நிலாவைப் பார்த்ததும், கதிர் அவளை ஒரு வித தடுமாற்றத்துடன் பார்க்க, அவளோ முகத்தில் எதையும் காட்டாது, “இனி இப்புடி பண்ணாதீக சித்தப்பா. எனக்கு சுத்தமா புடிக்கல” என்று கொண்டு வந்த பானத்தை குடிக்க கொடுத்தாள்.
“மன்னிச்சிடுய்யா. இனி குடிக்க மாட்டேன்” என்று முருகேசன் சொல்ல, அவளோ எதுவும் சொல்லவில்லை. அமைதியாய் நிற்க, கதிரோ, “உங்க மவ அத்தன லேசுல எதையும் மன்னிக்கவும் மாட்டா. மறக்கவும் மாட்டா” என்றான்.
அதில் இப்போது நிலா கதிரையும் சேர்த்து முறைக்க, “என்ன, நான் நிசத்தத்தேன்ன சொன்னேன்” என்று கேட்டான். அவளோ ஏதும் சொல்லாது, அப்போதும் அமைதியைத்தான் காத்தாள்.
“கோவில்ல இறங்குன மகமாயி, இன்னும் முழுசா மல இறங்கலப் போலையே” என்று தனக்குள்ளே சொல்லியவன், “செரி மாமா. குடிச்சிட்டு செம்ப கொடு. இல்லாட்டி, உங்க மதினி கம்போட வருவாக” என்று கேலி பேசி சிரித்தான் கதிர்.
அவன் சிரிப்பதைப் பார்த்த முருகேசனோ, “நீ எப்பவும் சிரிச்சிட்டே இருக்கனும்யா. எனக்கு அதுத்தேன் வேணும்” என்றவர், மீண்டும் பேசப் போக, “முதல்ல இத குடிச்சிட்டு இங்கன படு மாமா” என்று பேச்சை மாற்றினான் கதிர்.
அதில் அவர் அதை வாங்கிக் குடிக்க, நிலாவோ செம்பை வாங்கிக் கொண்டு வீட்டுக்குள் சென்றாள். அங்கே செல்வி தாமரையிடம் புலம்பிக் கொண்டிருக்க, தாமரையோ, “அதேன் உன் தம்பி பாத்துக்கிறேன் சொல்லிருக்கான்த்தேன்ன, அதெல்லாம் இன்னேரம் பேசி புரிய வச்சிருப்பீயான். நீ கண்ண கசக்காம படுத்தொறங்கு” என்றார்.
நிலாவோ அமைதியாய் அங்கு வந்து நிற்க, அவளின் மூளையோ எதையோ தீவிரமாய் யோசித்துக் கொண்டிருந்தது. தாமரைத் தான் அவளையும் உறங்க அனுப்பினார். செல்வியுடன் தாமரைப் படுத்துக் கொள்ள, கீழே முருகேசனோ, தன்னால் முடிந்த மட்டும் புலம்பியப்படி தூக்கத்திற்கு சென்றிருந்தார்.
அவர் உறங்கும் வரை அங்கேயே அமர்ந்திருந்தவன், அதன் பின் அக்காவையும், மனைவியையும் பார்க்க, வீட்டுக்குள் வந்தான். செல்வியும், தாமரையும் அப்போதும் உறங்காது காத்திருக்க, “என்னக்கா, உங்கள உறங்கத்தேன்ன சொன்னேன்” என்றப்படி அவர்களிடம் வந்தான்.
“ஏதும் பெரிய பிரச்சனையா?” என்று செல்வி சிறு தயக்கத்துடன் கேட்டார். ஏனெனில் சிறிய காரியத்துக்கெல்லாம் முருகேசன் இப்படி செய்பவர் கிடையாது.
“அதெல்லாம் ஒன்னுமில்லக்கா. ஏதோ கல்லுன்னு நினச்சி மாத்தி குடிச்சிட்டாருப் போல. அதேன்” என்றவன், உண்மையை சொல்ல தயாராக இல்லை.
