வரம் – 38

“ஐயோ என்னடி? அர்ஜூன் சார் இவ்ளோ கோவமா இருக்காரு?” என்று பூஜாவின் முன்னே இருந்த க்ரூப் தங்களுக்குள் கிசுகிசுக்க, பிரியாவோ, போர்டை விட்டு பார்வையைக் கூட திருப்பவில்லை.

ஏனெனில், வந்ததில் இருந்து கிட்ட தட்ட நான்கு பேரை கிளாஸை விட்டு வெளியில் அனுப்பியிருந்தான். சாதாரணமாகவே அவனிடம் நெருங்க இயலாது. இதில் இன்று அவனின் மனைவி, காலில் சலங்கையை வேறு கட்டி விட்டிருந்தாள். அதில் பலியானது என்னவோ? அப்பாவி மாணவர்களும், அவனின் ஆருயிர் நண்பன் மாதவ்-ம் தான்.

“என்ன மாதவ் சார்? நொண்டி நொண்டி நடந்துட்டு இருக்கீங்க” என்று சக ஆசிரியர் ஒருவர் கேட்க, அவனோ கன்னத்தில் இருந்த காயத்தை மறைக்க முயற்சித்துக் கொண்டிருந்தான்.

“கீழ விழுந்துட்டேன் மேடம்” என்றவனின் மனமோ, இன்று காலையில் நடந்ததை யோசித்துப் பார்த்தது.

காலையில் மாதவ் வழக்கம் போல் கல்லூரிக்கு கிளம்பி கீழே வர, அர்ஜூனோ அத்தனை எரிச்சலாய் வந்துக் கொண்டிருந்தான்.

அவனைப் பார்த்ததும், “என்னடா, நைட் நல்ல தூக்கம் போல” என்று வாலண்ட்ரியாய் மாதவ் வண்டியில் ஏறியிருக்க, அவனுடைய கை முஷ்டி எல்லாம் இறுகியது. அதிலும் இரவு நடந்த விஷயம் எல்லாம் அவனுக்கு நினைவுக்கு வர, இப்போது மாதவ்வை முறைத்தான்.

“எதுக்குடா முறைக்கிற? நைட் கால் பண்ணியிருந்தேன்னே, நீ எடுக்கலையா? அதான் கேட்டேன்” என்று அவன் சாதாராணமாய் சொல்ல, அர்ஜூனோ பேச்சை வளர்க்க விரும்பாது, பைக்கை எடுக்க சென்றான்.

“டேய். டேய் நைட் கால் பண்ணேன்னு சொல்றேன்னே. ஒரு பேச்சுக்காச்சும் எதுக்குன்னு கேட்குறீயா நீ?” என்றவன் மீண்டும் அவனின் பைக்கை மறித்து நின்றான்.

“விலகு” என்று அர்ஜூன் சொல்ல, மாதவ்வோ அதைக் கேட்காது, அவன் பைக்கில் சாய்ந்து நின்று, “அர்ஜூன் நேத்து ஒரு செம்ம கனவுடா. அத உண்ட்ட சொல்லாம எனக்கு தூக்கமே வரல. அதான் உனக்கு கால் பண்ணேன். ஆனா நீ எடுக்கல. என்ன கனவு தெரியுமா?” என்றான்.

இப்போது அர்ஜூனோ பொறுமையை இழுத்துப் பிடித்து, “எனக்கு காலேஜூக்கு டைம் ஆகுது விலகு” என்றான். ஆனால் பாவம் மாதவ்க்குத்தான் சனி உச்சத்தில் இருந்திருக்கும் போல.

“ச் அதெல்லாம் நிறையா டைம் இருக்குடா. எப்போ பார்த்தாலும், காலேஜ் காலேஜ்ண்ட்டு. நேத்து என் கனவுல, நீ லவ்வர் பாய் மாதிரி ஒரு பொண்ண தூக்கிட்டு உன் ரூமுக்குள்ள போன தெரியுமா?” என்றான்.

அதைக் கேட்டதும், அர்ஜூனுக்கு நேற்று இரவு பூஜாவை தூக்கிக் கொண்டு சென்றது. அதன் பின் நடந்தது என்று மீண்டும் நினைவுக்கு வர, அவனுடைய முகம் கோவத்தில் சிவந்தது.

ஆனால் அதை அறியாத மாதவ்வோ, அவனின் மன நிலை புரியாது, “ஆக்சிவலா, அப்போ உன் முகத்த பாக்கனுமே, அப்படியே இந்த சினிமாவுல எல்லாம், ஹீரோ அப்படியே ஹீரோயின்ன” என்று அவன் ஏதோ சொல்லி முடிக்கும் முன்னே, அவனின் கன்னத்தில் ஓங்கி அடித்திருந்தான்.

