தென்றல் – 137

ஐஜியிடம் அவன் உண்மையை சொல்லாமல் இருந்ததே நிலாவுக்கு அத்தனைக் கோவம். அதில் அவனோ அவரிடம் பேசி வைத்து விட்டு, அவளைப் பார்த்து, “பொறவென்ன ரூமுக்கு போவோம்மா?” என்றான்.

அவனின் கேள்வியில் ஒரு நொடி அதிர்ந்து பின் அடுத்த நொடியே அவனை முறைத்தவள், “அவுட் ஹவுஸ், வெளிய இருக்கு” என்று வெளியில் கையைக் காட்டினாள்.

அப்போதும் அசராது, “ஐ ஜி ஸ்பெஷல் பாதுகாப்பு கொடுக்க சொல்லிருக்காரு கலெக்டர் மேடம்” என்று சொல்ல, “வீட்டுக்குத்தேன்ன” என்று பல்லைக் கடித்தாள்.

அவளின் கோவம் அவள் மூக்கு நுனி சிவப்பதிலேயே தெரிந்தது. ஆனாலும் அதைக் கண்டுக் கொள்ளாதது போல், “வீட்டுக்குள்ளத்தேன்ன கலெக்டர் மேடம் இருக்காக. அப்போ அவங்களுக்கும் சேர்த்துத்தேன்ன வரும்” என்றான்.

“என்ன பாத்துக்க எனக்குத் தெரியும். உங்களுக்கு என்ன வேல கொடுத்தாகளோ, அத பாருங்க” என்று கடுப்பாய் அவள் சொல்ல, “என் வேலைய பாக்கத்தேன், ரூமுக்கு கூப்டேன்” என்று சீண்டலாய் அவன் கூறினான்.

அதில் அவனை இன்னும் முறைத்தவளோ, “ரூமுக்குள்ள, நீங்க பண்ண அத்தன வேலையும் இன்னமும் எனக்குள்ள அப்படியேத்தேன் இருக்கு. அதனால புதுசா நீங்க ஒன்னும் பண்ண வேண்டிய அவசியமில்ல” என்று சொல்லிவிட்டு அவளுடைய அறைக்குள் செல்ல முயற்சித்தாள்.

ஆனால் அதற்குள், அவள் அறைக்குள் புகுந்து கட்டிலில் அமர்ந்தவன், “பண்ணத சரிப் பண்ணிடத்தேன்ன வந்திருக்கேன்” என்று சொல்லி கண்ணடித்தான். அதில் அவளோ அவனைப் பார்க்காது, அங்கிருந்த கபோர்டை திறந்து அதில் இருந்து பெட்சீட்டையும் பில்லோவையும் கையில் எடுத்தாள்.

அதில் அவனோ, “அதேன் பெட்டு பெருசாத்தேன்ன இருக்கு” என்று சொல்ல, அவளோ அவனைக் கண்டுக் கொள்ளாது அறையை விட்டு வெளியில் சென்று சோபாவில் சென்று படுத்தாள்.

அவளின் செயலில், அதுவரை இருந்த விளையாட்டு தனத்தை கை விட்டவன், அவளின் முன்னே வந்து, “செரி நான் போறேன். நீ போயி உள்ளக்க படு” என்று எங்கோ பார்த்தப்படி கூறினான்.

“ஒன்னும் தேவையில்ல நீங்களே அங்கன படுங்க” என்றவள் பெட்சீட்டை இழுத்து மூடிக் கொள்ள, “ச் பிடிவாதம் பிடிக்காத நிலா. உள்ளப் போ” என்றான்.

அதில் பெட்சீட்டை விலக்கி அவனைப் பார்த்தவள், “ஆறு பிடிவாதம் பிடிக்கிறா? நானா?” என்று கோவமாய் எழுந்தமர்ந்தாள்.

அதில் அவனுக்கோ பதில் சொல்ல முடியவில்லை. ஆனாலும், “செரி நான்த்தேன் பிடிவாதம் பிடிச்சேன். இப்போ நான்த்தேன்ன சொல்றேன். உள்ள போயி படு” என்றான்.

“இங்கப் படுத்து எனக்கு பழக்கம்த்தேன்” என்று அவள் விடாது சொல்ல, “உன்ன பாக்க வந்தத தப்புன்னு சொல்றீயா?” என்று சிறு கோவத்துடன் கேட்டான் கதிர்.

“தப்பெது, சரியெதுன்னு சொல்ற உரிமை எல்லாம் எனக்கு இருக்கா என்ன?” என்று அசராது கேட்டாள்.

