“அதெல்லாம் ஒன்னும் இல்ல” என மித்ரா தன் பேக்கை எடுத்துக்கொண்டு கிளாஸூக்கு செல்ல முயன்றாள்.
“அதான் இவ்வளவு பொஸெசிவ் இருக்கு-ல அதை அவர்கிட்ட சொல்ல வேண்டியது தான?” என சாரு அவளை நிறுத்தி கேட்டாள்.
“பொஸெசிவ் லாம் ஒன்னும் இல்ல. நான் கிளாஸூக்கு போறேன். நீ வந்தா வா. இல்லன்னா போ” என மித்ரா சொல்லிவிட்டு அங்கிருந்து சென்றாள்.
“சரி சரி வரேன்” என சொல்லிவிட்டு சாருவும் அவளுடன் சென்றாள்.
இப்படியே நாட்கள் செல்ல, ஒரு நாள் சாரு மூச்சு வாங்க ஓடி வந்தாள்.
“என்னடி? ஏன் இப்படி ஓடி வர்ற?” என மித்ரா கையில் வைத்திருந்த புத்தகத்தை மூடி வைத்து விட்டு கேட்டாள்.
“அ..த்.. அ.. து.. சீனியர்.... இருக்கார்-ல.. அவருக்கு.. அவரு..” என சாரு இழுத்தாள்.
அதைக்கேட்டதும் பதறிய மித்ரா “என்னடி? என்னாச்சு அவருக்கு? சொல்லு” என வேகமாக கேட்டாள்.
“அ..து... அவருக்கு..” என மீண்டும் இழுத்தாள் சாரு.
“என்னடி? சொல்லித் தொலை” என ஏறக்குறைய அழும் நிலையில் கேட்டாள் மித்ரா.
“அது வேற ஒன்னும் இல்ல. நம்ம சீனியருக்கு, வர்ற புதன்கிழமை புட்பால் மேட்ச் இருக்காம். அதைத்தான் சொல்ல வந்தேன்” என அருகில் இருந்த வாட்டர் பாட்டிலை எடுத்து தண்ணீரை குடித்துக் கொண்டே கூறினாள் சாரு.
அதைக்கேட்டு கடுப்பான மித்ரா “அடிப்பாவி. இதை சொல்றதுக்கு எதுக்குடி? என்னை டென்சன் பண்ண?” என கேட்டாள்.
“ம் வேகமா ஓடி வந்தேன். மூச்சு வாங்கிச்சு. அதான்” என சாதாரணமாக கூறினாள் சாரு.
அதைக்கேட்டு இன்னும் எரிச்சலான மித்ரா, அந்த வாட்டர் பாட்டிலை பிடுங்கி அவள் மீதே மொத்தமாக ஊத்தினாள்.
அதே நேரம் “ஏய் பார்த்தி உனக்கொரு விசயம் தெரியுமா?” என கேட்டாள் ஸ்வீட்டி.
“என்ன விசயம்-னு சொன்னாதான தெரியும்” என மரத்தடியில் புத்தகத்தை தலைக்கு வைத்து படுத்துக் கொண்டு கூலாக கேட்டான் பார்த்தி.
“உன் ஆளை பத்தி சொல்ல வந்தேன்-ல எனக்கு இதுவும் வேணும். இன்னமும் வேணும்” என சொல்லிவிட்டு அங்கிருந்து சென்றாள் ஸ்வீட்டி.
வேகமாக எழுந்து அவள் பின்னே ஓடிய பார்த்தி “ஏய்.. ஏய். சாரிடி.. சொல்லு. அவளுக்கு என்ன?” என வேகமாக கேட்டான்.
“ம். அவளுக்கு வர்ற வெள்ளிக்கிழமை கல்யாணமாம். அதான், இன்விடேஷன் வைக்க உன்னை தேடிட்டு இருக்காளாம். அதான்” என கூலாக கூறினாள் ஸ்வீட்டி.
அதைக்கேட்ட நொடி அவன் இதயம் ஒரு நொடி நின்று துடித்தது.
“உண்மையாவா?” என குரல் உடைந்து பார்த்தி கேட்டான்.
“டேய் டேய் அதுக்குள்ள இதயம் முரளி மாதிரி சோக மியூசிக் வாசிச்சிடாத. நான் சும்மா பன்னுக்கு சொன்னேன்” என ஸ்வீட்டி சொல்லி முடிக்கும் முன், அவள் கன்னத்தில் பலமாக அடித்திருந்தான் பார்த்தி.
“ஒரு செகன்ட் செத்துட்டேன்டி” என கோவமாக சொல்லிவிட்டு பார்த்தி அங்கிருந்து சென்றான்.
“என்ன ஸ்வீட்டி? உனக்குத்தான் தெரியும் தான? அவன்கிட்ட எதுக்கு இப்படி சொன்ன? பாவம் அவன்” என அவனின் மற்ற நண்பர்கள் அவனுக்கு ஆதரவாக பேசினர்.
