வரம் – 2

கடந்த கால நினைவில் இருந்த அர்ஜூனை, ஐயருடைய வார்த்தைகள், நிகழ்காலத்துக்கு இழுத்து வந்தது. அப்போதே உணர்வு வந்ததுப் போல் நிமிர்ந்தான். சிவப்பு வண்ண சேலையில். அடர் பச்சை நிற பார்டர் வைத்த அந்த தங்க சரிகை சேலையில், தங்க பதுமையாய், சிறு அதிர்வு கூட இல்லாமல், அவனருகில் அமைதியாய் வந்தமர்ந்தாள் பூஜா. பார்த்தவுடனே அத்தனைப் பேரும் தன் காதலை சொல்லிவிடும் அளவுக்கு, அத்தனை அழகாய் இருந்தாள். தேவதை என்று சொல்லிவிடலாம். மீன் போன்ற கண்கள், வளைந்த அழகிய புருவம், மூன்றாம் பிறை நிலவின் அழகை ஒத்தெடுத்த அழகிய நெற்றி, அதில் அழகுக்கு அழகு சேர்ப்பது போல் சிரித்தால், அவள் உதட்டோரம் மின்னும் சிறிய மச்சம். அந்த மச்சத்தின் அழகுக்கே, அவளிடம் அத்தனை ஆடவர்களும் விழுந்துக் கிடப்பார்கள். அவளைப் பார்ப்பவர்கள் அத்தனைப் பேரையும், கவர்ந்திழுக்கும் வன தேவதை அவள். சுருக்கமாய் சொல்ல வேண்டும் என்றால், ரம்பை ஊர்வசி எல்லாம் இன்னுமே பூவுலகில் இருக்கிறார்கள் என்று சொல்லிவிடலாம்.

(இன்னும் கூட கொஞ்சம் பில்டப் கொடுக்கலாம் தான். ஆனா நம்ம ஹீரோ கோவிச்சிப்பாரு. அதுலையும் நம்ம வாத்தி இப்போ இருக்கிற கடுப்புக்கு, நம்ம ஹீரோயினுக்கு ஓவர் பில்டப் கொடுத்தா, என்னையும் சேர்த்து கடிச்சு வச்சாலும் வச்சிடுவாரு. அதனால, மீதிய நம்ம ஹீரோ சார் மூட் சரியானதும் சொல்றேன்…)

அங்கே கோவிலில் இருந்தவர்கள் அத்தனைப் பேரும் அந்த தங்க சிலையைத்தான் ரசித்துப் பார்த்தனர்.  ஆனால் அந்த அழகுக்கு சொந்தக்காரனோ, அவள் பக்கம் திரும்பவே இல்லை. இத்தனை ஏன் அவளுக்கு இடம் கொடுப்பதற்காக கூட, அவன் நகர்ந்து அமரவில்லை. அதன் விளைவு இப்போது அவனை உரசியப்படித்தான் அவள் அமர வேண்டியிருந்தது. அத்தனை நெருக்கத்தில் தான் அவன் இருந்தாள். அவள் அமர்ந்திருப்பதை உணர்ந்தாலும், பார்க்க வேண்டும் என்று கூட அவன் நினைக்கவில்லை.

அது இப்போது அல்ல, அவள் தான் மனைவி என்று பெரியவர்கள் சொல்லிய போதும், அவளை அறிந்துக் கொள்ள அவன் நினைக்கவில்லை. அவனுடைய அம்மா வலுக்கட்டாயமாய், அவனிடம் போட்டோவை திணித்தும் கூட அவன் பார்க்கவில்லை. இத்தனை ஏன், பெண் வீட்டில், அவனுக்கு தங்கை முறை வரும் ஒருவள், அவளே அவனைத் தேடி வந்து, பூஜாவுடைய போன் நம்பரை கொடுத்திருந்தாள்.