அதில் அவள் விழியை நேருக்கு நேர் சந்தித்தவனுக்கு, உண்மையிலேயே அவளை எதிர்கொள்ள முடியவில்லை. அதனால், அவன் எதுவும் சொல்லாது வீட்டை விட்டு வெளியில் செல்ல முயற்சித்தான்.

“நான் ஏதுமே பேசக் கூடாது அப்படித்தேன்ன? செரி பேசல. உங்களுக்கு எங்க படுக்கனுமோ படுங்க” என்று சொல்லிவிட்டு அவள் அறைக்கு சென்று படுத்துக் கொண்டாள்.

செல்லும் போது அவன் காதில் விழும்படி, “இவருத்தேன் எனக்கு பாதுகாப்பு கொடுக்கிறாராம்” என்று சொல்லிவிட்டு செல்ல, இப்போது ஏனோ முகத்தில் சிறு புன்னகை எட்டிப் பார்த்தது.

அதில் வெளியில் செல்லாது அவளறையைப் பார்த்தான். அவளோ கதவை மூடாது சென்றிருக்க, மனைவியின் கோவத்தையும், அதிலும் தன்னை காயப்படுத்த மறுப்பதையும் உணர்ந்தவன், அவளைப் பார்த்தப்படியே அங்கிருந்த சோபாவில் படுத்துக் கொண்டான்.

அவன் வெளியில் செல்லவில்லை என்பதில். அவளும் அதற்கு மேல் எதுவும் சொல்லவில்லை. அமைதியாய் கண் மூடினாள். நீண்ட வருடங்களுக்குப் பின், அவளையும் மீறி உறக்கம் அவளைத் தழுவியது.

அவன் மீது கோவம் தான். வருத்தம் தான். எளிதில் எதையும் கடந்து விட முடியாதுத்தான். ஆனாலும், அவன் அவளுடன் இருக்கிறான் என்பதே, அவளுடைய அலைப்பாய்ந்த மனதுக்கு ஒரு வித நிம்மதியைக் கொடுத்தது.

அவள் உறங்கியப் பின் அவளின் அறைக்கு வந்த கதிர், அவள் முகத்தைப் பார்த்தான். வழக்கமாய் இரவு உடை மாற்றுவாள். இன்று அவன் இருக்க, அவள் சேலையிலேயே படுத்துக் கொண்டாள்.

“சேலையில பாக்குறப்பத்தேன், கதிரு பொண்டாட்டி கணக்கா இருக்கு” என்று அவள் நெற்றி முட்டி அவன் சொல்லியிருக்க, “மிச்ச நேரம் பாத்தா?” என்றாள் நிலா.

“ஸ்கூல் படிக்கிற என் அக்கா பொண்ணுக் கணக்கா இருக்கு” என்று சொல்லி அவள் கன்னத்தில் அழுத்தி முத்தமிட்டான் கதிர்.

“இப்படித்தேன் அக்கா மவளுக்கு முத்தம் கொடுப்பாங்களா?” என்று அவள் கேட்க, “அக்கா மவளுக்கு கன்னத்துலத்தேன் கொடுக்க முடியும். பொண்டாட்டிக்குன்னாத்தேன்” என்று சொல்லியவனின் இதழ், அவள் செவ்விதழை நோக்கிப் பாய, அவளோ அவனை விலக்கி விட்டு ஓடியிருந்தாள்.

பழைய நினைவில் சில நொடிகள் நின்றிருந்தவன், அவள் திரும்பி படுத்த சத்தத்தில், இவ்வுலகம் வந்து அவளுக்கு பெட்சீட்டை மூடிவிட்டு, அங்கிருந்த சோபாவிலேயே அவளைப் பார்த்தப்படி படுத்துக் கொண்டான்.

அருகில் சென்று படுத்தால் கூட, அவள் ஒன்றும் சொல்ல மாட்டாள் தான். ஆனால், அவளிடம் பேச கூடாத வார்த்தைகளை எல்லாம் பேசிவிட்டு, இப்போது எதுவுமே நடக்காதது போல் அவளிடம் உறவாட மனம் வரவில்லை. அதே நேரம் அவள் மனதின் காயத்தையும் ஆற்ற வேண்டியிருந்தது.

அவனுக்காக அல்லாது, அவளாக தன்னை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று மனம் ஆசைபப்ட, “கல்யாணம் ஆகியும் தனியாத்தேன் படுக்கனும்னு உமக்கு விதிச்சிருந்தா என்னத்த சொல்றது?” என்று புலம்பியப்படி கண்ணை மூடினான்.

அங்கே செல்வியோ முருகேசனிடம், “ஏங்க, நம்ம வேணா ஒரு எட்டு அங்க போயி பாத்துட்டு வருவோம்மா?” என்றாள்.