அவன் அடித்த அடியில் தடுமாறி அவன் சென்று அருகில் இருந்த தூணைப் பிடித்து நிற்க நினைக்க, அதற்குள்ளாக, அருகில் இருந்த கல்லில், இடித்துக் கொண்டு அப்படியே அமர்ந்து விட்டான்.

என்ன நடந்தது? என்று அவன் யூகித்து முடிக்கும் முன்னே, அர்ஜூன் தன்னுடைய பைக்கை எடுத்துக் கொண்டு கிளம்பியிருந்தான். 

வாங்கிய அடியில் தலை சுற்றியப்படி நின்றிருந்த மாதவ்வோ, “அப்படி நான் என்னடா பெருசா தப்பா சொல்லிட்டேன். அவன்ன ஹீரோ லெவல்க்குத்தான பில்டப் பண்ணேன்” என்று தனக்குள் புலம்பினான்.

இங்கே பூஜா கூட தன்னுடைய சேட்டையை செய்யாது அமைதியாய் தான் இருந்தாள். ஏனெனில், காலையிலேயே அவனுடைய ருத்ர தாண்டவத்தை பார்த்துவிட்டாளே. கொஞ்சம் விட்டால், அவன் அவளை கடித்து தின்றிருப்பான்.

அவனோ வழக்கத்தை விட அத்தனை இறுக்கத்தில் கிளாஸ் நடத்திக் கொண்டிருக்க, அன்னேரம் பார்த்து பிரதன்யாவின் அருகில் இருந்தவளோ, “ஹேய், இன்னிக்கு மட்டும் பூஜா அர்ஜூன் சார்ட்ட சிக்குனா காலியாகிடுவா. ஏதாச்சும் பண்ணுவோமா?” என்று கேட்டாள்.

அவளுக்குமே அந்த யோசனைப் பிடித்திருக்க, இப்போது, பிரதன்யாவும் அவளுடைய கூட்டாளிகளும் சேர்ந்து, பூஜாவை மாட்டிவிட நினைத்து, பேப்பரில் எதையோ கிறுக்கி அவள் பக்கம் தூக்கி வீசினர். 

அதே நேரம் அர்ஜூனின் மீதும் ஒரு பேப்பரை சுருட்டி எறிந்திருக்க, அவ்வளவுத்தான் அவனுடைய பொறுமை காற்றில் பறந்தது. சரியாக அன்னேரம் பார்த்து பூஜாவும் அவள் நோட்டில் வந்து விழுந்த அந்த பேப்பரை கையில் எடுத்திருந்தாள்.

“யாரு இப்போ இத எறிஞ்சது?” என்று அர்ஜூன் அத்தனை கோவமாய் கேட்க, அனைவரும் அர்ஜூனைப் பார்த்தனர்.

“இப்போ மட்டும் யாருன்னு சொல்லலன்னா, அதுக்கப்புறம் அத்தன பேரும் பிரின்சிபல் முன்னாடி போயி நிக்க வேண்டியிருக்கும்” என்றான்.

அதில் பூஜாவோ, நிமிர்ந்து அவனைப் பார்க்க, சுற்றி இருந்த அனைவருமே தங்களுக்குள் யோசிக்க, அதற்குள் பிரதன்யாவோ, “பூஜாத்தான் சார்” என்று கையை நீட்டினாள்.

“நானா?” என்று பூஜா அதிர்ந்து அர்ஜூனைப் பார்க்க, ஏற்கனவே எரிந்துக் கொண்டிருந்தவனுக்கு இப்போது அவளுடைய செயல் உச்சப்பட்ச எரிச்சலைக் கொடுக்க, “ஹெட்டப்” என்றான்.

அவனுடைய வார்த்தையில் இப்படி ஒரு அழுத்தத்தை அவள் பார்த்ததே கிடையாது. அதில் அன்னிட்சை செயலாய், அவளுக்குள் மெல்லிய அதிர்வு. ஏனெனில் செய்த தவறாய் இருந்தால், அதை சமாளித்திருப்பாள். ஆனால் இப்போதுத்தான் அவள் எதுவும் செய்யவில்லையே.

“உன்னத்தான சொல்றேன். எந்திரி” என்று அர்ஜூன் கத்த, இப்போது பிரியாவோ, “ஏன் பூஜா?” என்றாள்.

“ஹேய் நான் எதுவுமே பண்ணல” என்று சொல்லியப்படி அவள் எழுந்து நிற்க, அவனோ, “நீ படிக்கத்தான வந்திருக்க?” என்றான்.

“எஸ் சார்” என்று அவள் சொல்ல, “தென்? உனக்கு ஒரு புரோபசர்கிட்ட எப்படி நடந்துக்கனும்னு தெரியாதா?” என்றான்.

