சாலை ஓரத்தில், இருக்க வீடு இல்லாமல், படுக்க ஒரு பாய் கூட இன்றி, கிடைத்த கட்சிக் கொடியைப் போர்த்தி தன் குளிரைப் போக்கியப்படி படுத்திருந்தவர்கள் கூட நிம்மதியாய் உறங்கிக் கொண்டிருக்க, தாராளமாய் இருந்த அந்த வீட்டில், பஞ்சு மெத்தையில் புரண்டு படுத்தவனுக்கோ ஒரு பொட்டு உறக்கம் வரவில்லை. சட்டென்று எழுந்து மணியைப் பார்த்தான். அதுவோ நகர்வேனா? என்பது போல் அடம்பிடித்தது. அவனுடைய மனதில் இத்தனை நாள் தெரியாத அந்த வெறுமை உணர்வு இப்போது அவனை மொத்தமாய் கொல்ல துடித்தது.
“இல்ல இல்ல. நான் ஏன் அத யோசிக்கிறேன். வேண்டாம். வேண்டாம்” என்று அவன் தனக்குள் அழுத்தி, சொல்ல, சொல்ல, ஏனோ அந்த கண்ணீரும், அந்த முகமும் மட்டுமே அவன் முன் வந்து நின்று இம்சை செய்ய, அவனால் முடியவே இல்லை. முடிவெடுத்து விட்டால், அதில் இருந்து சற்றும் மாறாத குணம் கொண்டவன். அதனால் தான், எந்த முடிவையும் இந்த நேரத்தில் எடுத்து விடாதே என்று தனக்குத் தானே அழுத்தி சொல்லிக் கொண்டிருந்தான்.
“வேண்டாம்டா வேந்தா வேண்டவே வேண்டாம்” என்று தன்னைத் தானே கட்டுப்படுத்த முயற்சித்தவனின் முயற்சி எல்லாம் அத்தனையும் தோல்வியில் முடிந்தது. அதில் நேரே குளியலறைக்குள் சென்று, குளிர்ந்த நீரால் முகத்தை அழுத்திக் கழுவி, தன் மனதின் குமறலை நிறுத்த முயற்சித்தான். திரும்ப திரும்ப, அந்த கூரிய விழிகளில் வலியும் அந்த சோகம். அது மட்டுமே வந்து நிற்க, “ஆ..” என்று அந்த வீடே அதிரும் அளவுக்கு கத்தினான் சுடர் வேந்தன்.
அதே நேரம் இங்கே ஒரு துளி கண்ணீர் கூட வெளி வர முடியாத அளவுக்கு மொத்தமாய் சோர்ந்துப் போய் அந்த அரசு மருத்துவமனை இருக்கையில், சுவற்றில் சாய்ந்து அமர்ந்திருந்தாள் தேன் கவி. அவள் கண்கள் விட்டத்தை இலக்கே இல்லாமல் பார்த்துக் கொண்டிருந்தது. அவளைச் சுற்றி இருந்த அத்தனைப் பேரும் உறங்கியிருந்தனர்.
அவர்களும் பாவம் என்னத்தான் செய்ய முடியும்? முழுதாய் ஒரு நாள் முழுவதும், அங்கிருப்பவர்கள் யாரும் உறங்கியிருக்கவில்லை. இப்போது துக்கம், வலி அத்தனையும் தாண்டி, உறக்கமும், பசியும் அவர்களை இழுத்துக் கொள்ள கண் மூடிவிட்டனர்.
பின்னே என்னத்தான் செய்ய முடியும்? கீழ் நடுத்தர வர்க்கத்து மக்களுடைய நிலை அவ்வளவுத்தான் என்று சொல்லாமல் சொல்லியது. ஒரு இழப்பைக் கூட, முழுதாய் உணர விடாது, சுற்றி இருந்த பிரச்சனைகள் வரிசைக் கட்டி வந்து நின்றது.
இப்படி இருவருடைய மொத்த நிம்மதியையும், உறக்கத்தையும் கெடுத்தவனோ, அந்த மருத்துவமனையில் இருந்த பிணக்கிடங்கில், மீள முடியாத உறக்கத்தில் இருந்தான்.
