி உம்மகிட்ட தப்பா சொல்லிருக்காக” என்று செந்தில் சொல்ல, “யோவ், வாய் கூசாம பொய் பேச உமக்கெல்லாம் வெட்கமா இல்ல. என்ன குத்த வந்தவன் கூட, எனக்கு நேரா நின்னுத்தான்யா சண்டைப் போட்டான். ஆனா நீ எல்லாம், துரோகிய விட மோசமான பாவில்ல. இன்னிக்கு ஊரு காசு அடமானம் வச்சவன், நாளைக்கு சொந்தப் புள்ளைய கூட வைப்பய்யா நீ. உம்ம எல்லாம் சும்மா விட மாட்டேன். ஊர் மொத்தமும் திருவிழான்னு சந்தோஷமா இருக்கு. அந்த சந்தோஷத்த கெடுக்க வேண்டாம்னுத்தேன், இப்போ வர அமைதியா இருக்கேன். திருவிழா முடிஞ்சதும், பஞ்சாயத்துல கூப்டனுப்புவானுங்க. அங்கன வந்து உன் நியாயத்த சொல்லுய்யா. என் கூடப் பொறந்தவள கட்டுன ஒரே காரணத்துக்காக, சாமிக்கு என் வூட்டு நகைய போட சொல்லிருக்கேன். அதுவும் அப்பன் தப்புன்னா, அந்த பாவம் பொண்ண வந்து சேரும்னுத்தேன் அத கூட பண்ணேன். திருவிழா முடிஞ்சதும் எடுத்த நகைய கொடுத்துட்டு ஊர் முன்னாடி மன்னிப்புக் கேட்க தயாரா இரு. இல்லன்னா, அடுத்த நாள் கம்பித்தேன் எண்ணனும்” என்று மிரட்டிவிட்டு அங்கிருந்து சென்றான் கதிர்.
அதில் செந்தில் அப்படியே அங்கேயே சேரில் அமர்ந்து விட்டார். அதன் பின் அடுத்த ஏழு நாள் திருவிழா எந்த பிரச்சனையுமின்றி நடைப்பெற்றது. நிலாவோ, கதிரை அவன் அறியாமல் பார்த்துக் கொண்டிருந்தாள். கடைசி திருவிழா முடிய ஒரு நாள் மட்டுமே இருக்க, செந்தில் பாண்டியிடம் தான் சென்றார். ஏனெனில் அவருக்கு அந்த ஊரில் அவனைத் தவிர்த்து வேறு யாரையும் தெரியவில்லை.
சங்கரேயனிடம் சென்று கேட்டால், இருணூறு பவன் என்ன? இன்னும் நூறு பவுன் சேர்த்து கூட கொடுப்பார். ஆனால், தாமரை இருக்கும் போது கேட்க வாய்ப்பில்லை. அதிலும் தாமரைக்கு மட்டும் விஷயம் தெரிந்தால், அதை அவரால் நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை.
அவர் பெயரில் இருந்த இட பத்திரத்தை எல்லாம் எடுத்துக் கொண்டு பாண்டியிடம் சென்றார்.
“மாப்புள்ள எனக்கு உன்ன விட்ட வேற நாதி இல்ல. இதை எல்லாம் எடுத்துட்டு, அந்த நகைய மட்டும் மீட்டுக் கொடுத்துடுய்யா. புண்ணியமா போகும்” என்று பாண்டியிடம் அவர் கெஞ்சலாய் கேட்க, அவனோ, “அட என்ன மாமா நீ? என்ட்ட வச்சிட்டே உமக்கு இல்லன்னு சொல்லுவேன்னா? மொத்த நகையும் நானே அடமானத்துல வச்சிருக்கேன். உன் மருமவேன் கதிரால, ஊருக்குள்ள என் தொழில் மொத்தமா நாசமா போயிடுச்சி. என்னால எப்படி அவ்வளவு பெரிய தொகைய பொறட்ட முடியும்?” என்று சொல்லியவன், நாசுக்காய், அந்த பத்திரங்களையும் எடுத்துக் கொண்டான்.
