கதிர் நிலாவின் கார் கதவை திறந்து விடப் போக, அதை தடுத்து அவள் ஏதோ சொல்ல முயற்சிக்க, அதற்குள்ளாக அவள் இடையோரம் கைக் கொடுத்து, தன் பக்கம் இழுத்துப் பிடித்து அவள் கன்னத்தில் அழுத்தி இதழ் பதித்தான்.
அவனின் முத்தத்தில், இங்கே இவளின் விழிகள் ஒரு நொடி அவளையும் மீறி மூட, அதில் சிறு சிரிப்புடன் அவளின் மறு கன்னத்தில் அதை விட அழுத்தமாய் முத்தமிட்டான். அந்த முத்தத்தில் திடுக்கென்று கண்ணைத் திறந்தவள், சிறு கோவத்துடன் “என்னப் பண்றீங்க?” என்று விலக முயன்றாள்.
ஆனால் அவனோ அவளை கொஞ்சமும் நகர விடாது, மேலும் இறுக்கிப் பிடித்து, “என் வேலையத்தேன் பாக்கேன்” என்றான். “இதுக்குத்தேன் உங்கள ஐஜி அனுப்பி வச்சாகளா?” என்றவள் சிறு கோவத்துடன் அவன் சட்டையில் கை வைத்து தள்ளியப்படி விலகி நின்றாள்.
இம்முறை அவளை விலகவிட்டவன், அவள் பக்கமாய் நெருங்கி, “இம்புட்டு அழகா இருந்தா, மத்த வேலைய நான் எப்படி பாக்க?” என்றான்.
அவனின் நெருக்கத்தில், அவனின் சுவாசமும், அவன் அடித்திருந்த செண்ட் வாசமும் அவள் நாசியை தழுவி, அவன் வேர்வையில் முகம் புதைக்க சொல்லி நச்சரித்தது.
ஆனாலும் அதை வெளிக்காட்டாது, மேலும் ஒரு அடி விலகி, “இதொன்னும் வூடு இல்ல. அந்த நினப்பு கொஞ்சமாச்சும் இருக்கட்டும். அதுவும் போக” என்றவள் ஏதோ சொல்லும் முன்னே, “வூடா இருந்திருந்தா, இன்னேரம் கன்னத்துலையா கொடுத்திருப்பேன்?” என்று நக்கலாய் கேட்டான்.
அவனின் கேள்வியில் சிறிதாய் வெட்கம் எட்டிப் பார்க்க, அதையும் மறைத்து, “பேசுனதெல்லாம் மறந்துட்டீங்க போல?” என்று கடுப்பாய் கேட்டாள். அவளின் வார்த்தையில், “ஏன் ஞாபகம் இல்லாம? காலையிலையே நினச்சேன். இப்பத்தேன் கொடுக்க வாட்டமா இருந்திச்சு கொடுத்துட்டேன். இன்னும் கூட என்னென்னமோ பண்ண சொல்லுது. ஆனாலும், கலெக்டர் மேடமா போயிட்டீங்க. அதுவும் பொது இடம்னு வேற சட்டம் பேசுவீங்க. அதேன், டூட்டி முடிஞ்சிருச்சின்னு ஞாபகப்படுத்துனேன்” என்று அந்த காரில் சாய்ந்து நின்றப்படி கூறினான்.
அவனின் நக்கலில் அவளோ, இன்னும் கூட ஏதோ பேசப் போக, அதற்குள் ட்ரைவர் அங்கு வந்திருக்க, அவளோ ஏதும் சொல்லாது காரின் பின் சீட்டில் சென்று அமர்ந்தாள்.
“மேடம் கிளம்பலாமா?” என்று கேட்க, அவளோ வெளியில் நின்றிருந்த கதிரைப் பார்த்தாள்.
அவனோ, “என் டூட்டி டைம் முடிஞ்சிருச்சி மேம். கிளம்புறேன்” என்று சொல்லியப்படி அங்கிருந்து செல்லப் போக, இங்கே இவளுடைய கோவம் கடகடவென்று கூடியது.