சனி, ஞாயிறு விடுமுறை என்று சொல்லி, இறந்தவனின் உடலைக் கூட வாங்க முடியாத நிலையில் தான் அவள் இருந்தாள். ஒரு வேளை, அந்த ஒருவன் நினைத்திருந்தால், உடனே இதையெல்லாம் செய்திருக்க முடியுமோ? என்று ஏனோ காரணமேயின்றி இவளின் நினைவில் வந்து நின்றான் அவன்.
தன் கழுத்தில் புதிதாய் மாற்றிய தாலி கயிற்றின் மஞ்சள் வாசம் கூட முழுதாய் சென்றிருக்காது. ஆனால் அதற்கு சொந்தமானவன் இவளை விட்டு மட்டும் அல்லாது, இவ்வுலகத்தை விட்டே சென்றிருந்தான். விபத்து எல்லார் வாழ்க்கையிலும் நடப்பதுத்தான். ஆனால் என்ன? இவளுடைய வாழ்க்கை மொத்தமுமே விபத்தாய் மாறியது தான் இவளுடைய துரதிஷ்ட நிலை.
அவன் இறந்து இரண்டு நாட்களாகப் போகிறது. விடிந்தால், அதை உறுதிப்படுத்த, அவன் உடலை அவர்களிடம் கொடுத்து, அந்த உடலையும் மொத்தமாய் அனுப்பி விடுவார்கள்.
அதன் பின், இவளுடைய வாழ்க்கை? வாழ்க்கையை விடு. அது என்று அவளிடம் இருந்தது? எங்கோ? எப்போதோ? யாரோ? அவள் வாழ்க்கையை கையில் எடுத்து விளையாட ஆரம்பித்திருந்தனர். அவளுக்கான பாதுகாப்பு எங்கே? என்ற கேள்வித்தான் இப்போது மொத்தமாய் அவளை வீழ்த்தியது.
அதே நேரம், “இத்தன நாள் நீ பாதுகாப்பாத்தான் இருந்தீயா?” என்று அந்த நேரத்திலும் அவள் மனசாட்சி விரக்தியாய் கேட்டது. அவளிடம் பதில் இல்லை. அவள் வாழ்க்கையில் நடந்ததன் பெயர் கல்யாணமா? இல்லை, ஒரு வருடம் அவனுடன் இருந்ததன் அர்த்தம் என்ன? இப்போது நினைத்தாலும் எதுவுமே தெரியவில்லை.
இந்த ஒரு வருடத்தில் ஏதோ இரண்டு நாள் முன் தான் அதிசயத்திலும் அதிசயமாய், அவள் கழுத்தில் தாலி கட்டியிருந்தவன், நிமிர்ந்து அவள் முகம் பார்த்து, அவளிடம் நாலு வார்த்தை பேசினான். அது கூட அந்த கடவுளுக்கு பொறுக்கவில்லைப் போலும். மொத்தமாய் சென்றுவிட்டான்.
“வெள்ளி கிழம அதுவுமா தாலி கயிற மாத்தாதன்னு தல பாடா அடிச்சிக்கிட்டேன்னே, கேட்டாளா இந்த மவராசி. கடைசியில எம்புள்ளைய மொத்தமா தூக்கி கொடுக்க வச்சிட்டாளே” என்று அவளின் அத்தை பேசிய வார்த்தைகள் இப்போதும் அவள் செவியில் ஒலித்தது.
அவளா மாற்றினாள்? அதற்கு முந்தன நாள், அந்த அத்தை பெற்ற மகன் தானே, குடித்து விட்டு வந்து அவள் கழுத்தில் இருந்த தாலியைப் பிடித்திழுத்து அத்து தூர வீசினான். அப்போது அதை தடுக்காது நின்று வேடிக்கைப் பார்த்த அந்த தாய், அடுத்த நாள் அவள் வெறும் கழுத்தாக நின்றதுக்கும், அவளை திட்டி விட்டு வேறு செல்ல, கழுத்தில் இருந்த காயம் ஆறும் முன்னே, அவளாக சென்று, கயிறை கழுத்தில் மாட்டிக் கொண்டாள். அதற்கும் அவளையே குற்றம் சொன்னால், அவளும் என்னத்தான் செய்வாள்?