அதன் பின் அவரை குடிக்க வைத்து அவரிடம் கையெழுத்தும் வாங்கியவன், “மாமா இப்பவும் சொல்றேன். அந்த கதிரு இருக்கிற வர நம்மளால, இந்த ஊருல நிம்மதியா இருக்க முடியாது” என்று விஷத்தை ஏற்றினான்.
“அதான, ஆள் அனுப்பியும் தப்பிச்சிட்டானே” என்று அவர் போதையில் பேச, “அவனுக்கு இருக்கிற செல்வாக்கு என்னத் தெரியுமா?” என்று குரோதமாய் பாண்டி கேட்டான்.
“அதேன் ஊரு மொத்தமும் அவென் சொத்துத்தேன்ன, என் மாமா போனதுக்கப்புறம் அத்தனைக்கும் அவென்த்தான ஒரே வாரிசு” என்று கூறினார் செந்தில்.
“காசு என்ன மாமா பெரிய காசு. அதெல்லாம் வச்சி அவென்ன ஒன்னும் பண்ண முடியாது. அவென்னோட பலம் ஊருக்குள்ள இருக்கிற மருவாதையும், உன் வூட்டுல உள்ளவங்க காட்டுற பாசமும்த்தேன்” என்று குரோதமாய் பாண்டி கூறினான்.
“அதுக்கு நம்ம என்னல்ல பண்ண முடியும்?” என்று செந்தில் கேட்க, “கதிரு மட்டும். பஞ்சாயத்துல வந்து நகைய நீத்தேன் எடுத்தேன்னு சொன்னாலே போதும். சாட்சிய கூட கேட்க மாட்டானுங்க. அந்தளவுக்கு அவென் மேல அம்புட்டு பேருக்கும் நம்பிக்க இருக்கு. அத முதல்ல கெடுக்கனும்” என்றான்.
“அதுக்கு என்னல்ல பண்ண சொல்ற?” என்று செந்தில் போதையில் கேட்க, “என்னப் பண்ணனும்னு நான் முடிவு பண்ணிட்டேன். ஆனா அதுக்கு முதல்ல, அவென் அக்காவ அவென் கிட்ட இருந்து பிரிக்கனும். நான் சொல்ற இடத்துக்கு நான் சொல்ற மாதிரி சொல்லி, தாமர அக்காவ கூட்டியா. மிச்சத்த நான் பாத்துக்கிறேன்” என்றான் பாண்டி.
“உன்ன நம்பித்தேன்ல போறேன். இன்னும் ஒத்த நாளுத்தேன் இருக்கு” என்று செந்தில் அங்கிருந்து சென்று விட, பாண்டியோ, “இந்த ஒரு நாள்ல, அந்த கதிரோட அத்தன சந்தோஷத்தையும் நான் பறிக்கிறேன். அதுவும், அவன் சொந்தத்த வச்சே பண்றேன்” என்று சொல்லிக் கொண்டான்.
சொல்லியவன் அவனுடைய ஆட்களிடம், அந்த மஞ்சரியிடம் ஏதோ சித்து விளையாட்டை விளையாட கூறினான். அந்த ஆட்களும், கதிர் அழைப்பதாக, மஞ்சரியை மாந்தோப்புக்கு அழைத்து வந்திருக்க, அவளுக்கோ சற்று பயம்த்தான். ஆனால் காதல் மயக்கம். வயது கோளாறு, ஏதோ துணிந்து வந்து விட்டாள். கதிரோ, அன்று என்று பார்த்து வேலை விஷயமாக மதுரை வரை சென்றிருந்தான். அதனால் இவர்களுடைய திட்டம் குறித்து எதுவும் அறியவில்லை. ஆனால் அவன் ஊருக்குள் வரும் நேரம், பாண்டி, கதிருடைய உடையில், மஞ்சரியிடம் அத்து மீற முயற்சிக்க, அவளோ பயந்து ஓட முயற்சித்தாள்.
ஆனால் அந்த இடம் மொத்தமும் இருட்டாய் இருக்க, அது கதிர் என்று முடிவு செய்து விட்டாள். அவள் செய்தாளோ? இல்லையோ அங்கே தாமரை அந்த காட்சியைப் பார்த்திருக்க, அவர் கண்ணையே அவருக்கு நம்ப முடியவில்லை.
