தென்றல் – 139

அலுவலகத்துக்கு வந்த நிலாவுக்கு, என்ன முயன்றும் வேலையில் தன் கவனத்தை செலுத்த முடியவில்லை. ஜன்னலையும், தன் முன்னே இருந்த ஆர்டர் காபியையும் தான் மாறி மாறி பார்த்துக் கொண்டிருந்தாள். ஒவ்வொரு தடவை ஷீபா உள்ளே நுழையும் போதும், அவள் ஏதோ ஒன்றை எதிர்பார்ப்பது போல் அவளுக்கே தோன்றியது.

அதில் அவளுமே, “மேடம், ஏதாச்சும் வேணுமா?” என்று கேட்க, “ஆ..ங் இல்ல. இல்ல. அந்த ட்வாட் பைல் எந்த ஸ்டேஜ்ல இருக்கு?” என்று கேட்டாள். உடனே அவளும் அதற்கான விளக்கத்தைக் கொடுக்க, “சரி, இன்னிக்கு எதுவும் இம்பார்டண்ட் மீட் இருக்கா?” என்றாள்.

அவளின் கேள்வியில் ஷீபாவோ, நிலாவை ஒரு வித ஆச்சர்யத்துடன் பார்த்தாள். ஏனெனில் இங்கு வந்த நாளில், இருந்து அவள் என்ன செய்ய வேண்டும் என்று யாரிடமும் கேட்டது கிடையாது. யாரும் நினைவுப்படுத்தும் முன்னே, அவளே, அதை முடித்து விடுவாள். இப்போது அவளிடம் கேட்கவும் ஒரு நொடி தயங்கி பின், அன்றைக்கான அட்டவனையை கூறினாள்.

அதை எல்லாம் கேட்டவள், “ஒகே. அந்த ஈபி இஸ்யூ முடிஞ்சதும், எனக்கு ஒன்ஸ் ரிமைன்ட் பண்ணியிருங்க” என்றாள்.

“ஒகே மேடம்” என்று சொல்லிய ஷீபா வெளியில் செல்லாது அவளைப் பார்த்து, “மேடம் ஆர் யூ ஒகே?” என்று கேட்க, நிலாவோ நிமிர்ந்து ஒரு பார்வைத்தான் பார்த்தாள்.

அவள் பார்வையில் என்னத்தை கண்டாலோ, அடுத்த நொடி, “ஒகே மேடம் வரேன்” என்றப்படி வெளியில் வந்திருந்தாள்.

அதென்னவோ அவளிடம் யாராவது அக்கறையாக விசாரித்தாலே அவளுக்கு பிடிப்பதில்லை. அதற்கு முக்கிய காரணம். அவளின் மாமா கதிர். அக்கறை காட்டினாலே, அவன் ஒருவன் மட்டுமே வந்து நிற்பான். இப்போதுமே மனம் அவனைத் தான் சிந்தித்தது.

“ச் என் கூட வர மாட்டேன்னு சொல்லிட்டு போனாருத்தேன்ன? பொறவெதுக்கு நான் அவர பத்தியே யோசிச்சிட்டு இருக்கேன். எப்பவோ வரட்டும், போகட்டும் எனக்கென்ன” என்று தனக்குள்ளே சொல்லியவள், முயன்று தன் மனதை வேலையில் திசைத் திருப்பினாள்.

பொழுது சரசரவென்று ஓட, மதிய வேளையில் கூட, நிமிர முடியாத அளவுக்கு, அவளுக்கு சில வேலைகள் இருக்க, சாப்பிடவும் மறந்து வேலையில் மூழ்கிப் போயிருந்தாள்.

அவள் சாப்பிடாது, ஷீபாவும் சாப்பிட தயங்க, நிலாவோ, “இந்த இயர் இல்ல ஷீபா. நான் கேட்டது அதுக்கு முன்னாடி உள்ள குவார்டர் பைல்ஸ்” என்று சிறு சிடுசிடுப்புடன் கூறினாள்.

“ஓ சாரி மேடம். இப்போ எடுத்துட்டு வந்துடுறேன்” என்ற ஷீபாவுக்கோ பசியில் எல்லாமே பாதியாய் தான் கேட்டிருக்க, அவள் குரலே உள்ளே போயிருந்தது.