சிறு வயதிலேயே, இது போல் ஒரு விபத்தில் தான் அவள் பெற்றோரை இழந்தாள். துணை நிற்க வேண்டிய சொந்தங்கள் எல்லாம் ஒதுங்கிக் கொள்ள, யாரென்றே தெரியாத ஒருவன் இவளை, ஆசிரமத்தில் சேர்த்து விட்டான். அந்த ஆசிரம வாழ்க்கையில் வளர்ந்தவளுக்கு, அன்பு என்பது என்றுமே எட்டாக் கனித்தான். ஏதோ கடவுள் புண்ணியத்தில் ஒரு டிகிரியைப் படித்து முடித்தாள். ஒரு வேலை செய்து இதன் பின்னாவது தனக்கான வாழ்க்கையை வாழ நினைத்தாள். அதற்குள்ளாக, இவள் சித்தி வந்து அழைத்து சென்றார்.
பாசத்தில் அழைத்து செல்கிறார் என்று அவள் நினைக்க, அவரோ, அவரின் மகள் எவனுடனோ ஓடி சென்றிருக்க, இப்போது இவள் சம்மதம் இல்லாமலே, ஒருவனுக்கு திருமணத்தை முடித்துக் கொடுத்தார். அதை செய்து விட்டு ஏதோ, அவர் தான் அவளையே வளர்த்து ஆளாக்கியது போல் ஊரில் அனைவரிடமும் காட்டிக் கொண்டார்.
சரி இனி கட்டியவனின் வீடுத்தான் எல்லாம் என்று அவள் நினைக்கும் முன்னே, அந்த கட்டியவனின் உண்மை முகம். அதை இப்போது நினைத்தாலும், அவள் உடலெல்லாம் எரிந்தது. அவனின் வீட்டில் இருந்தவர்கள் எல்லாம், உண்மையில் மனிதர்கள் தானா? என்று கூட பல முறை யோசித்து விட்டாள். ஒரு வருடம், அவள் உயிருடன் இருந்ததே அதிசயம் தான்.
ஏதோ இரண்டு நாள் முன், அவளிடம் வந்தவனோ, ஏதோ இனி அவளை தாங்கப் போவதாக வந்து ஏதோ பேசினான். அதை அவள் மனம் நம்பவில்லைத்தான். ஆனாலும் கூட மனதின் ஓரத்தில் இருந்த நற்பாசையில், நம்பினாள். ஆனால் அவன் வில்லங்கத்துடன் வருவான் என்று நினைத்திருக்க, அவனோ அன்று வீடு வரவே இல்லை. வந்தது என்னவோ அவன் உடல் அரசு மருத்துவமனையில் இருக்கிறது என்ற செய்தி மட்டும் தான்.
அதன் பின்னான நொடிகள் எப்படி சென்றது என்று தெரியாது. சுற்றி இருப்பவர்கள் எல்லாம் சொந்தம் கிடையாது. அக்கம் பக்கத்தினர். அவளுக்குத்தான் சொந்தம் என்று யாரும் இல்லையே. அதை நினைக்கும் போதே ஒருவனின் முகம் வந்து நின்று இம்சித்தது. ஏனோ தன்னுடைய இயலாமை, அவன் ஒருவனின் மீதுத்தான் கோவம் கொள்ள வைத்தது.
ஒரு வேளை அவளையும் அறியாமல், அவனை அவள் உறவாக எண்ணியிருந்தாளோ? அதனால் தான் அவனின் மீது மட்டும் அவளுக்கு கோவம் வருகிறதோ?
