இரு வார தூக்கத்தையும் தூங்கி முடித்து வேந்தன் மெதுவாய் எழ, ஏனோ கவியின் வாசனை அந்த அறை எங்கிலும் இருப்பது போல் தோன்றியது. அதோடு சேர்த்து அவள் பேசிய வார்த்தைகள் எல்லாம் நினைவுக்கு வர, அவனுடைய உடல் இறுகியது. அதில் தன் உடையை எடுக்க கபோர்டைத் திறக்க, அங்கேயும் கவிக்கென்று வாங்கி வந்திருந்த புடவை அவளை மட்டுமே நினைவுப்படுத்த, ஒரு வித எரிச்சலுடன் துண்டை எடுத்துக் கொண்டு குளியலறைக்குள் சென்றான்.
இங்கே விழியோ கவியிடம், “ஹேய் உனக்கு பசிக்குதோ? இல்லையா? எனக்கு பயங்கரமா பசிக்குது. போ போய் அண்ணாவையும் கூட்டிட்டு வா. நம்ம மூனு பேரும் சேர்ந்து சாப்டு எவ்வளவு நாள் ஆச்சு?” என்றாள்.
“நானா?” என்று கவி கேட்க, “அப்புறம் என்ன நானா? இப்போ நீத்தான என் அண்ணா ஒயிப். அப்போ நீத்தான் அவரைப் போயி கூப்பிடனும். வேணும்னா இங்க இருந்தே கூட கூப்டு” என்றாள்.
“என்ன?” என்றவளுக்கு இது நாள் வரை அவனை என்ன சொல்லி அழைத்தோம்? என்பதே நினைவில் இல்லை. இப்போது அவள் சொல்லவும் பேந்த பேந்த விழித்தாள்.
“அண்ணா பேர் சொல்லி கூப்பிட வேண்டாம். செல்லம்மா, அத்தான், மாமா இப்படி ஏதாச்சும் சொல்லி கூப்டேன்” என்று விழி சீண்ட, இப்போது தன் தோழியை முறைத்தாள்.
“என்னம்மா கூப்டீங்களா?” என்று செல்லம்மா அங்கு வர, அதைப் பார்த்து சிரித்த விழியோ, “என்ன கவி, உன்னை செல்லம்மா, அண்ணன்ன கூப்ட சொன்னா, உண்மையாவே செல்லம்மா வந்து நிக்கிறாங்க?” என்று சொல்லி சிரிக்க, அவரோ புரியாது இருவரையும் பார்த்தார்.
அதில் கவித்தான், “நீங்க போங்கம்மா. இவ இப்படித்தான் ஏதாச்சும் சொல்லுவா” என்று விழியைப் பார்த்து சொல்ல, “ஆமா ஆமா. நீங்க வீட்டுக்கு கிளம்புங்க. அதான் எங்க அண்ணி இருக்காங்களே. அவங்க எல்லாத்தையும் பார்த்துப்பாங்க” என்றாள் விழி.
அதைக் கேட்டு கவி மட்டும் அல்லாது செல்லம்மாவும் சேர்ந்தே அதிர்ச்சியாய் பார்க்க, அவளுக்கோ தன் தோழியிடம் என்ன சொல்ல என்று புரியாத நிலை.
ஆனால் விழியோ யாரையும், பேசவோ, யோசிக்கவோ அனுமதிக்கவில்லை. “ச் நீ போய் முதல்ல அண்ணாவ கூப்டு வா. எனக்கு ரொம்ப பசிக்குது” என்றவள் கவியைப் பிடித்து மேலே தள்ள, “ஏன் நீயே கூப்ட வேண்டியதுத்தான?” என்றாள்.
“ம் அதெல்லாம் நீ கூப்பிடுற மாதிரி வருமா? அதுவும் போக என்னத்தான் நீ என் பிரண்ட், அவரு என் அண்ணாவா இருந்தாலும், இப்போ உனக்குத்தான் என் அண்ணா மேல புல் ரைட்ஸ் இருக்கு. சோ நீத்தான் போகனும். போ” என்று பிடித்து அவளைத் தள்ளினாள்.
அதில் கவியோ, “ச் ஏன் விழி இம்சைப் பண்ற?” என்று பாவமாய் கேட்க, “எதே இம்சையா? இந்த உலகத்துல என்னை மாதிரி நாத்தி கிடைக்கிறதுக்கு நீ கொடுத்து வச்சிருக்கனும். பாரு உனக்காக, நான் என் அண்ணாவையே விட்டுக் கொடுத்திருக்கேன்” என்று விளையாட்டாய் அவள் சொல்ல, கவியின் மனமோ, “உண்மைத்தான் விழி. நீ எனக்காக, உங்க அண்ணன் வாழ்க்கையையும் சேர்த்து விட்டுக் கொடுத்துட்ட” என்று தனக்குள்ளே சொல்லியது.
