தென்றல் – 128

ஏதோ ஒரு சிந்தனையில், பைக்கை ஓட்டிய கதிரின் கவனம் பாதையின் மீது இல்லாது போக, இடையில் கிடந்த கல்லில் பட்டு, அவன் பைக் தடுமாறியது.

“மாமா” என்ற நிலாவின் நினைவில் இவ்வுலகம் வந்தவன், சட்டென்று பைக்கைத் திருப்பி பள்ளத்தில் விழாது, ஓரமாய் நிறுத்தினான். சரியாக அன்னேரம் நிலாவிடம் இருந்து அழைப்பு வந்தது. அதில் மற்ற விஷயத்தை தூக்கிப் போட்டு விட்டு, அட்டண்ட் செய்து காதில் வைத்தான்.

“மாமா” என்று நிலா அழைக்க, அவள் குரலில் அத்தனைப் பதட்டம். இங்கே இவனுக்குமே மெலிதாய் மூச்சு வாங்கிக் கொண்டிருக்க, அதை வெளிக்காட்டாது, “என்னாச்சுடா? ஏதும் வேணுமா?” என்றான்.

அவனின் குரலை கேட்டப் பின் தான், இங்கே இவளுக்கு மூச்சே வந்தது. “உங்களுக்கேதுமில்லத்தேன்ன? எங்கன இருக்கீக?” என்று அவள் கேட்க, நொடியில், அவன் நடந்த விஷயத்தை யோசித்துப் பார்த்து, அதை சொல்லாது, “எனக்கென்ன, நான் நல்லாத்தேன்ன உண்ட்ட பேசிட்டு இருக்கேன்” என்றான்.

“செரி கோவில்லத்தேன் இருக்கீகளா?” என்று அவள் அடுத்த கேள்வியைக் கேட்க, “இல்லடா, இங்குட்டு மில்லுல செத்த வேல இருந்திச்சு. அதேன் வந்தேன்” என்று விளக்கமளித்தான்.

“மாமா” என்றவளின் குரலில் இன்னுமே பதட்டம் மிச்சமிருக்க, “செத்த வூட்டுக்கு வறீங்களா? மனசுக்கு என்னமோ மாதிரி இருக்கு” என்றாள்.

இப்படி எல்லாம் அவள் சொல்பவள் கிடையாது. அதனால், “செரி பத்து நிமிஷத்துல வூட்டுல இருப்பேன். நீ கிளம்பி இரு” என்று சொல்லியப்படி கால்லை கட் செய்தான்.

கட் செய்தவனின் மனமோ, தன் மனைவியின் அன்பில் நெகிழ்ச்சியடைய, தன் முன்னே இருந்த பள்ளத்தையும், அருகில் இருந்த கிணற்றையும் பார்த்தான். நொடியில், நடக்க இருந்த விபத்தை உணர்ந்தவன், அதை பொருட்படுத்தாது. பைக்கை திருப்பி வீட்டுக்கு கிளம்பினான்.

அங்கே மில் செல்லும் வழியில் பாண்டியுடைய ஆட்கள் நின்றிருக்க, அவர்களோ, “அண்ணே, அவுரு இந்தப் பக்கம் வராம திரும்பிட்டாருன்னே” என்றான்.

அதைக் கேட்ட பாண்டிக்கோ அப்படி ஒரு கோவம். “செரி எப்புடியும், இன்னிக்குள்ள அவென் நம்ம கிட்ட சிக்குவான்” என்று சொல்லியவனுக்கு அத்தனை எரிச்சலாய் இருந்தது. 

“இப்போ என்னத்துக்குடி, வெளிய வேலைக்கு போனவன்ன, வர சொல்லிட்டிருக்க” என்று தாமரை மகளிடம் கேட்டார்.

