தேன் – 4

கோவமாய் தன்னுடைய அறைக்கு சென்ற வேந்தன், அப்படியே சில நொடிகள் அங்கேயே தேங்கி நின்று விட்டான். அவனுக்குள் விரவியிருந்த கோவம் எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாய் விலக, அங்கே அவனின் மனைவி படுத்திருந்த அழகைத்தான் பார்த்தான்.

அழகா? அவளே, வேடன் கையில் அகப்படக் கூடாது என்று சிங்கத்தின் குகையில் மாட்டிக் கொண்ட அகதியாய், கால்லை கட்டிக் கொண்டு, சோபாவில் ஒன்றி படுத்திருந்தாள். ஆனால் ஏனோ, இதுவரை தன்னுடைய அறையில் ஒரு பெண்ணை கண்டிதாதவன், இப்போது அந்த நிகழ்வை சில நொடிகள் நின்று ரசித்தான்.

சில நொடிகள் தான். அடுத்த நொடியே, அவளுக்காய் கொண்டு வந்து வைத்திருந்த சாப்பாட்டின் மீது பட, அவனுடைய கோவம் மீண்டும் சரசரவென்று கூடியது. அதில், “இவளுக்கு ஒரு தடவ சொன்னா புரியாதா?” என்று யோசித்தவன், “ஹேய்” என்று கத்தினான். அவனின் குரலில், அறை தூக்கத்தில் இருந்த கவி அடித்துப் பிடித்து பயந்து எழுந்தாள். எழுந்தவளின் முன்னே அவன் நிற்க, ஒரு நொடி அவளுக்கு பயத்தில் இதயம் துடிப்பை மறந்தது.

எதுவுமே தெரியாத மழலையாய் அவள் மழுங்க மழுங்க விழிக்க, அதில் தன் கோவத்தை இழுத்துப் பிடித்தான். ஆனாலும் கூட அவனுடைய கண்களில் சிவப்பேறியிருக்க, அவளோ சோபாவில் மேலும் ஒன்றினாள்.

“உனக்கு சாப்பாடு ஊட்டி விட ஒருத்தர அப்பாயிண்ட் பண்ணனுமா?” என்று அவன் பல்லைக் கடிக்க, ஒரு நொடி அவளுக்கு அவன் என்ன பேசுகின்றான் என்றே புரியவில்லை. மனம் ஒரு நிலையில் இருந்தால் தானே, எதிரில் நிற்பவன் என்ன பேசுகிறான்? என்று தெரியும். இப்போதும் ஏதோ புரியாத மொழியில் சப்டைட்டில் இல்லாமல் படம் பார்த்தது போல் விழித்தாள்.

அதில் மூச்சை உள்ளிழுத்து, அதை வெளியிட்டு தன் இறுக்கத்தை குறைத்தவன், அவளை நோக்கி அடி எடுத்து வைத்தான். அதில் அவளோ மேலும் பயந்து நடுங்க, அவன் கண்டுக் கொண்டதாக தெரியவில்லை. அவள் அமர்ந்திருந்த சோபாவில் சென்று அமர்ந்தவன், “உன் பேரு என்ன?” என்றான்.

அவனின் கேள்வியில் அவளுக்கோ அடுத்த அதிர்ச்சி. பேர் கூட தெரியாத பெண்ணின் கழுத்திலா தாலியை கட்டி அழைத்து வந்தான்? அவளின் பார்வை அவனை வேலியாய் சுற்றி வளைத்தது.

அவள் பார்வையின் அர்த்தம் புரிந்தாலும், “ச் உன்கிட்டத்தான கேட்கிறேன். உன் பேர் என்ன?” என்று இன்னும் கோவமாய் கேட்டான். அதில் பதறிப் போய், “கவி.. தேன் கவி” என்று திக்கி பதிலளித்தாள்.

