வரம் – 60

பூஜா அர்ஜூனைத் தேடி வீட்டுக்கு வந்திருக்க, அங்கே அர்ஜூன் இல்லை. அதில் குழப்பமாய், “வீட்டுக்கு வரலன்னா எங்க போயிருப்பாரு?” என்று யோசித்தாள். அடுத்த நொடி அவனுடைய மொபைலுக்கு கால் செய்ய அதுவோ, சுவிட்ச் ஆப் என்று வந்தது.

“ச்” என்றவள், வேகமாய் மாதவ்-க்கு கால் செய்ய நினைத்தாள். பின் அதை செய்யாது, அவன் அறைக்குள் சென்றாள். அவள் தான் அவனின் அறை மொத்தத்தையும் மாற்றி வைத்திருந்தாளே. இப்போது பழையப்படி அது எல்லாவற்றையும் எடுத்து வைத்தாள்.

“என்னப் பண்ணிட்டிருக்க பூஜா?” என்று அவள் ஆழ்மனதின் கேள்விக்கு, “அவர் மாதிரி யோசிக்க ட்ரைப் பன்றேன்” என்று பதில் கொடுத்தாள். 

ஏனெனில், அவன் மற்றவர்கள் மாதிரி எல்லாம், அடிக்கடி வெளியில் செல்லும் ரகம் கிடையாது. பூஜா வந்தப் பின் தான் அவன் ஹோட்டல், ஷாப்பிங் இதெல்லாம் அடிக்கடி செல்கிறான். நிச்சயம் மாதவ்விடமும் எதையும் பகிர்ந்துக் கொள்ளும் ரகமும் கிடையாது. கடவுள் பக்தியும் அவனுக்கு கிடையாது. பார்க் இந்த மாதிரி இடங்கள் எல்லாம் அவனுக்கு பிடிக்கவும் செய்யாது.

அவனாகவே வந்து விடுவான் என்று அவளுக்கும் தெரியும். ஆனாலும் அவள் மனம், அவனை உடனே பார்க்க சொல்லி அடம்பிடித்தது.

அதனால், அந்த அறையை விட்டு வெளியில் வந்தவள், அவனுடைய அலுவலக அறைக்குள் நுழைந்தான். அவன் முக்காவாசி நேரம் அந்த அறையில் தானே இருப்பான். அந்த அறை எங்கிலும் பல புத்தகங்களும், பேப்பர், நோட்டுகளும் குவிந்துக் கிடந்தது.

அன்று கல்சுரல் டே என்பதால், அவனுடைய லேப்டாப்பையும் அங்குத்தான் வைத்து விட்டு சென்றிருந்தான். இதுவரை அவனைப் பற்றி பெரிதாய் தெரிந்துக் கொள்ள அவன் யோசித்திருக்கவில்லை.

ஆனால் இன்று ஏனோ அவனைப் பற்றி தெரிந்துக் கொள்ள தோண்றியது. ஏனெனில், இப்போதும் கூட, அர்ஜூனின் கண்ணில் தெரிந்த அந்த வலி, அவளை என்னமோ செய்தது.

நடந்தது பெரிய விஷயமாக இருக்கலாம். ஆனால், அவன் முகத்தில் வந்துப் போன பதட்டம், அர்ஜூனிடம் அவள் இதற்கு முன் பார்த்ததே கிடையாது. அவனின் மீது தப்பே இருந்தாலும் கூட, தைரியமாய் நிமிர்ந்து நிற்பவன், இன்று சமநிலை இழந்ததைப் போல் அவளுக்கு தோன்றியது.

இதெல்லாம் அவளுக்கு புரிந்ததா? ஆம் புரிந்தது. அவனை அவளால் முற்றும் முழுதாய் புரிந்துக் கொள்ள முடிந்தது. அந்தளவுக்கு அவளின் மனதில், அவன் இருந்தான்.

அதில் இப்போது லேப்டாப்பை ஆன் செய்ய அதுவோ பாஸ்வேர்ட் கேட்டது. ஏற்கனவே அவள், அவன் போடும் போது கவனித்திருக்கிறாள். அதனால் இப்போது அதைப் போட்டு ஓபன் செய்தாள்.

அதில் ஏதாவது அவனைப் பற்றி தெரிந்துக் கொள்ளலாம் என்று நினைத்து அதைப் பார்க்க, அதில் அவனுடைய திறமை மட்டுமே அவளுக்கு தெரிந்தது. தனிப்பட்ட தரவுகள் எதையும் அவன் அதில் வைத்திருக்கவில்லை. அத்தனையுமே அவன் புதிதாக கண்டுப்பிடிக்க நினைக்கும் அப்ளிகேசனைப் பற்றிய விவரங்கள் தான் இருந்தது.