அதில் தன் மனைவியின் மனதை அறிந்தவரோ, “போயி பாக்கனும்னா பாத்துட்டு வரலாம்த்தேன். ஆனா அவுகளே, இப்பத்தான் பல வருஷம் கழிச்சு, ஒன்னா இருக்காக, இப்போ நம்ம நடுவுல போயி நாட்டாம பண்ணா, நல்லாவா இருக்கும்?” என்றார்.

“அதெல்லாம் சரித்தேன் மச்சான். ஆனா, அவுக மறுக்கா சண்ட ஏதும் போட்டா, என்னத்த பண்றது?” என்றார்.

“புருஷன் பொண்டாட்டிக்குள்ள சண்டை வந்தாத்தேன் உறவு நிலைக்கும். அதுவும் போக, நம்ம நிலா புள்ளைய பத்தி உமக்கு தெரியாதா? அவ மாமன்ன என்னிக்காச்சும் விட்டு கொடுத்திருக்காளா? அவுகளுக்கு சண்டையே இருந்தாலும், அதெல்லாம் அவ உன் தம்பிய பத்திரமா பாத்துப்பா” என்றார்.

“அவ பாத்துக்க மாட்டான்னு நான் சொன்னேன்னா, அதில்ல மச்சா. ஏற்கனவே கல்யாணம் ஆகி வருஷமாகிடிச்சி. இன்னும் இதுங்க ரெண்டும் வாழாமலே இருந்தா நல்லவா இருக்கும். அதேன் மனசு கெடந்து தவிக்குது” என்றார்.

அதில் தன் மனைவியின் முகத்தைப் பார்த்தார். குழந்தையைப் பற்றித்தான் அவர் சிந்திக்கிறார் என்பதை அவர் சொல்லாமலே புரிந்தது. ஏனெனில் குழந்தை இல்லை இல்லை என்று சொல்லி அவளை வார்த்தையால் எத்தனைப் பேர் பரிகாஷம் செய்திருப்பார்கள்? அந்த நிலைமை நிலாக்கு வரக் கூடாது என்று நினைத்தார்.

“அட என்ன செல்வி நீ? அதெல்லாம் அவுகளுக்கு, எந்த குறையும் ஆத்தா வைக்க மாட்டா. சீக்கிரமே, நம்ம புள்ளைய கூட்டிட்டு உம்ம தம்பி இங்க வந்திடுவான் பாரு” என்றார்.

“ம் நீங்க சொன்னது நடந்தா சந்தோசம்த்தேன்” என்று சொல்லிய செல்வி, படுத்துக் கொண்டார். கதிரவன் தாமரையுடன் படுத்திருந்தான்.

உறக்கம் வரும் வரை அவன், நிலாவைப் பற்றித்தான் வாய் ஓயாது பேசிக் கொண்டிருந்தான். உறங்கும் தன் தங்கை மகனைப் பார்த்தவருக்கு, தன் மகளின் எதிர்காலம் குறித்து சிறு கலக்கமும் இருந்தது. ஆனாலும் மதுரை மீனாட்சியின் மீது பாரத்தை போட்டு விட்டு உறங்கினார்.

அன்றைய பொழுது அப்படியே செல்ல, அடுத்த நாள் காலையில் கதிர் கண் விழிக்கும் போது, நிலா கட்டிலில் இல்லை. அதில் அவன் திடுக்கிட்டு எழுந்துப் பார்க்க, அவனின் முன்னே சூடான காபி இருந்தது. அதில் மெலிதாய் புன்னகைத்தவன், எழுந்து சென்று முகம் கழுவி வந்தான்.

வந்தவன் காபியை எடுத்துக் கொண்டு, நிலாவைத் தேடி, கிச்சனுக்கு வந்தான். அங்கும் அவள் இல்லை. மணியைப் பார்க்க ஆறு என்று காட்டியது. “இன்னேரத்துல எங்குட்டுப் போனா?” என்று யோசித்தப்படி ஜன்னல் வழியே வெளியில் பார்த்தான்.

அவளோ அங்கிருந்த தோட்டத்தில் ஜாக்கிங் சென்றுக் கொண்டிருந்தாள். ஜாக்கிங் உடையில் அவளைப் பார்த்தவனின் பார்வை, காலையிலையே மோக கீதம் பாட தயாராக இருந்தது.

“கதிரு. உம் பொண்டாட்டி உமக்கு நல்ல பாடம் கத்துக் கொடுக்காம விட மாட்டா போலையே” என்றவன், அங்கேயே நின்று அவளைத் தான் வைத்தக் கண் வாங்காது பார்த்துக் கொண்டிருந்தான்.