“ஏல கதிரு என்னல்ல பண்ணிட்டு இருக்க” என்று கோவமாய் தாமரை கேட்க, அவனின் சத்தம் கேட்கவும், பாண்டி அங்கிருந்து ஓடியிருந்தான். செந்தில் தாமரையை பாண்டி அங்கிருந்து செல்லும் வரை பிடித்திருக்க, அவரும் முகத்தைப் பார்க்கவில்லை.
ஆனால் அவருடைய வளர்ப்பு தப்பாய் போனதை அவரால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. மஞ்சரி பயத்தில் மயங்கியிருக்க, பாண்டியுடைய ஆட்கள் அவளை மருத்துவமனைக்கு அழைத்து செல்வது போல் பாசாங்கு காட்டினர்.
செந்தில் தாமரையிடம், “ஏதோ வயசு கோளாறுல பன்ணிட்டான். அதுக்குன்னு இதெல்லாம் பெருசு பண்ணாத” என்று ஏற்றி விட்டார்.
அதைக் கேட்டவருக்கு அத்தனைக் கோவம். இப்போது வரையும் கூட, அது கதிர்த்தான் என்று நம்ப முடியவில்லை. ஆனாலும் ஒரு பெண்ணுக்கு நடந்த அநியாயத்தை தடுத்தே ஆக வேண்டும் என்று நினைத்தார்.
அங்கே பாண்டியோ செந்திலுக்கே தெரியாமல், மஞ்சரியை தன்னுடைய தோட்டத்து பங்களாவுக்கு தூக்கி வர சொல்லியிருந்தான். அவனுக்கு அவள் ஊருக்கு வந்த நாளில் இருந்தே அவளின் மீது ஒரு ஈர்ப்பு இருக்க, இப்போது அவளை அடைந்தாக வேண்டும் என்று நினைத்தான்.
ஆனால் அதற்குள், முருகேசன், மஞ்சரியை பாண்டி ஆட்கள் தூக்கி செல்வதைப் பார்த்து கதிருக்கு கால் செய்தார். அவனும் அன்னேரம் வந்திருக்க, “என்ன மாமா சொல்றீக? எந்தப் பக்கம்?” என்றான்.
உடனே முருகேசனும், கதிரும் அங்கு செல்ல, அங்கே மயக்கம் தெளிந்து கண் விழித்த மஞ்சரியோ பாண்டியைப் பார்த்து மிரண்டு விழித்தாள். சற்று முன் கதிர் அணிந்திருந்த அதே சட்டையில் அவன் நின்றிருக்க, அவளுக்கு புரியவே இல்லை.
“ஏன் உமக்கு அவென்த்தான் ஆம்பளையா தெரிஞ்சானாக்கும். இன்னிக்கு நானும் ஆம்பளன்னு உமக்கு காமிக்கிறேன்” என்றப்படி மஞ்சரியை பலவந்தப்படுத்த முயல, அதற்குள் கதிரும், முருகேசனும் அங்கு வந்து மஞ்சரியை காப்பாற்றியிருந்தனர்.
பாண்டி தப்பித்து ஓட, முருகேசன் அவனைப் பிடிக்க ஓடினார்.
இங்கே மஞ்சரி கதிரைப் பார்த்தும் மிரள, என்ன நடந்தது? என்று கதிர் மஞ்சரியைப் பார்த்துக் கேட்க, அவளும் அதன் பின்னே, நடந்த விஷயத்தை எல்லாம் கூறினாள். அதைக் கேட்டவனுக்கு அப்படி ஒரு கோவம். ஆனாலும், இப்படி வெளியூருக்கு வந்த இடத்தில் இப்படி நடந்தது என்று அந்தப் பெண்ணின் வீட்டுக்கு தெரிந்தால் என்னவாகும்? என்று யோசித்து அவளை அங்கிருந்து அவள் ஊருக்கு அனுப்பி வைத்தான்.
சென்னை பஸ்ஸில் அவளை ஏற்றி விட்ட கதிர், “இங்கன நடந்ததப் பத்தி நீ ஆறுக்கிட்டையும் சொல்லக் கூடாது. புரிஞ்சிதா?” என்று சொல்லி அனுப்பி வைத்தான்.