தாமரையோ, “எப்புடித்தேன் புதுசு புதுசா பழக்கம் பழகுறாகளோ, ஒன்னும் புரியல” என்றார்.
“அதெல்லாம் மாமா தப்பு பண்ண மாட்டாருக்கா. நான் பேசிட்டேன்” என்று சொல்ல, செல்வியும் சரி என்றவருக்கு மனம் கேட்கவில்லை. “செத்த நான் ஒரு எட்டு போய் பாத்துட்டு வரட்டா” என்றார்.
“ச் அதேன் அவரு தூங்கிட்டாருன்னு சொல்றான்ல. அதெல்லாம் காலையில பாத்துக்கலாம். ஒரு நாளாச்சும், தனியா படுத்தாத்தேன், பண்ண தப்பு மண்டையில உரைக்கும்” என்றார் தாமரை.
அவரின் வார்த்தையில், கதிருக்கோ அவனின் மனைவித்தான் நினைவில் வந்தாள், “அம்மாக்கு புள்ள தப்பாம பொறந்திருக்கா” என்று மனதிற்குள் சொல்லிக் கொண்டான். ஏனெனில், அவளும் கடந்த ஒரு மாதமாய் அவனை தனியாகத்தானே படுக்க வைத்துள்ளாள்.
“பொறவென்ன. உம்ம தம்பிக்கு மட்டும் தனியா சொல்லனுமாக்கும்? போயி படுக்க சொல்லு. காலையில வெளி வேலைக்கு போவனும்ல” என்று தாமரை செல்வியிடம் சொல்ல, “செரிக்கா, நீ எதையும் யோசிக்காம தூங்கு. காலையில மாமாட்ட பேசு” என்றப்படி கதிர் அவனறைக்கு சென்றான்.
அங்கே அவனின் மனைவியோ, அமைதியாய் கட்டிலில் படுத்து உறங்கிக் கொண்டிருந்தாள்.
அதைப் பார்த்தவனோ, “அதான, என்ன நடந்தாலும் மேடம், தூக்கத்துக்கு மட்டும், இத்துனூண்டு கூட குற வைக்க மாட்டாக” என்றவன், முதலில், அவளருகில் சென்று படுக்கத்தான் நினைத்தான்.
“ம்ஹூம் வேணாம் வேண்டாம். ஏற்கனவே நேரமாகிடுச்சி. இதுக்கப்புறம் இவ பக்கத்துல போயி படுத்தா, விடிய விடிய இவள பாத்துட்டுத்தேன் கெடக்கனும். பொறவு வேல கெட்டுப் போகும்” என்று தனக்குத் தானே சொல்லியப்படி அங்கிருந்த பாயை எடுத்து கீழே விரித்துப் படுத்துக் கொண்டான்.
சில நிமிடங்களில் அசதியில் அவன் கண் உறங்கியிருக்க, கட்டிலில் படுத்திருந்த நிலா கண்ணைத் திறந்தாள். அவன் கீழே படுத்திருக்கவும், அவளும் எழுந்து, அவனின் அருகில் சென்று படுத்துக் கொண்டாள்.
அவனோ உறக்கத்தில் இருக்க, அவளோ அவனை நெருங்கி, அவன் முகத்தைப் பார்த்தப்படி படுத்தாள். அவள் மனதில் என்ன ஓடிக் கொண்டிருக்கிறது என்று தெரியவில்லை. ஆனால் ஒரு விஷயத்தில் மிகவும் தெளிவாய் இருந்தாள்.
உறங்கிக் கொண்டிருந்தவனின் கன்னத்தில் மெல்ல கரம் பதித்து, “ஐ லவ் யூ மாமா” என்று சொல்லி அவன் நெற்றியில் முத்தமிட்டாள். அதில் அவன் மெதுவாய் அசைய, அவளோ அவன் மேல் கைப் போட்டு அவனை இறுக்கமாய் அணைத்துக் கொண்டு படுத்துக் கொண்டாள்.
