தென்றல் – 122

மஞ்சரி கதிரை குறிப்பிட்ட தோட்டத்துக்கு வர சொல்லியிருக்க, கதிரும், இத்துடன் விளையாட்டை நிறுத்திக் கொள்ளலாம் என்று நினைத்து அங்கு கிளம்பினான். நிலாவும், அவர்கள் என்ன பேசிக் கொள்வார்கள்? என்று பார்க்க தனியே அங்கு சென்றாள்.

மற்ற நேரமாக இருந்திருந்தால், வீட்டில் இருந்த யாரும் நிலாவை தனியே வீட்டை விட்டு செல்ல கூட அனுமதித்திருக்க மாட்டார்கள். ஆனால் திருவிழா சமயம் என்பதால், வீட்டில் இருந்த அனைவருமே, அங்கு இங்கு என்று பரபரப்பாகத்தான் சுற்றிக் கொண்டிருந்தனர்.

அதுவும் போக, நிலா கோவிலுக்குத்தான் சென்றிருப்பாள் என்று நினைத்துக் கொண்டிருக்க, யாரும் அவளைத் தேடவில்லை.

“இங்கனப் பாரும்மா. நான் சும்மா ஏதோ பசங்க கேலி பேசுனாங்கனுத்தேன்” என்று கதிர் சொல்லி முடிக்கும் முன்னே, “எனக்கு உங்கள ரொம்ப பிடிச்சிருக்கு. ஐ லவ் யூ” என்றிருந்தாள் மஞ்சரி.

அதில் அவன் ஒரு நொடி தேங்கி நிற்க, அவளோ, “டூ யூ லவ் மீ?” என்று அவன் கண்ணைப் பார்த்து நேருக்கு நேர் கேட்டிருந்தாள். ஏனோ இதுவரை அவனிடம் இத்தனை நேரடியாய் ஒருவள், இப்படி சொல்லியதே கிடையாது. 

அதனால் அவனால் சட்டென்று மறுக்க முடியவில்லை. “ஏன்மா, என் பேரு என்னென்னாச்சு உமக்கு முழுசா தெரியுமா?” என்றான்.

“கதிர்த்தான” என்று அவள் வேகமாய் சொல்ல, அதில், “இங்கனப் பாரு. ஏதோ கூட்டாளிங்க பேசுறானுங்களேன்னு, உம்ம பாத்தேன். மத்தப்படி எமக்கு உம்மேல ஆசை எல்லாம் கிடையாது. உமக்கும், இந்த ஊரு. நான் எல்லாம் சரி பட்டு வர மாட்டேன்” என்று பொறுமையாய் கூறினான்.

“இல்ல. ஐ லைக் திஸ் வில்லேஜ்” என்று அவள் சொல்ல, அவனோ, “எம்ம பத்தி உமக்கு எதுவுமே தெரியாது” என்றான்.

“இல்ல தெரியும். நான் ஒரு வாரமா உங்கள பாத்துட்டுத்தான் இருக்கேன்” என்று மஞ்சரி விடாமல் சொல்ல, “ஒரு வாரம் பாத்தா, என்னப் பத்தி எல்லாம் தெரிஞ்சிருக்குன்னு அர்த்தமா?” என்றான்.

ஏனெனில் அவள் ஏதோ புரியாமல், வயது கோளாறில் பேசுவதாகத்தான் அவன் நினைத்தான்.

“என்ன உங்களுக்கு பிடிக்கலையா? நான் அழகா இல்லையா?” என்று சிறு சோகத்துடன் கேட்டாள்.

அதைக் கேட்டு வழக்கமான சிரிப்பை உதிர்த்தவன், “தினமும் கண்ணாடியில உம்ம பாக்குறத்தேன்ன. இந்த ஊருப் பொண்ணுங்களே, உம்ம பார்த்து சைட் அடிக்குதுங்க. பொறவு ஏன் நானே சைட்டடிக்கத்தேன் செஞ்சேன்” என்றான்.

“அப்படின்னா என்ன லவ் பண்ணலாம்த்தான?” என்று அவள் விடாது கேட்க, “போச்சு போ. அப்படி நான் சைட்டடிக்கிற பொண்ணெல்லாம் நான் லவ் பண்ணனும்னா, இந்த ஊருல பாதிப் பேரை நான் லவ் பண்ணணும். அதுவும் போக, நீ நினைக்கிற மாதிரி எல்லாம் நான் நல்லவன் கிடையாது” என்றான்.

அதில் அவளோ கதிரை புதிதாய் பார்த்தாள். ஏனெனில் பொதுவாய் ஒருவன், ஒரு பெண்ணிடம் தன்னைப் பற்றி புகழ்ந்துப் பேசுவானே தவிர, இப்படி தன்னை தாழ்த்தி எல்லாம் பேசி அவள் பார்த்ததே கிடையாது.