அதில் லேப்டாப்பை அவள் க்ளோஸ் செய்து விட்டு எழ, இப்போது அருகில் ஒரு டைரி இருந்தது. வேகமாய் அதையும் எடுத்து அவள் பக்கங்களை புரட்ட, அதிலும் பாட சம்பந்தப்பட்ட விஷயங்கள் தான் குவிந்துக் கிடந்தது.

அதை எல்லாம் பார்த்தவளுக்கு ஒன்று மட்டும் புரியவே இல்லை. எப்படி ஒருவனால், என்னேரமும் வேலையைப் பற்றி மட்டுமே யோசிக்க முடிகிறது. சின்னதாய் கூட அவனுடைய தனிப்பட்ட விஷயங்கள் அவன் வாழ்க்கையில் இல்லவே? இல்லையா?

அவன் இத்திருமணத்தை கட்டாயத்தின் பெயரில் தான் செய்தான் என்று அவளுக்கும் தெரியும். அதைத்தான் அவனே முதல் நாளே சொல்லிவிட்டானே. ஆனால் அதற்காக, அவனுக்கான ஆசை என்ற ஒன்று இல்லவே இல்லையா?

அவளுக்கோ, அர்ஜூன் மற்றவர்களை விட அதிக வித்தியாசமாய் தெரிந்தான். இப்போது மீண்டும் ஒரு முறை அந்த அறையை புரட்டிப் போட்டு தேடி விட்டாள். அவளுக்கு எதுவுமே கிடைக்கவில்லை.

அடுத்த சில நிமிடங்களில், வீட்டு ஹாலிங் பெல் அடிக்க, மாதவ்வாக இருக்கும் என்று நினைத்து இவள் சென்று கதவைத் திறந்தாள். அங்கே அர்ஜூன் தான் நின்றிருந்தான்.

“சார்” என்றவள், அவனை நெருங்கப் போக, அவனோ அவளிடம் எதுவும் பேசாது, தன்னுடைய அறைக்குள் சென்று விட்டான்.

அவன் பீச்சிற்கு சென்றிருக்கிறான் என்பதை அவனுடைய ஷூவில் இருந்த மணல் அவளுக்கு சொல்லியது. அவனுக்காக காபி போட நினைத்து, கிச்சனுக்குள் சென்றாள்.

இங்கே அர்ஜூனோ குளித்து உடை மாற்றிவிட்டு வெளியில் வந்தான். வந்தவன் அவனுடைய அலுவலக அறைக்குள் நுழையப் போக, “காபி சார்” என்று அவனின் முன் நீட்டினாள்.

“எனக்கு வேண்டாம்” என்றப்படி அவன் நகரப் போக, “உங்களுக்காகத்தான் போட்டேன்” என்று அவனின் முன் வந்து நின்றாள்.

வழக்கமாய் இந்த செயல் அவன் மனதை இதமாக்கும். ஆனால் இப்போது அவனுக்கு எரிச்சலைக் கொடுத்தது.

“உன்கிட்ட நான் கேட்கல” என்று சொல்லியவன் அப்போதும் அவளை விட்டு விலக நினைக்க, அதற்கு அவள் விட வேண்டுமே. “நீங்க கேட்கலன்னா என்ன? அதான் நான் போட்டுட்டேன் தான. குடிச்சுப் பார்த்து எப்படி இருக்குன்னு சொல்லுங்க” என்று அதை நீட்டினாள்.

அவளுடைய பேச்சு, அவனின் கோவத்தை கூட்ட, “ச் வேண்டாம்னு சொன்னா உனக்கு புரியாதா?” என்றப்படி விலக முயன்றான்.

“ப்ளீஸ் சார் ஒரு சிப் குடிச்சித்தான் பாருங்களேன்” என்று மீண்டும் அவனின் முகத்துக்கு நேரே அந்த காபி கப்பை அவள் நிட்ட, அவனோ கோவமாய், “உனக்கு சொன்னா புரியவே புரியாதா?” என்றப்படி அதை வேகமாய் தட்டிவிட்டான்.

அதில் காபி அவள் கையிலும் தெளித்திருக்க, அந்த கப்போ, தரையில் விழுந்து உடைந்து சிதறியது.

அதைப் பார்த்து பூஜா அதிர்ந்து நிற்க, அவனோ, கோவமாய் அலுவலக அறைக்குள் சென்றுவிட்டான். உள்ளே சென்றவனோ, அப்படியே அங்கிருந்த சேரில் சில நொடிகள் அமர்ந்து விட்டான்.