“உங்க வண்டி ஆபிஸ்லத்தேன்ன நிக்குது?” என்று பல்லைக் கடித்தப்படி அவள் கேட்க, “ஆமா, ஆனா” என்று அவன் மறுத்து பேசும் முன்னே, “என்ன பத்திரமா வூட்டுக்கு கொண்டு போயி சேர்க்கிறதும், உங்க வேலத்தேன்ன. புல் டைம் புரோடக்சன் கொடுக்கத்தேன்ன உங்கல அனுப்பியிருக்காக?” என்று அழுத்தம் திருத்தமாய் கேட்டாள்.
அதற்கு மேல், அவன் ஏதும் பேசாது, ட்ரைவர் சீட்டுக்கு அருகில் சென்று அமர்ந்தான். அவளோ அதன் பின்னே சற்று அமைதியானாள். ஆனாலும் கூட அவன் கொடுத்த முத்தமும், அவன் மீசையின் உரசலும், வாசமும் அவளை என்னமோ செய்தது. நீண்ட வருடங்களுக்கு பின்னான, அவனின் முத்தம் பெண்ணவளை அமர கூட விடவில்லை.
“மேடம் இப்போ ஆபிஸுக்கு போகனுமா?” என்று ட்ரைவர் கேட்க, “இல்ல நீங்க வீட்டுக்கே போங்க” என்று சொல்லிவிட, கதிரோ கண்ணாடி வழியே பின்னே அமர்ந்திருந்தவளைப் பார்த்தான். அவளோ பார்வையாலையே முறைக்க, அவனோ பட்டென்று கண்ணடித்தான்.
அதில் அவள் தடுமாறி முகத்தை திருப்ப, அவளின் மனமோ சலனப்பட்டது. அதை ரசித்தப்படி அவன் சிரிக்க, அவனின் சிரிப்பில் தொலைய துடித்த மனதை இழுத்துப் பிடித்தாள்.
அதன் பின் ட்ரைவர் வீட்டின் முன்னே காரை நிறுத்த, “நாளைக்கு கொஞ்சம் சீக்கிரம் வர்ற மாதிரி இருக்கும். டைம் என்னென்னு கால் பண்ணி சொல்றேன்” என்று சொல்லியப்படி காரை அனுப்பினாள்.
அனுப்பி விட்டு திரும்ப, அங்கே கதிர் இல்லை. அதில் குழப்பமாய், “இங்கத்தேன்ன இருந்தாரு. எங்கப் போனாரு?” என்று யோசித்தப்படி அவள் திரும்ப, அவளின் முன்னே பட்டென்று வந்து நின்றான்.
அதில் ஒரு நொடி அதிர்ந்து அடுத்த நொடியே அவனை முறைத்து, “கொஞ்சமாச்சும் பாக்குற வேலைக்கு ஏத்த மாதிரி நடந்துக்கோங்க. உங்க இஷ்டத்துக்கு பண்ணிட்டிருக்கீங்க. ஆறாச்சும் பார்த்தா, என்னாகும் தெரியுமா?” என்று கோவமாய் கேட்டாள்.
அதில் அவனோ, “என் வேலையத்தேன் பாத்தேன். அதுக்கெல்லாம் கோவப்பட்டா நான் என்னத்த பண்றதாம்” என்று சொல்லியப்படி அவள் கையில் இருந்த சாவியை வாங்கி கதவைத் திறந்தான்.
“எது? நீங்க அங்க வச்சி பண்ணது உங்க வேலையா?” என்று கோவமாய் அவள் கேட்க, அடுத்த நொடி அவளை மீண்டும் தன் அணைப்புக்குள் கொண்டு வந்தவன், “நான்த்தேன் சொன்னேன்த்தேன்ன. இம்புட்டு அழகா பக்கத்துல வந்து நின்னா, எந்தவொரு புருஷனும் அப்படித்தேன் நடந்துப்பான்” என்றவனின் விழிகளுக்கு நேர் எதிரே அவள் விழிகள் இருந்தது.