அப்போதும் கூட அதில் இருந்து அவளுக்கு கால் செய்திருக்கவில்லை. திருமணம் செய்யப் போகிறோம்? இனி அவள் தான் தனக்கு எல்லாமே என்று நினைத்தால் தானே அவன் அதை எல்லாம் செய்யப் போகிறான்? அவனுக்குத்தான் அந்த நினைவே இல்லையே. இப்போதும் ஒரு கட்டயத்தின் பேரில் தான் அந்த மணையில் அமர்ந்திருந்தான்.

“எல்லா ஊர்லையும் பொண்னுத்தான் வெட்கப்படும். இங்க என்னென்னா, மாப்பிள குனிஞ்ச தல நிமிராமல உட்கார்ந்து இருக்காரு” என்று சிலரும். “பையன் ஏதோ டீச்சர் வேல பாக்குறதா சொன்னாங்க. அங்கேயும் பொம்பள புள்ளைங்க முகத்த பாக்காமத்தேன் சொல்லிக் கொடுப்பாரோ” என்று பூஜாவின் தோழி ஒருவளும், வேண்டுமென்றே சீண்டினர்.

அதெல்லாம் அவன் காதிலும் விழுந்தது. ஆனாலும், அவள் பக்கம் திரும்பாமல் வீம்பாய் பிடித்து வைத்த சிலையாட்டம் அமர்ந்திருந்தான்.

“இங்கப்பாருடா. இப்பக் கூட கெட்டுப் போகல. பேசாம இந்த கல்யாணம் வேண்டாம்னு சொல்லிடு.” என்று அவனுடைய மனசாட்சி எடுத்துரைத்தது.

அதில் மாலையில் வேகமாய் அவன் கை வைத்தார். அதற்குள்ளாக, அவனுடைய அம்மா, “அர்ஜூன் என்னப் பன்ற? எல்லாரும் உன்னத்தான் பாக்குறாங்க. கொஞ்சம் முகத்த சிரிச்ச மாதிரி வை. அந்தப் பொண்னு என்ன நினைப்பா?” என்றார்.

அதில் தன் அன்னையை முறைத்தவனுக்கோ, இன்னும் எரிச்சல் தான் வந்தது. இப்போது தன்னருகில் இப்போது வரை முகம் பார்க்காத தன் வருங்கால மனைவியின் மீதும் கோவம் வந்தது.

ஆம் கோவம் தான். அவனால் வீட்டில் பேச முடியவில்லை. ஒரு வேளை இவள் வேண்டாம் என்று சொல்லியிருக்கலாமே என்று யோசித்தான். ஏனோ அவன் மீது அவனுக்கு வராத கோவம். சம்பந்தமே இல்லாத அவளின் மீது ஏன்? அவனுக்கே தெரியவில்லை. ஆனால் அவள் மீதுத்தான் கோவம்.

“இங்கப்பாருடா. உனக்கு கல்யாணம் வேண்டாம்னா, அத நீத்தான் ஸ்ட்ராங்கா சொல்லிருக்கனும். உனக்குத்தான் இந்த கல்யாணத்துல இண்ட்ரஸ்ட் கிடையாது. அப்படி இருக்கிறப்ப, அந்த பொண்ணு எதுக்கு இந்த கல்யாணத்த நிறுத்தனும்?” என்று கோவமாய் 

அவன் மனசாட்சி கேட்டது.

“ச் எல்லாத்துக்கும் அந்த மாதவ் தான் காரணம். எல்லாம் அவனால வந்திச்சு” என்று தன் உயிர் நண்பனை திட்டு திட்டு என்று மனதிற்குள் திட்டினான். இப்போது மீண்டும் அவன் நினைவு கடந்தகாலத்துக்கு சென்றது.

(அட என்னப்பா? இன்னும் எத்தன பிளாஸ்பேக் தான் வச்சிருக்கான்னு தெரியலையே)

அர்ஜூன் ஒரு வித பதட்டத்துடன் தன்னுடைய தாத்தாவின் முன்னிலையில் நின்றிருந்தான். அவன் முகத்தை வைத்தே, அவனுக்கு ஏதோ பிரச்சனை என்பது அவருக்கு புரியத்தான் செய்தது. ஆனாலும் கூட அவர் அமர்ந்திருந்த ஈசி சேரில் அமர்ந்தப்படியே அவனைப் பார்த்தார்.

