தேன் – 17

இங்கே அவனின் அறைக்கு வந்த வேந்தனோ, அமைதியாய் சென்று படுத்து விட்டான். எப்படியும் தங்கையை இனிமேல் இரவில் தான் வெளியில் வருவாள். தோழிகள் பேசிக் கொள்ளட்டும் என்றப்படி இந்த இரண்டு வாரம் தூங்காத தூக்கத்தை சேர்த்து வைத்து தூங்கினான்.

அது தங்கை இங்கு வந்து விட்டதாலா? இல்லை கவியின் வாசம் கிடைத்து விட்டதாலா? அதை அவன் மட்டுமே அறிவான்.

இங்கே உடை மாற்றி வந்த விழியோ, லண்டனில் நடந்த விஷயங்களை எல்லாம் ஒன்று விடாமல் அவளிடம் ஒப்பித்துக் கொண்டிருந்தாள். அதில் அவளிடம் காதலை சொல்லிய நான்கு பேர் உட்பட. கவியிடம் அவள் எதையுமே மறைப்பது கிடையாது. ஆனால் கவியோ விழியிடம் எதையுமே சொன்னது கிடையாது. அதே போல் விழியும் அவளுடைய கடந்த கால வாழ்க்கையைப் பற்றி தெரியாமல் கூட அவளிடம் பேசவில்லை.

அத்தனைப் புரிதல் தோழியின் மீது. இது என்ன மாதிரியான பாசம். அவளுக்கே தெரியவில்லை. அவள் பெற்றோர் உயிருடன் இருந்தால் கூட, இந்தளவுக்கு பாசத்தை காமிப்பார்களா? என்பது சந்தேகமே. கவியின் ஆறு வயதில் கோவிலில் வைத்து முதன் முதலாய் விழியைப் பார்த்தாள். பார்த்த நொடியில் இருந்து விழிக்கு கவியின் மீது அப்படி ஒரு பாசம். 

தோழிகள் கூட சில நேரம், “ஏன் விழி? நீ என்ன கவிய லவ் பண்றீயா என்ன?” என்று கிண்டலாய் கேட்க, “ஆமா ஐ லவ் கவி வெரி மச்” என்று விழி சொல்ல, “எதே?” என்று அவர்கள் அதிர்ச்சியாய் பார்க்க, விழியோ, “ஐய்ய ச்சீ தப்பு தப்பா யோசிக்காதீங்க. லவ்ன்னா அன்பு பாசம் தான. அப்படிப் பார்த்தா, இந்த உலகத்துல என் கவி மேல எனக்குத்தான் அன்பு பாசம் அதிகம். சோ ஐ லவ் கவி” என்றாள் விழி.

கவி பெரிதாய் எப்போதும் பேசிட மாட்டாள். சிறு புன்னகை மட்டுமே அவளிடம். இப்போதும் அவள் பேசுவதைக் கேட்டு சிரித்தப்படித்தான் இருந்தாள்.

“ஐயோ கவி கல்யாணம் ஆகிடுச்சின்னா, தயவு செஞ்சு இவ பிரண்ட்ஷிப்ப கட் பண்ணிடு. அப்புறம் உன் ஹஸ்பண்ட்க்கும், இவளுக்கும் தான் பெரிய போட்டியே இருக்கும்” என்று தோழிகள் சொல்ல, அதற்கு விழியோ, “ம் அதெல்லாம் என் கூட போட்டி போடாத ஒருத்தரத்தான் கவி கட்டிப்பா. அப்படித்தான கவி?” என்று கேட்டப்படி கவியின் தோளில் சாய்ந்துக் கொண்டாள் விழி.

பின் மெதுவாய் அவளுக்கு மட்டும் கேட்கும் தோணியில், “என் அண்ணா கண்டிப்பா என் கூட போட்டி போட மாட்டாரு கவி. சோ நீ என் அண்ணாவையே கல்யாணம் பண்ணிக்கோ” என்று அவள் ஆரம்பிக்க, கவியோ முறைப்பாள்.

சட்டென்று வேந்தனின் நினைவு வர, இப்போதும் அவன் சொல்லிய வார்த்தை அவளை என்னமோ செய்தது. “ஹேய் கவி” என்று விழி உழுப்ப, அவளோ, “ம்ஹூம்” என்றாள். விழியோ, “என் அண்ணா, உண்மையாவே உன்ன நல்லா பார்த்துப்பார் கவி” என்றாள்.