ஆனால் அதைக் கேட்ட தாமரையோ அதை மீண்டும் தவறாகத்தான் புரிந்துக் கொண்டார். இப்படி அத்தனையும் கதிருக்கு எதிராய் இருக்க, அடுத்த நாள் மஞ்சரி என்ற பெண்ணிடம், கதிர் அத்து மீறியதாக பஞ்சாயத்து கூட்டப்பட்டிருந்தது.
அதைக் கேட்ட வெள்ளையம்மாளுக்கு மூச்சே நின்றிருக்கும். “இல்ல எம் புள்ள தப்பு பண்ணியிருக்க மாட்டான்” என்று அவர் அந்த பெரிய வீடே அதிரும் அளவுக்கு கத்தினார்.
ஆனால் சாட்சி சொல்ல தாமரையே நின்றிருக்க, யாருக்கும் என்ன சொல்வது என்று தெரியவில்லை. கதிருக்கோ மஞ்சரியின் மானத்தை காக்க வேண்டும். அவளிடம் வாக்கு கொடுத்திருக்கிறான். என்ன நடந்தாலும் அவளை இதற்குள் இழுக்க மாட்டேன் என்று. அதனால் அமைதியாய் நின்றான்.
தீர்ப்பு சொல்ல வேண்டிய இடத்தில் சங்கரேயன் நின்றிருக்க, பெத்த மகனைப் பார்ப்பதா? இல்லை ஊர் கடமையைப் பற்றி யோசிப்பதா? பாண்டி பிரச்சனையை பெரிதாக்க ஆட்களை அனுப்பி வைத்திருக்க, அதுவரை மரியாதையாய் பார்த்த அந்த ஊர் அவனை குற்றவாளியாய் பார்த்தது.
காக்கி சட்டையில், ஊர் மெச்ச தன் மகனைப் பார்க்க வேண்டும் என்று நினைத்த பெற்றோருக்கு வயிற்றில் நெருப்பைக் கட்டியது போல் இருந்தது. கதிர் அமைதியை மற்றவர்கள் உபயோகப்படுத்திக் கொள்ள, பற்றாக்குறைக்கு, கதிர் மஞ்சரியிடம் விளையாட்டாய் செய்த அத்தனை விஷயங்களுக்கும், மஞ்சரியின் தோழி சாட்சியாகிப் போக, அங்கே கதிருக்கு ஆதரவாய் ஒருவர் கூட இல்லை.
சங்கரேயன் அந்த இடத்திலேயே ஊர் தலைவர் பொறுப்பில் இருந்து விலகிக் கொள்ள, பாண்டிக்கு ஆதரவான ஒருவர் அந்த பொறுப்பை ஏற்றுக் கொள்ள, ஐம்பது சாட்டையடி தண்டனை கொடுக்கப்பட்டது.
ஏனோ அந்த நொடி ஊருக்காக ஓடி ஓடி சென்றதை நினைத்து வெட்கப்பட்டான். அவனுடைய நண்பர்களை தவிர்த்து மீதி எவரும் அவனை நம்பவில்லை. அதுவே அவனுக்கு அவமானமாய் இருந்தது. ஊரை விட்டே ஓடிவிடலாம் என்பது போன்ற நிலையில்த்தான் இருந்தான் கதிர்.
(ஆனாலும் கதிரு பாவம்ப்பா. செரி அடுத்து என்னாச்சி? இனி என்னாகப் போதுன்னு அடுத்தடுத்த எபிசோட்ல பாக்கலாம். அதுக்கு முன்னாடி இன்னிக்கு எபிசோட்ல உங்களுக்கு பிடிச்ச சீன் எதுன்னு மறக்காம கமெண்ட்ல சொல்லுங்க. அப்படியே எப்பவும் போல லைக் பண்ணிட்டு உங்க பிரண்ட்ஸ் கூட ஷேர் பண்ணுங்க)
தென்றல் தீண்டுமா?..
Keerthi Keerthi
morning ud upload pannirivingaa..???
gayathri Shini
super sister but kathir pavam la
Yasarath Yazar
seekkirama nxt podunga akka