“ஏன்க்கா, அவத்தேன் மனசுக்கு ஏதோ சரியாப்படலன்னு சொல்றாத்தேன்னே” என்று செல்வி அவரை சமாளிக்கப் பார்க்க, “மனசுன்னு இருந்தா, இப்புடி நாலு விஷயத்த யோசிக்கத்தேன் செய்யும். அதுக்குன்னு, இவ முந்தானைய புடிச்சிட்டே, அவென் திரியனும்மா? அவனுக்குத்தேன் கோவில்ல வேல இருக்குன்னு சொல்லிட்டுத்தேன்ன போயிருக்கான்” என்றார்.

நிலாவோ இருவர் பேசுவதையும் காதில் வாங்காது அப்படியேத்தான் நின்றிருந்தாள். அதில் அவளைப் பார்த்த தாமரையும் கோவத்தை குறைத்து விட்டு, “செரி அதேன் அவென் வர்றான்ல, பொறவென்ன. போ. போயி முகத்த கழுவு” என்றார்.

“ம்” என்று தலையாட்டிய நிலா அறைக்கு சென்று விட, செல்வியோ தாமரையிடம், “ஏன்க்கா, தம்பி மேல இருக்கிற அக்கறையிலத்தேன்ன, புள்ள அவென்ன வர சொல்லிருக்கு, அதுக்கு ஏன் புள்ளைட்ட மூஞ்ச காமிக்கிற” என்றார்.

“அவ மனசு புரியாம இல்லடி. ஆனா, இப்புடி சின்ன சின்ன விஷயத்துக்கெல்லாம், இவ முகத்த தூக்கி வச்சிட்டிருந்தா, அவென் ஆசைய இவ எப்புடி நிறைவேத்துவா. அவென் என்னமோ, இவள கலெக்டர் ஆக்கியே தீருவேன்னு திரியிறான். இவ என்னென்னா, இப்புடி எல்லாத்துக்கும் பயந்துட்டே இருக்கா” என்றவர் தன் மனதில் இருப்பதைக் கூறினார்.

“அதெல்லாம் என் புள்ள, அவ வூட்டுக்காரன் ஆசைப்பட்ட மாதிரி கலெக்டர் ஆவா” என்று செல்வியும் சொல்ல, தாமரையோ, “கலெக்டர் ஆவட்டும். இல்ல மினிஸ்டர் ஆவட்டும். அதுக்கு முன்னாடி சட்டு புட்டுன்னு, அவள அம்மா ஆவ சொல்லு. பொறவு ரெண்டு பேரும் என்னமோ பண்ணிட்டு போகட்டும்” என்று சொல்லிவிட்டு அங்கிருந்து சென்றார்.

அன்னேரம் அங்கு வந்த துளசியோ, “ஏன் மதினி. எனக்கொரு சந்தேகம். இந்த மதினி நல்லவுகளா? இல்ல கெட்டவகளா?” என்று கிண்டலாய் கேட்டாள்.

அதில் அவள் காதைப் பிடித்து திருகியவரோ, “கன்னாலம் ஆகியும் உமக்கு வாய் கொஞ்சமாச்சும் குறைஞ்சிருக்கா பாரு” என்றாள் செல்வி.

“ஏன் இதெல்லாம். உங்க செல்ல மவகிட்ட சொல்ல மாட்டீகளோ? இப்போலாம் எங்கள விட, அவத்தேன் அதிகமா பேசுறா” என்றாள்.

இப்படியாக இங்கு செல்ல, அங்கே பிரியாவின் அம்மாவோ, “இப்போ எதுக்குடி, இங்க வருவேன்னு அடம்பிடிச்சு வந்திருக்க. உன் அப்பா கல்யாண தேதிய எப்போ குறிக்க வரலாம்னு கேட்டுட்டு இருக்காரு. ஆனா நீ என்னென்னா, தேவையில்லாம, அந்த நிலா புள்ள கிட்ட வம்பு வளத்துட்டு இருக்க. சொன்னா கேளு. இந்த ஊருலையே பெரிய குடும்பம் அவுக குடும்பம்த்தேன். அவுகள பகைச்சிட்டா, பொறவு நீயும், நானும் இந்த ஊருக்குள்ளையே வர முடியாது” என்று சிறு கோவத்துடன் கூறினார்.