அப்போதே அவளை நிமிர்ந்துப் பார்த்தவள் மணியைப் பார்த்து, “ஷீபா லஞ்ச் முடிச்சிட்டு வாங்க” என்றாள். “இல்ல மேடம் நான் எடுத்துக் கொடுத்துட்டே” என்று அவள் ஏதோ சொல்லப் போக, “இன்னும் ஒன் ஹவர்ல, கன்ஸ்ட்ரக்சன் விசிட் போகனும். டைம் இல்ல” என்று கடுப்பாய் கூறினாள் நிலா.

அதில் அதற்கு மேல் எதுவும் சொல்லாது ஷீபா சாப்பிட சென்று விட, இப்போது நிலாவின் மனமோ, “ஆறு மேலையோ உள்ள கோவத்த இவுங்க மேல ஏன் காட்டுற?” என்று எடுத்துரைத்தது.

அதில் கையில் கட்டியிருந்த கடிகாரத்தைப் பார்த்தவளோ, “ச் இம்புட்டு நேரமா என்னத்தேன் பண்றாக? சாப்டாகளா? இல்லையா?” என்றவளுக்கு சாப்பிடவும் மனம் இல்லை. அலுவலகத்தில் அனைவரும் சாப்பிட எழுந்து சென்றிருக்க, அவளுக்கு கொண்டு வந்து கொடுத்த சாப்பாட்டை பிரிக்க கூட மனமின்றி அப்படியே அமர்ந்திருந்தாள். காலையிலேயே அவள் இடை தொட்டு, அவன் தூக்கி அமர வைத்த நினைவு சட்டென்று வர, “ச் இது ஆவுறது இல்ல. நிலா பி ஸ்ட்ராங். அவுகத்தேன் உன்ன வேணாம்னுட்டாகத்தேன்ன. வேலைய பாரு” என்று சொல்லியப்படி நிமிர, கதிரோ அதே வாடா புன்னகையுடன் அவனின் முன்னே அமர்ந்திருந்தான்.

ஒரு நொடி மீண்டும் தன் பிரம்மையோ என்று தோன்ற, அவனோ, “இம்புட்டு நேரம் சாப்பிடாம, யோசிக்கிற அளவுக்கு பிரச்சன பெருசோ?” என்று சிறு கேலியுடன் கேட்டான்.

அதில் அவனைப் பார்த்தவளோ சிறு முறைப்புடன், “இதுத்தான் டூட்டிக்கு வர்ற நேரம்மா?” என்று கேட்டாள்.

அதில் அவனோ, புருவத்தை சுழித்து பின், “கலெக்டர் மேடம் வெளிய கிளம்புனாத்தேன்ன, எனக்கு வேல. மேடம்த்தேன் இன்னிக்கு காலையில இருந்து, இந்த ரூமுக்குள்ளத்தேன்ன இருக்கீங்க” என்றான்.

அதற்கும் அவள் ஏதோ சொல்லப் போக, “செரி லேட்டா வந்தது தப்புத்தேன். மேடம் என்ன தண்டன கொடுக்கிறாகளோ ஏத்துக்கிறேன்” என்று கையை தூக்கி சரண்டர் ஆனான்.

அவனின் வார்த்தையில், அவளோ எதுவும் சொல்லாது அமைதியாய் தன் முன்னே இருந்த பைலைப் பார்க்க ஆரம்பித்தாள்.

அதைப் பார்த்தவனோ, “சாப்டுக் கூட, எமக்கு என்னத் தண்டன கொடுக்கிறதுன்னு யோசிக்கலாம்” என்றான். அவளோ அவன் பேசுவது காதில் விழுந்தாலும், அதை கேட்காதது போல், கவர்ன்மெண்ட் அப்ரூவல் கேட்டு வந்திருந்த அந்த பில்டிங் பைலை மும்முரமாய் திருப்பிக் கொண்டிருந்தாள்.

வீடாக இருந்திருந்தால், கதிரின் அணுகுமுறை நிச்சயம் வேறாக இருந்திருக்கும். ஆனால் அவள் அலுவலகத்தில் இருக்க, இப்போது அவனால் உரிமையாய் எதுவும் சொல்ல முடியாத நிலை.