அவள் இன்னுமே நகராமல் இருக்க, “ம்ஹூம் இது ஆகுறது இல்ல” என்றவள், செல்லம்மாவிடம் சாப்பாடை எடுக்க சொல்லிவிட்டு, கவியை இழுத்துக் கொண்டு மேலே தன் அண்ணன் அறை முன் வந்து நின்றாள்.
கவியோ விழியைப் பார்க்க, ஆனால் விழியோ அதற்கு முன்பே கவியை உள்ளே தள்ளி வெளியில் பூட்டியிருந்தாள். “ஹேய் என்னப் பண்ற விழி?” என்று கவி கேட்கும் முன்னே, “ஒழுங்கா அண்ணன்ன கூப்டு, கதவ எப்படி திறக்கிறதுன்னு கேட்டுட்டு, ரெண்டு பேரும் சேர்ந்து வெளிய வாங்க” என்று அசராது சொல்லிவிட்டு அங்கிருந்து சென்றிருந்தாள்.
அவளின் செயலில், “என்ன இவ இப்படி சொல்லிட்டுப் போறா” என்றவள் திரும்ப, அங்கே இவளை அந்த அறையில் எதிர்பார்க்காதவன், குளித்து முடித்து வெறும் துண்டை மட்டும் கட்டிக் கொண்டு வந்தான்.
அவனைப் பார்த்ததும், “ஐயோ” என்று அவள் வேகமாய் திரும்பி நிற்க, அவளின் சத்தத்திலேயே நிமிர்ந்துப் பார்த்த அவனுக்குமே அது அதிர்ச்சித்தான். அவனுமே அவளை அங்கே எதிர்பார்த்திருக்கவில்லை.
“இங்க என்னப் பண்ற?” என்று அவன் சாதாரணமாய் கேட்க, இங்கே இவளோ, “இல்ல விழித்தான் உள்ள தள்ளி கதவ சாத்திட்டா” என்று அவனைப் பார்க்காது படபடப்பாய் அவள் சொல்ல, தன் தங்கையைப் பற்றி தெரியும் என்பதால், எதுவும் சொல்லவில்லை.
மெதுவாய் அவளை நோக்கி அவன் வர, இங்கே அவனுடைய ஒவ்வொரு காலடியிலும் இன்னும் இன்னும் என்று, அந்த கதவிற்குள் புகுந்தாள். ஆனால் குறிப்பிட்ட ஒரு எல்லை வரை வந்து நின்றவன், “கொஞ்சம் தள்ளிக்கிறீயா? நான் கதவ திறக்குறேன். இல்லையா? இப்படியே நில்லு. நான் ட்ரஸ் மாத்திட்டு வரேன்” என்று விலக சென்றான்.
அவனின் செயலில், “ஐயோ இல்ல. இல்ல. நீங்க திறங்க” என்றவள் திரும்ப, நிச்சயமாய் அவளுக்கும், அவனுக்கும் இடையில் ஒரு அடி இடைவெளியாவது இருக்கும். அதில் அவள் மனம் எதையோ நினைத்து, பின் அவனுக்கு வழி விட்டு விலகி நின்றாள்.
ஆனாலும் அவனுடைய வெற்று தேகத்தின் மீது அவள் விழிகள் சில நொடிகள் என்றாலும், சற்று ஆழமாகவே பதிந்து மீண்டது. அதிலும் அவன் தேக முடிகளில் நீர் துளிகள், அங்கொன்றும் இங்கொன்றுமாய் திரண்டு நிற்க, அதுவே அவனுக்கு இன்னும் அழகை கூட்டியது. அவன் அழகன் தான். முன்பே மாநிறத்தை விட சற்று கூடுதல் நிறம் தான். இப்போது எம் எல் ஏ என்ற பதவியும், அவன் கழுத்தில் எப்போதுமே கிடக்கும் அந்த முறுக்கு செயினும், அவன் கம்பீரத்தை காட்டுவது போல் அடர்ந்த மீசை. நான்கு நாள் சவரம் செய்யாத தாடி. உடற்பயிற்சி செய்யாமலே, உடலை அத்தனை கச்சிதமாய் வைத்திருந்தான். ஈரத்தில் நனந்திருந்த சிகை, அவன் முன் நெற்றியிலும் வந்து விழுந்திருக்க, அதை ஒரு கரத்தால் கோதியப்படி, அந்த கதவை திறக்க முயற்சித்துக் கொண்டிருந்தான்.