“ஐயோ சார். நான் எதுவுமே பண்ணல” என்று பூஜா வேகமாய் சொல்ல, “எதுவுமே பண்ணலன்னா, அப்போ உன் கையில இருக்கிறதுக்கு பேரு என்ன?” என்றான். அப்போதே அவளும் அந்த பேப்பரைப் பார்க்க, “அது வந்து” என்றவள் சுற்றி முற்றி பார்க்கும் முன்னே அவளின் முன்னே வந்து நின்றவன், அவள் கையில் இருந்த பேப்பரை பிடுங்கி விரித்துப் பார்த்தான்.

பின்பு அவன் மீது வந்து விழுந்த பேப்பரையும் பிரித்துப் பார்க்க, இரண்டுமே ஒரே பேப்பர் என்று தெரிந்தது. அவ்வளவுத்தான், அவனுடைய கண்கள் கோவத்தில் சிவக்க, “படிக்க விருப்பம் இல்லன்னா, இங்க வந்து உட்கார்ந்து மத்த பசங்க படிப்பையும் எதுக்காக கெடுத்துட்டு இருக்க?” என்றான்.

“இல்ல. சார்.” என்று பூஜா ஏதோ சொல்ல முயற்சிக்க, “பிரின்சிபல்ல பார்த்துட்டு நீ கிளாஸுக்கு வந்தா போதும். வெளிய போ” என்றான்.

“சார். ஆனா நான்” என்றவள் பெரிதாய் தடுமாற, “இப்போ நீ வெளிய போறீயா? இல்ல நான் வெளிய போகட்டுமா?” என்று அவன் கத்திய கத்தலில், அத்தனைப் பேரும் பூஜாவைப் பார்த்தனர்.

இத்தனை ஏன், அந்த வகுப்பைக் கடந்து சென்றவர்கள் கூட அதைத்தான் பார்த்தனர்.

“இந்த பொண்ணுக்கு வேற வேலையே இல்ல. படிக்க விருப்பம் இல்லன்னா, எதுக்கு வரனும். இப்படி வந்து இப்படி தினமும் வெளிய நிக்குறதுக்கு” என்று சில ஆசிரியர் சொல்லிவிட்டு செல்ல, ஏனோ பூஜாவுக்கு அவமானமாய் இருந்தது.

அதில் அவளுடைய கண்கள் கலங்க முயற்சிக்க, இருந்தும் அதை இழுத்துப் பிடித்து, “நான் தப்பு பண்ணல சார்” என்றாள்.

ஏனோ அவள் அத்தனை திடமாய் நின்று பேசுவது கூட, ஏனோ அவள் அவனின் மனைவி என்ற உரிமையில் பேசுவது போல் தோன்ற அவனுக்கு அத்தனை எரிச்சல்.

“நான் சொல்றது உனக்கு கேட்கலையா? என்னோட கிளாஸ்ல இருந்து வெளிய போ” என்று கத்தியவனைப் பார்த்து நிச்சயம் கிளாஸ் மொத்தமுமே பயத்தில் நடுங்கியது.

அவளோ, “ஆனா நான் சார். இத” என்று சொல்லி முடிக்கும் முன்னே, கையில் இருந்த ஷாப்பீஸை தூக்கி சுவற்றில் அடித்தவன், “இந்த பொண்ணு இந்த கிளாஸ்ல இருக்கிற வரைக்கும், நான் உங்க கிளாஸுக்கு லெசன் எடுக்க வர மாட்டேன்” என்று சுற்றி இருந்தவர்களை பார்த்து சொல்லிவிட்டு அங்கிருந்து தன் புக்கை எடுத்துக் கொண்டு கிளம்பியிருந்தான் அர்ஜூன்.

அவனின் செயலில், அத்தனை பேரும் பூஜாவை குற்றவாளியாக பார்க்க, இப்போது அவனுக்கு முன்னே தன் பேக்கை எடுத்துக் கொண்டு வெளியில் சென்றிருந்தாள்.

“பாத்தீயாடி, அவளுக்கு எவ்வளவு திமிரன்னு?” என்று அந்த பிரதன்யா சொல்ல, “எப்படியோ நம்ம பிளான் சக்சஸ்” என்று கைக் கொடுத்துக் கொண்டனர்.

விஷ்வாவுக்கும், பிரியாவுக்கும் தான் பூஜாவை நினைத்து கவலையாகியிருந்தது. அதே நேரம் அர்ஜூனின் வகுப்பில் சேட்டை செய்யாதே என்று ஏற்கனவே சொல்லியிருக்க, அதைக் கேட்காது அவள் விளையாடியதில் அவர்களுக்கும் சற்று கோவம் தான்.

“பிரேக்ல போயி அவள பாக்கலாம்” என்று பிரியா சொல்ல, அதற்குள் அடுத்த ஆசிரியர் வந்திருக்க அமைதியாகினர்.