அதில் அவள் தடுமாறினாள். அவனின் பிடிக்கு கட்டுப்பட்டே பழகிவிட்டாள். இப்போதும் அவனின் அணைப்புக்குள் வந்ததும் மற்றது எல்லாம் மறந்து அவன் மட்டுமே பெரிதாய் தெரிய, அவள் அவனைப் பார்க்காது விழியை தாழ்த்தினாள்.
அதில், அவள் செவ்விதழை குறி வைத்து, கொஞ்சம் கொஞ்சமாய் அவன் நெருங்க, அதற்குள் நிலாவுடைய மொபைல் சத்தமாய் அடித்தது. அதில் சட்டென்று அவள் அவனை விட்டு விலகி நிற்க, அவனோ, “செரி நீ போன் பேசு. நான் செத்த வெளிய போயிட்டு வந்திடுறேன்” என்று சொல்லியப்படி அங்கிருந்து கிளம்பியிருந்தான்.
“எங்கத்தேன் போறீங்க?” என்று வாய் வரை கேட்க வந்த கேள்வியை, கேட்காது அப்படியே அங்கிருந்த ஹால் சோபாவில் அமர்ந்துக் கொண்டாள்.
அவனின் மீது கோவம் என்று ஒரு மனம் சொல்ல, இன்னொரு மனமோ அவனுடைய நெருக்கத்தில் கரைந்துக் கொண்டிருந்தது. அதிலும் நீண்ட நாட்களுக்கு பின், அவன் நேசத்தில் குளித்தவளுக்கு, ஏனோ கரை சேரும் நினைவே இல்லை.
அதன் பின் தாமதமாக வந்தவன், அங்கிருந்த இன்னொரு அறையில் தங்கிக் கொண்டான்.
அதில் நிலாவுக்கு இன்னும் தான் கோவம் வந்தது. ஆனாலும் வெளிக்காட்டிக் கொள்ளவில்லை.
அப்படியாக ஒரு வித இறுக்கத்துடனும், அவ்வப்போது கதிரின் சேட்டையாலும், அடுத்த இரண்டு வாரம் சரசரவென ஓடியிருந்தது.
நிலாவும் அங்கு சேர்ந்து ஒரு மாதமாகியிருக்க, இப்போது அவளுக்கு அங்கு என்ன நடக்கிறது? என்ன செய்ய வேண்டும்? என்பது பத்திய தெளிவான புரிதலும் கிடைத்திருந்தது. ஆனால், இந்த கதிரின் நடவடிக்கைத்தான் அவளை குழப்பிக் கொண்டே இருந்தது. அவளுடன் அவள் வீட்டில் இருக்கிறான் என்றுத்தான் பெயர். அவளுடன் சேர்ந்தும் வர மாட்டான். கிளம்பும் போதும் உடன் வர மாட்டான். வீட்டுக்கு வந்தப் பின்னும் ஏதாவது வேலை என்று சொல்லிவிட்டு வெளியில் கிளம்பிவிடுவான்.
அவள் வேலைப் பற்றி எல்லாம் தெரியும் தான். ஆனாலும் கூட மனம் என்னவோ அவனைப் மட்டுமே யோசிக்கும், இப்படியாகவே அன்றைய தினமும் சென்றது.
அன்று அலுவலகத்தில் இருந்தவளுக்கு வீட்டில் இருந்து அழைப்பு வந்திருக்க, அவளோ ஒரு வித எரிச்சலுடன், “என்ன சித்தி. அதேன் சொல்லிட்டேன்தேன்ன, நான்லாம் எங்கேயும் வரல. நீங்க போயிட்டு வாங்க” என்றாள்.
“என்னடி? வர முடியாதுன்னு சொல்ற அளவுக்கு நீ அம்புட்டு பெரியாளாகிட்டீயோ? வந்தேன்னு வை, தர தரன்னு இழுத்துட்டு வந்திடுவேன்” என்று தாமரை கத்தும் கத்தல் இங்கே கேட்டது.