திரும்ப திரும்ப நடந்த விஷயமே அவனுக்குள் ஓடிக் கொண்டிருக்க, சில நிமிடங்கள் கழித்தே, பூஜாவின் முகம் அவன் நினைவில் வந்தது.

“ஏண்டா? அவ மட்டும் இன்னிக்கு இல்லன்னா?” என்று ஒரு மனம் சொல்ல, இன்னொரு மனமோ, “யார் மேலையோ இருக்கிற கோவத்த எதுக்கு இப்படி அந்த பொண்ணு மேல காமிக்கிற?” என்று ஒரு மனமும் சொல்லியது.

அதில் நெற்றியை தேய்த்தவன், இப்போது அவளைத் தேடி அறையை விட்டு வெளியில் வந்தான். ஆனால் அவளோ, அப்படி ஒரு நிகழ்வே நடக்காதது போல், காதில் ஹெட்செட்டை மாட்டிக் கொண்டு, ஏதோ ஒரு பாடலுக்கு டான்ஸ் ஆடிக்கொண்டே, மாப் போட்டுக் கொண்டிருந்தாள்.

சட்டென்று ஒரு நொடி அவள் இருந்த கோலமும், அவள் தலையில் கட்டியிருந்த தலைப்பாகையும் பார்த்தவனுக்கு, அந்த நிலையிலும் சிரிப்பு எட்டிப் பார்த்தது. அவளோ அவன் வந்தது கூட தெரியாத அளவுக்கு, அந்த மாப் குச்சியுடன் டூயட் ஆடிக் கொண்டிருந்தாள்.

இதில் அவ்வப்போது, அங்கே டேபிளில் இருந்த காபியையும் வேறு ஒரு மடக்கு குடித்துக் கொள்ள, அவளின் செய்கையில் இப்போது அவனின் இதழ்கள் புன்னகை பூத்தது.

“எப்படித்தான் இப்படி இருக்காளோ?” என்று யோசித்தவன், அவளின் அருகில் சென்று, அவள் காதில் இருந்த ஹெட்செட்டை எடுத்து தன் காதில் வைத்தான்.

அவனின் தொடுகையில் திரும்பியவள், “ஐயோ சார். கேட்காதீங்க” என்று இவள் சொல்லி முடிக்கும் முன்னே, அவன் செவியில், “பஞ்சு மிட்டாய் சேல கட்டி” என்ற பாடல் அத்தனை சத்தமாய் கேட்டது.

அந்தப் பாடலையும், பாடல் கேட்பவளையும் வினோதமாய் பார்த்தவன், “இந்த மாதிரி பாட்டா கேட்ப நீ” என்றான்.

“சூப்பர் ஷாங் சார். இப்படி ஷாங் கேட்டுட்டே வேல பார்த்தா, களைப்பே தெரியாது தெரியுமா?” என்று கூறினாள் அவள்.

“எது நீ வேல பாத்துட்டு இருக்கீயா?” என்று அவன் கேட்க, “ஆமா சார். ஹால்ல துடைச்சிட்டு இருக்கேன். பார்த்தா தெரியலையா?” என்றாள்.

அதில் அவளிடம் இருந்து அந்த குச்சியை வாங்கியவன், “துடைச்ச இடத்துல நின்னு டான்ஸ் ஆடிட்டே, துடைச்சா, க்ளீன் ஆகாது. இப்படி உன் புட் மார்க் தான் விழும்” என்று அவள் துடைத்த லட்சணத்தை காட்டினான்.

அதில் அசடு வழிந்தவள், “ஈ.. கொஞ்சம் டெக்னிகல் பால்ட். பேசாம, நீங்களே கரெக்டா துடைச்சிடுங்க. நான் போயி உங்களுக்கு சூடா காபி எடுத்துட்டு வரேன்” என்றவள் சிறு புன்னகையுடன் கிச்சனுக்குள் சென்றாள்.

உண்மையிலேயே அவனுக்கு அவளை நினைத்து சிரிப்புத்தான் வந்தது. அதே நேரம் ஆச்சர்யமாகவும் இருந்தது. அவன் கோவத்தில் கப்பை தட்டி விட்டிருக்க, அதை சற்றும் பொருட்படுத்தாது மீண்டும் அவனிடம் நீட்டினாள்.

இப்போது அதை தட்டி விட எல்லாம் மனம் இல்லை. “ஒன் செகண்ட்” என்றவன் சென்று கையை கழுவிவிட்டு அதை வாங்கிக் கொண்டான்.

“இந்த மெதட் தான் நமக்கு வரல” என்றவள் இப்போது அவள் காபியை எடுத்து குடிக்க, அவனோ காபியைக் குடிக்காது அவளையேத்தான் பார்த்தான்.