அதில் அவனோ, “எம் மேல கோவம்னா, அத எம் மேல காமிக்க வேண்டியதுத்தேன்ன, எதுக்கு அத சாப்பாட்டுல காட்டனும்?” என்று பொறுமையை இழுத்துப் பிடித்து சொல்ல, அவளோ அவனைப் பார்த்து, “இன்னும் தேர்டி மினிட்ஸ்ல, வெளிய கிளம்பிடுவேன். உங்க டூட்டி ஸ்டார்ட் ஆகிடும். சோ” என்றவள், அங்கிருந்த சாப்பாட்டை கண் காட்டினாள்.

அதில் அவனோ, சிறு கோவத்துடன், “கலெக்டர் மேடமே பசி தாங்குறப்ப, போலீஸ்காரனும் தாங்கலாம்” என்று சொல்லியப்படி அங்கிருந்து கடுப்பாய் எழுந்தான்.

“நான் மயக்கம் போட்டா, தூக்கிட்டு போக, சில பேருக்கு தெம்பு வேணும்” என்று உதட்டை சுழித்து சொல்லியவள், வேலையில் மூழ்கியிருந்தாள். அவள் சொல்லியதில் அவன் அவளை முறைக்க முயன்றாலும், ஏனோ அவள் சொல்லிய வார்த்தையில் அவனுக்கு சிரிப்புத்தான் வந்தது.

அதில் எழுந்த வேகத்தில் மீண்டும் அவள் முன் அமர்ந்தவன், “மயக்கம் போடலன்னாக் கூட, தூக்கிட்டுப் போக உடம்புல தெம்பு நெறையாவே இருக்கு. அதனால, எனக்காக யோசிச்சு ஒன்னும் எடைய குறைச்சிக்க வேண்டாம்” என்று சிறு கேலியோடு சொல்ல, என்ன முயன்றும் அவள் முகம் சிவப்பதை அவளால் தடுக்க முடியவில்லை.

இருவருக்குமே, கடந்த கால நினைவு கண் முன்னே வந்து நிற்க, “ச் இப்புடி சாப்டா, பொறவு எனக்குத்தேன் கஷ்டம்” என்று கதிர் அவளுக்கு ஊட்டியப்படி சொல்ல, “உங்களுக்கு என்ன மாமா கஷ்டம்?” என்று உணவை வாங்காது கேட்டாள்.

“ஆமா. பின்ன மாமாவ பார்த்தத்தேன்ன? மாமாவ தாங்கிக்க வேண்டாமா?” என்று அவள் செவியோரம் குனிந்து, அவன் ரகசியமாய் சொல்லியிருக்க, “ச்சி போங்க மாமா” என்று அவன் சட்டையிலேயே வலிக்காது அடித்தாள்.

பெண்ணவளின் வெட்கத்தை ரசித்தவன், “என்னத்தேன் என் பொண்டாட்டின்னு பாத்தாலும், இப்புடி இத்தனூண்டா இருந்தா, ஸ்கூல் புள்ளைய பாக்குற மாதிரித்தேன் பாக்க தோனுது” என்று கிண்டலாய் அவன் சொல்ல, “ஆறு நீங்க அப்படித்தேன் நேத்து என்ன பார்த்தீங்களா?” என்று கேட்டவளின் வார்த்தையில் குறும்பும், வெட்கமும் சேர்ந்து கூத்தடித்தது.

அவளின் பேச்சில், “காலேஜூக்கு போயி இதத்தேன் கத்துக்கிட்டீயா நீ?” என்று அவள் காதைப் பிடித்து திருக, “பின்ன, நீங்கத்தேன் சின்னப் புள்ள சின்னப் புள்ளன்னு சொல்றீக. பின்ன நானாத்தேன்ன கத்துக்கனும்?” என்று கிண்டலாய் கேட்டு கண்ணடித்தாள்.

அதில் அவனுக்கே மெலிதாய் வெட்கம் எட்டிப் பார்க்க, “ச் அமைதியா சாப்பிடு” என்று அவளை அதற்கு மேல் பேச விடாது அவள் வாயில் உணவை திணித்தான்.