ஆனால் அவளோ அதை சற்றும் காதில் வாங்காது, அருகில் இருந்தவளிடம், “இந்த புடவைக்கு, இந்த கலர் நெயில் பாலீஸ் வச்சா மேட்சா இருக்கும்ல” என்றாள்.

அதில் அவளின் அம்மாவோ, “உமக்கும், உன் அப்பாக்கும் நான் எது சொன்னாலும் காதுல விழாது. நீ எவென்னையோ பழிவாங்குறேன்னு, ஊரே ஒதுக்கி வைக்கிறவன்ன கல்யாணம் பண்ணிக்க சம்மதம் சொல்லியிருக்க. செரி அதையாச்சும் பண்ணி வைக்கலாம்னு பாத்தா, நீ வேறென்னமோ பண்ணிட்டு திரியிற. எக்கேடோ கெட்டு போங்கன்னு விட்டுத் தொலையவும் முடியல” என்றார்.

“ச் இப்போ எதுக்கு நீ இவ்வளவு டென்சனா கத்திட்டு இருக்க. உனக்கு என்ன யாருக்காச்சும் கல்யாணம் பண்ணிக் கொடுக்கனும். அதான. அதுக்குத்தான் நான் சரின்னு சொல்லிட்டேன்த்தான. அப்போ கல்யாணம் வரைக்கும் நான் என்னப் பண்ணாலும், நீ எதுவும் பேசக் கூடாது” என்று அழுத்தம் திருத்தமாய் சொல்லிவிட்டு அங்கிருந்து சென்றாள் பிரியா.

இங்கே பாண்டியின் அப்பாவோ, “ஏண்டா, உனக்கு பாத்துருக்கிற புள்ள ஊருக்குள்ளத்தேன்ன இருக்கு. செத்த அந்தப் புள்ளைய கூட்டிட்டு வந்து நம்ம சொத்து பத்த காட்ட வேண்டியதுத்தேன்ன. அத வுட்டுட்டு, இப்பவும் இந்த மொட்ட பசங்க கூட சுத்திட்டு திரியிற” என்றார்.

அதில் அவனோ, “எல்லாத்தையும் காட்டித்தேன்ன, இந்த கல்யாணத்த முடிவு பண்ணிருக்கீக, இதுல தனியா நான் வந்து காட்ட என்ன இருக்கு? போயும் போயும் அவென் வேணான்னு சொன்ன பொண்ணப் போயி நான் கட்டிக்கனுமா?” என்று கடுப்பாய் கேட்டான் பாண்டி.

அவன் பேசியதைக் கேட்டவரோ, “ஏண்டா சொல்ல மாட்ட. உமக்கு இந்த ஊருல ஒருத்தர் பொண்ணு கொடுப்பாங்கன்னு நினைக்கிறீயா?” என்று கோவமாய் கேட்டார்.

“போதும். இப்புடி சொல்லி சொல்லித்தேன். அத்தன மருவாதையும் அவெனுக்கு போகுது. ஆனா சீக்கிரமே அவென்கிட்ட இருக்குற அத்தனையும் நான் பறிச்சிப்பேன்” என்று கோவமாய் கூறினான்.

“இங்கனப் பாருல்ல. மறுக்கா மறுக்கா சொல்ல வைக்காத. உன் கன்னாலம் முடியுற வர எந்த ஏழரையும் இழுத்துட்டு வந்து நிக்காத. பொறவு என்ன மனுஷனா பாக்க மாட்ட” என்று திட்டி விட்டு அங்கிருந்து சென்றார்.

அதில் அவனோ, “இன்னிக்கோட அந்த கதிர நான் இல்லாம ஆக்குறேன். பொறவு, அந்த நிலாவ எனக்கு சொந்தமாக்கி காட்டுறேன்” என்று தனக்குள்ளே கூறினான்.