அவளோ, “சூடு ஆறிடும் சார். குடிங்க” என்று சொல்ல, அவனோ இப்போது மெதுவாய் குடித்தான். ஏனோ என்னத்தான் வெளியில் சொல்ல வில்லை என்றாலும், அவனுக்குமே தலைவலிப்பது போல் தான் இருந்தது. இப்போது அந்த காபி, அத்தனை இதமாய் இருக்க, அவன் விரும்பியே அதைக் குடித்தான்.

அவன் குடித்து முடித்ததும், “காபி எப்படி இருக்கு சார்?” என்று கண்கள் மின்ன ஆசையாய் கேட்டாள். அவள் கண்ணில் தெரிந்த அந்த மின்னல், நிச்சயம் அவனை என்னமோ செய்ய, அவள் கைப் பிடித்து தன்னருகில் அமர்த்தினான்.

அதில் அவளும் அவனைப் பார்க்க, அவள் குண்டு கன்னத்தில் அழுத்தி முத்தமிட்டு, “நல்லா இருக்கு” என்றான்.

அவன் முத்தத்தில் ஒரு நொடி கண்ணை மூடியவள், அவன் அப்படி சொல்லவும், சட்டென்று கண்ணைத் திறந்து, “அப்படியா? அப்போ இன்னொரு கப் எடுத்துட்டு வரட்டுமா?” என்று எழ சென்றாள்.

அதற்குள் அவள் கரத்தைப் பிடித்தவன், “ம்ஹூம் போதும்” என்று சொல்ல, “அப்போ தினமும் நானே காபி போடட்டுமா?” என்று வேகமாய் கேட்டாள்.

“ம்” என்று அவன் தலையாட்ட, “ஐயோ தேங்க்ஸ் சார்” என்றவள், இப்போது வேகமாய் அவன் கன்னத்தில் பட்டும் படாமல் ஒரு முத்தத்தை கொடுத்தாள்.

அவளின் அந்த அவசர முத்தம், அவனை இம்சிக்க, ஏனோ, இன்னும் கூட அவளின் நெருக்கமும், அனுசரிப்பும் அவனுக்கு தேவையாய் இருந்தது.

அது அவன் கண்ணில் தெரிய, இப்போது அவளோ, “கொஞ்ச நேரம் என் மடியில படுத்துக்கோங்க சார்” என்றாள். “என்ன?” என்று அவன் கேட்க, “அப்போ நான் படுத்துக்கட்டுமா?” என்றவள் அடுத்த நொடி அவன் மடியில் தலை வைத்துப் படுத்துக் கொண்டாள்.

அவளை எழுப்ப எல்லாம் அவனுக்கு தோன்றவே இல்லை. ஏனோ, அவனுக்கு அதெல்லாம் பிடித்தது. இப்போது அவன் விரலோடு தன் விரலைக் கோர்த்துக் கொண்டவள், “சார். இந்த வீக்கெண்ட் ஊருக்கு போவோம்மா?” என்று கேட்டாள்.

ஏனெனில் அவளுக்கு அர்ஜூன் வாழ்க்கையில் என்ன நடந்தது என்று தெரிந்துக் கொள்ள வேண்டியிருந்தது. ஆனால் அவனுக்கோ, அவள் ஊருக்கு போகட்டுமா? என்று கேட்டது போல் தோன்ற, ஏனோ அவளும் அவனை விட்டு செல்லப் போகிறாளோ என்றுத்தான் தோன்றியது. அதில் மடியில் படுத்திருந்தவளை, இழுத்து தன் நெஞ்சோடு சேர்த்தணைத்துக் கொண்டான் அர்ஜூன்.

(அச்சோ பாவம் என் அஜ்ஜு பேபி. சரி அடுத்து என்னாகப் போது? அவங்க ஊருக்கு போவாங்களா? அர்ஜூன்ன பத்தி பூஜா தெரிஞ்சிப்பாளா? இந்த கேள்விக்கான பதில அடுத்தடுத்த எபிசோட்ல பாக்கலாம். அதுக்கு முன்னாடி இன்னிக்கு எபிசோட்ல உங்களுக்கு பிடிச்ச சீன் எதுன்னு மறக்காம கமெண்ட்ல சொல்லுங்க. அப்புறம் பெஸ்ட் கமெண்ட்ஸ பேனர்ல போஸ்ட் பண்ணிருக்கேன். சோ உங்க கமெண்ட்ஸும் அதுல வரலாம். சோ அதையும் செக் பண்ணிக்கோங்க.  அப்புறம் மறக்காம ரேட்டிங் கொடுத்திடுங்க)

தொடரும்…

Comments   10

*** வரம் – 60 - படைப்பை ரேட் செய்யுங்கள் ***