“அடப்பாவிகளா? இதெல்லாம் நீங்க எத்தனை தடவ சொல்லிருப்பீங்க? அது போக, அவன் தான்டா என்னை அடிச்சிட்டு போயிருக்கான். நீங்க என்னன்னா? அவன் பாவம்-னு சொல்றீங்க. நல்லா வருவீங்க” என சொல்லிவிட்டு அங்கிருந்து சென்றாள் ஸ்வீட்டி.
அதன் பின் இரண்டு நாட்கள், ஸ்வீட்டியும், பார்த்தியும் பேசிக்கொள்ளவில்லை.
“டேய் டேய் ரொம்ப பண்றடா நீ. நியாயமா நான் தான் கோவமா இருக்கனும். இப்ப நீ எதுக்கு மூஞ்சை தூக்கி வச்சிருக்க?” என ஸ்வீட்டி, அவனுக்கும், தனக்குமான கூல்ட்ரிங்ஸை கையில் வைத்துக் கொண்டு கேட்டாள்.
அவள் பேசியதை காதில் வாங்காமல். அங்கிருந்து எழ முயற்சித்தான்.
“டேய் நில்லுடா. சரி.. சாரி... அன்னிக்கு நான் அப்படி சொன்னது தப்பு தான். என்னை மன்னிச்சிடு” என ஸ்வீட்டி கூறினாள்.
“நீ கூட என் லவ்வை புரிஞ்சிக்கல-ல ஸ்வீட்டி” என கவலையாக கேட்டான் பார்த்தி.
“ஐயோ சாரிப்பா... அது சும்மா கடுப்புல ஏதோ சொல்லிட்டேன்” என ஸ்வீட்டி அவனை சமாதானப்படுத்தினாள்.
“அவதான் ஸ்வீட்டி எனக்கு எல்லாமே. உனக்கு தெரியும்தான? எனக்கு அவளை எவ்வளவு பிடிக்கும்-னு. நீ சடனா. அவளுக்கு கல்யாணம்னு சொன்னதும், எனக்கு எப்படி இருந்திச்சு தெரியுமா? பிளீஸ் ஸ்வீட்டி இன்னொரு டைம் இப்படில்லாம் பேசாத” என கவலையாக கூறினான் பார்த்தி.
“ஆமா. என்கிட்டலாம் நல்லா பேசு. ஆனா, அவகிட்ட போயி பேசிடாத. அவளை நீ இவ்வளவு விரும்புறேன்-னு அவகிட்ட சொன்னாதான, அவளுக்கு தெரியும். சும்மா எங்க கிட்டயே சொல்லிட்டு இருந்தா எப்படி?” என ஸ்வீட்டி கேட்டாள்.
“சொல்லுவேன். ஆனா அதை அவ லைப் ல மறக்கவே முடியாத அளவுக்கு சொல்லுவேன்” என பார்த்தி கனவோடு கூறினான்.
“சரி. சரி. முதல்ல இந்த கூல்ட்ரிங்ஸை பிடி” என ஸ்வீட்டி சொல்ல
“சாரிடி. அன்னிக்கு உன்னை அடிச்சிட்டேன்-ல,” என அவள் கன்னத்தை பார்த்து கவலையாக பார்த்தி கேட்டான்.
“ஆமா அடிச்சு ஐஞ்சு மாசத்துக்கு அப்புறம் வந்து கேளு. போடா” என சொல்லிவிட்டு ஸ்வீட்டி கூல்டிரிங்ஸை குடித்துக் கொண்டிருந்தாள்.
அப்போது அவள் கண்ணில் சட்டென்று தூசி வந்து விழுந்தது.
“ஆ..” என அவள் கண்ணை கசக்க,
“என்னாச்சு ஸ்வீட்டி” என பார்த்தி கேட்க,
“தெரியலடா. தூசி விழுந்திருச்சின்னு நினைக்கிறேன்” என ஸ்வீட்டி சொல்ல
“நில்லு நான் பார்க்கிறேன்” என பார்த்தி, அவள் கண்ணில் ஊதி விட்டுக் கொண்டிருந்த நேரம், சரியாக அந்த இடத்திற்கு மித்ரா-வும், சாரு-வும் வந்தனர்.
“டேய் போதும். விடுடா” என ஸ்வீட்டி அவனை விட்டு விலக, அவன் முதுகுக்கு பின்னே அதிர்ச்சியாக நின்றுக்கொண்டிருந்த இருவரையும் பார்த்தாள்.
“பார்த்தி மறுபடியும் சாரிடா” என ஸ்வீட்டி தனக்குள் முனுமுனுத்தாள்.
“என்னாச்சு டி?” என பார்த்தி கேட்க, ஸ்வீட்டியோ அசையாமல், மித்ராவை பார்த்துக் கொண்டிருந்தாள்.
“என்ன கொடுமை டி இது? ச்சி. இவனுக்காக போயி, உன்னை கூப்டு வந்தேன் பாரு என்னை சொல்லனும். பொறுக்கி” என சாரு கூறினாள்.