அவன் இதயத் துடிப்பை கேட்டபப்டி அவளும் சில நிமிடங்களில் உறங்கியிருந்தாள். மறு நாள் காலை பொழுது விடிந்தும் இருவரும் எந்திரிக்கவில்லை. கீழே கதிரைத் தேடி, ஊர் பெரியவர்கள் சிலர் வந்திருக்க, “செத்த இருங்க நான் போயி கூட்டியாரேன்” என்றார் செல்வி.
ஆனால் செல்வி படியேறக் கூடாது என்பதால் தாமரை “நீ இங்கன இரு. நான் போயி வர சொல்றேன்” என்றப்படி அவர்கள் அறைக்கு சென்றார்.
“நிலா” என்று அவர் அழைக்க, கதிர், நிலா இருவருக்குமே அது கேட்கவில்லை. “சும்மாவே பத்து மணி வர உறங்குவா. இதுல நேத்து தூங்கப் போனதே ரெண்டு மணிக்குத்தேன். சொல்லவா வேணும். இவளுக்கு எப்பத்தேன் பொறுப்பு வரப் போதோ?” என்று அவளை திட்டியப்படி, “நிலா” என்று கதவைத் தட்ட அவர் கையை வைக்க, அதுவோ உள் பக்கம் தாழ்பாள் போடாததால் பட்டென்று திறந்தது.
அதில் தாமரை கட்டிலைப் பார்க்க, அங்கே இருவரும் இல்லை. “என்ன? ஆறையும் காணும்” என்றவர், உள்ளே வர, அங்கே கதிரின் மார்பில் தலை வைத்து, அவன் செயினை ஒரு கையால் பிடித்தப்படி படுத்திருந்தாள் நிலா.
அதைப் பார்த்தவரோ, சங்கடத்துடன் வெளியில் வந்து விட, அவருக்கோ மெலிதாய் வெட்கம் கூட எட்டிப் பார்த்தது. விறுவிறுவென்று அவர் கீழே சென்று, “உங்கள கோவில்ல வந்து பாக்குறதா சொன்னான்” என்று வந்திருந்தவரை அனுப்பியிருந்தார் தாமரை.
அதில் செல்வியோ, “ஏன்க்கா, நிஜமா அவென் அப்படித்தேன் சொன்னான்னா?” என்று கேள்வியாய் கேட்டார். அதில் தாமரையோ, “ஏன் அப்படி கேட்க?” என்று வினவ, “இல்ல, வூட்டுக்கு வந்தவகள பாக்காம அனுப்ப மாட்டீயான். அதேன்” என்றார்.
“ம் உன் தம்பிக்கு இப்போ கல்யாணம் ஆகிடுச்சி. வூட்டையும் அவென்த்தான பாக்கனும். செரி அத விடு. உன் புருஷன் எந்திரிச்சிட்டாரா? ஏதும் காபித் தண்ணி கொடுத்தனுப்புனீயா?” என்றார்.
“இல்ல இனித்தேன் கொண்டு போனும்” என்று செல்வி சொல்ல, “செரி இந்த நேரத்துல படியேறக் கூடாது. அதனால அவுக எப்போ கீழிறங்கி வர்றாகளோ, அப்போ வரட்டும். நீ செத்த ஓய்வெடு. நான் வூடு வரைக்கும் போயிட்டு வந்துடுறேன்” என்றப்படி தாமரை அங்கிருந்து சென்றார்.
இங்கே முருகேசனோ, காலையிலேயே எழுந்திருந்தார். ஆனால் ஏனோ அந்த வீட்டுக்குள் செல்லவே அவருக்கு அத்தை சங்கடமாய் இருந்தது. அதனால் முகத்தை கழுவி விட்டு வெளிக் கட்டிலிலேயே அமர்ந்து விட்டார்.
அவரைப் பார்த்த செல்வியோ, காபியை அவரிடம் நீட்ட, அவரோ அப்போதுத்தான் தன் மனைவியைப் பார்த்தார்.