“ம் என் பேர் என்னென்னு தெரியுமா?” என்று அவன் அடுத்த கேள்வியைக் கேட்க, அவளோ இப்போது அவனை இன்னும் புரியாது பார்த்தாள். உடனே அவனோ, “நான் கேட்கிற கேள்விக்கு ஆன்சர் பண்ணிப் பழகு. ஒரே கேள்விய திரும்ப திரும்ப கேட்கிறது எனக்கு பிடிக்காது” என்றான்.

அவளோ அவனை இப்போது முறைக்க முயன்று தோற்றாள். அதைக் கண்டுக் கொள்ளாதவன் போல், “காலையில சொன்னது தான். இனிமே உனக்கு பிடிச்சாலும், பிடிக்கலன்னாலும் நீ இங்கத்தான் இருக்கப் போற. சோ ஒவ்வொரு தடவையும் ஒருத்தர் வந்து, நீ சாப்டீயா? இல்லையான்னு பார்த்துட்டே இருக்க முடியாது. சோ உனக்கு என்ன தேவையோ? அத நீ தான் பார்த்துக்கிடனும். உனக்கு பிடிச்சத கேட்டு சாப்பிடு. இல்லையா, செஞ்சு சாப்பிடு. அதுவும் இல்லையா, அவங்க கொடுக்கிறதையாச்சும் சாப்பிடனும். இன்னொரு தடவ நீ மயங்கி விழுந்தா, ஹாஸ்பிடலுக்குலாம் தூக்கிட்டு போயிட்டு இருக்க மாட்டேன். எனக்கு தெரிஞ்ச வழியில மயக்கத்துல இருந்து உன்ன எழுப்புவேன். அதுவும் இல்லையா? நீ மயக்கத்துலையே இரு. எனக்கும் அது பல வகையில வசதித்தான்” என்றான்.

அவன் சொல்வதன் பின்னால் இருக்கும் வழிமுறை முழுதாய் அவளுக்கு புரியவில்லை என்றாலும் கூட, நிச்சயமாய் அது வில்லங்கமாய் தான் இருக்கும் என்று அவளுக்கு புரிந்தது.

அதில் இப்போது அவள் கண்கள் கோவத்தில் சிவக்க முயற்சிக்க, அவனோ அதைக் கண்டுக் கொள்ளாது, “நெக்ஸ்ட் ரொம்ப முக்கியமான விஷயம். என் வீட்டுல இருக்கிறவங்க கிட்ட நான் சொன்னது கேட்டிச்சித்தான? இதுக்கப்புறம் நீத்தான் என்ன பாத்துக்கிடனும்” என்றான்.

“என்ன?” என்று அவள் இப்போது அதிர்ந்து எழுந்தே விட்டாள். பின்னே அவள் இப்போதிருக்கும் நிலைமையில் அவளைப் பார்க்கவே ஆள் வேண்டும். இதில், இவனை அவள் பார்த்துக் கொள்வதா?

“ச் இன்னும் நான் பேசி முடிக்கல. உட்காரு” என்று கண் காமிக்க, அதில் எச்சிலை கூட்டி விழுங்கியப்படி அப்படியே சோபாவின் முனையை இறுக்கிப் பிடித்தப்படி அமர்ந்தாள்.

அவள் அமர்ந்ததும், “உனக்கு ஒரு நாள் டைம் தரேன். இந்த வீட்டுல எது, எது எங்க இருக்குன்னு எல்லாத்தையும் தெரிஞ்சிக்கனும். முக்கியமா, எனக்கு எது தேவை? எது பிடிக்கும்? பிடிக்காதுன்னு அத்தனையும் உனக்கு தெரிஞ்சாகனும். உன்ன ஒன்னும் சும்மா இங்க கூட்டிட்டு வரல. உனக்கும் சும்மா இருக்கிறது பிடிக்காதுத்தான. சோ நான் கொடுத்த வேலைய சரியா பார்க்கனும். அத விட்டுட்டு முடிஞ்சத நினைச்சி அழுதோ? இல்ல இங்க இருந்து எப்படி தப்பிக்கலாம்னு யோசிச்சோ. இல்ல, இப்படி சாப்பிடாம அடம்பிடிச்சிட்டோ இருந்த, இந்த வேந்தனோட இன்னொரு முகத்த பாக்க வேண்டி வரும்” என்று கூறினான்.