அதில் கவியோ எதுவும் சொல்லாது அமைதியாக விழியோ, அதற்கு மேல் வேந்தனைப் பற்றி எதுவும் அப்போது பேசவில்லை.

ஆனால் கவியின் மனமோ வேந்தனிடம் தான் சென்று நின்றது. “அவருக்கு நான் வேண்டாம்” என்று அவள் மனம் சொல்ல, “அப்போ உனக்கு அவர் வேண்டாமா?” என்று மனசாட்சி எதிர்கேள்வி கேட்டது. சத்தியமாய் அவளால் முடியவே இல்லை. இன்னொருவனுடன் வாழ்ந்தப் பெண். வேந்தனுக்கு வேண்டவே வேண்டாம் என்பதில் அவள் அத்தனை உறுதியாய் இருந்தாள். நிச்சயம் அவனுடன் வாழ வேண்டும் என்ற சின்ன ஆசை கூட அவளுக்கு இல்லை. ஏனெனில் சிறு வயதில் இருந்தே அவள் எதற்கும் ஆசைப் படும் சூழ்நிலை அவளுக்கு கிடைத்ததே இல்லை.

கவிக்கு அப்போது ஆறு வயது இருக்கும். பெற்றோருடன் வெளியூர் கோவில் ஒன்றுக்கு வந்திருந்தாள். அப்போது அந்த கோவிலில் வைத்துத்தான் விழியை முதன் முதலாய் பார்த்தாள்.

தன் போலவே பட்டுப் பாவடை சட்டை, இரட்டை ஜடை போட்டு, கையில் இருந்த சாக்லெட்டை பிய்க்க தெரியாமல் பிய்த்துக் கொண்டிருந்தாள். இருவரின் உடையும் கூட ஒரே நிறத்தில் தான் இருந்தது.

அவள் பிய்க்க தெரியாமல் திணறுவதைப் பார்த்த கவியோ, “நான் பிச்சி தரட்டா” என்று கையை நீட்ட, விழி அப்போதுத்தான் கவியைப் பார்த்தாள். தன்னைப் போலவே இருக்கும் கவியை பார்த்த உடனே விழிக்கு பிடித்து விட்டது. உடனே கையில் இருந்த சாக்லெட்டை அவளிடம் கொடுத்தாள். உடனே கவியும் அதை பிய்க்க முயற்சிக்க, அவளாலும் முடியவில்லை.

அதைப் பார்த்த விழியோ, “என் அண்ணா பிச்சி கொடுப்பான்” என்றவள் “அண்ணா” என்று வேந்தனை அழைத்தாள். அவனுக்கு அப்போது பதினொன்று இல்லை என்றால் பன்னிரெண்டு வயது இருக்கும். 

தங்கையின் குரலில் வேகமாய் ஒடி வந்தவன், “என்னடா குட்டிமா?” என்றான். அவளோ கவியின் கையில் இருந்த சாக்லெட்டை காட்டி உதடு பிரித்தாள். அதில் அவனோ, அப்போதும் கவியைப் பார்க்கவில்லை. ஆனால் கவி வேந்தனைத்தான் பார்த்திருந்தாள்.

பன்னிரெண்டு வயது பையன் தான். ஆனால் அவளின் உயரத்துக்கு அவன் மிகவும் பெரியவனாய் தெரிந்தான். கவி, விழி இருவருமே இத்தனூண்டு இருக்க, அவன் நல்ல உயரம்.

அன்னார்ந்து அவனைப் பார்க்க, அவனோ, தன் பாக்கெட்டில் வைத்திருந்த சாக்லெட்டை எடுத்து பிரித்து தங்கையிடம் கொடுத்தான்.

அவளோ அதை வாங்கி, கவியிடம் நீட்ட, இப்போது அவளோ புரியாது விழியைப் பார்க்க, வேந்தனுமே, அப்போதுத்தான் தன் தங்கையுடன் நிற்கும் அந்த குட்டி வாண்டையும் பார்த்தான். அதிலும் இருவருமே ஒரே நிறத்தில் உடை அணிந்திருக்க, ஏதோ இன்னொரு விழியாய் தான் தெரிந்தாள்.