“அதான் இவ்ளோ தூரம் வந்துட்டத்தான அர்ஜூன். உனக்கு என்ன வேணும்னு சொல்லு” என்று அவர் சொல்ல, இவனுக்கோ கோவம் தான் வந்தது.

“ச் வேண்டாம அர்ஜூன். சும்மாவே இவருக்கும் நமக்கும் ஆகாது. பேசாம போயிடு. கண்டிப்பா இவரு உனக்கு ஹெல்ப் பண்ண மாட்டாரு” என்று அவனுடைய மனசாட்சி திட்டியது.

சட்டென்று மாதவனின் முகம் நினைவுக்கு வர, அதில், தாத்தாவைப் பார்த்தான். அவரோ, அதற்கும் அவனுக்கும் சம்பந்தமே இல்லாதது போல் பேப்பரைப் படித்து அவனை வெறுப்பேத்தினார்.

“ச் இவரு வேணும்னேத்தான் எல்லாம் பண்றாரு” என்று தனக்குள் முனுமுனுத்தவன், “தாத்தா நான் உங்க கிட்ட கொஞ்சம் பேசனும்” என்றான்.

அதில் அவரோ பேப்பரைப் படித்தப்படியே, “பரவாயில்லையேப்பா. உனக்கு இந்த தாத்தா கூட நின்னு பேசுறதுக்கெல்லாம் டைம் இருக்கா? என்ன?” என்று அவர் கிண்டலாய் கேட்டார்.

“இங்கப்பாருங்க. எனக்கு ஒழிஞ்சு மறைச்சு பேசி எல்லாம் பழக்கம் கிடையாது. எனக்கு இப்போ அர்ஜண்டா கொஞ்சம் பணம் தேவைப்படுது” என்றான்.

“அதுக்கு நான் என்னப் பண்ணனும்?” என்று அசட்டையாய் கேட்க, “நீங்க ஒன்னும் பண்ண வேண்டாம். எங்கம்மாவோட நகை எல்லாம் உங்க கிட்டத்தான இருக்கு. அத கொடுங்க. நான் ஒரு வருஷத்துல திருப்பி கொடுத்துடுறேன்” என்றான்.

“அதெல்லாம் உன் அம்மாவோட நகைங்க கிடையாது அர்ஜூன். என் தங்கச்சி நகைங்க” என்றார்.

அதில் அர்ஜூனுக்கோ இன்னும் இன்னும் கோவம் கூடியது. இருந்தும் அதை கட்டுப்படுத்தி “பட், அந்த நகைய அவங்க எங்கம்மாக்குத்தான கொடுத்தாங்க” என்று எரிச்சலாய் கேட்டான்.

“திருத்தம். அவ, அத உன் அம்மாவுக்கு கொடுக்கல. அவளோட மருமகளுக்கு கொடுத்தா” என்றார். அவருடைய இந்த எகத்தாளத்தில் இவனுக்கு இன்னும் இன்னும் கோவம் தான் கூடியது.

“ச் சரி. அப்படிப் பார்த்தா கூட, அது எங்கம்மாவோடதுத்தான” என்றான். “ஆமா” என்று அவர் சொல்ல, “அப்போ அத கொடுங்க” என்றான்.

“முடியாது” என்று அவர் சொல்லவும், இவனுக்கோ அத்தனைக் கோவம். பொதுவாகவே அவனுக்கு தன் சொந்தத்தில் தன்னுடைய அன்னையைத் தவிர வேறு யாரையும் பிடிக்காது. அதிலும் அவனின் தாத்தாவின் மீதெல்லாம் அவனுக்கு அப்படி ஒரு கோவம். அப்படி இருக்க, இப்போது இன்னும் எரிச்சல் தான் உண்டானது.