ஏதேதோ நினைவில் மூழ்கியிருந்தவளை உறக்கம் இழுக்க, அவளையும் மீறி கண் மூடியிருந்தாள். ஆனால் அது உறக்கம் அல்ல மயக்கம் என்பதை அவள் கண் விழிக்கும் போதுத்தான் உணர்ந்தாள்.
ஆம் அன்றைய நாளே முடிந்திருந்தது. எழுந்துப் பார்க்க, அவள் அந்த வீட்டின் ஒரு மூலையில் இருந்தாள். ஒன்றுமே புரியவில்லை. அவனின் உடல் கூடத்தில் இருந்து எடுத்து செல்லப்பட்டதாக சொல்லப்பட்டது. ஏன் என்னிடம் சொல்லவில்லை. ஏன் ஒரு சொட்டு தண்ணீர் எடுத்து எழுப்பக் கூடவா நாதி இல்லாமல் போய் விட்டேன் நான்? என்று நெஞ்சம் கேட்ட கேள்வியில் விம்மி அழுதாள். அது அவன் முகத்தை கடைசியாய் கூட பார்க்கவிடவில்லை என்ற வருத்தம் கிடையாது. அவன் முகத்தைப் பார்க்க அவள் ஆசைப்பட்டதும் கிடையாது. இந்த வருத்தம் அவளுக்கு யாருமே இல்லை என்ற உணர்வு கொடுத்த அழுத்தம்.
அவளால் அதை தாங்கவே முடியவில்லை. அவளைத் தவிர அங்கே இருந்த அத்தனைப் பேரும், அவர்களுக்கு கொடுத்த வேலையைப் பார்த்துக் கொண்டிருந்தனர்.
அவர்களை எல்லாம் இதற்கு முன் இந்த வீட்டில் பார்த்தது போல் அவளுக்கு ஞாபகம் இல்லை. அதுவும் போக, இப்படி காசு கொடுத்து வேலைக்கெல்லாம் ஆள் வைக்கும் அளவுக்கு அவளுடைய அத்தை பெருந்தன்மைவாதியும் கிடையாது. இவளை எழுப்பி கூட்டி சுத்தம் செய்ய சொல்லியிருந்தால் கூட ஆச்சர்யப்படுவதற்கில்லை. அப்படி இருக்க அவளுக்கு எதுவுமே புரியவில்லை.
சில பல மணி நேரம் கழித்து இடுகாட்டிற்கு சென்றவர்கள் எல்லாம் வந்து அவர்கள் வேலையைப் பார்க்க ஆரம்பித்திருந்தனர். அவள் கழுத்தில் கிடந்த மஞ்சள் கயிறு மட்டும் அவர்களை உறுத்தியது போலும். அதையும் அவர்கள் அவள் எழும் முன்னே அதை கழட்டியிருக்க, இப்போது வெறுங்கழுத்தாய் தான் கிடந்தாள்.
அழுபவளை தாங்கி ஆறுதல் சொல்ல ஒருவரும் இல்லை. அப்படியே அங்கேயே படுத்து விட்டாள். அடுத்த நாள் காலை, அவர்கள் வீட்டில் ஒரு கூட்டமே இருந்தது. இறந்துப் போனவனின் மீது பாசத்தில் வரவில்லை அவர்கள். அவன் வாங்கி சென்ற கடன் விவரங்களை வரிசையாய் சொல்லிக் கொண்டிருந்தனர். கடைசியில் மொத்த கடனையும், அமைதியாய் இருந்த கவியின் மீதே சுமத்திவிட்டு அவளுடைய அத்தை சென்று விட்டார்.
சுற்றி இருந்த அத்தனைப் பேரும் அவளிடம் எப்போது வாங்கிய கடனை எல்லாம் தருவாய்? என்று கேள்வி மேல் கேட்டுக் கொண்டிருக்க, சுற்றி இருந்தவர்களில் ஒருவருக்கு கூட சிறிதாய் இரக்கம் இல்லையா? என்று அவள் மனம் கேட்டது.