இப்போது அவளோ அவனை அதிர்ச்சியாய் பார்த்தாள். அவளின் சம்மதமின்றி தாலி கட்டி அழைத்து வந்து விட்டு, அவன் என்னவோ அவளுக்கு வேலை கொடுத்தது போல் பேசிக் கொண்டிருந்தான்.

அவள் அவனைப் பார்த்துக் கொண்டிருக்கும் போதே, “ஆமா உன் பேரு என்ன சொன்ன?” என்று மீண்டும் நெற்றியை நீவியப்படி அவளைப் பார்த்தான். அதில் இவளுக்கோ பற்றிக் கொண்டு வந்தது. “பேர் கூட தெரியாமத்தான், என் சம்மதமில்லாமலே என் கழுத்துல இத கட்டுனீங்களா?” என்று கேட்டாள்.

“இத உன் கழுத்துல கட்டுறதுக்கு, உன் பேர் தெரிய வேண்டிய அவசியம் கிடையாது. நெக்ஸ்ட். உன் சம்மதம் இல்ல? இந்த வேந்தன் நினைச்சத செய்றதுக்கு யாரோட சம்மதமும் தேவை கிடையாது” என்று அசராமல் தோளைக் குலுக்கினான்.

அவனுடைய அந்த அலட்சியத்தில் இங்கே தேன்கவிக்கோ அத்தனைக் கோவம். “எதுக்கு என் கழுத்துல தாலி கட்டுனீங்க?” என்று ஆதங்கமாய் கேட்டாள். கேட்கும் போதே அவள் கண்களில் இருந்து கண்ணீர் கொட்டியது.

அவனோ அதை சற்றும் பொருட்படுத்தாது. “நான் ஏற்கனவே அதெல்லாம் எதுக்கு? நீ ஏன் இங்க இருக்க? அத்தனைக்குமான பதில சொல்லிட்டேன். இப்போதைக்கு உனக்கு நான் கொடுத்திருக்கிற வேலை. என்னைப் பாத்துக்கிடுறது. அவ்வளவுத்தான்” என்றான்.

அவனின் வார்த்தை அவளை இன்னும் இன்னும் சோர்வாக்க, “ப்ளீஸ் என்னை விட்டுடுங்க. நான் எங்கேயாச்சும் போயிடுறேன்” என்று கையெடுத்து கும்பிட்டாள். அவ்வளவுத்தான் அவனுடைய இளக்கம் மொத்தமாய் அவனை விட்டு சென்றிருக்க, அவள் கழுத்தைப் பிடித்திருந்தான். அதில் அவள் அதிர்ந்து விழிக்க, “உன்னால என்ன விட்டு எங்கேயும் போக முடியாது. அப்படி நீ போகனும்னா, அதுக்கு முன்னாடி, என் உயிர் என்னை விட்டு போயிருக்கனும். சோ இன்னொரு தடவ உன் வாயில இருந்து இப்படி ஒரு வார்த்த வந்திச்சு. அதுக்கப்புறம் நான் என்னப் பண்ணுவேன்னே தெரியாது” என்று அத்தனைக் கோவமாய் கத்தினான்.

அவனின் கத்தலில், இங்கே இவள் உடலிலோ அப்படி ஒரு அதிர்வு. அவள் பார்த்த வேந்தன் இவன் கிடையாது. அவனுக்கு அதிர்ந்து கூட பேச தெரியாது. இப்போது இவளின் முன்னே நிற்பவன் ஏதோ அரக்கனைப் போல் இருந்தான். அவனின் முன்னே அமர்ந்து மூச்சு விடக் கூட இவளால் முடியவில்லை.