“செல்வி நான்” என்றவருக்கு மனைவியிடம் என்ன சொல்ல என்று தெரியவில்லை. அதற்குள் அவரோ, “பரவாயில்ல மச்சான். என் பேரெல்லாம் இன்னும் ஞாபகத்துல வச்சிருக்கீக” என்று சிறு கோவத்துடன் கேட்டாள்.
அதில் அவர் கையைப் பிடித்தவரோ, “என்ன மன்னிச்சிடுத்தா. இனி சத்தியமா குடிக்க மாட்டேன்” என்றார்.
அவரைப் பார்த்தவரோ, “அப்படி என்ன மச்சான் உங்களுக்கு பிரச்சன, என்னையும், நம்ம புள்ளையும் யோசிச்சு பாக்க முடியாத அளவுக்கு குடிச்சிருக்கீக” என்று அத்தனை கோவமாய் கேட்டாள்
அதில் முருகேசனோ எதையும் சொல்லாது தலைக் குனிய, அதில் செல்வியின் மனம் சற்று இறங்கியது. “இன்னொருக்கா, இப்புடி பண்ணீக, பொறவு, நானும் உங்க பையனும் உங்கள மன்னிக்கவே மாட்டோம் பாத்துக்கோங்க” என்றார்.
அதில் முருகேசனோ, “என்ன மட்டும் பையன்னு சொல்ல வேணாம்னு சொன்ன. இப்போ நீயே பையன்னு சொல்ற” என்று தன்னை மீட்டுக் கேட்டார்.
அவரின் கேள்வியில், “ம் உங்க பையன் சொன்னாத்தேன் கேட்பேன்னு நீங்க இருக்கீக. அப்போ அதுக்காகவாச்சும் என் சிங்க குட்டி வரனும்ல” என்றாள் செல்வி.
அதில் மெலிதாய் புன்னகைக்க முயன்றவர், அவர் கையைப் பிடித்து, “என்ன மன்னிச்சிட்டத்தேன்ன?” என்றார்.
அதில் அவர் கையின் மீது தன் மறு கரத்தை பதித்தவள், “இனி இப்புடி பண்ணாதீக மச்சான். எனக்கு எத்தன கஷ்டமா இருந்திச்சுத் தெரியுமா?” என்றாள்.
“இனி ஒரு நாளும் இப்புடி நடக்காது” என்று அவர் சொல்ல, அவரும் சற்று அமைதியானார்.
அதே நேரம் இங்கே, கதிர் மெதுவாய் கண் விழித்து கையை அசைக்க முயல, அவனால் அது முடியவில்லை. அதில் அவன் குழப்பமாய் குனிந்துப் பார்க்க, அவனின் மனைவி அவனை மொத்தமாய் அணைத்துக் கொண்டு படுத்திருந்தாள்.
“இவ எப்போ இங்கன வந்தா?” என்றவனுக்கு நினைவில் பதியவில்லை. “உடம்பு ஏதும் சரியில்லையா?” என்று மெல்ல அவள் நெற்றியில் கை வைத்துப் பார்த்தான். அதெல்லாம் சாதாரணமாக இருக்க, “ஒரு வேள, தனியா படுக்க பயமா இருக்குன்னு வந்துப் படுத்திருப்பாளோ?” என்று அவனாகவே யூகித்து, சில நொடிகள் தன் மனைவியைப் பார்த்தான்.
அதன் பின், “இன்னும் குழந்தையாவே இருக்கா” என்றப்படி அவள் நெற்றியில் மெல்ல இதழ் பதித்து அவள் உறக்கம் கலையாது மெல்ல தூக்கி சென்று கட்டிலில் படுக்க வைத்தான். பின் மணியைப் பார்க்க, அதுவோ ஒன்பதை நெருங்கியது.
“இம்புட்டு நேரமாச்சா?” என்று யோசித்தவன் அவசரமாய் துண்டை எடுத்துக் கொண்டு குளியலறை சென்றான்.