அதனால் மஞ்சரியோ, “சும்மா சொல்லாதீங்க. ஐ நோ யுவார் சோ ஜெம்” என்று அதையே அவள் சொல்ல, அவனோ, “செரி நான் நல்லவன்னே வச்சிப்போம். ஆனா எனக்கு இப்போ லவ் பண்ற மாதிரி எந்த யோசனையும் இல்ல. ஒரு வேள பின்னாடி வந்தா, அப்போ நீ சொன்னத பத்தி யோசிக்கிறேன் போதும்மா” என்றான்.

ஏனெனில் ஒரு பெண்ணின் மனதை கஷ்டப்படுத்த அவன் நினைக்கவில்லை. அதில் அவளோ வேகமாய், “அப்போ நான் உங்களுக்காக வெயிட் பண்றேன்” என்றாள்.

அதைக் கேட்டு அழகாய் முடியைக் கோதியவன், “அது உன்னால முடியாது” என்று கூறினான் கதிர்.

“அதெல்லாம் முடியும்” என்று அவள் சொல்ல, “சரி எனக்காக எத்தன வருஷம் காத்திருப்ப?” என்று கேட்டான். அதற்கு அவளோ, “எவ்வளவு இயர்ஸ்னாலும் வெயிட் பண்ணுவேன்” என்று வேகமாய் கூறினாள்.

“அப்படியா? சரி இன்னும் ஒரு ஐஞ்சுல இருந்து ஆறு வருஷம் வெயிட் பண்ணு. கண்டிப்பா நான் உன்ன கல்யாணம் பண்ணிக்கிறேன்” என்றான்.

“ஐஞ்சு வருஷமா?” என்று அவள் கேட்க, “ஏன் முடியாதா?” என்று அவன் கேட்க, “ஆ..ங் அதெல்லாம் முடியும். பட் அதுவரைக்கும் நம்ம லவ் பண்ணலாமே” என்றாள்.

“இந்த கதிர் ஐஞ்சு வருஷத்துக்கப்புறம்த்தான் லவ் பண்ணுவான். அதுவரைக்கும் உன்னால காத்திருக்க முடியும்னா இரு. இல்லன்னா விட்டுடு” என்று அவன் அழுத்தம் திருத்தமாய் சொல்ல, “ஒகே வெயிட் பண்றேன்” என்றாள்.

“சரி அப்போ ஐஞ்சு வருஷத்துக்கப்புறம் சந்திப்போம். இப்போ நீ போலாம்” என்று கதிர் சொல்ல அவளும் அங்கிருந்து சென்றாள். அவள் செல்லும் வரை அங்கேயே நின்ற கதிரோ, “எல்லாம் வயசு கோளாறு” என்று தனக்குள்ளே சொல்லியப்படி தன் மொபைலை கையில் எடுத்தான்.

நிலாவோ, “மாமா ஏன் அவுக கிட்ட இப்புடி சொன்னாரு?” என்று குழம்பியப்படி அவளும் அங்கேயே நின்று விட்டாள். சில நொடிகளில், அந்த தோட்டத்துக்குள் சிலர் புகுந்திருக்க, கதிரோ அங்கிருந்த கிணற்று மேடையில் சாய்ந்து நின்று யாரிடனோ போனில் பேசிக் கொண்டிருந்தான்.

சத்தம் கேட்டு நிலா திரும்பி பார்க்க, அதற்குள் ஒருவன் கதிரை பின்னிருந்து வெட்ட சென்றிருந்தான். அதைப் பார்த்தவளுக்கு ஒரு நொடி உயிரே இல்லை. “மாமா” என்று அவள் சத்தமாய் கத்த, நிலாவின் சத்தத்தில் திரும்பினான்.

அங்கே ஒருவன் கத்தியுடன் வந்திருக்க, அடுத்த நொடி அவனை எட்டி மிதித்திருந்தான். அடுத்தடுத்து சிலர் அவனை அடிக்க வர, அவனோ அசராமல் அத்தனைப் பேரையும் அடித்து நொறுக்கியிருந்தான்.

ஆனால் ஒருவன் அவனுடைய முதுகில் அறுவாளால் கீறிவிட, “ம்மா” என்று அவன் சொல்லும் முன்னே, “மாமா” என்றவள் மயங்கி விழுந்திருந்தாள்.

அப்போதே கதிர் நிலாவைப் பார்க்க, “ஹேய் புள்ள” என்றவன் கையில் அகப்பட்டவனையும் விட்டிருக்க, அவர்கள் ஓடியிருந்தனர். முதலில் அவர்களை துரத்தி செல்ல நினைத்தவன், அதன் பின் சிவாவுக்கு கால் செய்து, சில விவரத்தை சொல்லிவிட்டு நிலாவிடம் ஓடி வந்தான்.