அவள் அவனை வெறித்துப் பார்க்க, அவனோ சலனமே இல்லாமல், அங்கே வைக்கப்பட்டிருந்த உணவை எடுத்துக் கொண்டு அறையை விட்டு வெளியில் சென்றவன், அடுத்த சில நிமிடங்களில், வேறு உணவை எடுத்துக் கொண்டு அவளிடம் வந்தமர்ந்தான்.

அதில் அவளோ அவனை மிரட்சியாய் பார்க்க, “சாப்பிடு” என்றப்படி அவளிடம் அந்த தட்டை நீட்ட, அவன் குரலில் தெரிந்த அந்த அதிகார சாயலில், தன்னை மீறி அதை வாங்கி சாப்பிட ஆரம்பித்தாள். அவள் சாப்பிடும் வரை அமைதியாய் அமர்ந்து அவளைப் பார்த்தான்.

அவளோ பயந்து பதட்டத்தில் உணவை விழுங்கினாள். ஆனாலும் முழுதாய் நான்கு நாட்களுக்குப் பின் உணவை விழுங்கியிருக்க, அவளுக்கு விக்கியது.

அதில் அவனே அருகில் இருந்த தண்ணீர் டம்ளரை எடுத்து அவளுக்கு புகட்டினான். பின் அவள் சாப்பிட்டு முடிக்கவும், அவளிடம் இருந்து தட்டை வாங்கி ஓரமாய் வைத்தவன், “போயி ரிபிரஸ் ஆயிட்டு வந்து தூங்கு” என்றான்.

அவளோ, அவன் சொல்லியதை அப்படியே செய்துவிட்டு அங்கு வர, இப்போது சோபாவில் அவன் படுத்திருந்தான். அதில் அவளோ இப்போது தான் எங்கே படுப்பது? என்று புரியாது நிற்க, அவனோ கண்ணைத் திறக்காது, “போயி படு” என்று கட்டிலைக் காட்டினான்.

அவளுக்கோ அத்தனைப் பெரும் தயக்கம். அதைத் தாண்டி ஒரு வித பயம். நடுக்கம். அவனுடன் ஒரு அறையில் இருப்பதால் வந்த தயக்கமா அது? நிச்சயம் இல்லை. அதைத் தாண்டிய ஒரு பயம். வலி. மெத்தையில் அவள் படுத்து முழுதாய் ஒரு வருடமாகியிருக்கும். ஏனோ அதைப் பார்க்கும் போதே உடல் வலித்தது. அதில் இருந்த காயங்கள் நெருஞ்சி முள்ளாய் அவளை குத்தியது.

அவள் இன்னும் அப்படியே நின்றிருக்க, “உன்னத்தான் படுக்க சொன்னேன்” என்று கத்தினான்.

அதில் அடித்துப் பிடித்து அவள் சென்று கட்டிலில் படுத்து விட, இவனோ அதன் பின்னே அமைதியாய் திரும்பி படுத்தான்.

மெத்தையில் படுத்து விட்டாள் தான். ஆனால் உறக்கம் தான் வர மறுத்தது. இங்கு அவள் என்ன செய்துக் கொண்டிருக்கிறாள்? நிச்சயம் அந்த கேள்விக்கான பதில் இல்லை. முதல் திருமண முடிவே அத்தனை வலியைக் கொடுத்திருக்க, இப்போது இவள் கழுத்தில் தொங்கிக் கொண்டிருக்கும் தாலியைப் பார்க்க பார்க்க பயம் மட்டுமே அவளுக்கு மிச்சமிருந்தது.