அதில் நிலாவோ, “சித்தி இங்க முக்கியமான வேலையில இருக்கேன் பொறவு பேசுறேன்” என்று கால்லை கட் செய்திருந்தாள்.
அதைக் கேட்ட தாமரையோ, “ஊர் உலகத்துல இவளுக்கு மட்டும்த்தேன் வேல கெடக்கா, கலெக்டர் ஆனாலும் ஆனா, ரொம்பத்தேன் பண்ணிட்டு திரியிறா. இந்த வூட்டுல அத்தனப் பேரும் அவளுக்கே சிங் சாங் போட்டுட்டு சுத்துறீங்க” என்று கோவமாய் பேசினார்.
“ச் என்னக்கா நீ? நான் பொறுமையா பேசியிருப்பேன். நீத்தேன் தேவையில்லாம கோவப்பட்டு பேசி. இப்போ பாரு நிலா போன்ன கட் பண்ணிருச்சி” என்றார்.
“இங்கனப்பாரு. எனக்குத் தெரியாது. குல தெய்வ கோவிலுக்கு, அவ வந்தே ஆகனும். என் தம்பி வந்து தனியா நிப்பான்னா? இந்த விஷயத்துலையும் அவ இஷ்டத்துக்கே வீட்டீங்கன்னா, அம்புட்டுத்தேன்” என்று கோவமாய் கூறினார்.
கதிரவனுக்கு மொட்டைப் போட்டு காது குத்துவதற்கு ஏற்பாடு செய்திருந்தனர். இரண்டு வயதிலேயே செய்திருக்க வேண்டியது, ஆனால், கதிர் ட்ரெய்னிங்கில் இருந்ததால், அது தள்ளிப் போயிருக்க, இப்போது அந்த விழாவை செய்ய முடிவெடுத்திருந்தனர்.
ஆனால் நிலாவோ அந்த ஊருக்கோ? இல்லை அந்த வீட்டுக்கோ செல்ல தயாராகவே இல்லை. அவர்கள் இன்னும் கொஞ்சம் அழுத்தி அழைத்தால், அவள் செல்ல வேண்டும் என்ற காரணத்தினால் தான், அவர்களிடம் பேசுவதையே தவிர்த்தாள்.
அன்று வெள்ளிக் கிழமை என்பதால், சற்று சீக்கிரமே அலுவலகத்தில் இருந்து கிளம்பினாள். அவள் காரின் பின்னே பைக்கில் வந்த கதிர், அவள் வீட்டுக்குள் சென்றதும் அங்கிருந்து சென்றிருந்தான்.
ஏற்கனவே வீட்டைப் பற்றி நினைத்து கோவத்தில் இருக்க, இப்போது அத்தனையும் கதிரின் மீதுத்தான் திரும்பியது.
“எல்லாத்தையும் பண்னிட்டு, அத சரி பண்ணணும்னு யோசிக்காம, அவுக இஷ்டத்துக்கு ஊர சுத்திட்டிருக்காக. ஆனா, அதெல்லாம் ஆறு கண்ணுக்கும் தெரியல. என்னோட கோவம் மட்டும்த்தேன் எல்லாத்துக்கும் தெரியுது” என்று புலம்பியவள் உடை மாற்றிவிட்டு அவனுக்கும் சேர்த்து டின்னர் ரெடி செய்ய ஆரம்பித்தாள்.
ஆனால் அவனோ வருவது போல் தெரியவில்லை. அமைதியாய் அவளறைக்கு சென்று படுக்கப் போக, அப்போதுத்தான் கதிர் அங்கு வந்தான்.
அவன் வந்தது தெரிந்ததும் கோவமாய், “ச் உங்க மனசுல என்னத்தேன் நினைச்சிட்டு இருக்கீங்க? இதுத்தேன் வூட்டுக்கு வர்ற நேரமா?” என்று கேட்டப்படி அவனிடம் சென்றாள்.
ஆனால் அவனோ, அவளைப் பார்த்ததும், தன் கையை பின்னே மறைக்க, அதில் பேச வந்த வார்த்தையை விட்டு விட்டு, “என்னத்த மறைக்கிறீக?” என்றாள்.