அதில் அவனுடைய புஜங்கள் எல்லாம் இறுகி, அங்கிருந்த நீர்த்துளிகள், அங்கிருந்து வெள்ளி நீரோடையாய் வேறொரு இடம் நோக்கி செல்ல, ஏனோ அந்த நீர்த்துளிகளுக்குள் தன்னையும் புகுத்திக் கொள்ள சொல்லி, மனம் பேராவல் கொள்ள, அவள் திடுக்கிட்டு அவனைப் பார்க்காது திரும்பினாள்.
அவளுடைய இதயம் அத்தனைப் பலமாய் துடித்துக் கொண்டிருந்தது. அவளுக்கே நம்ப முடியவில்லை. அவனை இப்படி நின்று கண் கொட்டாமல் ரசிப்பாள் என்று யோசிக்கவே இல்லை. இதென்ன புது உணர்வு? என்ற அவளின் கேள்விக்கு, “புது உணர்வுத்தானா?” என்று அவள் மனசாட்சி கேலியும், கிண்டலுமாய் கேட்டது.
இப்படி அவள் அவளுடைய உலகத்தில் இருக்க, வேந்தனோ, “வெளிய புல்லாவே லாக் பண்ணிட்டான்னு நினைக்கிறேன். ஸ்பேர் கீ, என் ஆபிஸ் ரூம்லத்தான் இருக்கு. நீ இங்கேயே இரு. நான் ட்ரஸ் சேஞ் பண்ணிட்டு வரேன்” என்றவன் தெரியாமல் கூட அவளை உரசாது, அத்தனை கவனமாய் நடக்க, இவளின் மனமோ இன்னும் இன்னும் அவனின் பின்னேத்தான் சென்று நின்றது. அவனோ அவளைப் பார்க்காமலே, தன் உடையை எடுத்துக் கொண்டு அங்கிருந்த உடை மாற்றும் அறைக்குள் நுழைந்திருந்தான்.
ஏனோ அந்த நொடி, அவனுடைய விலகல், அவளுக்கு நிச்சயமாய் பிடிக்கவில்லை. அதிலும் அவன் தேகத்தில் இருந்து வந்த அந்த வாசனை, அவளை மெய் மறக்க வைத்து ஏதோ ஒரு மயக்கத்தில் ஆழ்த்தியது. அதில் இருந்து வெளியே வரவே முடியாத அளவுக்கு, அந்த அறை எங்கிலும் அவனின் வாசம் மட்டுமே பரவிக் கிடப்பது போல் ஒரு மாயை.
“கவி என்னப் பண்ணிட்டிருக்க நீ? அவர்கிட்ட நீ பேசுனது எல்லாத்தையும் மறந்துட்டீயா?” என்று மனசாட்சி நினைவுப்படுத்த சட்டென்று அந்த மாய உலகில் இருந்து வெளியில் வந்து, தன்னைத் தானே நினைத்து வெட்கப்பட்டு, கண் கலங்கி தலைக் குனிந்தாள்.
இது ஒன்றும் தவறு இல்லை. கணவனின் மீது இயல்பாய் மனைவிக்கு வரும் ஈர்ப்பு என்பதை அவளுக்கு யார்த்தான் சொல்லி புரிய வைக்கப் போகிறார்களோ? ஆனால் அவளுக்குத்தான், என்னமோ மிகப்பெரிய தவறை செய்து விட்டது போல், அங்கிருந்த சோபாவில் தலையைப் பிடித்தப்படி அமர்ந்து விட்டாள்.
உடை மாற்றி வந்தவன் ஒரு நொடி, அவள் அமர்ந்திருக்கும் கோலத்தைப் பார்த்து, “என்னாச்சு? கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி கூட நல்லாத்தான இருந்தா?” என்று யோசித்தப்படியே, தன் மொபைலை எடுத்து விழிக்கு கால் செய்து அறையை திறக்க சொன்னான். இதை அவன் முன்பே செய்திருக்கலாம் தான். ஆனால் ஏனோ கவியை இன்னும் சில நிமிடம் அங்கு வைத்துப் பார்க்க மனம் ஆசைப்பட்டதோ என்னவோ?
ஆனால் அவனோ விடாக்கண்டனாய், “இல்ல உடனே கால் பண்ணியிருந்தா, குட்டிமா கவலைப்பட்டிருப்பா. அதுக்காகத்தான்” என்று தன் மனதை மறைத்து பொய் சொல்லிக் கொண்டான்.
“இப்போ குட்டிமா வந்து கதவ திறந்திடுவா” என்றவன் யாரிடமோ சொல்வது போல் சொல்லிவிட்டு நகர, சட்டென்று நிமிர்ந்து அவனைப் பார்த்தாள்.