அவளிடம் இருந்து அத்தனையையும் பறித்துக் கொண்ட அந்த கடவுள், அந்த அழகை மட்டும் ஏன் கொட்டிக் கொடுத்தான்? என்று அவள் நினைத்து அழாத நாளே கிடையாது. அவளைப் பாதுகாத்துக் கொள்ள, இன்னும் எத்தனை இரவுகள் உறக்கமின்றி கழிக்க வேண்டும்? இல்லை இதற்கு மேல் பாதுகாக்க, அவளிடம் மிச்சம் என்ன இருக்கிறது? என்ற எந்த கேள்விக்கும் அவளிடம் பதில் இல்லை. ஏதேதோ யோசித்து, பின் அவளையும் மீறி உறக்கம் வந்திருக்க, நீண்ட நாட்களுக்குப் பின் பசியில்லா உறக்கம் அவளை வரவேற்றிருந்தது. அதையும் தாண்டி, அவளின் பயத்துக்கான அவசியம் இல்லாது அவளுக்கென்றே ஒரு ஜீவன் அவளுக்காக இருந்தது. அதை அவள் உணரவில்லை. ஆனால் சோபாவில் பெயருக்கு கண் மூடி கிடந்தவன் உணர்ந்திருந்தான்.

மெல்ல கண் திறந்து அவளைப் பார்க்க, அவளோ ஏசியின் குளிர் தாங்காது கை, கால்களை குறுக்கிப் படுத்திருந்தாள். அதில் முதலில் ஏசியின் அளவை குறைக்க நினைத்தவன், பின், “இல்ல அவ இதுக்குத்தான் இனி பழகிக்கனும்” என்று அழுத்தி சொல்லிவிட்டு அங்கிருந்த பெட்ஷீட்டை எடுத்து அவளுக்கு போர்த்திவிட்டான்.

இனியும் அவளை அவளின் விருப்பத்துக்கு அவன் இருக்க விடப் போவதில்லை. அவளை மொத்தமாய் மாற்ற முடிவெடுத்திருந்தான். ஆனால் இதை எல்லாம் இவன் ஏன் செய்கிறான்? என்ற கேள்விக்கான பதில் அவனிடமாவது இருந்தால் மகிழ்ச்சியே. ஆனால் அவன் அதை எல்லாம் யோசிக்கவில்லை.

அப்படி அவள் பற்றிய சிந்தனையிலேயே மூழ்கியவனும் கூட ஒரு கட்டத்தில் உறங்கியிருந்தான். அடுத்த நாள் காலை அவள் கண் விழிக்கும் போது, அவன் இல்லை. ஆனால் அவளுக்கு தேவையான அத்தனைப் பொருட்களும் அங்கு இருந்தது.

வேலைக்கார பெண் வந்து, “இதெல்லாம் உங்க கபோர்ட்ல எடுத்து வைக்க சொன்னாங்கம்மா” என்றப்படி அதை அடுக்கி வைக்க வந்தாள். ஆனால் அவளோ அதை தடுத்து, “இல்ல நான் பார்த்துக்கிடுறேன்” என்று சொல்லி அந்தப் பெண்ணை அனுப்பியிருந்தாள் தேன்கவி.

(வேந்தனின் மனதில் என்ன இருக்கிறது? இந்த வாழ்க்கையை கவி எப்படி ஏற்றுக் கொள்ளப் போகிறாள்? அப்படின்னு எல்லாத்தையும் அடுத்தடுத்த எபிசோட்ல பாக்கலாம். அதுக்கு முன்னாடி இன்னிக்கு எபிசோட்ல உங்களுக்கு பிடிச்ச சீன் எதுன்னு மறக்காம கமெண்ட்ல சொல்லுங்க. அப்படியே எப்பவும் போல லைக் பண்ணிட்டு உங்க பிரண்ட்ஸ் கூட ஷேர் பண்ணுங்க)

தித்திக்குமா?..

Comments   2

*** தேன் – 4 - படைப்பை ரேட் செய்யுங்கள் ***