காட்டன் சேலையில் பார்க்கும் போது கூட கலெக்டர் என்ற சிறு உணர்வாவது அவனுக்கு தோன்றியது. ஆனால் இப்போது, தன் ஆசை மனைவி என்பது மட்டுமே கண் முன் வந்து நிற்க, அவன் பார்வை பாரபட்சமே இன்றி அவளை தின்றது.

தோட்டத்தில் இருந்தவளுக்கு ஏதோ தோன்ற வேகமாய் திரும்பினாள். அங்கிருந்து அவன் நிற்பது அவளுக்குத் தெரியவில்லை. ஆனாலும் கூட, அவன் பார்வையின் ஈர்ப்பை அவள் உணர்ந்தாள். இப்படி அங்கு அவளை உரிமையாய் பார்க்க, அவனைத் தவிர வேற யார் இருக்கிறார்? அதில் பெண்ணவளின் முகம் மெலிதாய் சிவக்க முயற்சித்தது.

அதற்கு மேல் அங்கு இருக்கவும் முடியவில்லை. அதனால் ஜாக்கிங்கை முடித்துக் கொண்டு வீட்டுக்குள் நுழைந்தாள். அங்கே அவனின் முன்னே சூடான ஒரு காபியை நீட்டினான் கதிர்.

சட்டென்று அவன் நீட்டவும், அவளோ ஒரு அடி பின் சென்று, மெதுவாய் அவனைப் பார்த்தாள்.

அவனோ வியர்வையில் குளித்து வந்திருந்தவளை இப்போது அருகிலேயே, ரசித்துப் பார்த்தான்.

அவன் பார்வை மாற்றத்தை உணர்ந்தவள், காபியை வாங்கிக் கொண்டு அறைக்குள் செல்ல முயற்சித்தாள். அதற்குள் கதிரோ, “நான் குடிச்ச காபித்தேன். கொஞ்சம் சூடு கம்மியாத்தேன் இருக்கும்” என்று சீண்டலாய் கூறினான்.

அதில் அவனை முறைத்தாலும் கூட, அந்த காபி கப்புடன் தான் அறைக்குள் சென்றாள். அதைப் பார்த்து சிரித்தவனோ, இப்போது அந்த வீட்டை சுற்றிப் பார்த்தான். கீழே இரண்டு அறை மேலே இரண்டு அறை. வெளியில் ஒரு அவுட் ஹவுஸ், சுற்றிலும் தோட்டம். பாதுகாப்புக்காக கேமரா ஆங்காங்கே பொருத்தப்பட்டிருந்தது. அத்தனை எளிதில் அங்கு நுழைந்து விட முடியாதுத்தான். ஆனாலும் கூட, சில சந்தேகங்கள் இருக்க, வீட்டை விட்டு வெளியில் வந்து சுற்றிப் பார்த்தான்.

அப்படி ஒரு அமைதியான இடம். தனியாக படுக்க கூட மாட்டாள். எப்படி இத்தனைப் பெரிய வீட்டில் தனியாக இருக்கிறாள்? என்பதே அவனுக்கு ஆச்சர்யமாகத்தான் இருந்தது. சேலத்துக்கு ட்ரான்ஸ்பர் கிடைத்ததும். தாமரையையாவது உடன் அழைத்துக் கொள்வாள் என்று அவன் நினைத்திருக்க, அவளோ, அதையும் செய்யவில்லை. 

அவன் ஒன்று நினைத்து செய்ய, அவனின் மனைவியோ, அவனுக்கே ஆட்டம் காமிக்கும் வித்தையில் இருக்க, இப்போது பெருமூச்சு ஒன்றை வெளியிட்டான்.

அதே நேரம் தோட்டத்தில் நின்றிருந்த கதிரைப் பார்த்தப்படியே, அவன் குடித்த மீத காபியை ரசித்துக் குடித்தாள் நிலாத் தென்றல்.

(காபியெல்லாம் நல்லாத்தேன் இருக்கு. ஆனாலும். செரி இந்த கதிரு என்னத்தேன் பண்றான்னு அடுத்தடுத்த எபிசோட்ல பாக்கலாம். அதுக்கு முன்னாடி இன்னிக்கு எபிசோட்ல உங்களுக்கு பிடிச்ச சீன் எதுன்னு மறக்காம கமென்ட்ல சொல்லுங்க. அப்படியே எப்பவும் போல லைக் பண்ணிட்டு உங்க பிரண்ட்ஸ் கூட ஷேர் பண்ணுங்க)

தென்றல் தீண்டுமா?..

Comments   1

*** தென்றல் – 137 - படைப்பை ரேட் செய்யுங்கள் ***