சில நிமிடங்களுக்கு முன்.
“ஹாப்பி பர்த்டே டி. இந்த வருஷம் முடியிறத்க்குள்ளையாச்சும் நீ உன் காதலை அவர் கிட்ட சொல்ல என் மனமார்ந்த வாழ்த்துகள்” என சாரு கூறினாள்.
அதைக்கேட்டு எதுவும் சொல்லாமல், அமைதியாக நின்றாள் மித்ரா.
“அதான முதல்ல நீ லவ் பண்றதை என்கிட்ட சொல்லனுமே” என சாரு சலித்துக் கொண்டாள்.
“ஆனா ஒரு விசயம் சொல்றேன் டி. இப்பலாம் அவ அவ பார்க்க சுமாரா இருந்தாலே தள்ளிட்டு போயிடுறாளுக, இதுல நம்ம சீனியர் வேற காலேஜ் கே ட்ரீம் பாய். சோ நீ இப்படி தள்ளி நின்னு லவ் பண்ணிட்டு இருந்தன்னு வச்சிக்கோ? மொத்தமா யாராச்சும் அள்ளிட்டு போயிடுவாங்க” என சாரு கூறினாள்.
“நம்ம சீனியர் இல்ல. என் சீனியர்” என வேகமாக கூறினாள் மித்ரா.
“ஆமா இதுக்கு ஒன்னும் குறைச்சல் இல்ல. சரி இன்னிக்கு உனக்கு பர்த்டே தான? அவருக்கு சாக்லெட் கொடுக்கிற கேப்-ல சைட் அடிச்சிட்டு வரலாம் வா” என சாருதான் மித்ரா-வை கட்டாயப்படுத்தி இழுத்து வந்தாள்.
ஆனால் இங்கு அவர்கள் கண்ட காட்சியே வேறு.
மித்ரா-வையும், சாருவையும் அங்கே சற்றும் எதிர்பார்க்காத ஸ்வீட்டி “பார்த்தி இன்னிக்கு உன் ஆளு பர்த்டே. அதை சொல்லத்தான் அன்னிக்கு வந்தேன். ஆனா அதுக்குள்ள” என பாவமாக கூறினாள்.
“இல்ல மித்தி.. அ..து” என பார்த்தி ஏதோ சொல்லும் முன், சாருவின் கன்னத்தில் பளாரென்று ஒரு அறை அறைந்திருந்தாள் மித்ரா.
“எனக்கு தெரியும் என் சீனியரைப் பத்தி. இனி ஒரு வார்த்தை அவரைப் பத்தி தப்பா பேசுன பிரண்ட்-னு கூட பார்க்க மாட்டேன். ஏன்னா? அவர் மனசுல நான் மட்டும் தான் இருக்கேன்-னு எனக்கு எப்பவோ தெரியும். அதே மாதிரி என் மனசுலையும் அவர்தான் இருக்காரு-ன்னு அவருக்கு தெரியும்” என சொல்லிவிட்டு பார்த்தியின் அருகில் சென்றாள் மித்ரா.
அதைப்பார்த்து மூவரும் அதிர்ச்சியில் நிற்க “எனக்கு பர்த்டே சாக்லெட் எடுத்துக்கோங்க” என அசால்டாக சாக்லெட்டை நீட்டினாள் மித்ரா.
அவன் அசையாது அவளையே பார்க்க, அவள் அவன் சட்டைப் பையில் வைத்து விட்டு அங்கிருந்து நகர்ந்தாள்.
“டேய் பார்த்தி” என உழுப்பினாள் ஸ்வீட்டி.
வேகமாக சுற்றிப்பார்க்க, அங்கே மித்ரா-வும் இல்லை. சாரு-வும் இல்லை.
“என்னாச்சுடா? மறுபடியும் கனவா? இன்னிக்கு நான் அடி வாங்குனேனா? இல்ல அந்த சாரு அடி வாங்குனாளா? உனக்கு பார்த்திபன்-னு உங்கப்பா பேரு வச்சாலும் வச்சாரு. டெய்லியும் ஒரு பார்த்திபன் கனவா தான் கண்டுகிட்டு இருக்க” என சொல்லிவிட்டு ஸ்வீட்டி சென்றாள்.
அப்போதும் சற்றும் அலட்டிக்கொள்ளாமல், என்றாவது ஒரு நாள் இந்த பார்த்திபனின் கனவு பலிக்கும் என்ற நம்பிக்கையில் இந்த பார்த்தி.
சொல்லிய காதலை விட, சொல்லா காதலுக்கு சக்தி அதிகம். ஆனால் சொல்லிய காதலே சென்றுவிடும் காலத்தில் சொல்லா இக்காதல் வெல்லுமா?
முற்றும் 🙏🏻
Ammu Sathish
சூப்பர்
Santhanalakshmi S
super sissy🎉🎉🎉 nichayam oru nal parthi yoda love avan kuda mithu va serthu vaikum😍❤❤❤❤❤
Anbu Anbu
super,super