“இம்புட்டு நேரம் தூங்காம, என்னத்தப் பண்ணிட்டிருக்க? காலையில வேல இருக்குல்ல” என்றப்படி அவளைக் கடக்க சென்றான்.
அதற்குள் அவன் கரத்தை எட்டி அவள் பிடிக்க, “ஸ்” என்று வலியில் மெலிதாய் முணங்கினான். அதில் வேகமாய் அங்கிருந்த லைட்டை ஆன் செய்து அவன் கையைப் பார்த்தாள்.
முழங்கையில் பலமாய் அடிப்பட்டிருந்தது. பார்த்தவளுக்கு, நொடியில் மற்ற விஷயங்கள் பின்னே செல்ல, “என்னாச்சு மாமா? எப்படி அடிப்பட்டிச்சு?” என்று அவன் கையைப் பற்றினாள்.
அவளின் மாமா என்ற அழைப்பில், அவன் தன்னை மறந்து அவளைப் பார்த்திருக்க, அவளோ, “முதல்ல வந்து உட்காருங்க” என்று சோபாவில் அமர வைத்து, அவன் கையை மீண்டும் பார்த்தாள். முழங்கையில் சற்று ஆழமாகவே காயம் பட்டிருக்க, அங்கிருந்த பர்ஸ்ட் எய்ட் பாக்ஸை எடுத்து வந்து அந்த காயத்தை துடைத்து மருந்திட ஆரம்பித்தாள்.
ஏனோ அவனின் காயத்தைப் பார்த்தவளின் கண்களில் இருந்து கண்ணீர் துளி அவனுடைய கரத்தை நனைக்க, “ஹேய் நிலா. அழுவுறீயா?” என்று அவள் தாடையை நிமிர்த்திப் பார்த்தான்.
அவள் கண்ணெல்லாம் இரத்தமாய் சிவந்திருக்க, “ஹேய் இதெல்லாம் ஒன்னுமே இல்ல” என்று சொல்லி முடிக்கும் முன்னே, “உங்களுக்கு எதுவுமே ஒன்னுமில்லத்தேன். ஆனா, உங்களுக்கொன்னுன்னா, எனக்கு எதுவுமே இல்லாம போயிடும்” என்று கண்ணீரோடு சொல்லிவிட்டு அங்கிருந்து எழுந்தாள்.
அவளின் வார்த்தையில், இங்கே கதிரோ, அவளை விழி அகலாது பார்த்தான். அவளோ கண்ணீரைத் துடைத்தப்படி, கிச்சனுக்குள் சென்றாள்.
“இன்னும் உன் மனசு அப்படியேத்தேன் இருக்கு. சீக்கிரமே என் தென்றல்ல நான் மீட்டுடுவேன்” என்று தனக்குள்ளே சொல்லிக் கொண்டான் கதிர்.
(என்னமோ நீயும் சொல்ற. நானும் கேட்கிறேன். ஆனா, எனக்கென்னமோ நீ கம்முன்னு இருந்தாலே அந்தப் புள்ள உன்ன ஏத்துக்கும், நீ இப்படி எக்கு தப்பா ஏதாச்சும் இழுத்துட்டே இருந்த, அந்தப் புள்ளையும் சண்டைய இழுத்துட்டேத்தான் போகும். சரி அடுத்து என்னென்னு அடுத்த எபிசோட்ல பாக்கலாம். அதுக்கு முன்னாடி இன்னிக்கு எபிசோட்ல உங்களுக்கு பிடிச்ச சீன் எதுன்னு மறக்காம கமெண்ட்ல சொல்லுங்க. அப்படியே எப்பவும் போல லைக் பண்னிட்டு உங்க பிரண்ட்ஸ் கூட ஷேர் பண்ணுங்க)
தென்றல் தீண்டுமா?..
Anbu Anbu
சூப்பர்
Keerthi Keerthi
please sister 2 ud podunga pls
gayathri Shini
Super sister
Thiruviswa Viswa
continue