“விழி சொன்னா நீங்க வேற கல்யாணம் பண்ணிப்பீங்கத்தான?” என்று சிறு எதிர்பார்ப்போடு கேட்டாள். அவளின் கேள்வியில், ஒரு நொடி நின்று, “இவள எல்லாம்” என்று மனதிற்குள் திட்டினாலும், அதை முகத்தில் காட்டிக் கொள்ளாது அவள் பக்கம் நன்றாக திரும்பி நின்றான்.
அதில் அவளோ தடுமாற, அவனோ, “என்ன கேட்ட?” என்றான். இப்போதும் அவளின் உயரத்துக்கு அவனை அண்ணார்ந்துத்தான் பார்த்தாள்.
அவன் சாதாரணமாய் கேட்டாலே, இவளுக்கு உள்ளுக்குள் அள்ளு எடுக்கும். இப்போது அவன் குரலில் அத்தனை உஷ்ணம். ஆனாலும் அதை எல்லாம் ஒதுக்கி விட்டு, “இல்ல விழிக்காகத்தான நீங்க என்னை கல்யாணம் பண்ணிக்கிட்டீங்க? அப்போ அவளே, இந்த கல்யாணம் வேண்டாம்னு சொல்லிட்டா, நீங்க வேற பொண்ண கல்யாணம் பண்ணிப்பீங்கத்தான?” என்றாள்.
அவளின் அந்த கேள்வியில் அவனுக்கு அத்தனைக் கோவம் வந்தது. ஆனாலும் அதை முகத்தில் சிறிதாய் கூட காட்டிக் கொள்ளாமல், “உனக்கு நான் வேற பொண்ண கல்யாணம் பண்ணிக்கனுமா? இல்ல உன்னை நான் டைவர்ஸ் பண்ணனுமா?” என்று கேட்டான்.
ஏனோ டைவர்ஸ் என்ற வார்த்தையை கேட்க அவளுக்கு என்னவோ போல் இருந்தது. அது அவள் முகத்திலேயே தெரிய, அவனோ அதை பொருட்படுத்தாது, “உன்கிட்டத்தான் கேட்கிறேன்” என்றான்.
“ரெண்டும் தான்” என்று அவள் அவனைப் பார்க்காதவாறு தலையைக் குனிந்தப்படி சொல்ல, “ரெண்டும் எல்லாம் நடக்கவே நடக்காது. பட், நீ சொன்ன மாதிரி, குட்டிமா என்கிட்ட வந்து வேற பொண்ண கல்யாணம் பண்ணிக்க சொன்னா, தாராளமா கல்யாணம் பண்ணிக்கிறேன். ஏன் அந்தப் பொண்ணுக் கூட சேர்ந்து குழந்தை குட்டின்னு சந்தோஷமா இருக்கேன். பட், நீ காலம் புல்லா, இந்த வீட்டுல இருந்துத்தான் ஆகனும். எனக்கு எடுத்த முடிவ மாத்தி பழக்கமே கிடையாது. நீ வேலைக்காரியா இருந்தாலும் சரி. இல்ல” என்று நெற்றியை நீவியப்படி, “எனக்கு ரெண்டாவது கல்யாணம் நடந்ததுக்கப்புறம், நீ எனக்கு என்னவா இருப்ப? எக்ஸ் ஒயிப் கரெக்ட்? அப்படியே இருந்தாலும் சரி. இல்ல அப்படியும் உனக்கு வேண்டாம். வேற மாதிரி கீ…ப்.” என்று அவன் சொல்லிக் கொண்டே போக, அவன் சட்டையைப் பிடித்தவள், இப்போது வார்த்தையோடு சேர்த்து அவன் இதழை தன் இதழால் மூடியிருந்தாள். அதை வேந்தனும் எதிர்பார்த்திருக்கவில்லை. கதவைத் திறந்துக் கொண்டு உள்ளே நுழைந்த விழியும் எதிர்பார்த்திருக்கவில்லை. ஏன் கவியே அதை எதிர்பார்த்திருக்கவில்லை.
(அருமை. ரொம்ப பிரம்மாதம்மா இருக்கும்மா? அவன தொட கூடாதுன்னு சொல்லிட்டு, நீ என்னம்மா பண்ணி வச்சிருக்க? சரி அடுத்து எப்படியும் அவ ஏடாகூடமாத்தான் ஏதாச்சும் சொல்லுவா. அது என்ன? வேந்தன் அதுக்கு என்ன சொல்லப் போறான்? இப்படி எல்லாத்தையும் அடுத்தடுத்த எபிசோட்ல பாக்கலாம். அதுக்கு முன்னாடி இன்னிக்கு எபிசோட்ல உங்களுக்கு பிடிச்ச சீன் எதுன்னு மறக்காம கமெண்ட்ல சொல்லுங்க)
தித்திக்குமா?..
Shree Ram
kavi ni kiss 💋 pannaya😱💖💖💖💖💖