இல்லைத்தான். இருந்திருந்தால், அவளுக்கு ஏன் இந்த வாழ்க்கை? கண்ணீர் கூட வர மறுத்தது. பேசாமல் இப்படியே இங்கேயே இறந்து விடுவோம்மா என்று கூட தோன்றியிருக்க, கொஞ்சம் கொஞ்சமாய் மயக்கத்துக்கு செல்ல, அவள் தடுமாறி விழ சென்றாள்.
அதற்குள் எங்கிருந்த வந்தானோ? இல்லை அவளை எப்போதும் விழ அனுமதிக்க மாட்டேன் என்று சொல்வதற்காகவே, அவளை வந்து தாங்கிப் பிடித்தானோ அவன்?
அவன் வாசத்தை வைத்தே, அந்த ஒருவனை அவள் அடையாளப்படுத்தியிருக்க, கஷ்டப்பட்டு கண்ணைத் திறந்து அவனிடம் இருந்து விலக நினைத்தாள். ஆனால் அவளால் எதையுமே செய்து முடிக்க முடியவில்லை.
மீண்டும் ஒரு மயக்கம். முழுதாய் அவள் தொண்டைக்குள் உணவு என்ற ஒன்று இறங்கி, மூன்று நாட்களாகியிருந்தது. அவள் மனதை விட, உடல் அத்தனை மோசமாய் இருக்க, இப்போது கஷ்டப்பட்டு கண்ணைத் திறந்தாள்.
அவள் கண்ணைத் திறக்கும் போது அவளிடம் கடன் கேட்டவர்கள் யாரும் அங்கு இல்லை. அவளை தாங்கிப் பிடித்த அந்த ஒருவனும் இல்லை. குழப்பமாய் அவள் மலுங்க மலுங்க சுற்றித் தேட, “யாரைத் தேடுற?” என்ற ஒரு குரல் கணீரென்று அவள் செவியில் கேட்க, சட்டென்று திரும்பினாள்.
கையில், பதினொரு பவுன் தங்க தாலியுடன், அவன் முகத்தில் எப்போதும் இருக்கும் அதே புன்னகையுடன் நின்றிருந்தான் சுடர் வேந்தன்.
அவள் என்ன என்று யோசிக்கும் முன்னே, அவள் கழுத்தில் அந்த தாலியை அணிவித்து, குங்குமத்தையும் எடுத்து அவள் நெற்றியில் வைத்து விட்டான். பின் அவள் அதிர்ந்து மறுக்கும் முன்னே, இவள் என் மனைவி என்பது போல் அவள் தோளைச் சுற்றி கையைப் போட்டு தன்னோடு அணைத்து, அவள் தாலியிலும் அந்த குங்குமத்தை வைத்து விட்டான்.
அவள் அதிர்ச்சியில் செயழிலக்க, அதற்குள்ளாக அவளை தன் கையில் மொத்தமாய் தூக்கிக் கொண்டு, அந்த வீட்டில் இருந்து கிளம்பியிருந்தான் அவளின் சுடர்.
(யார் இந்த சுடர்? இவனுக்கும், இவளுக்கும் என்ன சம்பந்தம்? இதன் பின் நம் தேன் சுடரின் வாழ்க்கை எப்படி இருக்கப் போகிறது? என்ற கேள்விக்கான பதிலை அடுத்தடுத்த அத்தியாயங்களில் காணலாம். என்னடா பர்ஸ்ட் எபிசோடே சோகமா போதுன்னு பீல் பன்ண வேண்டாம். இதுக்கப்புறம் நீங்க எக்ஸ்பக்ட் பண்ணாத மாதிரி இருக்கும். முத எபிசோட் எப்படி இருந்திச்சுன்னு மறக்காம கமெண்ட்ல சொல்லுங்க. அத வச்சித்தான் டெய்லி எபிசோட் போடலாமா? இல்ல வாரத்துக்கு மூனு எபிசோட் போடலாமான்னு முடிவு பண்ண முடியும். உங்க கருத்துக்காக வெயிட்டிங்)
தித்திக்குமா?
Indhu Mathi
super
Shree Ram
super raasa ni manithan👏👏👏💖💖💕💕💞💞💞💕