“என் பொண்னுக்கப்புறம் அந்த நகை, போக வேண்டியது, என் பேத்திக்குத்தானே தவிர, உனக்கு கிடையாது” என்றார். “பேத்தியா? அது யாரு புதுசா வந்தது” என்று எரிச்சலாய் கேட்டான்.

“இன்னும் வரல. ஆனா வரப் போறா. இந்த வீட்டோட சந்தோஷத்த திருப்பிக் கொடுக்கப் போறவ அவத்தான்” என்றார்.

இவனோ எரிச்சலாய், “என்ன சொல்லிட்டு இருக்கீங்க நீங்க? இத்தன வருஷம் இல்லாம, இப்போ உங்களுக்கு யாரு புது பேத்தி” என்று கோவமாய் கேட்டான்.

“ம் பாக்கத்தான போற” என்று அவர் சொல்ல, “ச் இப்போ என்ன சொல்ல வறீங்க. அந்த நகைய கொடுக்க முடியாதுன்னு சொல்றீங்க அப்படித்தான” என்றான்.

“உனக்கு நகையத்தான் கொடுக்க முடியாதுன்னு சொன்னேன். ஆனா கண்டிப்பா நீ கேட்கிற பணத்த என்னால கொடுக்க முடியும்” என்றார் அவர்.

அதில் அவனோ ஒரு நொடி குழப்பமாய் அவரைப் பார்த்தான். அவனால் நம்ப முடியவில்லை. “நீங்க எனக்கு பணம் கொடுக்கிறீங்களா?” என்றான்.

“ஆமப்பா. ஏன் நான் சொன்னது உனக்கு கேட்கலையா?” என்றார். “நீங்க சும்மாலாம் எனக்கு ஹெல்ப் பண்ண மாட்டீங்களே” என்று சரியாய் கணித்துக் கேட்டான் அர்ஜூன்.

அதில் மீசையை நீவியவரோ, “ம் என் பேரன் இல்லையா? அதான் என்ன மாதிரியே ஷார்ப்பா இருக்க” என்றார்.

“ச் என்னென்னு நேரா சொல்லுங்க” என்று அவன் சொல்ல, “நான் நீ கேட்கிற பணத்த கொடுக்கனும்னா, நீ என் பேத்திய கல்யாணம் பண்ணிக்கனும்” என்றார் அவர். அதைக் கேட்டவனுக்கோ அத்தனைக் கோவம்.

“என்ன நினைச்சீங்க நீங்க? பணத்துக்காக நீங்க சொல்றத எல்லாம் கேட்பேன்னா? அப்படி ஒரு பணம் எனக்கு தேவையே கிடையாது. இந்த செகண்ட்ல இருந்து உங்களுக்கு அர்ஜூன்ற பேரன் இல்லவே இல்லன்னு நினைச்சிக்கோங்க” என்று கோவமாய் சொல்லிவிட்டு சென்ற அதே அர்ஜூன் தான். அங்கே மண மேடையில் அமர்ந்திருந்தான்.

இப்படி அன்று நடந்த சூடான வாக்குவாதத்தில் மூழ்கியிருந்தவனை, “திருமாங்கல்யத்தை எடுத்துட்டு போயி எல்லார்கிட்டையும் ஆசிர்வாதம் வாங்கிட்டு வாங்கோ” என்ற ஐயரின் குரல் அவனைக் கலைத்தது.

அதில் இப்போது அவனுடைய பார்வை மேடையை விட்டு கீழே, வந்தவர்களை எல்லாம், புன்னகையுடன் வரவேற்றுக் கொண்டிருந்த, அவனுடைய தாத்தாவின் மீது பதிந்தது. அவன் கண்ணில் அப்படி ஒரு கோவம். அது தெரிந்ததாலையே, அவனின் தாத்தா, அவனின் பக்கம் திரும்பவே இல்லை. அவர் முழுக்க முழுக்க, தன் பேரனுக்கு மனைவியாக வரப் போகும், தன் பேத்தியைத்தான் ஆசையாக பார்த்துக் கொண்டிருந்தார். அது அவனுக்கு இன்னும் எரிச்சலைக் கூட்டியது.