அந்த நினைவில் இருவரின் முகமும் பிரகாசிக்க, அதற்குள்ளாக, “அவ சாப்பிடாம கெடந்தா எனக்கென்ன வந்திச்சு? ஒழுங்கா போற இடத்துல, போற வேலைய ஒழுங்கா பாக்க சொல்லுங்க. சும்மா, இந்த பிடிவாதம் எல்லாம் என்கிட்ட வேண்டாம். பசிச்சா, அவளே சாப்பிடுவா” என்று கோவமாய் கதிர் அவள் முகத்தைக் கூட பார்க்காது சொல்லிய வார்த்தைகளும் சேர்ந்தே நினைவுக்கு வர, சட்டென்று, “பசிச்சா, எங்களுக்கே சாப்பிடத் தெரியும்” என்றாள்.

சட்டென்று அவள் முகத்தில் குடியிருந்த வெட்கம் மறைந்து, சிறு இறுக்கம் கூடியிருக்க, கதிரின் மனமோ, “பொறும ராசா. நீ சொன்னது எல்லாத்தையும் அவ கொட்டி முடிக்கட்டும். பொறவு பேசிக்கலாம். இப்பவே நீயும் முறுக்கிட்டு திரிஞ்ச, உன் அக்கா மவ உனக்கு மேல முறுக்குவா” என்று நிதர்சனைத்தை எடுத்துரைத்தது.

“பொறவு கலெக்டர் மேடம் விருப்பம்” என்று சொல்லிய கதிர் அங்கிருந்து செல்ல, அதற்குள்ளாக ஷீபாவும் சாப்பிட்டு முடித்து அங்கு வந்திருந்தாள்.

கதிரைப் பார்த்ததும் ஒரு நொடி அப்படியே நின்றவளின் கண்களில் அவனை ரசிப்பது அப்பட்டமாய் நிலாவுக்கு தெரிந்தது. இருவருமே அவளின் அறை வாசலில் எதிர் எதிராய் நின்றிருக்க, இங்கே நிலாவுடைய கையில் பேப்பர் வெயிட் இறுக்கப்பட்டது.

“கதிர் சார்” என்றவள் எல்லாப் பக்கமும் சேர்த்து இழித்து வைக்க, கதிருக்கோ, நிலாவின் அந்த இறுக்கமே மனதிற்குள் ஓடியிருக்க, ஷீபாவின் பார்வையை கூட அவன் கவனிக்கவில்லை.

“குட் ஆப்டர்னூன் ஷீபா” என்று வழக்கமான அவன் புன்னகையை அவளிடம் கொடுக்க, “இந்த பார்மல்ல விட நேத்து போட்டிருந்த கேசுவல் உங்களுக்கு செம்மையா இருந்திச்சு சார்” என்று அவள் சொல்ல, இங்கே நிலாவுடைய கோவம் கடகடவென்று கூடியது.

அதை அறியாதவனோ, “தேங்க்ஸ் பார் யுவர் காம்பிளீமெண்ட். பட், கலெக்டர் மேடம் தான், ஆபிஸ்ல பார்மல் அவுட் பிட் தாண்டி, வேற எதுவும் போட கூடாதுன்னு சொல்லிட்டாங்க. என்ன கேசுவல்ல நீங்க பார்க்கனும்னா, அத நீங்க அவங்ககிட்டத்தான் சொல்லனும்” என்று கிண்டலாய் சொல்லிவிட்டு அவன் அங்கிருந்து நகர்ந்தான்.

அப்போதே ஷீபாவுக்கு நிலாவின் நினைவே வர, “ஐயோ மேடம் அப்பவே பைல் கேட்டாங்க” என்று புலம்பியப்படி அந்த பைலை எடுத்துக் கொண்டு, அவசரமாய் அங்கு வந்தாள்.

கதிரைப் பார்த்து அவள் ஜொல்லு வடித்ததைப் பார்த்தவளின் காதில் இருந்து புகை வராத குறைத்தான். இப்போது அவள் மூச்சு வாங்கியப்படி வந்து நிற்க, “சாப்டு வர்றதுக்கு உங்களுக்கு இவ்வளவு நேரமா? ஆபிஸுக்கு வேலைப் பாக்க வறீங்களா? இல்ல வெட்டியா நின்னு கத பேச வர்றீகளா?” என்று திட்ட ஆரம்பித்தவள், கிட்ட தட்ட ஐந்து நிமிடம் விடாது அவளை திட்டியிருப்பாள். நிலா கோவப்படுவாள் என்று அவளுக்கும் தெரியும். ஆனால் அதெல்லாம் ஒரு பார்வையோடே நின்று விட, இன்று இத்தனை கோவமாய் அவள் திட்டியதில் ஷீபாவுக்கு கண்களில் இருந்து கண்ணீரே வந்து விட்டது.