அதற்குள்ளாக அருகில் நின்றிருந்தவனோ, “ஏண்ணே. உங்க அப்பா சொல்றதும் சரியாத்தேன்ன இருக்கு” என்றார்.

அதில் அவனைப் பார்த்து முறைத்தவனோ, “என்னல்ல? அந்த கதிரு கையால அடி வாங்குனவன்த்தேன்ன, நம்மள என்னப் பண்ணிப்புடுவான்னு எகத்தாளம் பேசுறீயோ?” என்று கேட்க, “அட இல்லண்ணே, அந்த பிரியாக்காவும் பாக்க சினிமா ஹீரோயின் கணக்காத்தேன் இருக்கும். லட்டு மாதிரி பொண்ண கையில வச்சிட்டு, அடுத்தவக பொண்டாட்டிப் பின்னாடி எதுக்குப் போவனும்னு கேட்டேன்” என்றான்.

அதில் அவனை ஓங்கி அடித்த பாண்டியோ, “இது எமக்கும், அந்த கதிருக்கும் உள்ள பகைல்லா. அத்தன லேசுல என் மனச வுட்டு போகாது. அவென்ன பழி தீக்குறதுலத்தேன்ல என் ஒட்டு மொத்த சந்தோஷமும் அடங்கி கெடக்கு. அன்னிக்குத்தேன்ல இந்த பாண்டி ஆறுன்னு இந்த ஊருக்காரனுங்க அத்தனப் பேருக்கும் தெரிய வரும்” என்று சத்தமாய் கூறினான்.

இங்கே செந்திலோ, “ஏலே பாண்டி நீ உசுரோட இருக்கிர வர எம் புள்ளைய நீ நிம்மதியா இருக்க வுட மாட்ட. என் மாப்புள்ளைய என் கையால கொல்ல வைக்கப் போறீயா நீ. இன்னியோட உம்ம கொலப் பண்ணிட்டு நான் ஜெயிலுக்குப் போறேன்ல. இதுவரைக்கும் என் புள்ளைக்கு நான் எதுவும் பண்ணது இல்ல. இத நான் என் பொண்ணுக்காக பண்ணுவேன்ல” என்று தனக்குள்ளே சொல்லிக் கொண்டார்.

இப்படி ஆளாளுக்கு ஒவ்வொரு திட்டம் தீட்டியிருக்க, அந்த கடவுளின் திட்டம் என்னவோ?

நேரம் செல்ல செல்ல, ஊர் மொத்தமும் கோவிலை நோக்கி கூட்டம் கூட்டமாக செல்ல ஆரம்பித்தது.

இங்கே வீட்டுக்கு வந்து பைக்கை நிறுத்திய கதிரோ, வாசலில் நின்றிருந்தவர்களைப் பார்த்து “என்ன? இன்னும் ஆறும் கோவிலுக்கு கிளம்பலையா?” என்றிருந்தான்.

“எதுக்குல்ல போவனும்?” என்று பெரியப்பா முறையில் இருந்த ஒருவர் கோவமாய் கேட்க, “என்ன பெரியப்பா, இப்புடி பேசுனா என்னர்த்தம்? இப்போ என்னாச்சு?” என்றார்.

“இதுக்கு மேல ஆகுறதுக்கு என்னல்ல இருக்கு. உமக்கு கும்பம் எடுக்காம, எவனோ ஊர் பேர் தெரியாதவனுக்கு எடுப்பானுக. அத பாக்க நாங்க போவனுமா?” என்று மீசையை நீவியப்படி கோவமாய் கேட்டார்.

அதில் வீட்டின் உள்ளே எட்டிப் பார்த்தவனோ, “அட என்ன பெரியப்பா? இதுக்குத்தேன் இப்படி கருப்பன் வேட்டைக்கு போற மாதிரி கிளம்பி நிக்குறீகளாக்கும்” என்று சிரித்தப்படி கேட்டான்.