“எல்லாம் இவராலத்தான். இப்போ நான் இங்க இருக்கேன். எனக்கு வர்ற கடுப்புக்கு, இப்பவே இது எல்லாத்தையும் கழட்டி தூக்கி வீசிட்டு போயிடலாம் போல இருக்கு” என்று தனக்கு சிடுசிடுத்தான்.

சரியாக அன்னேரம் அங்கே அவனின் அருகில் இருந்தவள், எதார்த்தமாய் அவனின் பக்கம் நெருங்கி அமர, அவளுடைய கரம் அவனுடைய கரத்தில் மெலிதாய் உரசியது. அதில் பட்டென்று அவன் திரும்பினான். அப்போதே அவளின் அருகில் அத்தனை நெருக்கத்தில் அமர்ந்திருப்பதே புரிந்தது. அப்போதும் அவள் முகத்தை அவன் பார்க்கவில்லை. அத்தனை எரிச்சல். இப்போது ஐயர் வேறு “பொண்ணுக்கிட்ட இந்த பூவ கொடுங்க” என்றார்.

அதில் வேண்டா வெறுப்பாய் அவளிடம் நீட்ட, அவளோ, அவன் உள்ளங்கையை தன் விரல் உரசும்படி, மெதுவாய் அதை வாங்கினாள். அது அவனுக்குள் ஒரு மெல்லிய மின்சாரத்தை பாய்த்ததோ? என்னவோ வேகமாய் அவளை விட்டு விலகி அமர்ந்தான் அர்ஜூன்.

அவனின் செயலில், தேவிகாயின் முகம் சுணங்கியது. உடனே தன் மருமகளைப் பார்த்தார். ஆனால் அவளோ எந்த சலனமும் இல்லாமல் அமைதியாகத்தான் அமர்ந்திருந்தாள்.

இப்போது இல்லை, நேற்று நிச்சயதார்த்தம் அப்போதும் கூட, அவன் மோதிரம் போட்டு விட அத்தனை தயங்க, அவள் குடும்பத்தில் அவளைத் தவிர மீதி அத்தனைப் பேருமே, கலவரமாகினர். ஆனால் அவளோ, சிறிதாய் கூட கலங்காது வெகு அமைதியாய் தான் இருந்தாள்.

(நம்ம கதையில ஹீரோயின் எல்லாம் இம்புட்டு அமைதியா இருக்க வாய்ப்பு இல்லையே. இந்தப்புள்ள அமைதிக்கு பின்னாடி வேற எதுவும் இருக்குமோ? சரி அது என்னென்னு எப்படியும் தெரிஞ்சுத்தான ஆகும். பாப்போம். அதுக்கு முன்னாடி கத எப்படி இருக்குன்னு மறக்காம லைக் பண்ணிட்டு, உங்களோட கருத்தையும் கமெண்ட்ல சொல்லுங்க. அப்புறம் மறக்காம ரிஜிஸ்டர் பண்ணிக்கோங்க. அப்படியே ரேட்டிங்-ம் கொடுத்திடுங்க. பெஸ்ட் கமெண்ட்ஸ, பேனர்ல போஸ்ட் பண்ணுவேன். இப்பவே சைட்ட உங்க ஹோம் ஸ்கீர்ன்ல ஆட் பண்ணிக்கோங்க. அப்படிப் பண்ணா, ஆப் மாதிரி நீங்க டைரக்டா யூஸ் பண்ணலாம். அது எப்படின்னு சீக்கிரமே ஒரு வீடியோ போஸ்ட் பண்றேன்.)

தொடரும்…

Comments   11

*** வரம் – 2 - படைப்பை ரேட் செய்யுங்கள் ***