ஆனால் கவியோ சாக்லெட்டை வாங்க மறுக்க, விழியோ, “என் பிரண்ட்தான. வாங்கிக்கோ. நல்லா இருக்கும்” என்று நீட்ட அப்போதும் அவள் வாங்க தயங்க, அதற்குள் வேந்தனோ, “அதான் குட்டிமா கொடுக்கிறாள, வாங்கிக்கோ” என்று கூறினான்.

அப்போதுத்தான் அவனுக்கு குரல் மாறும் பருவம். அதனால் அவனின் குரல் கணீர் என உரைத்தது. அதில் பயந்து வேகமாய் கவி வாங்கிக் கொண்டாள். அதன் பின் கவியின் கையில் இருந்த சாக்லெட்டை வாங்கி அதை பிரித்து தன் தங்கையிடம் கொடுத்தான்.

இதுத்தான் அவர்களுடைய முதல் சந்திப்பு. 

அந்த முதல் சந்திப்பிலேயே விழியும், கவியும் தோழிகளாகியிருக்க, வேந்தனோ அதற்கு சாட்சியாகியிருந்தான். ஆனால் அன்றுத்தான் கவியுடைய வாழ்க்கையில் போராட்டமும் ஆரம்பமானது. கோவிலில் இருந்து கிளம்பும் போது நல்ல மழை. அதனால் இரு குடும்பமுமே, அங்கே ஓரமாய் எதிர் எதிர் பக்கம் நின்றிருக்க, வேந்தனோ தன் தந்தையுடன் காரை எடுத்து வர சென்றிருந்தான்.

விழியோ, அண்ணனின் பின்னே செல்லப் போனவள், கவியைப் பார்த்ததும் ரோட்டை கடந்து ஓடி வர, வேகமாய் வந்த பைக் ஒன்று அவள் மீது மோத வந்தது. அதைப் பெரியவர்கள் பார்க்கும் முன்னே கவி பார்த்திருக்க, அவளும் விழியைத் தடுக்க ரோட்டிற்கு ஓட, கடைசி நொடியில், விழியும் கவியும் சேர்ந்தே வேந்தனின் கைக்குள் நின்றிருந்தனர். அவன் கரத்தில் அப்படி ஒரு நடுக்கம். தங்கை என்றால் அவனுக்கு உயிர். சில நொடி தாமதித்திருந்தாலும், அவனால் நினைக்கவே முடியவில்லை.

அவனுக்கு மேல் கவி நடுங்கிக் கொண்டிருந்தாள். அதில், அவனோ கவியையும், விழியையும் ஓரமாய் இழுத்துக் கொண்டு சென்றிருந்தான். நல்ல மழை எதிரில் நிற்பவர்கள் தெரியாத அளவுக்கு ஜோ வென்று பெய்துக் கொண்டிருந்ததால், பெரியவர்கள் யாருமே அதை கவனித்திருக்கவில்லை. ஆனால் வேந்தனோ, விழி ஓடி வருவதும், கவி அதை தடுக்க வருவதும், இரண்டையும் பார்த்திருக்க, தந்தை பின் செல்லாது வேகமாய் அவர்களிடம் வந்திருந்தான்.

சில நொடிகள் வேந்தனின் கைக்குள்ளேயேத்தான் கவி நின்றிருந்தாள். விழியும் தான். அதற்குள் கவியைத் தேடி வந்த அவளின் அம்மா, “தேனு இங்க என்னப் பண்ற? வா” என்று அழைக்க, அப்போதே வேந்தனின் கையை விடுவித்தாள் கவி.

விழியோ, “அண்ணா. கவி” என்று கையை நீட்ட, “வா” என்று தங்கையை அழைத்துக் கொண்டு காருக்கு சென்றான். முதலில் கவியின் குடும்பம் காரில் கிளம்பியிருக்க, அதன் பின் சில நிமிடங்கள் கழித்து தான் இவர்கள் கார் கிளம்பியது.

சட்டென்று கார் நிற்கவும், வேந்தனின் அம்மா, “என்னாச்சுங்க?” என்றார். “ஏதோ ஆக்ஸிடெண்ட் போல” என்று சொல்ல, “மழை நேரத்துல கவனமா போகனும்ங்க. நீங்க கொஞ்சம் ஓரமா நிறுத்துங்க” என்றார்.

வேந்தனும், விழியும் சிறுவர்கள் என்பதால், அவர்களை அந்தப் பக்கம் விடவில்லை. வேந்தனின் அப்பா சென்றுப் பார்க்க, இவனும் ஓடினான். ஏனெனில் கூட்டத்தின் நடுவில் தெரிந்த அந்தப் பட்டுப்பாவடை அவனை என்னவோ செய்தது.