அவன் சென்ற சில நொடிகளில், கண்ணைக் கசக்கியப்படி திறந்துப் பார்த்தவள், அவன் அருகில் இல்லை என்றதும் பட்டென்று எழுந்தாள். அவள் கட்டிலில் படுத்திருக்கவும், “நான் எப்படி?” என்று யோசிக்க, குளியலறையில் அவன் குளிக்கும் சத்தம் கேட்டது.
“மாமா எந்திரிச்சிட்டாங்களா?” என்றவளும் மணியைப் பார்த்து விட்டு, வேகமாய் முகம் கழுவி கீழே சென்றாள். செல்வி சமையலறையில் நின்றிருக்க, “என்ன சித்தி என்ன எழுப்பிருக்கலாம்த்தேன்ன” என்றப்படி அங்கு செல்ல, அவரோ முருகேசனைப் பற்றிய சிந்தனையில் இருந்தார்.
“சித்தி” என்று இவள் சென்று அவர் கையைப் பிடிக்க, கலங்கிய கண்ணை அவள் அறியாமல் துடைத்தார். அதைக் கவனித்தாலும், அதை கவனிக்காதது போல், “சித்தி இங்குட்டு வாங்க” என்றாள்.
“ஆ..ங் இல்லடா. நான் பாத்துக்கிறேன்” என்றவரை முற்றிலும் தடுக்காது, அவருடனே நின்று அவருக்கு உதவி செய்தாள். அதன் பின் அவருடன் பேசி, அவர் மனதை மாற்றியவள், அவரையும் சாப்பிட வைத்தாள்.
முருகேசன் காலையிலேயே கிளம்பி அவர் கடைக்கு சென்றிருக்க, கதிர் கீழிறங்கி வந்தான்.
வந்தவன், “அக்கா, நிலா நான் கோவிலுக்கு கிளம்புறேன். ஏதாச்சும் வேணும்னா, கூப்பிடுங்க” என்றப்படி அவன் வெளியில் செல்லப் போக, “சாப்டு எங்கனாலும் போங்க” என்று நிலா அவன் கையைப் பிடித்து இழுத்து வந்தாள்.
“இல்ல நிலா. எனக்கு” என்றவன் சொல்ல முயற்சிக்க, “எனக்கும் பசிக்குது” என்று அவள் அழுத்தம் திருத்தமாய் சொல்ல, அதன் பின் அமைதியாய் அமர்ந்து அவசரமாய் சாப்பிடப் போக, அவள் எடுத்து உணவை அவனுக்கு முன் நீட்டினாள்.
அதில் அவன் அவளை கேள்வியாய் கேட்க, “அவசரத்துல சாப்டா உடம்புல ஒட்டாது மாமா. நான் ஊட்டுறேன் நீங்க சாப்பிடுங்க” என்றாள். சட்டென்று, “இப்படி ஓடிட்டே சாப்டா, உடம்புல ஒட்டாது ராசா. நீ உன் வேலைய பாரு. அம்மா நான் ஊட்டுறேன்” என்ற அம்மாவின் வார்த்தையும் நினைவில் வந்து நிற்க, அவனுடைய கண்கள் கலங்க முயற்சித்தது.
(ஆனாலும் நிலா சின்னப் புள்ளையா இருந்தாலும் சமத்துத்தான்ப்பா. செரி அடுத்து என்னாகப் போது, அந்த பாண்டிக்கும், செந்திலுக்கும் நடுவுல அடுத்து என்ன பூதம் கிளம்ப போதுன்னு அடுத்தடுத்த எபிசோட்ல பாக்கலாம். அதுக்கு முன்னாடி இன்னிக்கு எபிசோட்ல உங்களுக்கு பிடிச்ச சீன் எதுன்னு மறக்காம கமெண்ட்ல சொல்லுங்க. அப்படியே எப்பவும் போல லைக் பண்ணிட்டு உங்க பிரண்ட்ஸ் கூட ஷேர் பண்ணுங்க)
தென்றல் தீண்டுமா?..
Keerthi Keerthi
please nxt poduga
Keerthi Keerthi
nxt podunga sis pls….
Yasarath Yazar
next podunga akka
gayathri Shini
super sister
Keerthi Keerthi
spr sis♥♥