இப்போது இங்கே வெளியில் வந்த பூஜாவுக்கோ, ஒரு வித கோவம், ஆதங்கம், ஏனோ கண்ணெல்லாம் கலங்கியது.

“நான் ஏன் அழுகனும்? நான் தான் எந்த தப்பும் பண்ணலையே” என்று தனக்குள் சொல்லிக் கொண்டவள், அப்படியே அங்கிருந்த கிரவுண்டில் சென்று அமர்ந்து விட்டாள்.

அங்கே ஸ்டாப் ரூம் வந்த அர்ஜூனோ காலையில் பார்த்ததை விட இப்போது மூர்க்கனாய் இருக்க, மாதவ்வோ, கன்னத்தில் கை வைத்தப்படி அப்படியே அவனுடைய டெஸ்குக்குள் புதைந்துக் கொண்டான்.

இப்படியாக அன்றைய தினம் சென்றிருக்க, அன்றிரவு பூஜா அவனிடம் ஏதோ பேச முயற்சிக்க, “இன்னும் ஒரு வாரத்துல உனக்கு காலேஜ் ஹாஸ்டல்ல சீட் கிடைச்சிடும். அதோட, உனக்கும், எனக்கும் நடுவுல இருந்த எல்லாம் முடிஞ்சிடும். முடிஞ்சா உன் கழுத்துல இருக்கிறதையும் சேர்த்து கழட்டி வச்சிட்டு கிளம்பிடு” என்று அழுத்தம் திருத்தமாய் சொல்லியவன் கதவை இழுத்து சாத்திக் கொண்டான்.

அவனுடைய பேச்சில், இப்போது பூஜாவுக்கும் அத்தனைக் கோவம் வர, அவளோ அதை விட வேகமாய் அவன் கட்டிய தாலியை கழட்ட சென்றாள்.

பின்பு என்ன நினைத்தாளோ? அதை செய்யாது, அப்படியே அவளறைக்கு சென்று விட, அடுத்த நாள் காலை வழக்கம் போல், பூஜாவுடைய வகுப்பு ஆசிரியர் அவளை வேண்டுமென்றே திட்டிக் கொண்டிருக்க, அர்ஜூன் அங்கு வந்தான். ஸ்டாப் ரூமில் அத்தனைப் பேரின் முன்னால் அவர் அவளை திட்டிக் கொண்டிருக்க, அங்கிருந்த அத்தனைப் பேரும் பூஜாவைத் தான் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தனர்.

அர்ஜுனைப் பார்த்ததும் அவர் பேச்சை நிறுத்தியிருக்க, அவனோ, பூஜாவின் பக்கம் கூட திரும்பாது அவரிடம் வந்த விஷயத்தை சொல்லிவிட்டு பின் செல்லும் போது, ஒரு நொடி நின்றான்.

அதில் அந்த ஆசிரியரோ, “கிளாஸூக்கு போ. உன்ன அங்க வந்து பார்த்துக்கிறேன்” என்று சொல்ல, பூஜாவோ அமைதியாய் அவனை கடந்து சென்றாள். அவள் கண்களில் நீர்த்துளி பூத்திருக்க, ஏனோ நிச்சயம் அது அர்ஜூனை என்னமோ செய்தது.

அதில் அவனையும் மீறி, “பூஜா” என்று அழைத்திருக்க, இப்போது அவளோ திரும்பிப் பார்த்தாள்.

(எங்க பூஜாவையே அழ வச்சிட்டீங்கத்தான. எனக்கு வருத்தம்ப்பா. அப்புறம் சாரி பிரண்ட்ஸ் கொஞ்சம் பர்ஷனல் ஒர்க். அதனாலத்தான் அப்டேட் பண்ண முடியல. இனிமே ரெகுலரா வந்துடும். மேக்ஸிமம் என் இன்ஸ்டா பாலோ பண்ணி வச்சுக்கோங்க. அதுல நான் இன்பார்ம் பண்ணிடுவேன். சரி அடுத்து என்னாகப் போதுன்னு அடுத்தடுத்த எபிசோட்ல பாக்கலாம். அதுக்கு முன்னாடி இன்னிக்கு எபிசோட்ல உங்களுக்கு பிடிச்ச சீன் எதுன்னு மறக்காம கமெண்ட்ல சொல்லுங்க. அப்புறம் பெஸ்ட் கமெண்ட்ஸ பேனர்ல போஸ்ட் பண்ணிருக்கேன். சோ உங்க கமெண்ட்ஸும் அதுல வரலாம். சோ அதையும் செக் பண்ணிக்கோங்க.  அப்புறம் மறக்காம ரேட்டிங் கொடுத்திடுங்க)

தொடரும்…

Comments   13

*** வரம் – 38 - படைப்பை ரேட் செய்யுங்கள் ***