“ஏல உமக்கு வேனா, இது சின்ன காரியம்மா தெரியலாம். ஆனா இதெல்லாம் பாத்துட்டு சும்மா இருக்கிறதுக்கு எதுக்குல, சொந்த பந்தம்ன்னு நாங்க இத்தனப் பேரு இருக்கனும்?” என்று இன்னொருவர் கோவமாய் கேட்க, “அட என்ன தாத்தா, நீயுமா? செத்த அமைதியா இருங்க. வூட்டு பொம்பளைங்க ஆறுக்கும் ஏதும் தெரியாதுத்தேன்ன” என்றான்.

“நாங்க போகாம, அவுக மட்டும் போயிடுவாகளா?” என்று இன்னொருவர் கோவமாய் சொல்ல, “போச்சு போங்க. அட என்ன மாமா? அது நம்ம கோவில். நம்ம ஊரு திருவிழா. இதுல போயி அது சரி இல்ல, இது சரி இல்லன்னு நம்மளே சொல்லலாம்மா. அதுவும் போக, யாரோ எவருக்கோ முத மருவாத கொடுக்கல. நம்ம கலெக்டருக்குத்தேன்ன பண்றோம். அவுகள்லாம் மனசு வச்சாத்தேன்ன, நம்ம ஊரும் நல்லப்படியா இருக்கும்” என்று ஏதேதோ பேசியவன், அவர்களை எல்லாம் சமாதானப்படுத்தி கோவிலுக்கு அனுப்பி வைத்தான்.

இன்னும் வீட்டில் உள்ள பெண்கள் யாருக்கும் விஷயம் தெரியாது. அதனால், அவர்கள் அனைவரும் கோவிலுக்கு கிளம்பிக் கொண்டிருந்தனர்.

கதிரைப் பார்த்ததும், “என்ன மச்சான்? பொண்டாட்டிய பாக்காம அங்க வேல ஏதும் ஓடலப் போல. போன வேகத்துல திரும்பி வந்திருக்கீக” என்று கிண்டலாய் ஒருவள் கேட்க, “அடியே, புள்ளைக்கு செத்த சோறு ஊட்டுன்னு சொன்னா, அத பண்ணாம, அங்க என்னடி தம்பிக்கிட்ட வம்பு பண்ணிட்டிருக்க. வந்து இத செத்த ஊட்டு. கோவிலுக்கு போயிட்டா திரும்பி வர தாமதமாகும்” என்று இன்னொருவள் அவளை அழைத்துச் சென்றார்.

இங்கே கதிரோ “நல்ல வேல வூட்டுல வேற ஆறுக்கும் தெரியல. இல்லண்ணா, அத காரணம் காட்டி, அம்புட்டு பேரும் மூஞ்ச தொங்கப் போடுவாக” என்று நினைத்தப்படி அவனின் அறைக்கு சென்றான்.

அறைக் கதவு சாத்தியிருக்க, “அன்னிக்கு மாதிரி புடவை கட்டிட்டு இருக்கப் போறா” என்று யோசித்தவன் இம்முறை முன்னெச்சரிக்கையாய், “நிலா” என்று கதவைத் தட்டினான்.

அடுத்த நொடி கதவை வேகமாய் திறந்து வந்த நிலா, “மாமா” என்று வந்த வேகத்தில் அவனைக் கட்டிக் கொண்டாள்.

(இருக்கட்டும் இருக்கட்டும். என்னமோ நல்லது நடந்தா செரி. செரி அடுத்து என்னென்னு அடுத்த எபிசோட்ல பாக்கலாம். அதுக்கு முன்னாடி இன்னிக்கு எபிசோட்ல உங்களுக்கு பிடிச்ச சீன் எதுன்னு மறக்காம கமெண்ட்ல சொல்லுங்க. அப்படியே எப்பவும் போல லைக் பண்ணிட்டு உங்க பிரண்ட்ஸ் கூட ஷேர் பண்ணுங்க)

தென்றல் தீண்டுமா?..

Comments   0

*** தென்றல் – 128 - படைப்பை ரேட் செய்யுங்கள் ***