அவள் மயக்கத்தில் இருக்கவும் அவளை தூக்கிக் கொண்டு முகத்தில் தண்ணீரைத் தெளித்து அவளை எழுப்பினான்.

அவள் எழவும், அவளின் பார்வை அவனுடைய முதுகைத் துளைக்க, அவனோ, “இங்க என்னத்த பண்ணிட்டு இருக்க நீ?” என்று சிறு கோவத்துடன் கேட்டான்.

ஏனெனில், சிறு பிள்ளை இப்படி தனியாக தோட்டத்துக்கு வந்திருக்கிறாள். ஏதாவது பூச்சி கடித்து விட்டாள் என்ன செய்வது என்ற அக்கறை அது.

அவன் கோவப்படவும், அவளுக்கோ என்ன சொல்ல என்றே தெரியவில்லை. அவனிடம் பெரிதாய் பேசியதே இல்லை. தூரத்தில் இருந்துத்தான் பார்ப்பாள். இத்தனை நெருக்கத்தில் அவனைப் பார்ப்பதே, அவளுக்கு அத்தனை பதட்டத்தை கொடுத்தது.

அவள் பேசியும் அவன் பார்த்தது கிடையாது. அதனால், “வா” என்று அவள் கையைப் பிடித்து தன்னுடன் அழைத்து சென்றான். பைக்கில் ஏற அவள் தடுமாற, அவனே அவள் இடையைப் பிடித்து அவளைத் தூக்கி பைக்கில் அமர வைத்தான்.

அவனைப் பொறுத்தவரை சிறு பிள்ளைத்தான். ஏழாம் வகுப்பு படிக்கும் சிறு பெண், அதுவும் அவனின் அக்கா மகள். அதைத் தாண்டி எல்லாம் யோசிக்க எதுவுமே கிடையாது. அவளுக்கும் அந்த தொடுதல் தயக்கத்தையோ வெட்கத்தையோ எல்லாம் கொடுக்கவில்லை. அவளுக்கும் அதற்கேற்ற வயது இல்லை. ஆனால் அவனுடனான முதல் பைக் பயணம் அவளுக்கு பிடித்திருந்தது.

அவன் பைக்கில் செல்லும் போதெல்லாம் பார்த்திருக்கிறாள். ஆனால் முதல் முறை இப்போதுத்தான் அவனுடன் செல்கிறாள். அது அவளுக்குள் ஒரு வித மகிழ்ச்சியைக் கொடுத்தது.

ஆனால், அவன் முதுகில் இருந்த இரத்தக்கறை, அவள் மகிழ்ச்சியை அப்படியே உள்ளிழுத்துக் கொண்டது. “இரத்தம்” என்று அவள் மெதுவாய் அவன் முதுகைத் தொட, அவனோ, “பிடிச்சிக்கோ கீழ விழுந்துடப் போற” என்றான்.

நேரே வீட்டுக்கு செல்லாது கோவிலில் பைக்கை நிறுத்தியவன், “இங்கன ஒரு வேல இருக்கு. முடிச்சிட்டு உன்ன கொண்டுப் போய் வூட்டுல விடுறேன் சரியா?” என்று கேட்க, அவளும் தலையாட்டினாள்.

கதிரைப் பார்த்ததும் சிவா ஓடி வர, “என்னாச்சுண்ணே” என்றான். “முத அந்த சட்டைய கொண்டா” என்றவன் தான் அணிந்திருந்த சட்டையை கழட்டி கீழே வீசிவிட்டு, அங்கிருந்த தண்ணீரில், அந்த காயத்தை கழுவினான்.

அவனுக்கு வலித்ததோ என்னவோ? அவளுக்கு வலித்தது. அவள் பார்வையில் அவன் காயத்தை தவிர்த்து, வேறு எதுவும் தெரியவில்லை.

“எண்ணண்ணே, இம்புட்டு பெருசா இருக்கு. வான்னே ஆஸ்பத்திரி போயிட்டு வந்துடலாம்” என்று சிவா அழைக்க, “ச் அதெல்லாம் ஒன்னுமில்லடா. நீ நான் சொன்னத செய். அவுனுங்க இந்த ஊர விட்டு தாண்ட கூடாது” என்று சொல்லியப்படி, வேறு சட்டையை அணிந்துக் கொண்டான்.

அதன் பின், நிலாவைப் பார்த்தவன், அவளின் அருகில் சென்று, “ஏதும் வேணுமா?” என்று அங்கிருந்த திருவிழா கடைகளைக் காட்டிக் கேட்டான்.

“ம்ஹூம்” என்று அவள் வேகமாய் தலையாட்ட, அவனோ, அங்கே பஞ்சு மிட்டாய் விற்றுக் கொண்டிருக்க, விற்கும் சிறுவனை அழைத்து இரண்டை வாங்கி அவள் கையில் கொடுத்தான்.