“சாரி மேடம்” என்று அவள் சொல்ல, அப்போதே நிலாவோ, “ச் என்னத்த நிலா பண்ணிட்டிருக்க?” என்று மனம் குரல் கொடுக்க, அவளோ, “டேக் திஸ் செக். பர்தரா மூவ் பண்னிடுங்க. இன்னும் பைவ் மினிட்ஸ்ல கிளம்பனும்” என்று சற்று தன்மையாகவே கூறினாள்.

“ஒகே மேடம்” என்று சொல்லிய ஷீபா அந்த செக்கை எடுத்துக் கொண்டு வெளியேறியிருக்க, இப்போது அவளின் மனமோ, “நீ ஒரு பொறுப்பான பதவியில இருக்கிறப்ப, உன் தனிப்பட்ட கோவத்த மத்தவங்க மேல எப்பவும் காட்ட கூடாது. அதுத்தேன் நீ அந்தப் பதவிக்கு கொடுக்கிற மரியாதையா இருக்கும்” என்று கதிர் சொல்லிய வார்த்தைகளை நினைவுப் படுத்தியது.

அதில் நெற்றியை நீவியவள், ஜன்னலைப் பார்க்க, அங்கே அவளுடைய காரில் ஸ்டைலாக சாய்ந்து நின்று, தன் தலையை கோதியப்படி சுற்றிப் பார்த்துக் கொண்டிருந்தான் கதிர்.

உடனே அவளின் மனமும் அவனை ரசிக்க, சட்டென்று இவ்வுலகம் வந்தவள், ஷீபாவுடன் வெளியில் வந்தாள்.

கதிரோ, ட்ரைவர் சீட்டுக்கு அருகில் அமர்ந்துக் கொள்ள, ஷீபாவும், நிலாவும் பின் பக்கம் அமர்ந்தனர். அதன் பின் அவள் மேற்பார்வையிட வேண்டியவை எல்லாவற்றையும் முடித்து விட்டு, மீண்டும் காரில் ஏறப் போக, கதிர் அவளுக்காக கதவைத் திறந்து விட சென்றான். ஆனால் அதற்கு முன்பே அவன் கரத்தின் மீது தன் கரத்தைப் பதித்த நிலா, “இது ஒன்னும் உங்க வேல இல்ல” என்று அழுத்தம் திருத்தமாய் அவன் கண்ணைப் பார்த்துக் கூறினாள்.

“அப்போ, நான் பாக்க வேண்டிய வேலைய பாக்கலாம்த்தேன்ன” என்று சொல்லியவனின் கரம் சட்டென்று அவள் இடையை அழுத்தமாய் பற்றி தன்னை நோக்கி இழுக்க, அதை சற்றும் எதிர்பாராதவள் தடுமாறி அவன் மீதே மோத, அவனோ, பட்டென்று அவள் கன்னத்தில் அழுத்தி முத்தமிட்டான்.

(ஏன்பா. பொது இடம் அதெல்லாம் உங்களுக்கு கொஞ்சமாச்சும் ஞாபகம் இருக்கா? செரி கலெக்டர் மேடம் சொன்னாலே கேட்க மாட்டான். நம்ம சொல்லி என்னாகப் போது? அடுத்து என்னென்னு அடுத்தடுத்த எபிசோட்ல பாக்கலாம். அதுக்கு முன்னாடி இன்னிக்கு எபிசோட்ல உங்களுக்கு பிடிச்ச சீன் எதுன்னு மறக்காம கமெண்ட்ல சொல்லுங்க. அப்படியே எப்பவும் போல லைக் பண்ணிட்டு உங்க பிரண்ட்ஸ் கூட ஷேர் பண்ணுங்க.)

தென்றல் தீண்டுமா?...

Comments   0

*** தென்றல் – 139 - படைப்பை ரேட் செய்யுங்கள் ***