அண்ணன் செல்லவும் விழியும் அவனின் பின்னே ஓட, “ஹேய் விழி. நில்லு” என்று அவளின் அம்மாவும் அவளிடம் ஓடினார்.

அதற்குள் கூட்டத்தில் நுழைந்த வேந்தன் முதலில் பார்த்தது, முகம் முழுக்க கண்ணீருடன். கை கால்களில் சிராய்ப்புடன், பேந்த பேந்த சுற்றி இருந்தவர்களைப் பார்த்துக் கொண்டிருந்த தேன்கவியைத் தான்.

சுற்றி இருந்தவர்கள் ஆளாளுக்கு பேசினார்களே தவிர ஒருவரும் உதவியிருக்கவில்லை. அதன் விளைவு தேன்கவியின் அப்பா, இறந்திருக்க, அம்மாவோ உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார்.

அந்த நிலையிலும் அவருடைய வாயில், “தேனு தேனு. என் புள்ள. ஐயோ என்னப் பண்ணுவா” என்ற புலம்பல்கள் தான் கடைசியாய் வந்தது.

வேந்தனுக்கு எதுவுமே புரியவில்லை. சிறுவன் தானே. ஆனால் விழியோ கவியைப் பார்த்ததும், “கவி” என்று ஓடி சென்று அவளைக் கட்டிக் கொண்டாள். அதைப் பார்த்த வேந்தனின் அப்பாவுக்கோ எதுவும் புரியவில்லை. “ஹேய் விழி வா” என்றழைக்க, வேந்தன் தான் பிடிவாதமாய் அவர்களை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல கெஞ்சினான்.

மகள், மகன் சொல்லவும் அவரும் உடனே ஆம்புலன்ஸுக்கு கால் செய்யப் போக, அதற்குள்ளாக ஆம்புலன்ஸும், போலீஸும் வந்திருக்க, விழியோ கவியை விட்டு நகர மறுக்க, அதனால் வேறு வழியின்றி இவர்களும் மருத்துவமனை சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவளுடைய அம்மாவும் இறந்திருக்க, தேன் கவி யாருமில்லாத பெண்ணாகிப் போயிருந்தாள். ஆனால் அதைப் புரிந்துக் கொள்ள கூட அவளால் முடியவில்லை.

“ம்மா. ப்பா” என்று உயிரில்லாத அவர்கள் இருவர்களை எழுப்பிக் கொண்டிருந்தாள். விழிக்கும் புரியவில்லை. அவளுமே கூட சேர்ந்து எழுப்பினாள்.

வேந்தனுக்கு புரிந்தது. தங்கையை ஒரு கையில் பற்றியவன், கவியையும் மறு கையில் பிடித்தான். அப்போது எதை நினைத்துப் பிடித்தானோ? இப்போது வரை அவள் கையை அவன் விட்டிருக்கவில்லை. ஆனால் கவியோ, அவன் கையை விடுவிக்க போராடிக் கொண்டிருந்தாள்.

பழைய நினைவில் இருந்தவளை மீண்டும் விழி தான், “ஏய் என்ன? அண்ணா கனவா?” என்று கேலி பேசி இவ்வுலகம் இழுத்து வந்தாள்.

(அதன் பின் என்ன நடந்தது? அப்படின்றத பார்க்கிறதுக்கு முன்னாடி, கரண்ட்ல இதுக்கப்புறம் என்ன நடக்கப் போதுன்னு அடுத்த எபிசோட்ல பாக்கலாம். பிளாஸ்பேக் கொஞ்சம் கொஞ்சமாத்தான் வரும். சோ பொறுமையா கவிய பத்தி தெரிஞ்சிக்கலாம். அதுக்கு முன்னாடி இன்னிக்கு எபிசோட்ல உங்களுக்கு பிடிச்ச சீன் எதுன்னு மறக்காம கமெண்ட்ல சொல்லுங்க. அப்படியே எப்பவும் போல லைக் பண்ணிட்டு உங்க பிரண்ட்ஸ் கூட ஷேர் பண்ணுங்க)

தித்திக்குமா?..

Comments   1

*** தேன் – 17 - படைப்பை ரேட் செய்யுங்கள் ***