அவன் கொடுக்கவும் அவள் அதை வாங்கிக் கொள்ள, கதிரோ, “இப்புடி தனியா எங்கனையும் வர கூடாது செரியா?” என்றான்.

“ம்” என்றவள் அதற்கும் தலையாட்ட, “என் அக்கா பேசுனா நிறுத்தவே மாட்டா. நீ என்னென்னா, வாயத் தொறக்க மாட்டேங்கிற. என்னத்த என் அக்கா சொல்லிக் கொடுத்தாகளோ” என்றப்படி அவளை அழைத்து சென்று வீட்டில் விட்டான்.

அதன் பின் தன்னுடைய பைக்கை எடுத்துக் கொண்டு அவன் கிளம்ப, “ராசா. என்ன வூடு வரைக்கும் வந்துட்டு உள்ள வராம போற” என்று நிலாவின் பாட்டி கேட்டார்.

“இல்லத்த செத்த கோவில்ல வேல கெடக்கு. இந்தப் புள்ள அங்கன தனியா நின்னுட்டு இருந்திச்சா, அதேன் கூட்டியாந்தேன். இன்னொரு நாள் வரேன்த்த” என்று சொல்லியவன் நிலாவிடமும் தலையாட்டிவிட்டு அங்கிருந்து கிளம்பினான்.

அவன் சென்றதும், நிலாவின் பாட்டியோ, “என்னத்தா, சினேகிதிங்க கூட போனீயாக்கும்?” என்று கேட்க, “ம். ம்ஹூம்” என்று எல்லாப் பக்கமும் தலையாட்டினாள்.

அவள் முகத்தைப் பார்த்தவரோ, “என்னாச்சுடா, ஏன் உன் முகம் இப்படி வாடிக்கெடக்கு?” என்றார். அவளோ ஏதும் சொல்லாது அவர் மடியில் சென்று படுத்துக் கொண்டாள். ஆனால் மனம் முழுவதும் கதிர் என்ற ஒருவன் தான் நின்றிருந்தான். ஏனோ அவனின் காயம், அவனை விட அவளைத்தான் அதிகமாய் பாதித்தது. அதையே நினைத்து நினைத்துப் பார்த்தவளுக்கு அழுகையும் வந்தது. அப்படியே பாட்டியின் முந்தி சேலையில் தன்னுடைய கண்ணீரையும் துடைத்துக் கொண்டாள்.

அதன் பின் இங்கே கதிருடைய நண்பர்கள், வந்திருந்தவர்களில் ஒருவனை பிடித்து வைத்திருக்க, கதிர் சென்று அவனிடம் விசாரித்தான்.

அவன் செந்திலின் பெயரை சொல்ல, கதிருக்கோ நம்பவே முடியவில்லை. உறவுக்காரனாய் இருந்துக் கொண்டு, இப்படி ஒரு வேலையைப் பார்த்திருக்க, அவனால் மன்னிக்கவே முடியவில்லை.

“நாளைக்கு பஞ்சாயத்துல வந்து மாத்திப் பேசுன அம்புட்டுத்தேன்” என்று கதிர் அவனை மிரட்டி விட்டு, சிவாவிடம், “திருவிழா முடியிற வரைக்கும், இவென் இங்கனையே இருக்கட்டும்” என்றிருந்தான்.

அடுத்த நொடி செந்திலுடைய குடோனுக்குத்தான் அத்தனைக் கோவமாய் பைக்கை எடுத்துக் கொண்டு கிளம்பினான்.

(ஏய்யா செந்திலு. உம்மல்லாம் மன்னிக்கவே கூடாதுத்தேன். ஆனா என்னப் பண்ணுறது, நிலாவோட அப்பாவா போயிட்ட. செரி அடுத்து என்ன நடந்திச்சி, அந்த மஞ்சரி அதுக்கப்புறம் கதிர் வாழ்க்கையில வந்தாளா? இல்லையா? அப்படின்னு எல்லாத்தையும் அடுத்தடுத்த எபிசோட்ல பாக்கலாம். இனிமேல் தினமும் எபிசோட் வந்துடும். இத்தன நாள் டிலே பண்ணதுக்கு ரொம்ப சாரி ஹாய்ஸ். என் சிட்சுவேசன் உங்களுக்கே தெரியும்னு நினைக்கிறேன். சரி இன்னிக்கு எபிசோட் எப்படி இருந்திச்சுன்னு மறக்காம கமெண்ட்ல சொல்லுங்க. அப்படியே எப்பவும் போல லைக் பண்ணிட்டு உங்க பிரண்ட்ஸ் கூட ஷேர் பண்ணுங்க)

தென்றல் தீண்டுமா?..

Comments   4

*** தென்றல் – 122 - படைப்பை ரேட் செய்யுங்கள் ***